அகன்று உயர்ந்த மதிலில் பல இடங்களில் சிதிலங்கள்.
ஆலமரமும் அரச மரமும் வேரோடியிருக்கின்றன.
எருக்கஞ்செடிகள் பூக்களை இறைத்தபடி மதிலோரம் விரவிக் கிடக்கின்றன.
சுண்ணாம்பு பார்த்து பலநூறு வருடம் ஆனதன் அடையாளம்
சுவரெங்கும் பட்டையாக உரிந்து கிடப்பதில் தெரிகிறது.
செங்கல்லும் சுண்ணாம்புச் சாந்தும் பெயர்ந்திருந்தாலும்
கம்பீரம் குலையாமல் காட்சி தருகிறது மதில்.
இரண்டு ஆள் கனத்தில் இவ்வளவு வலிமையாகக் கட்டிய
கொத்தனார் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்,
பலநூறு ஆண்டுகள் இந்த மதில் வரலாறு சொல்லும் என்று.
கட்டியவன் யார், கட்டச் சொன்னவன் யார்
என்பதெல்லாம் தேவையில்லாத கதை.
இந்த மதிலை இடித்தால் தான் உள்ளிருக்கும்
அரண்மனையைத் தூர்க்க முடியும் என்பதுதான் விஷயம்.