Wednesday, July 27, 2011

புதுக்கவிதை - 143


பரிதாப ஜீவன்கள்




சாலையின் இருபுறமும்

புழுதியையும் கரியையும்

ஜீரணித்தபடி நிற்கின்றன

நிழல் மரங்கள்-

கசாப்புக் கடையில் தவிக்கும்

ஆடுகள் போல.



கடந்துபோகும் வேக வாகனங்கள்

எப்போதும் ஏற்படுத்தும்

அதிர்வுகளைத் தாங்கியபடி,

மோதுமோ மோதாதோ என்ற

பதைபதைப்புடன்

காட்சி அளிக்கும் பரிதாப மரங்கள்.



சாலை விரிவாக்கத்துக்காக

அளக்கும் கருவிகளுடன் நிற்கும்

ஊழியர்களுக்கும்

அதே மரம் நிழல் தருகிறது-

எல்லைக் கோட்டுக்குள்

தான் வருவது தெரியாமல்.



அதுசரி.

தெரிந்துதான்

என்ன ஆகப் போகிறது?

தன்னை அறுக்கும் ரம்பத்தை

மௌனமாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர?

.

Friday, July 22, 2011

எண்ணங்கள்


அனந்த பத்மனாபரின் களஞ்சியம் 

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலில்  கண்டெடுக்கப்பட்டுள்ள  பல  லட்சம் கோடி  மதிப்புள்ள ஆலயக் கருவூலம்   பலரையும் பிரமிப்பில்  ஆழ்த்தி உள்ளது.  இந்த பெருமளவு தங்கம், நவரத்தினங்கள் உள்ளிட்ட சொத்துக்களை என்ன செய்வது என்று உபதேசிக்க, இதில் எந்த பாத்தியதையும் இல்லாத  அறிவுஜீவிகள்  கிளம்பி விட்டார்கள். கடந்த வாரங்களில்  நடந்துவரும் அனைத்து கூத்துக்களையும் கண்டபின்னும், என்ன தான் நடக்கிறது என்று அமைதி காத்ததில், அற்புதமான பலன் விளைந்திருக்கிறது.
 .
ஹிந்து ஆலய களஞ்சியங்களை சூறையாடும் ஆர்வம் கொண்டவர்கள்   யார்?  அந்த மாநில அரசின் நிலை என்ன? ஹிந்து மத காப்பாளர்களின் நிலை என்ன? இந்த விவகாரம் வெளிவரக் காரணமாக இருந்த உச்சநீதி மன்றத்தின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் இப்போது தெளிவாகி விட்டது.
 .
இடதுசாரி சிந்தனை சார்ந்தவர்கள் எப்போதுமே ஆலயத்தை மதிப்பவர்கள் அல்ல;  அவர்கள் கிடைத்த  களஞ்சியத்தை  மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும் என்று சொன்னதில் வியப்பில்லை. வரலாற்று நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்தான் இதில் சறுக்கினார்கள். கிடைத்துள்ள களஞ்சியத்தின் சரித்திர மதிப்பை உணர்ந்தும், கீழ்மை உணர்வால், தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்தார்கள் அவர்கள்.
 .
ஆனால், கேரள  மாநில முதல்வர் உம்மன்  சாண்டி (இத்தனைக்கும்  இவர் கிறிஸ்தவர்!) ' அனந்த பத்மநாபர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து கருவூலமும் பத்மநாப சுவாமிக்கே சொந்தம்' என்று கூறி, விவாதத்திற்கு  முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி.
 .
தோண்டத் தோண்ட  பெருகிவந்த கருவூலம் கண்டு அதிர்ந்த நீதிமன்றம், புலிவாலைப் பிடித்ததை உணர்ந்துகொண்டு, கோவிலின் கடைசி நிலவறையைத்   திறக்க தடை விதித்திருக்கிறது. கிடைத்துள்ள சொத்துக்களின்  மதிப்பை யூகத்திற்கு ஏற்றபடி ஊடகங்களில் வெளியிட்டதையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
.
அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து ஆலயச் சொத்துக்களைக் காக்க ரகசிய நிலவறை அமைத்து அதில்  ஆலயச் சொத்துக்களை பத்திரப்படுத்தியதுடன், பல தலைமுறைகளாக இந்த ரகசியத்தையும் காத்துவந்துள்ள திருவாங்கூர்  மார்த்தாண்ட வர்மா வம்சம் பாராட்டப்பட வேண்டியது.
.
எண்ணிப் பாருங்கள், நாடு முழுவதும் சிதிலமாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட ஹிந்து கோவில்களில் எத்தனை கோடி கருவூலங்கள் இருந்திருக்கும்? தமிழகம் மட்டும் தான் அந்நிய ஆக்கிரமிப்பில் ஓரளவேனும் தப்பிப் பிழைத்தது. ஆயினும் நிலவறைகள் உள்ள திருச்செந்தூர், திருவட்டாறு கோவில்களின் கருவூலங்கள் மாயமானதையும் நாம் அரசல் புரசலாக அறிவோம். ஹிந்து ஆலயங்கள் அரசின் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயம் இப்போது உணரப்பட்டுள்ளது.
.
திருவனந்தபுரம் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஆலயச் சொத்துக்களின் மதிப்பை குறிப்பிடுகையில் ஊடகங்கள் புலம்புகின்றன. அவற்றுக்கு ஒரு வார்த்தை. அந்த சொத்துக்களை விலை மதிப்பிட முடியாது. அப்படியே பொருள்களின் எடை அளவில் மதிப்பிடுவதாக இருந்தாலும் அவற்றின் மதிப்பு கண்டிப்பாக ரூ. 1.76  லட்சம் கோடியைத் தாண்டும் என்பது திண்ணம். 

இந்நிலையில், அனந்த பத்மநாப சுவாமி கோவிலின் களஞ்சியம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வியே தேவையில்லை என்று அறுதியிடும் கட்டுரைகள் இணைய பக்கங்களில் காணக் கிடைத்தன.

அவை இதோ...

     - இரா. நாகசாமி (தமிழ் ஹிந்து)

      -ஜெயமோகன்

      -ஜெயமோகன்

     - ஆர்.வைத்தியநாதன் (சொல்வனம்)

   - உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா நேர்காணல் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

    - தினமணி தலையங்கம்

.

Tuesday, July 12, 2011

வசன கவிதை - 88







வென்றவனின் பிரகடனம்


ஆள்தான் பெரிய உருவம்

ஆனால், பரிதாபம்.


எதற்குத் துரத்துகிறார்கள் என்று

ஏதும் தெரியாமலே

ஓடிக் களைத்த போதில்தான்

பிருஷ்டத்தில் அந்த ஊசி பாய்ந்தது.

அடுத்த நிமிடம் என்ன நடந்தது?

மயங்கிச் சரிந்த பெரிய உருவம்

செங்கல் சூளைக்கு மண் அகழ்ந்த குழியில்

தன்னைத் தானே புதைத்துக் கொண்டது.


ஆள் தான் பெரிய உருவம்.

மனிதரின் பகுத்தறிவு சிறிதும் இல்லாத

பரிதாபத்திற்குரிய உயிரினம்.


கழுத்தில் ஒரு மின்னணுக் கருவியை மாட்டவே

துரத்துகிறார்கள் என்பது தெரியாத முட்டாள்.

துப்பாக்கியில் சுட்டது மயக்க ஊசி தான்

என்று தெரியாத ஐந்தறிவு ஜடம்.

ஓட ஓடத் துரத்துவார்கள் என்பது அறியாமல்

புவியில் பிறந்துவிட்ட அற்பப்பதர்.

ஆள் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால் போதுமா?


காட்டை ஆளும் லாவகம் தெரிந்தும்

நாட்டு மக்களின் அச்சம் புரியாமல்

எல்லை தாண்டிய பேராசைக்கு

சாவு தானே பரிசு?

'அட்டகாசம்' செய்யும் தும்பிக்கையான்

இப்போது உணர்ந்திருக்கக் கூடும்

மனிதரின் வலிமையை.


அப்பாவிகளுக்கும் பரிதாபிகளுக்கும்

மனிதரின் உலகில் என்றும் இடமில்லை.

வலிமை உடையவனுக்கே உலகம் சொந்தம்.

இது, உயிருடன் உள்ள பிற யானைகள்

புரிந்துகொள்ள வேண்டிய பாடம்.


காட்டைத் தாண்டாதே; தண்டனை உண்டு.

காட்டுக்குள் வந்தாலும் அனுமதி; அதுவே உன் தலைவிதி.

இது வென்றவனின் பிரகடனம்.

------------------------------------------------

குறிப்பு: கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் கடந்த ஜூலை 9 ம் தேதி இரவு,  காட்டு யானை ஒன்றுக்கு கழுத்தில் 'ரேடியோ காலர்' என்ற மின்னணுக் கருவியை மாட்டுவதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையின்போது மயக்க ஊசியால் யானை குழியில் விழுந்து பலியானது. அந்த யானைக்கு மூன்றாம் நாள் அஞ்சலி இது.

காண்க: பத்திரிகை செய்தி


படம்: இந்த யானைதான் வனத்துறை நடவடிக்கையில் பலியானதாக நம்பப்படுகிறது.
(பட உதவி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு, கோவை)

.