Friday, October 30, 2009

வசன கவிதை - 20


பெய்யாமல் பெய்யும் மழை

உரைநடையைக் கூட
உருப்படியில்லாமல்
எழுதித் தவிப்பவரா நீங்கள்?
கவலை வேண்டாம்-
கவிஞராகி விடுங்கள்!

அரைக்கால் புள்ளிகளும்
ஆச்சரியக் குறிகளும்
கேள்விக் குறிகளும்
தொடர் புள்ளிகளும் கொண்டு...

இரண்டிரண்டு வரிகளாய்
பிரித்து எழுதினால்,
எதை எழுதினாலும்
கவிதையாகி விடும்-
நீங்கள் ஒரு
தலைவராக இருக்க வேண்டும்.
அவ்வளவு தான்.

தலைவராவதற்கு நீங்கள்
தலைகீழாய் நடக்க வேண்டாம்!
தலைவராக இருப்பவரின்
நிழலாக மாறுங்கள்
நாலு நண்பர்களின்
முதுகில் குத்துங்கள்
பகுத்தறிவு பேசியே
பணத்தைக் குவியுங்கள்!
கைதட்டல் கூலிகளை
காசுக்கு அமர்த்துங்கள்
கற்கண்டு பேச்சென்று
தமிழ் மேடையை
கண்டதுண்டமாக்குங்கள்!
நேரம் வரும்போது
பேரம் பேசுங்கள்!
தலைவரைக் கழற்றிவிட்டு
தலைவராய் ஆகுங்கள்!

தலைமையைத் தக்கவைக்க
தகிடுதத்தம் செய்யுங்கள்!
தமிழைக் காக்க
தூக்கில் தொங்கவும்
தயாராக இருப்பதாக
முற்போக்குடன் முழங்குங்கள்!

கேள்வி கேட்க ஆளில்லாத
எவனையாவது ஏசுங்கள்!
ஏசு சாமி பற்றி
கொஞ்சம் புகழ்ந்து பேசுங்கள்!
இந்து மதம் மீது தொடர்ந்து
சாணத்தை வீசுங்கள்!
நீங்கள்
முற்போக்காளர் ஆகிவிடுவீர்கள்!

இனிக்கும் இஸ்லாமை
திகட்டத் திகட்ட புகழுங்கள்!
இந்தியா ஒரு நாடா?
என்று கேலி பேசுங்கள்!
'மதச்சார்பின்மை' காக்கும்
மடமாக மாறுங்கள்!

கறுப்புக் கண்ணாடி
அணியத் துவங்குங்கள்!
கண்ணின் நரிப்பார்வை
காணாமல் மறையுங்கள்!
கைத்தடிகளை மட்டுமே
அருகில்
காவலுக்கு வையுங்கள்!

இப்போது நீங்கள்-
பகுத்தறிவு கழகமாகி
விட்டீர்கள்!
முற்போக்கு மன்றமாகி
விட்டீர்கள்!
மதச்சார்பின்மை மடமாகி
விட்டீர்கள்!
மொத்தத்தில் இப்போது
தமிழன்னையின் தவப் புதல்வராகி
விட்டீர்கள்!
நீங்கள் தலைவர்!
'கவிதை மழை' பொழியுங்கள்!

உங்கள் பெயரை
'கவிஞர்' என்று
உடனே அறிவியுங்கள்!
இயற்பெயரைச் சொன்னாலே
செருப்படி தான் கிடைக்குமென
எடுபிடிகள் மூலம்
எல்லோருக்கும் சொல்லுங்கள்!

உங்கள் கட்சிக்கு
வாரிசை
உடனே நியமியுங்கள்!
கவலையின்றி
'கவிதை மழை' புத்தகத்தை
வெளியிடுங்கள்!

கூட்டணியை மாற்றி மாற்றி
'ராச தந்திரி' ஆகுங்கள்!
கூட்டத்தைக் கூட்டிக் கூட்டி
'குடியரசன்' ஆகுங்கள்!
பெய்யாமல் பெய்யும்
'கவிதை மழை' ஆகுங்கள்!

வள்ளுவனும் இளங்கோவும்
கம்பனும் பாரதியும்
எங்கேனும் தொலையட்டும்!
நீடூழி வாழ்ந்திடுங்கள்!
'தமிழ்' என்றால் 'கவிஞர்'
'கவிஞர்' என்றால் 'தமிழ்' அன்றோ?
'தமிழே' வாழுங்கள்!
'தமிழே' வாழுங்கள்!!
நன்றி: விஜயபாரதம்
(20.08.2004)

No comments:

Post a Comment