மதுரையைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை. இது ஒரு பொதுவான மனநிலை.
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.