Wednesday, October 21, 2009

வசன கவிதை - 18


பகுத்தறிவுத் தம்பட்டம்

பலருடைய பாதம்
பட்டுப் பட்டு
தேய்ந்து போன
படியிலும் கூட
படிக்க வேண்டிய
பாடம் இருக்கிறது.

கரிந்து சாம்பலாயினும்
அறையில் இன்னும்
வளைய வரும்
ஊதுவத்தியின் புகையிலும்
புரிந்துகொள்ள வேண்டிய
விஷயம் இருக்கிறது.

ஓடி ஓடி,
நடந்து நடந்து,
ஓய்ந்து போன
செருப்பும்
ஒரு முன்மாதிரி தான்.

வெயிலில் பொசுங்கி,
மழையில் நனைந்து,
தன்னைப் பிடித்தவனை
தற்காக்கும்
குடையின் கொற்றம்
மிகப் பெரியது.

வெள்ளத்தின் சீற்றத்துக்கு
வளைந்து கொடுத்து
வெயில் காலத்தில்
நிமிர்ந்து நிற்கும்
நாணல் தான்
மணல் அரிப்பைத்
தடுக்கிறது.

தன்னைக் கரைத்துக் கொண்டு
கற்பூரம் தந்த ஒளியோ
கடவுளின் தரிசனத்தை
கரிசனமாய்த் தருகிறது.

ஆனால்-
அக்றிணைப் பொருட்களின்
அறிவும் பயனும் கூட
ஆறறிவு மானிடனுக்கு
இல்லாது
இருக்கிறது.

ஆயினும் என்ன?
படிக்கல்லின் பயனை விட,
கற்பூரத்தின் தியாகத்தை விட,
செருப்பின் சேவையை விட,
'பகுத்தறிவுத் தம்பட்டம்'
அடித்துக்கொள்ள
மனிதனுக்கு மட்டுமே
உரிமை இருக்கிறது.
நன்றி: விஜயபாரதம்
(25 ஜூலை, 1997

No comments:

Post a Comment