Tuesday, October 20, 2009

மொழி மாற்றக் கவிதை - 4


ஒருமை மந்திரம்

மந்திரம் அனைத்தும் கண்டநல் ரிஷிகள்
இந்திரன், யமன் என உனை அழைத்திட்டார்;
சொற்களால் விளக்கிட இயலா உன்னை
நற்பிரம்மம்என வேதாந்திகளும்,

"சிவமே வாழி" எனச் சைவர்களும்,
'தைவதம் விஷ்ணு' என வைணவரும்,
வணங்கிடுகின்றார் வளமுறு எட்டுக்
குணங்களை உடையாய், கோவே வாழி!

பௌத்தர்கள் உன்னை புத்தன் என்றோத,
'பவித்திர அருகர்' என ஜைனர்களும்,
சீக்கியர் 'சத்ஸ்ரீ அகாலி' எனவும்,
வாக்கிடை வணங்கும் வரமே வாழி!

ஞாலம் உய்ந்திட நடமிடு ராஜன்,
காலம் ஆளும் சரவணன், சாஸ்தா
எனப் பலவாறு உனைத் தொழுகின்றோம்
மனமதில் வாழும் மதியே வாழி!

அன்புடன் உன்னை அன்னையே என்றும்,
தண்ணிழல் வேண்டித் தந்தையே என்றும்,
பாடிப் பரவசமாகிட முக்தி
நாடிப் பிரார்த்தனை செய்தோம் வாழி!

இத்தனை பெயரால் வணங்கிய பின்னும்
அத்தனைக்குள்ளும் அசைந்திடு தீபம்
ஒன்றே, ஒன்றே, இரு வேறல்ல!
நன்றே! உந்தன் அடிபணிகின்றோம்!

ஓம் சக்தி!

நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2000
குறிப்பு: இக்கவிதை, சமஸ்கிருத ஸ்லோகமான 'ஏகாத்மதா மந்திரம்' பாடலின் மொழிபெயர்ப்பு.

No comments:

Post a Comment