Sunday, October 31, 2010

புதுக்கவிதை - 133





தீபாவளி - 4





நமுத்துப்போன பட்டாசு
புரியாத கவிதை போல.
எப்போதாவது வெடிக்கலாம்.

திரி விழுந்த பட்டாசு
நன்றாகப் புரியும் கவிதை.
எப்போதும் வெடிக்காது.

புகையும் பட்டாசு
வெடித்தாலும் வெடிக்கலாம்.
வெடிக்காமலும் போகலாம்.
.

Saturday, October 30, 2010

புதுக்கவிதை - 132



தீபாவளி - 3

வானில் சிதறும் வண்ண வெடி மழை.

அண்ணாந்து பார்த்து கைகொட்டும்

சேரிக் குழந்தை.

.

Friday, October 29, 2010

புதுக்கவிதை - 131





தீபாவளி - 2



..
.
பட்டாசுக்கடை வைக்க
அனுமதி பெறவும் லஞ்சம்.
பட்டாசு தொழிற்சாலையில்
விபத்து ஏற்பட்டாலும் லஞ்சம்.
பட்டாசு கொண்டுவருவதைக்
கண்டுகொள்ளாமல் இருக்கவும் லஞ்சம்.
இதை எல்லாம் எழுதாமல் இருக்க,
பத்திரிகையாளர்களுக்கும்
தரப்படுகிறது...
பட்டாசு பரிசுப் பெட்டியே
லஞ்சமாக.
.

Thursday, October 28, 2010

வசன கவிதை - 81


.
.
தீபாவளி - 1
*
*


இன்னும் எட்டு நாள் இருக்கிறது
கொண்டாட்டங்களுக்கு.
அதுவரை குறைவில்லை
இல்லத் தலைவர்களின்
திண்டாட்டங்களுக்கு.

என்னதான் வரவுக்கும் செலவுக்கும்
சண்டையிட்டுக் களைத்தாலும்
நடுத்தரவர்க்கத்திற்கு
வேப்பம்பூ சர்க்கரைதான் பண்டிகைகள்.

என்னதான் அலுத்துக் கொண்டாலும்,
குழந்தைகளை குதூகலிக்கச் செய்ய
கடன் வாங்கும் ஆனந்தம்
வேறெதிலும் கிடையாது.

என்னதான் கொள்ளைலாபம் வைத்தாலும்
ஜவுளிக்கடை படியேறாமல்
துணிக்கடலில் முத்தெடுக்காமல்
பண்டிகைகள் இனிப்பதில்லை.

என்னதான் கஷ்டமென்றாலும்
அதிகாலை வேளையில் கோயில் செல்லாமல்
நாள் முழுவதும் தொலைக்காட்சி முன் தவம் செய்யாமல்
பலகாரங்களால் அஜீரணம் ஆகாமல்
பண்டிகைகள் தீர்வதில்லை.
.
அன்றாட இயந்திர வாழ்வில் உழலும்
மனிதனுக்கு உயவுப்பொருளாய்
உதவும் பொருள் பண்டிகைதான்.
என்னதான் கயிறு கீழே இழுத்தாலும்
காற்றை சாடித்தானே
விண்ணில் பறக்கிறது பட்டம்?
.
பட்டங்களை எல்லா நாளும்
பறக்கவிட முடியாது
பட்டத்தின் துடிப்பு வாலில்.
மனிதனுக்கு வாழ்வின் தேடலில்.
பண்டிகைகள் தருவது
அதற்கான வாய்ப்புக்களை.
.

Wednesday, October 27, 2010

உருவக கவிதை - 66

.
.

.
.
.

புனர் ஜென்மம்


அனல்காற்று வீசும் பாலைப் பெருவெளியின்
கானல் குளங்களின் ஊடே ஒற்றை ஈச்ச மரம்.
கூகைகளும் அஞ்சும் மயான வெயிலில்
முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி
கண்கள் செருகுகிறது
வாயுலர்ந்த ஒட்டகம்.

*********

கானகப் பசுமையைச் சிதைத்தபடி
முன்னேறும் கோடரிக் கும்பல்களின்
தோள்களில் காயம் பட்ட மான்கள்.
ரம்பத்தின் பேரோசையில் அமிழ்ந்து போகிறது
குருதி வழியும் மான்களின் ஈனசுரம்.

*********

பாலைவனச்சோலையில் நிழல்தரும்
ஒற்றைமரம் மனிதனாகலாம்-
அடுத்த ஜென்மத்தில் ஒட்டகம் போல.
புண்ணியக் கணக்கை பாவத்தால் சரிக்கட்ட
வேறுவழி?
....

Tuesday, October 26, 2010

வசன கவிதை - 80




மகத்தானவர்களுக்கு
மாபெரும் வந்தனம்!



வந்தனம்! பெரும் வந்தனம்!
வானைக் கிழிக்கும் கோபுரம் கொண்ட
கோயில் அமைத்த சிற்பிகளின்
வித்தக விரல்களுக்கு வந்தனம்!

கல்லில் சிற்பிகள் காவியம் எழுத
உளிகளைத் தந்த கொல்லர்களுக்கும்
பதுமைகள் தந்த தச்சர்களுக்கும்
அடவு காட்டிய அடியார்களுக்கும் வந்தனம்!

கருமலையில் கல்லுடைத்த
சாளுக்கிய அடிமைகளுக்கும்
பல காத தூரம் தோளில் சுமந்து
கற்களைத் தந்த மல்லர்களுக்கும் வந்தனம்!

கோயில் கட்ட நிலத்தை மேவிய
ஏர் உழவர்களுக்கும் மாடுகளுக்கும்
தடங்கலின்றி அனைவர்க்கும் உணவளித்த
சமையல்காரர்களுக்கும் வந்தனம்!

உழைப்பின் களைப்பு தெரியாவண்ணம்
செவ்விளநீரும் கள்ளும் வழங்கிய
பனையேறி மக்களுக்கும்
தாகம் தீர்த்த பெண்களுக்கும் வந்தனம்!

கோயில் பணியைக் கண்காணித்த
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும்
சிற்பிகள் களைப்பைப் போக்கிய
குடும்பத்தினருக்கும் வந்தனம்!

சிற்பத் தொழிலில் பட்ட காயம்
விரைவில் ஆற மருந்துகளிட்ட
வைத்தியர்களுக்கும் சேடிகளுக்கும்
மூலிகை தந்த குறவர்களுக்கும் வந்தனம்!

உருவம் முனைந்த குயவர்களுக்கும்
உதவிகள் செய்த தொழிலாளருக்கும்
உடைகள் வெளுத்த வண்ணாருக்கும்
சாரம் கட்டிய வீரர்களுக்கும் வந்தனம்!

காவல் காத்த மறவர்களுக்கும்
பண்ணிசை பாடிய பாணர்களுக்கும்
சிகைகள் மழித்த நாவிதருக்கும்
இறைச்சியான ஆடுகளுக்கும் வந்தனம்!

கல்தூண்களை அடுக்க உதவிய
யானைகளுக்கும் குதிரைகளுக்கும்
பாலைப் பொழிந்த பசுக்களுக்கும்
பந்தம் பிடித்த சிறுவர்களுக்கும் வந்தனம்!

கோயிலுக்காக குழிகளைத் தோண்டிய
தோள்வலி கொண்ட தோழர்களுக்கும்
செருப்புகள் தந்த திருக்குலத்தார்க்கும்
கூலி வழங்கிய கணக்கர்களுக்கும் வந்தனம்!

நல்ல நாழிகை கணக்கிட்டுரைத்த
வள்ளுவருக்கும் சோதிடருக்கும்
கல்லில் எழுதிய வாணர்களுக்கும்
மரங்கள் தந்த காடுகளுக்கும் வந்தனம்!

தினமும் இறையை வேதம் ஓதி
பக்திப்பெருக்குடன் பூசனை செய்த
அந்தணருக்கும் விடுபட்டோர்க்கும்
பூக்கள் தொடுத்த சிறுமியருக்கும் வந்தனம்!

தஞ்சைத் தரணியில் மாபெரும் கோயில்
அமைக்கும் கனவுடன் ஈசனை வணங்கி
நாட்டு மக்களை தொண்டர்களாக்கிய
ராசராசனுக்கு மாபெரும் வந்தனம்!

மன்னன் மனதில் கருவாய் நின்று
மாபெரும் ஆலயம் அமைக்கச் செய்த
உலகை ஆளும் பெருவுடையாருக்கு
வந்தனம்! வந்தனம்! மாபெரும் வந்தனம்!


நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2010

******

Wednesday, October 20, 2010

புதுக்கவிதை - 130


மரமான மனங்கள் - 10

கட்டையில் போனவருக்கும்
மணம்கூட்ட உடன் செல்லும்
கட்டையாய் சந்தனமரம்.
.

Tuesday, October 19, 2010

புதுக்கவிதை- 129


மரமான மனங்கள் - 9

கரையான்கள், எறும்புகள்,
ஓணான்கள், பல்லிகள்,
பறவைகளின் வீடு மரம்.
.

Monday, October 18, 2010

எண்ணங்கள்



ஆபத்தான குட்டிக்கரணம்...
கரணம் தப்பினால் மரணம்

''நான் ஒரு இந்தியன்; நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை''- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த மக்களவை விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த உமர் அப்துல்லா பேசிய வைர வரிகள் இவை.

அது 2008-ம் ஆண்டு; இப்போது நடப்பது 2010-ம் ஆண்டு; இரு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை குட்டிக்கரணப் பேச்சால் நிரூபித்திருக்கிறார், அதே உமர்.

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, ""காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணையவில்லை; நிபந்தனைக்கு உள்பட்ட இணைப்பு ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர்ப் பிரச்னை இந்தியா, பாகிஸ்தான் தொடர்புடைய சர்வதேச விவகாரம்'' என்று கூறி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரான உமர் அப்துல்லா இவ்வாறு பேசியிருப்பதை, கூட்டணிக் கட்சி என்பதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எதிர்பார்த்ததுபோலவே, இதுவரை அப்துல்லா குடும்ப ஆட்சியை எதிர்த்துக் கொடி பிடித்த காஷ்மீரப் பிரிவினைவாத இயக்கங்கள் பலவும், உமர் பேச்சால் ஆனந்தக் கூத்தாடுகின்றன.

பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி, நீண்ட நாள்களாகத் தாங்கள் கூறிவருவதையே முதல்வர் ஒப்புக்கொண்டிருக்கிறார்; காஷ்மீரை இனியும் இந்தியா ஆக்கிரமித்திருக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க்கட்சியான மெஹபூபா சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி, உமர் அப்துல்லாவின் இந்த அதிரடிப் பிரிவினை முழக்கத்தால் குழம்பிப்போயுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல்வர் உமர் அப்துல்லா பேசிய அனைத்துமே அபாயகரமானவை. ""வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி மூலமாக காஷ்மீரப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. காஷ்மீரில் நிலவுவது அரசியல் விவகாரம். இதை பேச்சுவார்த்தை வாயிலாகவே தீர்க்க வேண்டும்'' என்று கூறிய அவர், தான் இந்திய அரசின் கைப்பாவை அல்ல என்றும் முழங்கினார்.

57 ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திரம் மீண்டும் திரும்புவதுபோலத் தெரிகிறது. 1953-ல், இதேபோலத்தான் உமரின் தாத்தாவான அப்போதைய முதல்வர் ஷேக் அப்துல்லா (அந்தக் காலத்தில் ஜம்மு காஷ்மீரின் பிரதமர் என்றே அவர் அழைக்கப்பட்டார்) திடீரென காஷ்மீர் தனிநாடு என்று போர்க்கொடி உயர்த்தினார். உமர் போலல்லாமல் அவருக்கு மக்கள் செல்வாக்கும் இருந்தது. ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறிதும் தயங்கவில்லை. தனது நெருங்கிய நண்பர் என்றும் பாராமல் ஷேக் அப்துல்லாவின் அரசைக் கலைத்து, அவரைக் கைது செய்து வீட்டுச்சிறையில் வைத்தார்.

அதே ஷேக் அப்துல்லா, நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ல் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஆனார். பதவியில் இருக்கும்போதே உயிர்நீத்தார். அவரையடுத்து, அவரது மகன் பரூக் அப்துல்லா மூன்றுமுறை (1982-84, 86-90, 96-2002) முதல்வராக இருந்து, இப்போது மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். 2009-ல் வாரிசு அடிப்படையில் முதல்வரான உமர் அப்துல்லா, தாத்தாவின் பழைய பாதைக்கே திடீரென்று திரும்பி இருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீரில் நிலவிவரும் கலவரச்சூழல், முதல்வர் உமர் அப்துல்லாவின் செல்வாக்கைக் குறைத்துவிட்டது. அவரது பதவிக்கே ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து தப்பவே, நெருப்புடன் விளையாடுகிறார் உமர் அப்துல்லா என்று, பாஜக.வும்,காஷ்மீர சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்து காஷ்மீர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டன.

உமர் அப்துல்லா இதற்கு முன் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் (2001-02), மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார்; இந்தியக் குடிமகன் என்று உளமாற உறுதிகூறி பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார். இப்போதும்கூட, நாட்டின் இறையாண்மையைக் காப்பதாக உறுதி கூறியே முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, பிரிவினைவாதக் கருத்துகளை சட்டப்பேரவையிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார் உமர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ, யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்ற கணக்காக, பொறுப்பின்றி வேடிக்கை பார்க்கிறது. அன்று நேரு அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க விடாமல் இப்போதைய மத்திய அரசைத் தடுப்பது எது?

பொறுப்பற்ற ஆட்சியால் மாநிலத்தில் அமைதியின்மைக்கு காரணமாக இருந்துவிட்டு, மாநிலத்தை எரிமலையின் கொள்ளிவாய்க்குள் தள்ளிவிட்டு, பதவியைக் காப்பதற்காக புரட்சிநாயகராக புதுஅவதாரம் எடுத்திருக்கும் உமர் அப்துல்லாவை அம்மாநில மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறார்கள். மத்திய அரசு மட்டுமே அவரை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது.

யோகாசன குரு ராம்தேவ், உமரின் பிரிவினைப் பேச்சைக் கண்டித்ததுடன், யோகாசனம் மூலமாக இப்போதைய நெருக்கடியான மனஅமைதியற்ற குழப்ப நிலைக்குத் தீர்வு காணுமாறு உமர் அப்துல்லாவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த விஷச்செடியை வளரவிட்டால், எதிர்காலத்தில் மன்மோகன் சிங்கும் அமைதிக்காக யோகாசனம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

--------------------------------------------------------
நன்றி: தினமணி (18.10.2010)
.

Sunday, October 17, 2010

புதுக்கவிதை - 128


மரமான மனங்கள் -8

வேலியில் வளர்ந்த
சுயம்பு வேம்புவை
விலைபேசும் விவசாயி.
.

Saturday, October 16, 2010

புதுக்கவிதை - 127


மரமான மனங்கள்-7

மச்சுவீட்டுப் பகட்டையும்
பாவிப் பாழாக்குகிறது
ஒற்றை ஆலஞ்செடி.
.


Friday, October 15, 2010

புதுக்கவிதை - 126


மரமான மனங்கள்- 6


மரத்தை இதுவரை
காப்பாற்றிய பிள்ளையாருக்கும்
ஆப்பு வைத்தது நெடுஞ்சாலை.
.

Thursday, October 14, 2010

புதுக்கவிதை - 125


மரமான மனங்கள்- 5


மரபார வண்டிக்கு
நிழல் தருகிறது
காத்திருக்கும் மரம்.
.

Wednesday, October 13, 2010

புதுக்கவிதை - 124



மரமான மனங்கள்-4

அடிமரம் பிளக்கும்
கோடரியின் பிடியாய்..
இயற்கை அழிக்கும் மனிதம்.

.

Tuesday, October 12, 2010

உருவக கவிதை - 65




ஆறறிவு
அற்ற
குரங்குகள்



.

குரங்குகள் அடித்துக் கொள்வதுண்டு
உணவுக்காக,
கலவிக்காக,
அதிகாரத்திற்காக.

யாரேனும் வீசி எறியும்
வாழைப்பழத்திற்காக
பல்லைக் காட்டி உறுமி
சண்டையிடும் குரங்குகள்...

துணைக் குரங்கை
வேறு குரங்கு கைப்பிடிக்காமல் தடுக்க
சீறும் குரங்குகள்...

தனது எல்லைக்குள் அந்நியக் குரங்கு
பிரவேசிக்காமல் தடுக்கும்
கோபாவேசக் குரங்குகள்.

தனக்குத் தானே வரையறுத்த
கட்டுப்பாடுகள் உண்டெனினும்

குரங்குகளுக்கென தனித்த
அரசியல் சாசனம் இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்திலும்
குரங்குகள் எல்லை மீறாது.
அடுத்த குரங்கின் வாலில்
தீ மூட்டி கைகொட்டாது.

வன எல்லை ஆட்சியைக் காக்க
இடம் விட்டு இடம் சகாக்களை கடத்தி
மிரட்டத் தெரியாது.

தனக்கென சட்டம் வகுத்துக்கொண்டு
அதை மீறத் தெரியாத
பகுத்தறிவு சிறிதும் கிடையாது.

வாலறிவன் தாள் வணங்கும்
மனிதருக்கு வால் இல்லை;
குரங்குகளுக்கு அறிவு இல்லை.

வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது.
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை.


.

Monday, October 11, 2010

வசன கவிதை - 79


கனவான காவல்பணி


இன்னும் ஓரடி குறைவாக இருந்தாலும்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்;
வழிமுறை தெரியாமல் வகையாக
இப்படி மாட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

தலையில் தேங்காய் மட்டை வைத்து
உயரம் அதிகரித்திருக்கத் தேவையில்லை.
'போலீஸ் ஆகும் முன்பே போர்ஜரி' என்று
செய்தியாகாமல் இருந்திருக்கலாம்.

காவல்துறையில் நுழைய வேறு வழியா இல்லை?
இப்படி பத்திரிகையில் படம் வெளியாகி
பிரபலமாவதற்கு பதிலாக
கவனிக்க வேண்டியவர்களை கவனித்திருக்கலாம்.

அஞ்சாமல் வேடம் போட்டதற்கு பதிலாக
'அஞ்சாதே' படம் பார்த்திருக்கலாம்-
காவல்துறை கனவில், அதீத ஆர்வத்தில்
திருடனாக மாற வேண்டியிருந்திருக்காது.

இயக்குனர் மிஷ்கினுக்கு ஒரு வேண்டுகோள்:
அஞ்சாதே - இரண்டாம் பாகத்திற்கு கதை தயார்.
பரிதாபத்திற்குரிய அந்த இளைஞரின் முடி உரித்து
பரவசப்படும் ஊடகங்கள் இருக்கின்றன கருவாக.

இதர தமிழ்த் திரைப்பட சிற்பிகளுக்கு வேண்டுகோள்:
கஞ்சா மயக்கத்தில் இருப்பவரும்
திடீர் காவல் அதிகாரி ஆவதுபோல இனியேனும்
படம் எடுக்காதீர்கள்- வாழ்க்கை வியாபாரமல்ல.
.
.

Sunday, October 10, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்...


எழுத்தாளர் பா.ராகவன் நடத்தும் தமிழ் பேப்பர் இணையதளத்தில், நண்பர் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய 'கஜினி முகமதுவும் ராஜராஜ சோழனும்' என்ற சிந்தனைக்குரிய கட்டுரை வெளியாகியுள்ளது. எனக்கு பல ஆச்சர்யங்களை அளித்த கட்டுரை இது; உங்களுக்கும் அளிக்கலாம்..

.

Saturday, October 9, 2010

எண்ணங்கள்


அடிப்பது போல அடிப்பதும், அழுவது போல அழுவதும்...

தீர்க்க முடியாத பிரச்னையா? ஒரு விசாரணைக் குழு அமைத்தால் போயிற்று' என்ற தத்துவம் அரசியல் உலகில் பிரசித்தம். தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவோ, பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மேலும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தவிர, இந்தக் குழு எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கமே சிதறிவிடும் நிலை காணப்படுவதால், பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.

ஆங்கிலக்கல்வி மோகத்தால் அல்லாடும் பெற்றோரை நன்றாகப் புரிந்துகொண்ட தனியார் பள்ளிகள், தன்னிச்சையான போக்குடன் அதிகப்படியான கட்டணங்களை வசூலித்து வந்தன. இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற அரசு, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது. பள்ளிகள் நியாயமான கட்டணத்தை வசூலிக்க இக்குழு தேவையான பரிந்துரைகளைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

இக்குழுவும், தனியார் பள்ளிகளிடம் நாற்பதுக்கு மேற்பட்ட கேள்விகள் அடங்கிய ஆய்வுநிரலை வழங்கி அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புக்கு ஏற்ப புதிய கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே 7-ம் தேதி அறிவித்தது. ஆனால், இந்தக் கட்டண நிர்ணயத்தில் சரியான அளவுகோல்கள் பின்பற்றப்படவில்லை; இதைக் கொண்டு பள்ளிகளை நடத்த இயலாது என்று கூறி தனியார் பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பள்ளி தொடங்கும் காலகட்டத்தில் வந்த கோவிந்தராஜன் குழுவின் ஆணையால் நிச்சயமற்ற நிலை ஒருவார காலத்துக்கு காணப்பட்டது. சில பள்ளிகள் மட்டுமே குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை அடுத்து, கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பளித்தது. அதையேற்று, மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.

அதற்குள் பள்ளிகள் துவங்கிவிட்டதால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வெளிப்படையாகவும், கூடுதல் கட்டணத்தை மறைமுகமாகவும் பள்ளி நிர்வாகங்கள் வசூலித்தன. இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்க பெற்றோரும் தயங்கினர். அவரவர் குழந்தைகளின் கல்விப் பிரச்னை அவரவர்களுக்கு.

சில இடங்களில் மட்டும் பெற்றோர் போராட்டங்களை நடத்தினர். அதனால் பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது அரசோ, கல்வித்துறையோ கடும் நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை.

இதனிடையே உயர் நீதிமன்றத்தை அணுகிய தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டண நிர்ணயப் பரிந்துரைக்கு இடைக்காலத் தடையை செப். 14-ல் பெற்றது. அதன் பிறகு, முன்பு கூடுதல் கட்டணத்தை வசூலிக்காத பள்ளிகளும் அவசரமாக கட்டணங்களை வசூலித்தன. இதற்கு எழுந்த எதிர்ப்பையும் பள்ளிகளோ, அரசோ பொருள்படுத்தவே இல்லை.

தர்மபுரி அருகே தனியார் பள்ளி எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செப். 17-ல் தனியார் பள்ளிகள் அறிவித்த ஒருநாள் விடுமுறைக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்தும்கூட, பல பள்ளிகள் இயங்கவில்லை. அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன்; நீ அழுவது போல அழு' என்று, அரசும் தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டதன் பயனாக, தனியார் பள்ளிகள் பெற்ற இடைக்காலத் தடையை அக். 4-ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தவிர, தனியார் பள்ளிகளுடன் ஆலோசித்து புதிய கட்டணத்தை நிர்ணயிக்குமாறு உயர் நீதிமன்றம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவுக்கு 4 மாத கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கல்வியாண்டு முடியும் நேரத்தில் இக்குழு அறிவிக்கும் புதிய கட்டணத்தால் என்ன மாற்றம் ஏற்படும் என்பது புலப்படவில்லை.

தனியார் பள்ளிகளுடன் முன்கூட்டியே தீர ஆலோசனை நடத்தி, அவர்களும் குறைகூற இயலாத வகையில் பள்ளிக் கட்டணங்களை நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்திருந்தால் இந்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது, குழுவின் பரிந்துரையை தயவுதாட்சண்யமின்றி கல்வித்துறை அமலாக்கம் செய்திருந்தால் நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்; தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகமாகவே காட்சி அளிக்கும் தற்போதைய நிலையும் நேரிட்டிருக்காது.

தனியார் பேருந்துகள் தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்தியுள்ளதும், அதை தமிழக அரசு "வழக்கம் போல'க் கண்டித்து எச்சரிக்கை விடுத்திருப்பதும், இதேபோன்ற நாடகமே. இப்போதும் கூடுதல் கட்டணத்துடன் பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டு பல தனியார் பேருந்துகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழியாகவே இயங்கிக்கொண்டு தான் உள்ளன.

சட்டத்தையும் அரசு உத்தரவுகளையும் நிறைவேற்றும் அமைப்புகளின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, அதிரடி உத்தரவுகளை வாயளவில் வெளியிடுவதால் யாருக்கும் எப்பயனும் விளையாது; அரசின் மரியாதை குறையவும் நிர்வாகம் குலையவுமே அவை வழிவகுக்கும். அதுவே தமிழகத்தில் நடந்திருக்கிறது.
.
---------------------------------
நன்றி: தினமணி (08.10.2010)
காண்க: தினமணி
.

Friday, October 8, 2010

புதுக்கவிதை - 123


மரமான மனங்கள் -3


வெளியில் கிளைகளை வெட்டலாம்;
வேர்களை என்செய்வது?
மீண்டும் துளிர்க்கிறது மரம்.

.

Thursday, October 7, 2010

புதுக்கவிதை - 122


மரமான மனங்கள் - 2

வெட்டப்பட்ட இடத்தில் கசியும்
பிசினிலும் உதவுகிறது
மொட்டை மரம்.

.

Wednesday, October 6, 2010

புதுக்கவிதை - 121


மரமான மனங்கள் - 1


சூரிய ஒளியை மறைக்கிறதாம்,
பிராண வாயுவை மறந்து
வெட்டுகிறார்கள் மரத்தை.

.

Tuesday, October 5, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
-அருட்பிரகாச வள்ளலார்
(திரு அருட்பா- முதல் திருமுறை:8)
.
குறிப்பு: இன்று வள்ளலார் பிறந்த தினம் (1856).
.

Monday, October 4, 2010

உருவக கவிதை - 63




எட்டாத வாழ்க்கை



எட்டிப் பார்த்தவன் சிக்க,
எட்டிப் பறித்தவன் எவனோ.
எட்டிக்காயாகி விட்டது வாழ்க்கை.
.

Sunday, October 3, 2010

உருவக கவிதை- 63





சங்கேத வாழ்க்கை





நாட்குறிப்பு ஏடெங்கும்
சங்கேதக் குறிப்புகள்.
சென்ற ஆண்டின் நாட்குறிப்பைப் புரிய
சென்ற ஆண்டே செல்ல வேண்டும்.
இந்த ஆண்டின் நாட்குறிப்பும்
அடுத்த ஆண்டு குழப்பக் கூடும்.
வரும் ஆண்டேனும்
தெளிவான சங்கேதங்களை
புரிவதுபோல
எழுத வேண்டும்.
.

Saturday, October 2, 2010

மரபுக் கவிதை - 109




சர்வ மத சமரசம்





ஆல்நிழல் தனிலே அமைதியின் உருவாய்
ஞானம் கூறிடும் மோனத்திருவே!
வேலினை அணிந்து சூரனை அழித்த
தேவர்கள் சேனாபதியே முருகா!


ஆழ்கடல் தனிலே நித்திரைகொள்ளும்
புன்னகை தவழும் புருஷோத்தமனே!
வேழமுகத்தால் வேதனை தீர்க்கும்
பாரதம் எழுதிய வேலனின் முன்னே!


மகிஷனை அழிக்க மறஅணி தரித்து
சிம்மம் ஏறிய சிவனது துணையே!
தகித்திடும் தணலால் உலகினைக் காக்கும்
ஜொலித்திடும் கதிரே, சூரியதேவா!

அன்பினைப் பரப்பி அஹிம்சையைக் காத்து
ஆசையை வெறுத்த அச்சுத புத்தா!
நன்மணி மூன்றை நானிலம் ஏற்க
நயம்பட உரைத்த நாயக, அருகா!

பேதமை ஓட்டிட சீக்கியர் வணங்கும்
நேரிய சத்ஸ்ரீ அகாலி இறைவா!
யூதர்கள் மனதில் உறுதியை ஊட்டி
பேரருள் புரியும் ஜெகோவ தேவா!

பகைவரிடமும் அன்பினைக் காட்டி
சிலுவையில் ஏறிய சீர்மிகு ஈசா!
குகையென இருண்ட மனத்திருள் நீக்கி
குலத்தினைக் காத்த நபியின் இறையே!


எனப் பலவாறு வணங்கிட்டாலும்
எல்லாம் ஒன்றே! ஏன் அதிபேதம்?
மனத்துறு மதியே, மதவெறி தவறு!
உடலுறை ஆன்மா- உயிரே கடவுள்!


அனைவரும் அவரவர் விரும்பியவாறு
வணங்கிடுகின்ற வரமே, வளமே!
அனைவரின் மதமும் மனிதனை உயர்த்த
பேதமகற்றிப் பேரருள் புரிக!
.
இன்று மகாத்மா காந்தி பிறந்த தினம்.
.

Friday, October 1, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்




வாடிக்கையாளரே நமது நிறுவனத்திற்கு வரும் மிக முக்கியமான வருகையாளர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை; நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம். அவர் நமது வர்த்தகத்திற்கு வெளியில் இல்லை; அதன் ஓர் அங்கமாக இருக்கிறார். அவருக்கு சேவை செய்வதன் மூலமாக நாம் அவருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை; அதற்கான வாய்ப்பை வழங்கியதன் மூலமாக அவரே நமக்கு நன்மை செய்துள்ளார்.
-மகாத்மா காந்தி.
.