Sunday, February 28, 2010

இன்றைய சிந்தனை

குறள் அமுதம்

ஊழிற் பெருவழி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
-திருவள்ளுவர்
(ஊழ் - 380)

உருவக கவிதை - 34


முட்டுச்சந்து

கால் போன போக்கில்
நடந்தாலும் சிலநேரம்
வீடு வந்துவிடுகிறது.
தெளிவான முகவரியுடன்
தேடினாலும் சிலநேரம்
முட்டுச்சந்துகளில்
தத்தளிக்க வேண்டியிருக்கிறது.
ஆங்காங்கே சிலநேரம்
காதை விறைக்கும்
தெருநாய்கள்.
சாலைகளின் அலைகடலில்
பாய்மரம் கிழிகிறது.
துடுப்பு வலித்து
துவண்டுபோகிறது
வாழ்க்கை.
கால் போன போக்கில்
கடந்துபோகிறது -
செல்லவேண்டிய
இலக்கு.
.

Saturday, February 27, 2010

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-திருவள்ளுவர்
(வினைத்திட்பம் - 666)

மரபுக் கவிதை - 76


வற்றி விடுமோ?

இன்னூற்று வற்றிவிடுமோ? இந்த
இதயத்தில் பீறிடு நல்
இனிமை மிகு கவிதைகளின்
இன்னூற்று வற்றிவிடுமோ?

மண்நீட்ட மனிதரோ நான்? இந்த
மண்ணகத்து மனிதரிடை
மணியான எம் புலமை
மண்ணுள்ளே மடியுமாமோ? அன்றி
தன்னோக்கு வடிவு தாமோ? இந்தத்
தடைகளைத் தகர்த்தெறியத்
தயங்காத மொழிக்கோவைத்
தன்மையின் தரகு தாமோ?

விண்ணாக்க விதிகள் தாமோ? இந்த
விந்தைக்கும் விந்தை மிகு
வியப்பான சொல்லமுத
விண்ணூற்று விளைவு தாமோ? எனின்
நன்னூற்றுப் புலவர் தாமே - இந்த
நயமிக்க கேள்விகளின்
நலமான பதில்கள் சொலி
நன்னூக்கம் நல்குவீரே!
.

Friday, February 26, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்

...நமது தேசத்திலிருந்து தான்யம் ஏற்றுமதியாவதை நிறுத்திவிட வேண்டும். ஸாதாரண வருஷத்துக்கேசோற்றுக்குத் தட்டுகிறது. சாதாரண வருஷத்தில் அரைப் பட்டினி; கொஞ்சம் வறட்சி நேர்ந்தால் அதோ கதி!
தான்யத்தை நம்நாட்டில் மிச்சம் வைத்திருந்தால் பஞ்சக் காலத்துக்குப் பயன்படும். ஜனங்களின் வறுமை மிகப் பரிதாபமானது. கவர்மெண்டார் விவசாயிகளின் நிலைமையைப் பற்றி சம்பூர்ணமானகணக்குகளை வெளியிடக் கூசுகிறார்கள்...
-மகாகவி பாரதி
-பாரத ஜன சபை-யில்
(காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம் - பக்: 340)

புதுக்கவிதை - 77


நெருப்பு

வெளிநாட்டுப் பயணங்களில்
பிரதமர்...
கலையுலக பாராட்டு விழாக்களில்
முதல்வர்...
அரசியல் லாவணிகளில்
கட்சிகள்...
விண்ணைத் தொடும்
விலைவாசி உயர்வால்
அடிவயிற்றில் நெருப்புடன்
மக்கள்.
.

Thursday, February 25, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பிறர் உள்ளத்தைக் கவரும் முறையில் உடைக்கோலஞ் செய்யும் பெண்மணிகள் நிலை குறித்து இரங்குகிறேன். தூய மனமுடைய ஆண்மக்கள் நெஞ்சையும் உடைக்கக் கூடிய வேடிக்கை உடைகளைச் சில பெண்மக்கள் அணிகிறார்கள். இப்பழக்கம் நிறுத்தப்படல் வேண்டும்... பிறர் மனத்தைக் கவரத் தக்க உடை அணிதல் பாவம்; பாவம். அக்கவரல் பின்னைத் தன்னைப் பல வழியிலும் கெடுக்கும் என்பதைப் பெண்மக்கள் உணர்வாளாக
-திரு.வி.க.
(பெண்ணின் பெருமை - பக்:104)

.

உருவக கவிதை - 33


நீரூற்றுப் பேனா

பாவாடை, தாவணி போல
வழக்கொழிந்துவிட்டது
நீரூற்றுப் பேனா.
எங்கு பார்க்கினும்
சுடிதார் போல
பந்துமுனைப் பேனாக்கள்.

கையை மையாக்கும்,
அடிக்கடி முனை உடையும்
சிக்கல் இல்லை எனினும்,
எழுத்தின் அழகுக்கு
நீரூற்றுப் பேனாவே உத்தமம்.

தேர்வுகளிலும் கட்டாயமாகிவிட்டது,
கல்லூரிகளில் இயல்பாகிவிட்ட
பந்துமுனைப் பேனா.
எனினும் ஒருகாலத்தில்
தடை விதிக்கப்பட்டிருந்த
குப்பை தானே இது?

.

Wednesday, February 24, 2010



சான்றோர் அமுதம்

இந்தியாவை நகரங்களில் அல்ல, அதன் கிராமங்களில் தான் காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதையே எண்ணற்ற தடவைகள் திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஏழை மக்களுக்கு உணவும் உடையும் போதுமான அளவுக்குக் கிடைக்கிறதா என்றும், வெய்யிலிலும் மழையிலும் ஒதுங்க ஒரு கூரையாவது உண்டா என்றும் நாம் ஒருபோதும் நின்று விசாரித்ததில்லை.
இந்தச் சீரழிவை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? எல்லோரும் இன்னலின்றி வாழக்கூடிய அளவுக்கு இந்திய கிராமங்களை உருவாக்குவதே நாட்டை நேசிக்கும் அனைவருடைய பணி.

-மகாத்மா காந்தி
(நன்றி: எண்ணங்களின் சங்கமம் - 2008; பக்:250 )

நண்பரும் ஓவியருமான, 'எண்ணங்களின் சங்கமம்' அமைப்பின் நிறுவனர்
திரு. ஜெ. பிரபாகர் அவர்களுக்கு இது சமர்ப்பணம்.

.

வசன கவிதை - 47


காணாமல் போன சந்தை

மலையெனக் குவிந்திருக்கும்
மளிகைப்பொருட்கள்;
கூறுகளாக காய்கறிகள்;
கூடைகளில் பழவகைகள்;
வண்ணங்களின் சங்கமமாய்
துணிரகங்கள்;
உப்பு முதல் உலக்கை வரை
எல்லாமே கிடைக்கும்
எங்கள் ஊர்ச் சந்தையில்.

திங்கட்கிழமையானால்
கிராமமே திருவிழா காணும்;
அண்டை கிராமங்களிலிருந்து
மாட்டுவண்டிகள்
அணிவகுக்கும்.

கக்கத்தில் மஞ்சள்பையுடன்
கிருதா மீசையுடன்
உற்சாக உலா வருவார்
சுங்கவசூல்தாரர்.

ஒருவாரத் தேவைகளை
நூறு ரூபாயில் நிறைவேற்றிய
காலம் அது.

ஒருபுறம் மாடுகளுக்கு லாடம்;
மறுபுறம் சாட்டைகளுடன்
ஆடு, கோழி விற்பனை
களை கட்டும்.
இரவு வரை குறையாது கூட்டம்.

காகிதப் பொட்டலங்களில்
விற்பனையாகும்
கிராமியப் பலகாரங்கள்,
அச்சுவெல்ல மிட்டாய்கள்,
பொமமைக்கடை நோக்கும்
குழந்தைகளின் கண்களில்
குதூகலம்.
அருகில் சுழலும்
குடைராட்டினம்.

அதைவிட வேகமாக
சுழன்றுவிட்டது காலம்.

இருபது வருட இடைவெளியில்
சொந்த ஊர் திரும்பினால்,
சந்தைப்பேட்டை
பேருந்து நிலையமாகி இருந்தது.

நிழல் கனிந்த மரங்கள்
இருந்த இடங்களில்
தார்த்தளம்.
சுங்கவசூல் மேடைக்கு பதிலாய்
கட்டணக் கழிப்பிடம்.
சந்தையின் ஒரு கோடியில்
தினசரி மார்க்கெட்டில்
வியாபாரிகள் மட்டும்
சுறுசுறுப்பு.

பேருந்து நிலைய வளாக
தேநீர்க்கடையில்
அடுமனைப் பலகாரங்களின்
அணிவகுப்பு.
தேநீர் ஆற்றியவரை
எங்கோ பார்த்த ஞாபகம் -
கிருதா மீசை நரைத்த
அதே சுங்கவசூல்தாரர்.

சந்தை எதிரில் புதிதாக உருவான
டிபார்ட்மென்டல் ஸ்டோர்.
அதன் முன்புறம்
இருசக்கர வாகனங்கள்.
பேருந்து நிலைய வளாகத்தில்
பல கடைகள்; பல மனிதர்கள்.

கிராமம் மாறிவிட்டது;
சந்தை காணாமல் போய்விட்டது.
எங்கிருந்தோ அண்டங்காக்கை
மதிய வேளையில்
ஈனசுரத்தில் கரைகிறது.
தூரத்தில் கழுதை
மேய்ந்து கொண்டிருக்கிறது.

கழுதையையும் காகத்தையும் காண
மனம் பாரமாகி விட்டது.


நன்றி: சுதேசி செய்தி (மார்ச்-2010)

.

Tuesday, February 23, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்



குணத்தையோ குற்றத்தையோ எங்கு விவாதித்தாலும், அங்கே கூட இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதில் சிறிதளவாவது பங்கு வந்து சேரும்.
-அன்னை சாரதா தேவி.

புதுக்கவிதை - 76


ஆத்திரம்

சுற்றிலும் மனிதர்
எத்தனையோ பேர்!
அப்படி இருக்கையில்
'ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு'
என்று
என்னைப் பார்த்து
எப்படிச் சொன்னார்?
என்னிடம் வரட்டும்-
இடுப்பை ஒடிக்கிறேன்...
.

Monday, February 22, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்


உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
-திருவள்ளுவர்
(மருந்து - 950)
பொருள்: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று, மருத்துவ முறை நான்குவகைப் பாகுபாடு உடையது.

.

உருவக கவிதை - 32

இருமல்

''லொக்... லொக்... லொக்...
உங்களுக்கு சாதாரண...
லொக்... லொக்... லொக்...
ஜுரம் தான்...
ஒரு ஊசி போடறேன்... லொக்...
சரியாயிடும்...''
சொல்லிவிட்டு
மருத்துவர்
உள்ளே போனார்.
நோயாளி வெளியே
ஓட்டம் பிடித்தார்!

Sunday, February 21, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
-பாவேந்தர் பாரதிதாசன்
(தமிழின் இனிமை)

.

மரபுக்கவிதை - 75


வெள்ளமும் வெல்லமும்

மலையுள கற்களைப் புரட்டி, பல
மரங்களை வேரொடு பெயர்த்து, சுழல்
அலைமிக வெண்நுரை திரள, இரு
கரைகளும் தழுவிடும் வெள்ளம்!

கண்ணலைச் சாறெனப் பிழிந்து, பெருங்
கலத்தினில் ஊற்றிய பின்னர், எரி
வண்ணமாய்க் காய்ச்சிய பாகை, சிறு
அச்சினில் ஊற்றிட வெல்லம்!


ஒலிநயத்தாலே ஒன்றாய் ஆயினும்
ஓரெழுத்து அதனால் இருபொருளுண்டு!
லியது பொருளே! ழியொரு எழுத்தே!
விழைவில்லாவிடின் விளைவே இல்லை!
.

Saturday, February 20, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

இந்தியாவில் தற்போது ஒருவேளை உணவு உண்டு இருப்போர் லக்ஷக் கணக்கு. அந்த ஒருவேளை சாப்பாட்டில் நெய்யும் இல்லை, எண்ணெயும் இல்லை. இந்த லக்ஷக் கணக்கான ஏழைகள் பசியாற உண்டு, மானம் காக்க உடையும் அடைந்த பிறகே, நீங்களும் நானும் எதையும் நமது என்று சொல்லி உரிமை பாராட்ட முடியும். நமக்கு அறிவு வேண்டும். நம்முடைய ஆசைகளை குறைத்துக்கொண்டு ஏழைகளுக்கு ஓரளவு மிஞ்சும்படி செய்வது நமது கடமை.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ-பக்:40)
.

மரபுக்கவிதை - 74


நேற்றைய நினைவு

இன்றைய காலை இனிதாய் இருக்க
வென்றிட வேண்டும் நேற்றைய நினைவை!

நேற்றைய காலை நேரத்தினிலே
நாற்றமெடுத்த வியர்வையின் நடுவே
காற்றில்லாமல் கசப்புறு மனத்துப்
பேற்றினைப் பெற்றேன் பேருந்தினிலே

எந்தன் சிற்றூர் வாகனம் நுழையா
கந்தை சாலை 'ங' வெனக் கொண்ட
விந்தைநிலை மிகு வியப்புறு கிராமம்!

என்னுடை கிராமத் தெழிலுடை சாலை
இன்றைய வாகனத் தடையாய் இருக்க
ஒன்றே ஒன்றாய் ஒரு பேருந்தே
நன்றாய் வந்தது நாங்கள் மகிழ!

மேலே பார்த்தும் மேகம் பொய்க்க
வேலையைத் தேடி விரைந்தனர் மக்கள்;
வேலையை விரும்பிய 'கூலி'களுக்கு
பாலமாய் இருந்தது அவ்வாகனமே!

அவனவன் அவனது தொழிலுக்காக
அவதிப்பட்டு அதனில் அடைந்து
சுவரென ஒடுங்கி சுண்ணாம்பாகி
சவமென நிற்கச் சங்கடம் அடைந்தேன்!

இன்றைய காலை இனிதாய் இருக்க
வென்றிட வேண்டும் நேற்றைய நினைவை!


குறிப்பு: உண்மை நிகழ்ச்சி (15.02.1989)
.

Friday, February 19, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
-திருவள்ளுவர்
(இறைமாட்சி- 388)

உருவக கவிதை - 31


முடியவே முடியாது...

கணக்குப் பார்த்தால்
கடமையாற்ற முடியாது.
கணக்கு கேட்டால்
கட்சி நடத்த முடியாது.

கலைத்துறையை மறந்தால்
கலைஞனாக முடியாது.
கண்ணியமாய் நடந்தால்
களத்தில் வெல்ல முடியாது.

அத்து மீறாமல்
ஆட்சி நடத்த முடியாது.
கட்டுப்பாடு காக்காமல்
குடும்பம் காக்க முடியாது.

தத்துவம் பேசாமல்
தரணி ஆள முடியாது.
கொள்கைகளைக் கடைபிடித்தால்
கோட்டை கட்ட முடியாது.

தொண்டர்களை உசுப்பாமல்,
பங்கு பிரிக்காமல்,
முதுகில் குத்தாமல்,
தலைவனாக முடியாது.
.

Thursday, February 18, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

சமன் குலைக்கும் அனுபவங்களே படைப்பிலக்கியத்துக்கான சீண்டலை அளிக்கின்றன. படைப்பிலக்கியம் என்பதேகூட, அவ்வனுபவத்தைச் சமன்படுத்திக் கொள்வதற்கான யத்தனமேயாகும். அவ்வனுபவத்தை அதுவரை நாம் பெற்ற அனுபவங்களின் நீட்சியாகப் பொருத்திக் கொள்கிறோம். நம்முள் உள்ள அகநிலைக்காட்சியில் அதை மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். அதை விதையாக ஆக்கி நம் ஆழ்மனதுக்கு அனுப்பி, அது மரமாக மீண்டுவரச் செய்கிறோம். அதுவே இலக்கியமாகும். சிப்பிக்குள் விழுந்த தூசு அதன் சதைச்சாறால் முத்தாவதுபோல படைப்பாகிறது அவ்வனுபவம்.
-ஜெயமோகன்
(எழுதும் கலை- பக்:76 )

.

வசன கவிதை - 46

வெறுமை

முன்பு போல இப்பொழுதெல்லாம் கவிதை எழுத முடியவில்லை.
ஏன்? என்ன காரணம்? எனது சோம்பலா, வேலைப்பளுவா, நேரமின்மையா, பொறுப்பு அதிகரித்ததாலா?
ஏன்? எது காரணம்?

நினைத்தவுடன் கவிதை எழுதும் வல்லமை எங்கு போனது? ஆசுகவித் திறன் அனைவருக்கும் கிட்டுவதில்லை. அதை வீணாக்கலாமா?
முன்பு கவிதைகள் என் நாட்குறிப்புகளாய் இருந்தது பழைய கனவு தானா? இனி கவிதை ஜனிக்காதா? மனம் தத்தளிக்கிறது; மறுகுகிறது; மயங்குகிறது. என்ன செய்யப் போகிறேன்? நிகழ்காலம் கேள்வி கேட்கிறது.

உருண்டு உருண்டு ஓடும் பந்து எங்காவது நின்று தான் ஆக வேண்டும். ஆனால் கவிதையும் பந்தும் ஒன்றாகி விடுமா? உருண்டை உலகில் கவிதையே நிலையான சொத்து. ஆனால், மனம் காலியாக, வெறுமையாக, கவிதையற்று இருப்பது ஏன்?

வாழ்க்கை பொருளோடு விளங்க வேண்டுமானால், அதற்கு வரையறை இருந்தாக வேண்டும். வாழ்க்கை வாழப்பட்டதற்கு அடையாளம் ஏதாவது இருந்தாக வேண்டும். என்னைப் பொருத்தவரையில், இதுநாள் வரையில் அடையாளம் கவிதை தான். வரையறை தான் கிட்டாமல் இருந்தது. இப்பொழுது வரையறை கிட்டுகையில் அடையாளம் தடுமாறுகிறதே? இரண்டும் இணைந்த இணைகோடாய் வாழ்வு அமைய முடியாதா?

குளத்தில் நீர் இருந்தால் தான் அதன் சுற்றுப்புறம் பசுமையாய்ப் பரிமளிக்கும். மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கையில் கவிதைகள் பசுமையாய் வெளிவரும். 'உள்ளத்தில் உற்சாகம் பொங்கி வழியும் சமயத்தில் எழுத எழுத எழுத்து வளரும்' - இது கவி கண்ணதாசன் சொன்னது. என் மனதில் நிம்மதி இல்லையா? உற்சாகம் குன்றிவிட்டதா? கவிதை வரம் அளித்த கலைவாணி அது வரளவிட்டு விடுவாளா?

எனது இலட்சியங்கள், வாழ்க்கைமுறை, சுற்றுப்புறம் யாவும் பதிவுகளான முந்தைய கவிதைகள் சரித்திரம் அல்லவா? இனி அவை சங்கமிக்காதா?
வெறுமையை மனம் வெறுக்கிறது. உள்ள வறுமையை எண்ணி வாடுகிறது. இனியாவது இன்கவிதை பிரசவிக்குமா? இதயம் ஏங்குகிறது.

கவிதாவாணி, இது கவிஞனின் வாழ்வுப் பிரச்னை.
உன் கையில் கொடுத்து விட்டேன்.
இனி இது உன் பிரச்னை.
எழுதிய நாள்: 01.07.1995
.

Wednesday, February 17, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

ஐந்து வயது வரை குழந்தைகளை மிகவும் அன்புடன் வளர்க்க வேண்டும். ஐந்து வயதுக்குப் பின் பதினைந்து வயது வரை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். பதினைந்து வயதுக்கு மேல் குழந்தைகளிடம் நண்பனைப் போல் அன்பு செலுத்தி வளர்ப்பது அவசியம். இல்லாவிட்டால் அவர்கள் வழிதவறி விடுவார்கள். ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையுள்ள காலகட்டத்தில் தான் வாழ்க்கையின் அஸ்திவாரம் உருவாகிறது. பிறகு தோழமை உணர்வோடு நன்கு அன்பு செலுத்தி வளர்த்தால் மட்டுமே அவர்களை நேர்வழியில் நடத்திச் செல்ல முடியும்.

-மாதா அமிர்தானந்த மயி தேவி.
(இல்லறத்தார்க்கு இன்னுரை- 98)

.

வசன கவிதை - 45

பரிதாபத்திற்குரியவன்

அவன் பரிதாபத்திற்குரியவன்
அவனை விட்டுவிடுங்கள் -
அவன் குற்றவாளியில்லை.

அவனது வளர்ப்புமுறை அப்படி.
அப்பாவின் கண்டிப்புகளுக்கு பயந்து பயந்து
அது அற்றுப் போனதும் அப்படியாகிவிட்டான்,
அது அவன் குற்றமில்லை.

அவனது அம்மாவுக்கு
அன்பு மட்டும் தான் செலுத்தத் தெரிந்தது.
அடக்கி வைத்ததால் அறிவு முடங்கிவிட்டது-
அவளுக்கு தெரியாது.
அது அவளது குற்றமுமில்லை.
அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
பரிதாபப்படுங்கள்.

பிஞ்சுவில் பழுத்தால் பிரச்னை தான்.
ஆனால் பிஞ்சு பழுக்கவில்லை.
பழுக்கவைக்கப்பட்டது.
அது அதன் குற்றமில்லை.

அஞ்சு வயதில்
பக்கத்து வீட்டு ப்ரியா ஓடி விளையாடுகையில்
பொதி சுமக்கிற கழுதை போல
அவன் பள்ளிக்கு ஓடுகிறான்.
அவனது ஆசிரியருக்குத் தெரிய நியாயமில்லை -
அவனுக்கென்று ஒரு மனம்.

இரவில் தன்னைப் பிரிந்து
அம்மாவும் அப்பாவும் எங்கே போகிறார்கள்?
அவனது சந்தேகம், பயம் தீர்ந்தபோது
வேறு சந்தேகம் முளைத்துவிட்டது.

பாட்டியையும் தாத்தாவையும் ஊரில் தனித்துவிட்டு,
தன்னையும் இரவில் தனியாய்க் கிடக்கவிட்டு,
இவர்களுக்கென்ன கேலிப்பேச்சு?
பாதி தெரிந்தது; மீதி?
தெரியாமலா போகிறது?
பாவம்- அவன் பரிதாபத்திற்குரியவன்.

எட்டு வயதிலேயே கண்ணாடி போட்டுக்கொண்டு,
ஒல்லியாய், நோஞ்சானாய்,
பின்வரிசை மாணவனுக்கு விளையாட்டுப் பொருளாய்,
ஆசிரியருக்கு அழுமூஞ்சியாய்,
இரவில் தூக்கமின்றிப் புலம்பும் அனாதையாய்,
எப்படிஎப்படியோ தவித்துப் போனவன் அவன்.
அவனை ஏன் தண்டிக்கப் பார்க்கிறீர்கள்?

பக்கத்து வீட்டு ரமேஷுடன் சினிமாவுக்கு போனதற்காக
அப்பாவிடம் பெல்ட் அடி.
பெல்ட் தழும்புக்காக பள்ளிக்கு மட்டம் போட்டான்.
ஆசிரியரிடம் பிரம்படி.
அடி மேல் அடி அடித்து உடைத்துவிட்டார்கள் மனதை.
இன்று 'தம்' அடிக்கிறான்; மன்னியுங்கள் அவனை.

14 வயதிலேயே ஒளிந்து 'தம்' அடித்தால்
18 வயதில் இவன் என்ன செய்ய மாட்டான்?
அம்மா புலம்புகிறாள்; அப்பா பெல்ட்டை உருவுகிறார்.
அவன் ஓடிப்போனான்.
அப்பா அதிர்ந்தார்; அம்மா அழுதாள்
அவன் ஓடியது கூட பெரிய விஷயமில்லை -
கேடியானது கேவலம் தான்.
ஆனால் அவனை நிந்திக்காதீர்கள்.
அவன் பரிதாபி.

அவனுக்கென்று மனம்;
அவனுக்கென்று தனியான ஒரு மனம்;
அவனது மனம்.
அது யாருக்கும் தெரியவில்லை.
இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்.
கால வெள்ளத்தில் ஒரு கற்பூரம்
கரைந்துவிட்டது.
இனி அழுது பயனில்லை.

அன்பிற்கு ஏங்கியவன்;
அடிகளுக்கு பயந்தவன்;
ஆசிரியரைக் கண்டு நடுங்கியவன்;
நண்பரால் கேலி செய்யப் பட்டவன்-
இந்தச் சூழ்நிலைகளை நாம் சந்திக்கவில்லை.
சந்தித்திருந்தால் அவனை
இரக்கத்தோடு பார்த்திருக்கலாம்.
விதியால்அவன் ஏசப்படுகிறான்.

தயவு செய்து அவசரப்படாதீர்கள்-
அவன் குற்றவாளியில்லை.
அவன் பாவியல்ல; பரிதாபி.
அவனை அவன் போக்கிலேயே
விட்டுவிடுங்கள்.
அவனது நிராசைப் பாதையில் குறுக்கிட்டு
நிம்மதியைக் கெடுக்காதீர்கள்.
அவனல்ல குற்றவாளி.
அவனை விட்டுவிடுங்கள்!
.


Tuesday, February 16, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்


கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டவோ?- அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்படலாகாதோ?
எண்ணிஎண்ணிப் பலநாளும் முயன்றிங்கு
இறுதியிற் சோர்வோமோ?- அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
-மகாகவி பாரதி
(ஆத்ம ஜயம்)

.


மரபுக் கவிதை - 73


வேண்டுவன - 2

கடவுளின் கருணை கண்டிடல் வேண்டும்
திடம் மிகு வீரம் திளைத்திடல் வேண்டும்
மதங்கள் மனிதனை உயர்த்திடல் வேண்டும்
மதங்களில் வேற்றுமை மறைந்திடல் வேண்டும்
திராவிட மாயை தகர்ந்திடல் வேண்டும்
பாரதநேயம் பிறந்திடல் வேண்டும்
மொழிவெறி உணர்வு ஒழிந்திடல் வேண்டும்
வழிவழி மரபுகள் வளர்ந்திடல் வேண்டும்
தரணியில் அமைதி தவழ்ந்திடல் வேண்டும்
தரம் மிகு ஆட்சி நடைபெறல் வேண்டும்
தெளிவுடன் கொள்கை இயற்றிடல் வேண்டும்
துளிர்த்திடும் ஊழல் துடைத்திட வேண்டும்
ஒற்றுமை உணர்வு ஓங்கிடல் வேண்டும்
பற்றுடன் நாட்டைப் பேணிடல் வேண்டும்
தொழில்கள் அனைத்தும் தொடங்கிடல் வேண்டும்
எழில்மிகு கலைகள் எழுந்திடல் வேண்டும்
ஆலைகள் பலவாய் அமைந்திடல் வேண்டும்
சாலைகள் ஒழுங்குடன் மிளிருதல் வேண்டும்
உண்மைகள் உலகினில் நின்றிடல் வேண்டும்
பண்டைய சிறப்பு பரந்திடல் வேண்டும்
வைதிகம் நாட்டில் வளர்ந்திடல் வேண்டும்
கைத்திறம் நாட்டில் களித்திடல் வேண்டும்
கல்வியில் மக்கள் தேர்ந்திடல் வேண்டும்
வல்லமை நமக்கு வசமாக வேண்டும்
கனவுகள் காண்பது கலைந்திடல் வேண்டும்
நனவுகள் ஆக்கிட விழைந்திடல் வேண்டும்
பீடுடை தெய்வம் நல்கிட வேண்டும்
தேடிடு இவற்றைத் தேர்ந்திடல் வேண்டும்!
.

Monday, February 15, 2010

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
-திருவள்ளுவர்
(அடக்கம் உடைமை- 129)

உருவக கவிதை - 30


காலம்


குடுகுடுப்பைக்காரன்
குதூகலமாய்ப் பாடுகிறான்-
''நல்ல காலம் பிறக்குது''
எனக்குத் தான்
உறக்கம் வர மறுக்குது.

.

Sunday, February 14, 2010

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


கூடை கூடையாய்ப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் - அவனே கவி.

-மகாகவி பாரதி.

வசன கவிதை - 44


கவியின் கடிதம்

'படித்தால் புரியாத
பா எழுதத் தெரியாது.
பாமரனை வியக்க வைக்கும்
படிம உத்தி தெரியாது.
சமுதாயத் தத்துவத்தை
சடங்காக்கத் தெரியாது.
மரபுத் தமிழ் மறந்து
மாரடிக்கத் தெரியாது.
சிக்கல் சிற்ப
சிதறுகவி தெரியாது.
எனக்கெதற்கு
கவிதை மனம்?'
புலம்பும் கவிஞனின்
புதிய முயற்சி
வாசகர் கடிதமாகவாவது
வருமா, கதிரில்?

(தினமணி கதிர்- கவிதைச் சிறப்பிதழுக்கு கவிதை அனுப்பி பிரசுரமாகாத போது எழுதிய புலம்பல் கவிதை இது. நாள்: 08.09.1996. இப்போது இதைக் குறிப்பிட காரணம் இருக்கிறது).
.

தமிழ் ஹிந்து இணையதளக் கட்டுரை

சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை
நண்பர் திரு அரவிந்தன் நீலகண்டனின் வீடியோ பதிவுடன் கூடிய, அற்புதமான கட்டுரை இது. படிக்கும்போதே கண்கள் நீர் சொரிகின்றன. அழகிய காட்சிகளுடன் மனம் இளகச் செய்யும் நடையுடன் கூடிய கட்டுரை. உரிமையுடன் எனது வலைப்பூவில் சேர்த்திருக்கிறேன்.
-வ.மு.முரளி.

Saturday, February 13, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
-சேக்கிழார்
(பெரிய புராணம்)

.

மரபுக் கவிதை - 72



உடன் வரும் ஈசனே!


தாயிடம் கனிந்திடும் பாசமே!
தந்தையாய் மலர்ந்திடும் வாசமே!
மனைவியின் அறுபடா நேசமே!
மகளாய் அணைத்திடும் ஈசனே!

உருக்கெனச் சுடர்விடும் தேகமே!
உறுதுணையாய் வரும் நண்பரே!
குருவின் நல்வழி காட்டலே!
குவலயம் காத்திடும் ஈசனே!

கல்வியை நல்கிடும் ஞானமே!
பல்வகை வளத்தின் கூடலே!
நல்லவை நாடும் உள்ளமே!
நன்மையைப் பொழிந்திடும் ஈசனே!

இல்லம் ஒளிரும் ஜோதியே!
இன்பம் மிளிரும் ஆதியே!
துயரம் போக்கிடும் நாதனே!
துணையாய் உடன் வரும் ஈசனே!
.

Friday, February 12, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர்

புன்கண்ணீர் பூசல் தரும்

-திருவள்ளுவர்

(அன்புடைமை -71)






புதுக்கவிதை - 75


ஐந்தறிவு

எனக்கும்
அண்டை வீட்டுக்காரருக்கும்
சண்டை.
அவர் வீட்டு நாய்
என் வீட்டு வாசலிலேயே
காவல் இருக்கிறது.
.

Thursday, February 11, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்

மயிலுக்குப் போர்வை தந்தவனின்
மரபிலே வந்தவர்கள்
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டையையும்
கழற்றிக்கொண்டு போகிறார்கள்...
-கவிஞர் மேத்தா

புதுக்கவிதை - 74


புகை

கொசு ஒழிப்புப் புகை
எதற்கு?
இத்தனை வகையான
வாகனப் புகை
போதாதா-
மனிதன் சாக?
.

Wednesday, February 10, 2010

புதுக்கவிதை -73


மொபைல் யுகம்

மொபைல்போனில்
பேசியபடி
சிரித்துச் செல்லும்
இளைஞியைப் பார்த்து
திடுக்கிடுகிறான் -
ஆகாயம் பார்த்து
பேசிக் கொண்டிருந்த
சிக்குமுடிக்
கிறுக்கன்.
.

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

உண்மையில் நமக்குள் இருந்தபடிதான் வெளியுலகில் வாழ்கிறோம். வெளியுலகில் நமக்கு நேரும் அனுபவங்களை நமது குணமும் அறிவுமே நிர்ணயிக்கின்றன. நமது வெளி வாழ்க்கை - அதன் அமைப்பு எவ்வளவுதான் திறமையானதாக, முழுமையானதாக இருந்த போதிலும் துயரத்தையும் திருப்தியையும் தந்தே தீரும்.
-சுவாமி சின்மயானந்தர்
(தியானமும் வாழ்க்கையும் -பக்: 157)

.

Tuesday, February 9, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
-திருவள்ளுவர்
(வினைத் திட்பம்-664)

புதுக்கவிதை -72


உபதேசம்

சாக்கடையில் இணைந்து
ஆற்றில் கலக்கிறது -
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய
பொறியாளரின் வீட்டு
குளியலறைக் கழிவுநீர்.

.

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். இலட்சியத்தைப் பற்றிக்கொண்டு முன்னேறியபடியே இரு.
-சுவாமி விவேகானந்தர்

Monday, February 8, 2010

புதுக்கவிதை- 71


அக்கறை

லட்டு
முறுக்கு
தட்டை முறுக்கு
அதிரசம்
பஞ்சாமிர்தம்
புளியோதரை
பொங்கல்
தயிரன்னம்
எல்லாம் இருக்கிறது
பிரசாத நிலையத்தில்.

அர்ச்சனை சீட்டு
சிறப்பு நுழைவு சீட்டு
தேங்காய் பழச் சீட்டு
நன்கொடை ரசீது
எல்லாம் இருக்கிறது
தேவஸ்தான அலுவலகத்தில்.

இரண்டு இடத்திலும்
கிடைக்கவில்லை
திருக்கோவில்
தலவரலாறு புத்தகம்.

நன்றி: விஜயபாரதம் (23.07.2010)
.
.

Sunday, February 7, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

என்னுடைய குறைகளை நான் உணராமல் இல்லை. நன்றாகவே உணர்வேன். உணர்ந்து அதற்காக வருத்தமும் படுகிறேன். ஒருவன் தன் குறைகளைக் கண்டுகொண்டு விட்டால் அதுவே ஒரு பெரும் பாக்கியம். எனக்கு ஏதேனும் விசேஷ சக்தி இருப்பின் அதன் ரகசியம் என்னவென்றால் நான் என் குறைகளை நன்றாக அறிந்திருப்பதே ஆகும்.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்:3 )

.

வசன கவிதை -43


பிசிறு

தந்தையின் சீற்றம்
தாயின் கண்ணீர்
மனைவியின் ஊடல்
குழந்தையின் சீராட்டு
தங்கையின் தவிர்ப்பு
தமக்கையின் கோபம்
உறவினரின் பொய்ச்சிரிப்பு
ஊழியரின் அசிரத்தை
அதிகாரியின் கடுத்த முகம்
அன்பர்களின் ஏமாற்றம்
நம்பியவரின் கைவிரிப்பு
நண்பரின் பாராமுகம்
தோழனின் மறுதலிப்பு
தோல்விகளின்
தொடர்கதையாய்...
என்னிடத்தில் தான் தவறு
எங்கோ நடந்திருக்கிறது பிசகு.

.

Saturday, February 6, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

உன் மனதில் குற்றம் இருப்பதனாலேயே நீ துன்பப் படுகிறாய்.
-அன்னை சாரதா தேவி

உருவக கவிதை - 29


நித்யானந்தம் - 0

கொசுறு

அறைக்குள் புழுக்கம்
வர மறுத்தது உறக்கம்.
கதவைத் திறக்க
காற்று வந்தது.
கூடவே கொசுவும்.

காண்க: நிதமும் ஆனந்தம் (04.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010_03_04_archive.html
.

Friday, February 5, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைதேன்,
நீடிய பிணியால் வருந்து கின்றோர்என்
நேர்உறக் கண்டுளம் துடித்தேன்,
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்...
-திருவருட்பிரகாச வள்ளலார்
(திருவருட்பா- ஆறாம் திருமுறை )
காண்க: விளககம்



உருவக கவிதை - 28




ஓணான்

பார்வை

முதுகுச் செதில்களை சிலுப்பியபடி
ஓரக் கண்ணால் பார்க்கும்
ஓணானின் பார்வையே
சரியில்லை...

அதன் குரல்வளை அருகில்
அசையும் தசைகளில்
ஒடுங்கிக் கிடக்கும் குரலில்
வேண்டுகோளும் இருக்கலாம்.
ஆனால்
பார்வை சரியில்லை....

மரத்தை வெட்டப் போகும் மனிதன்
பார்ப்பது போல,
வெறித்துப் பார்க்கும் ஓணானின்
பார்வை எனக்குப்
பிடிக்கவே இல்லை.

ஒருவேளை....
மரத்தை வெட்ட வந்தவன் என்று
நினைத்துவிட்டதா என்னை?


.

இன்றைய சிந்தனை



கருவூலம்


மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃ துறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
-திருஞான சம்பந்தர்
(தேவாரம்)
.

Thursday, February 4, 2010

புதுக்கவிதை - 70



அன்பெனப் படுவது...

ஆயிரம் கல்
தொலைவில் இருந்தாலும்
இதயங்கள்
அருகருகே இருப்பது.

பத்து நிமிடம்
பார்க்காமல் இருந்தாலும்
பரிதவித்துப் போவது.

ஒருவர் வலியை
உணராமலேயே
இன்னொருவர் துடிப்பது.

தன்னலம் மறுத்து
பிறர்நலம் விழைவது.
பயன் கருதாத
அறமாய் விளைவது.

அன்பெனப்படுவது...
இல்வாழ்க்கையன்றி
வேறெது?

இக்கவிதை, என் சகதர்மிணியும், வாழ்க்கைத் துணைநலமுமான ராதிகாவுக்கு சமர்ப்பணம்.

.

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்உண் பவர்.
-திருவள்ளுவர்
(கள் உண்ணாமை-926)

Wednesday, February 3, 2010

வசன கவிதை - 42


ஒரு குவளைக் குருதி

நியாயவிலைக் கடையில்
வரிசையில் நிற்க
தத்துவம் பேசிய
அதே கால்கள்
முண்டியடிக்கின்றன.

ஐம்பது காசு சில்லறைக்காக
நடத்துனரை வம்புக்கிழுத்த
அதே வாய்
முழு ஐந்து ரூபாய்
'பாக்கி' கேட்காமல்
ஊமையாகிறது.

பெற்ற குழந்தையின் அழுகுரல்
கேட்கச் சகியாத
அதே காதுகள்
கொச்சை அடைமொழி
பிரயோகங்களை
விழுங்கிக் கொள்கின்றன.

அமாவாசை, பௌர்ணமி,
கிருத்திகை, சஷ்டி,
எந்தக் கிழமை என்னும்
அக்கறையின்றி
பல்லும் துலக்காமல்
பரிதவிக்கின்றன விழிகள்.

கலைந்த தலை;
கசங்கிய சட்டை;
நழுவும் வேட்டி;
ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில்
அறுந்துபோகிறது
செருப்பு.

அதிகாலையிலேயே
களைகட்டிவிட்டது
'டாஸ்மாக்' மதுக்கடை.
இனி இரவு வரை
தொடரும்
நரம்புகளின் நடுக்கம்.
.

இன்றைய சிந்தனை


கருவூலம்

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்....
-சீத்தலைச் சாத்தனார்
(மணிமேகலை : 16/86-89)

Tuesday, February 2, 2010

உருவக கவிதை - 27



பழையன கழிதலும்...



பிச்சைக்காரன் கூட
பிசைக்காரனென்று
ஏசுவான்-
பத்துக்காசு போட்டால்.


அறுகோண வடிவ
இருபது காசு கூட
குருட்டுப் பிச்சைக்காரன்
தட்டில் தான் கிடக்கிறது.


நாலணாவுக்கு
தபால் அலுவலக
வில்லை தான் கிடைக்கும்.


இந்த வரிசையில்
இடம்பெயரக் காத்திருக்கிறது
ஐம்பது காசும்.


ஆண்டொன்று போனால்
வயதொன்று கூடும்.
செல்லாக் காசுகள்
எல்லா இடத்திலும்
வழக்கொழியும்.


.

Monday, February 1, 2010

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
-திருவள்ளுவர்
(தீவினை அச்சம்)

புதுக்கவிதை -69


அமர்க்களம்

எதைப் பற்றியும்
பகடி செய்யலாம் -
பிரமுகரானால்.

எதைப் பற்றியும்
விமர்சித்து மகிழலாம் -
அறிவுசீவியானால்.

என்ன வேண்டுமாயினும்
எழுதிக் கிழிக்கலாம் -
பத்திரிகை நடத்தினால்.

யாராய் இருப்பினும்
மிரட்டி வளைக்கலாம் -
அதிகாரம் இருந்தால்.

ஆடை அவிழினும்
ஆர்ப்பரிக்கலாம்-
ஆணாய்ப் பிறந்தால்.

.