Wednesday, October 14, 2009

உருவக கவிதை - 9

அப்துல் கலாமுக்கு அன்புடன் 'சலாம்'!

பத்திரிகை விற்று
பாடம் படித்த,
படகோட்டி மகன்
இன்று-
பாரதத்தின்
முதல் குடிமகன்.

வாழ்வினை தவமாய்
ஆராய்ச்சியில் செலுத்தி
வல்லரசுக் கனவில்
வாழும் கவிஞன்.

வாழ்வின் பொருளை
சிவானந்தரிடம்
தீட்சையாகப் பெற்ற
அறிவியல் துறவி.

எட்டா உயரம்
எட்டிய போதும்
நன்றியை மறவா
நாணயச் செல்வன்.

உழைப்பால் உயர்ந்த
சுயம்பு மனிதன்.
தேச சேவகம்
செய்வதில் பிரியன்.

'விஜயபாரதம்'
காணத் துடிக்கும்
வினைத்திறன் மிக்க
விஞ்ஞான இதயன்.

மதக் காழ்ப்பற்ற
இறை நெறியாளன்.
கீதை கூறும்
ஸ்திதப் ப்ரக்ஞன்.

போக்ரான் சோதனையின்
வேரெனத் திகழ்ந்த,
தனக்கென வாழா
ஏவுகணை மனிதன்.

உள்நாட்டிலேயே
உருவாக்கப்பட்ட
சுதேசி விஞ்ஞானி-
சுதந்திர ஞானி.

சுயநலம் மிகுந்த
அரசியல் தெரியா,
அறிவுலகத்தின்
அற்புதப் படைப்பு.

'அக்னி' செலுத்திய
அணியின் தலைவன்.
இந்தியா வழங்கிய
'சுதேசி செய்தி'.

தேசப் பற்றின்
தெளிந்த வடிவாய்
தமிழகம் நல்கிய
எளிமையின் தலைவன்.

அக்கினிச் சிறகினை
அசைத்து அசைத்து,
இளைஞரைத் தூண்டும்
அக்கினிக் குஞ்சு.

திக்குத் தெரியா
நாட்டினருக்கு
தீபஸ்தம்பமாய்
சுடரொளி காட்டும்,
ராமேஸ்வரத்தின்
கலங்கரை விளக்கம்.
நன்றி: விஜயபாரதம்
(19.07.2002)

No comments:

Post a Comment