Saturday, October 17, 2009

ஏதேதோ எண்ணங்கள்

அடுத்த தீபாவளியாவது விடியலைத் தருமா?

நமது சகோதரர்கள் இலங்கைத் தீவில் முள்வேலிச் சிறைகளில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள், தூங்கும் இடத்திலேயே மலஜலம் கழித்துக்கொண்டு. பச்சிளம் குழந்தைகளுக்கு பாலுமில்லை; பாலூட்ட தாய்மார்களுக்கு திராணியுமில்லை. அவ்வப்போது முகாமுக்குள் வரும் சிங்கள இராணுவம், சந்தேகத்திற்குரியவர்களை அழைத்துச் செல்கிறது. அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அது பற்றி கேட்கவும் யாருக்கும் தைரியம் இல்லை; தெரிந்து ஆகப் போவதும் ஒன்றுமில்லை.

நலம்புரி நிலையம் எனப்படும் இந்த முகாம்களில் சுமார் மூன்று லட்சம் மக்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 'சிறை' வைக்கப்பட்டிருக்கிறார்கள். கேட்க நாதி இல்லை. இவர்கள் உணவுக்காக வரிசையில் முண்டி அடிக்கிறார்கள்; குடிநீருக்கு அல்லல் படுகிறார்கள். இங்கு (இந்தியாவில் தான்) நாம் நடிகைகளின் பேட்டிகளையும் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முதலாக' ஒளிபரப்பாகும் சினிமாக்களையும் குடும்பத்துடன் வெட்கமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அங்கு... நோயுற்ற மக்களுக்கு தனி வசதி செய்ய முடியாது. ஏனெனில், முகாம் முழுவதுமே ஏதாவது ஒரு வகையில் நோயாளிகள் தான். உடலும் மனமும் சோர்ந்த நிலையில், உலகமே தங்களைக் கைவிட்டு விட்டதை நம்ப முடியாமல், கண்கள் வறண்ட நிலையில், உயிரை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு நடை பிணங்களாக இருக்கிறார்கள். இங்கு நாம், காசைக் கரியாக்கி பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறோம்.

அங்கு... மழை வந்தால் இப்போதைய நிலையும் கெட்டு விடுமோ என்ற அச்சத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, சகதி நிறைந்த, அசுத்தமான முகாம் தடுப்புகளுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள், நமது சகோதரர்கள். இங்கு... சொந்த சகோதரர்கள் துயரத்தில் சாதல் கண்டும், திரைக் கலைஞர்கள் 'முதல்வருக்கு' வழங்கிய பட்டத்திற்கான கலையுலக பெருவிழாவை கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம்.

அங்கு நமது சகோதரர்கள் நல்ல நிலையிலேயே இருப்பதாக, இலங்கை சென்று திரும்பிய தமிழ்(?) எம்.பி.,க்கள் சான்றிதழ் வழங்கிக் கொண்டு, இங்கு... அரசியல் கச்சேரி நடாத்துகிறார்கள். காசு வாங்கி ஒட்டு போட்ட தமிழ்நாட்டு மக்கள் அதற்கான பலனை அனுபவிக்கலாம், தவறில்லை; எந்தப் பாவமும் செய்யாத இலங்கைத் தமிழர்கள் தண்டிக்கப் படுவதில் என்ன நியாயம் இருக்கிறது? தமிழ்நாட்டு தமிழர்களை தங்கள் ரத்த சொந்தம் என்று கருதியது தான் இவர்களது தவறா?

அங்கு... பொசுங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள்; இங்கு... கொண்டாட்டத்தில் தமிழ் மக்கள்! விதியே விதியே, தமிழச் சாதியை என் செய்யப் போகிறாயோ?
-வ.மு.முரளி.

No comments:

Post a Comment