Wednesday, November 21, 2012

பழனியிலிருந்து ஒரு பாதயாத்திரை- சிறுகதை


தூரத்தில் மலையும் கோயிலும் தெரிந்தபோதே கன்னத்தில் போட்டுக் கொண்டார் மருதாசல கவுண்டர். ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் வாங்க நிற்கும் கும்பல் போல பயணிகள் பஸ்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வந்த மெல்லிய காற்று இல்லாவிட்டால் உள்ளே இருக்க முடியாது.

கவுண்டரின் பேரன் ரங்கநாதன் பக்கவாட்டில் நசுக்கியபடி உராய்ந்து நின்ற குண்டு மனிதரைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். ஆனால் அவனது கஷ்டம் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இன்னும் கால் மணிநேரம் தான், பழனி வந்துவிடும். எட்டாம் வகுப்பு காலாண்டு பரீட்சை லீவ் நேற்றுத்தான் துவங்கியிருந்தது. லீவில் உருப்படியான காரியமாக, பலநாள் வேண்டுதலை நிறைவேற்ற பேரனை அழைத்துக்கொண்டு பழனி செல்கிறார் கவுண்டர்.

பஸ்சுக்குள் சந்தைக்கடை இரைச்சல். பின்சீட்டில் யாரோ கொய்யாப்பழம் சாப்பிடும் வாசனை. பழனி கொய்யாப்பழத்துக்கு பிரபலம். வீடு திரும்பும்போது பேத்திக்கு வாங்கிப்போக வேண்டும். ஆனால் போனமுறை வந்தபோது ஏமாந்தது போல இம்முறை ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டார். அப்போது தனது முகத்தில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டார். யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவருக்கு அவரவர் கவலை.

Sunday, November 18, 2012

தமிழ் இலக்கியங்களில் தீபாவளி!


நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில் தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர் பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு.

அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில் தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர். தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்தும் கூட தமிழ் இலக்கியத்தில் உறுதியான பதிவுகள் இல்லை.

மாறாக, நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இந்திரவிழா, கார்த்திகை விளக்கு, ஐப்பசி ஓணம் போன்ற பண்டிகைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. காலந்தோறும் மாறித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மானிட சமுதாயத்தின் சிறப்பாகவே பண்டிகை மாற்றங்களைக் கருத வேண்டும் என்பது மானுடவியலாளர்களின் கருத்து.

இந்நிலையில், தமிழ் இலக்கியத்தில் திருமால் வழிபாடு, விளக்கு வழிபாடு தொடர்பாக இடம்பெற்றுள்ள சில பதிவுகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

Monday, November 5, 2012

வடசித்தூரில் கொண்டாடப்படும் மயிலந்தீபாவளி!


 நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பல  நாள் கொண்டாட்டமாக தீபாவளி மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது. தமிழகத்திலோ தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் மட்டுமே.

அதேசமயம், கோவை மாவட்டத்திலுள்ள வடசித்தூர் கிராமத்தில் மட்டும் தீபாவளி இரண்டுநாள் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளை இவ்வூர் மக்கள் "மயிலந்தீபாவளி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று இக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கிடாவெட்டு உண்டு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள வடசித்தூர் கிராமம் சிற்றூராட்சியாகும். குரும்பபாளையம், செல்லப்ப கவுண்டன்புதூர் ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கிய வடசித்தூர், சுற்றுவட்டாரக் கிராமங்களின் மையமாக உள்ளது. இங்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே இங்கு முக்கியத் தொழில். சமீபகாலமாக இப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டு வருகின்றன.