Saturday, June 30, 2012

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு?

சந்தர்ப்பவாதம் = அரசியல் 

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.

அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.

Monday, June 25, 2012

பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்?

அருண் நேரு
 கூட்டணிக் குழப்பங்கள், கொள்கைத் தடுமாற்றங்கள், கிரேக்கப் பொருளாதார நெருக்கடி, பிரிட்டனில் நிலவும் தொழில் மந்தநிலை போன்ற எதிர்மறையான நிகழ்வுகளிடையே நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த மோசமான நிலையிலும்கூட, நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நம்மால் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது; விரைவில் அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இருக்கிறார்.

ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்.

Thursday, June 21, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் சந்திப்பில் நான்


கோவை பதிவர்கள் குழு படத்தில் நானும்  (கண்டுபிடியுங்கள்)

கடந்த ஜூன் 10 ம் தேதி  கோவையில் (ஓரியன் ஓட்டல், கிராஸ் கட் சாலை) நடந்த 'கோவை பதிவர்கள்' சந்திப்பில் கடைசி நேரத்தில் சென்று கலந்துகொண்டேன். நண்பர்கள் சங்கவி, சம்பத், ஜீவா, சுரேஷ், கோவை சக்தி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 40 க்கு மேற்பட்ட பதிவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஒரு பதிவர் என்ற முறையில் நானும் பங்கேற்றது  மகிழ்ச்சி.

எண்ணங்கள்

இடுக்கி மாவட்ட சிபிஎம் தலைவர் மணி

'வாக்குமூலம்' ஏற்படுத்திய சிக்கல்!

''நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதி வரை போராடுவேன்'' என்றார், பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துச் சுதந்திரம் இல்லாத தேசங்களில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதையே காண்கிறோம்.

நமது நாடு ஜனநாயக நாடு; தேர்தல்கள் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும் நாடு. அதற்காக வாக்காளரிடம் பிரசாரம் செய்யவும், வாக்குச் சேகரிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மீதான நம்பிக்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரம் அளித்து தேசிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

Tuesday, June 19, 2012

குழம்பிய குட்டையும் அரசியல் நிர்பந்தங்களும்

அருண் நேரு

கூட்டணி நாடகம் மீண்டும் அரங்கேறிவிட்டது. இதில் தவறொன்றும் கூற முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது கூட்டணியில் சகஜம்தான். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்த அபிலாஷைகள் இருக்கத்தான் செய்யும். அதை நிறைவேற்றவே அக்கட்சி போராடும். அதுபோல திரிணமூல் காங்கிரஸýக்கும் சமாஜ்வாதிக்கும் சொந்தத் திட்டங்கள் இருக்கும். இப்போது ஐ.மு.கூட்டணி- 2 ஆட்சியிலும் காங்கிரஸிலும் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு சோனியா காந்திக்குத்தான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் அடிபடுவதில் அதிசயமில்லை. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தமான அரசியல் களத்தில் இது இப்போது பேசும் பொருளாகி இருக்கிறது. எண்ணிக்கையை எட்ட பிராந்தியக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிராந்தியக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தினால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இப்பிரச்னையிலிருந்து மீள முடியும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இது அறிவுப்பூர்வமான செயலாக இருக்காது.

Tuesday, June 12, 2012

புரிந்தும் புரியாமலும்...













பக்கத்து நாட்டில் குண்டு வெடித்தால்
அது சேதி.
பக்கத்து ஊரில் குண்டு வெடித்தால்
அது பீதி.
பக்கத்திலேயே குண்டு வெடித்தாலேனும்
கிடைக்குமா  நீதி?

கடல் கடந்த சகோதரன் கதறினால்
நமக்கு வேடிக்கை.
அண்டை மாநில சகோதரன் அலறினால்
நமக்கு வாடிக்கை.
மாநாடு கூட்டினால் தீர்ந்தது- 
முழங்குவோம் கோரிக்கை.

வசனங்களில் வாழும் தலைமுறையாக
சபிக்கப்பட்டவர்களுக்கு
விசனங்களில் வீழும் சொந்தங்களைப் பற்றி
சிந்திக்க இல்லை நேரம்.
பிறகு எங்கிருந்து வரும் வீரம்?
எல்லாம் போய்விட்டது தூரம்.

.