Friday, December 31, 2010

வசன கவிதை - 84




...
.
.
2010 ஆண்டே வாழி!

விக்கி லீக்சுக்கு இடம் கிடைத்துவிட்டது
ஆங்கிலப் பேரகாதியில்.
நீரா ராடியா தொலைபேசி பேச்சுக்களுக்கும்
கிடைத்துவிட்டது இடம்
இந்திய அரசியலில்.

ரகசியங்களை வெளியிடும் பரபரப்புக்காக
வரும் ஆண்டுகளின் உலகம்
இந்த ஆண்டை எப்போதும் நினைத்திருக்கும்.
அடுத்தவர்களின் அந்தரங்கத்தில்
நுழைந்து சேட்டை செய்தவர்களின்
அந்தரங்கமும் சந்திக்கு வந்தது
2010 ன் உபயம்.

ஒருவருக்கு மட்டுமே தெரிவது ரகசியம்
என்ற இலக்கணம் அடிபடலாம் இனி.
ஒருவருக்குத் தெரிந்த எதுவும் ரகசியமல்ல;
எல்லோருக்கும் தெரியாததும் ரகசியமல்ல;
உலகிற்கு நன்மை அளிக்காத எதுவும் ரகசியமல்ல.

2010 க்கு நன்றி.
பலவீனமானவர்களின் சட்டையை உரித்து
பலமென்று கொக்கரித்த வல்லரசிற்கு
பாடம் புகட்டிய 2010 க்கு நன்றி.

'காந்தி' வேடதாரிகளுக்கு சவுக்கடி கொடுத்த
'ஜி' வானவில் ஊழலுக்கும்
ராச கைங்கர்யம் செய்த தரகிக்கும்
வித்திட்ட 2010 க்கு நன்றி.

அதிகார மமதைக்கு குட்டு வைத்த
2010 ஆண்டே வாழி!
வரும் ஆண்டிலேனும்
மக்கள் வாழட்டும்!
.

Thursday, December 30, 2010

எண்ணங்கள்


தேசமே தெய்வம்


மேற்கண்ட தலைப்பில் தேசிய சிந்தனைக் கழகம் என்னும் அமைப்பு வலைப்பூ ஒன்றை நடத்துகிறது. நமது நாட்டின் அரும் புதல்வர்களான விடுதலைப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், அருளாளர்கள், மகான்கள், தலைவர்கள், தமிழ் வளர்த்த பெரியோர், சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகளுடன், அவர்களது சரிதம் தொடர்பான இணைய இடுகைகளின் சுட்டிகளுடன், இந்த வலைப்பூ வெளியாகி வருகிறது.

இக்கட்டுரைகள், தலைவர்களின் பிறந்தநாள்- மறைந்த நாட்களிலேயே, அவர்களை நினைவுறுத்தும் விதமாக வருவது சிறப்பு. நாட்டு மக்களுக்கு நமது முன்னோரின் அடிச்சுவடுகளை நினைவுபடுத்தும் அற்புதமான முயற்சி இது. இந்த வலைப்பூ எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும்...

இந்த வலைப்பூவின் முகவரி: http://desamaedeivam.blogspot.com/
..

Sunday, December 26, 2010

உருவக கவிதை - 70


திருட்டு ராசாக்கள்
.
திருடன்... திருடன்... திருடன்...
கத்திக்கொண்டு ஓடுகிறான்
திருடும்போது சிக்கிய திருடன்...
.
கூட்டாய்த் திருடி உதை வாங்குபவனை
கைவிடவும் காப்பாற்றவும் ுடியாமல்
தவிக்கிறான் சக திருடன்.
.
சிக்கியவன் வாய் திறக்கும் சமயம்
'பொதுமாத்து' தருகிறான்
தப்ப எத்தனிக்கும் திருடன்.
.
பிடித்துக் கொடுத்தவர்களையே
திருட்டுக்கு உதவியதாக
வாக்குமூலம் கொடுக்கிறான் திருடன்.
.
குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது
நீதிபதி மீதும் பாய்கிறான் -
நீங்களும் திருடனென்று.
.
திருடனின் ஜாதியைக் காட்டி
இயன்றவரை நியாயப்படுத்துகிறான்
திருட்டுக் கும்பல் தலைவன்.
.
இத்தனைநாள் வாங்கிய
திருட்டுப்பொருளை மறந்து
கைவிடுகிறான் கூட்டாளிகளின் தலைவன்.
.
திருடன்... திருடன்... திருடன்...
துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்...
பலநாள் கூட்டாளிகளும் 'உடன் பிறந்த' சகாக்களும்...
.
குறிப்பு: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இக்கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
.

Saturday, December 25, 2010

எண்ணங்கள்

நல்ல முயற்சி...
வலைப்பதிவர்கள் கூடுவது மகிழ்ச்சி!

நாளை (26.12.2010) ஈரோட்டில் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது. ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் ஏற்பாடு செய்துள்ள பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்- 2010' நிகழ்ச்சி, வலைப்பூக்களில் கருத்துமழை பொழியும் அன்பர்களுக்கு அரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
.
ஈரோடு டைஸ் அண்ட் கெமிகல்ஸ் கட்டடத்தில் (யு.ஆர்.சி.நகர், பரிமளம் மஹால் பஸ் நிறுத்தம், பெருந்துறை சாலை, ஈரோடு) நாளை (26.12.2010) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வலைப்பதிவர் சந்திப்பில் சிந்திப்போம். நமது கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்வோம்!

பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் செல்வாக்கு மிகுந்தவர்களின் கைப்பாவையாகிவிட்ட சூழலில் இணையமும் வலைப்பூக்களும் மாற்று ஊடகங்களாகி விட்டன. யாரும் தனது கருத்தை சுதந்திரமாக முன்வைக்கும் வாய்ப்பை வலைப்பூக்கள் ஏற்படுத்தியுள்ளன. கருத்து சுதந்திரத்தின் கட்டற்ற வெளியை வலைப்பூக்களும் இணையமும் சாத்தியமாக்கி உள்ளன. ஆயினும், இந்த சுதந்திரம், வலைப்பூக்களில் எழுதுவோருக்கு சுய கட்டுப்பாடு தேவை என்பதையும் நினைவு படுத்துகின்றன.
வலைப்பூ பதிவர்களும் வாசகர்களும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவது, வலைப்பூக்களின் தரம் உயர வழி வகுக்கும். நாட்டிற்கும் சமூகத்திற்கும் உதவும் வகையில் நமது வலைப்பூக்கள் மெருகேற, பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்' உதவட்டும்.
.

Wednesday, December 22, 2010

எண்ணங்கள்




மனமார்ந்த வாழ்த்துக்கள்

நவீனத் தமிழ் எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2007 ல் வெளியான அவரது 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதைத் தொகுதிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள, தமிழின் தொன்மையான இலக்கியங்களை நவீனத் தமிழுடன் உரையாடச் செய்கிற, ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய வேளை இது...

காண்க:

.

Tuesday, December 21, 2010

எண்ணங்கள்



தன்னெஞ்சறிவது பொய்யற்க!

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் நூலிழை அளவுதான் வித்யாசம் என்பார்கள். எந்த ஒரு செயலையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம். அதீதமான தன்னம்பிக்கை, அரிய சாகசங்களுக்கு அவசியம். ஆனால், அதை அநாகரிகமாக பொதுஇடத்தில் வெளிப்படுத்தும்போதுதான் அகந்தை ஆகிறது. தில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசிய பேச்சு அவரது தகுதிக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

காங்கிரஸ் மாநாட்டில் மூன்றாம் நாளில் பேசிய ப.சிதம்பரம், "அடுத்த பத்து ஆண்டுகளில், ஏன் அதற்குப் பிறகும்கூட பாரதிய ஜனதாவால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது'' என்று பேசியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் எதிரி என்ற முறையில், அக்கட்சியைச் சாட காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது. எனினும், ஜனநாயக ஆட்சிமுறையில் மக்களே அனைவருக்கும் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோதே, பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அதனை அவர் தனது பலவீனமாகக் கருதவில்லை; ஜனநாயகத்தின் பலமாகவே கருதினார்.

"இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என்று ஒரு காலத்தில் முழங்கிய கட்சிதான் காங்கிரஸ். அதே இந்திராகாந்தி தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியுற்று, 1977ல் ஜனதாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது வரலாறு. நெருக்கடிநிலையை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் என்று யாரும் கனவில்கூட சிந்தித்திருக்கவில்லை.

காங்கிரஸ் சரித்திரத்திலேயே இல்லாத சாதனையாக, 1984ல் 404 காங்கிரஸ் எம்பி.க்களுடன் பிரதமரான ராஜீவ்காந்தி, அடுத்த தேர்தலில் தனது அமைச்சரவை சகாவாக இருந்தவரிடமே படுமோசமான தோல்வியைத் தழுவி, ஆட்சியைப் பறிகொடுத்தார். அதுவும், வெறும் 65 கோடி கமிஷன் கைமாறிய போபர்ஸ் ஊழலுக்காக. இதை காங்கிரஸ் இன்றும் துர்க்கனவாகவே என்றும் நினைக்கும்.

இதையெல்லாம் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலை இருப்பதே, காங்கிரஸ் கட்சியின் தார்மிக வீழ்ச்சிக்கு காரணம் என்று கருத வேண்டியுள்ளது.

1998ல் 13 கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய், அடுத்த ஆறு ஆண்டுகள் காங்கிரஸ் வாடையில்லாத ஆட்சியை நாட்டிற்கு அளித்தார் என்பதையும் சரித்திரம் பதிவு செய்துள்ளது. பாஜக செய்த தவறுகளின் விளைவாகவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி நாட்டில் உதயமானது. இதுவே நமது மக்களாட்சி முறையின் மாண்பு.

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் அதீத தன்னம்பிக்கையுடன் தேர்தல்களம் கண்ட பாஜக, 2004ல் ஆட்சியை இழந்தது. இன்று அதேபோன்ற நிலையில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது என்பதை அக்கட்சித் தலைவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசின் நம்பகத்தன்மை பலத்த அடி வாங்கியுள்ள சூழலில், தனது குறைகளை சரிப்படுத்த முயற்சிக்காமல், பிரதான எதிர்க்கட்சியை கேலி செய்வது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கு கண்டிப்பாக உதவாது.

மத்திய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சி மீது பாய்வதால் மத்திய அரசின் தளகர்த்தர்கள் இப்போதைக்கு சந்தோஷம் அடையலாம். ஆனால், இதன்மூலம் தனது ஒரே எதிரி பாஜக என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டு, அடுத்த தேர்தலில் அத்வானியின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரசியலில் இருதுருவ சேர்க்கைக்கே, காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் ஊக்கமளிக்கின்றன.

"ஆட்சியை எப்படி நடத்துவது, மீண்டும் எப்படி ஆட்சிக்கு வருவது என்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் அறிந்துவைத்திருக்கிறது'' என்றும் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கைதான் நமது நினைவில் வந்துபோகிறது. ஊழல் வழக்குகள் தொடர்பாக, உச்சநீதி மன்றம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கும்போதே தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் தெரிகிறது.

இத்தனைக்கும் பிறகும், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று மனப்பால் குடிக்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உண்டு. தனது தொண்டர்களை உசுப்பேற்ற சில அரசியல் வசனங்களை அக்கட்சித் தலைவர்கள் பேசுவதிலும் தவறில்லை. பேசட்டும்.
அதேசமயம், தனது பேச்சுக்கு கரவொலி எழுப்பும் தொண்டர்கள் போல நாட்டு மக்களும் முட்டாள்களல்ல என்பதையும் உள்துறை அமைச்சருக்கு யாரேனும் சொன்னால் நல்லது.

.

Monday, December 20, 2010

புதுக்கவிதை - 139


தேடலின்
அருகில்...


கள்ள நோட்டு கிருஷ்ணன்கள்...
ஹரிதாஸ் முந்திராக்கள்...
ருஸ்தம் நகர்வாலாக்கள்...
கோபால கிருஷ்ணன்கள்...
ஒட்டாவியோ குவாட்ரோச்சிகள்...
கேதன் பரேக்குகள்...
அப்துல் கரீம் தேல்கிகள்...
சத்யம் ராஜுக்கள்...
நீரா ராடியாக்கள்...
ஆண்டிமுத்து ராசாக்கள்...

பட்டியல் தொடரும்...
கைதுகள் தொடரும்...
பங்கிட்டவர்கள் மட்டும்
சிக்குவதில்லை என்றும்.

எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறது
மத்தியப் புலனாய்வு அமைப்பு...
அடி, முடி தெரியாத ஊழலின் பிறப்பிடத்தை...
அருகில் வைத்துக்கொண்டே.
.

Friday, December 17, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்....


ஆங்கில ஊடகங்களாலும் பிரிவினைவாதிகளாலும் புரட்சியாளராக முன்னிறுத்தப்படும் 'பிரபல' எழுத்தாளர் அருந்ததி ராய் குறித்து, தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை அருமை. வித்தியாசமான கண்ணோட்டத்துடன், சுய சிந்தனையைக் கிளரும் இக்கட்டுரை எனக்கு பிடித்தது. உங்களுக்கும்...

.

Wednesday, December 15, 2010

புதுக்கவிதை- 138


கவிதையின் நியாயம்


கைகளில் ஏந்தி இருக்கையில்
இளஞ்சூடாக மூத்திரம் கழிக்கும்
சிசுவை விடவா கவிதை பெரிது?

யாரேனும் எடுப்பதற்காக சிணுங்கும்
சிசுவின் அழுகையை விடவா
எழுதப்படும் கவிதை அழகு?

எங்கோ பார்த்தபடி இதழில் விரியும்
புன்னகையை மறுநிமிடமே மறைக்கும்
சிசுவின் நினைவல்லவா கவிதை?

வலைப்பூவில் எழுத மறந்த
கவிதைகளை விட,
சிசுவின் நறுமணம் பெரிது.

கவிதையை எப்போதும் எழுதலாம்.
சிசுவை இப்போதே கொஞ்ச வேண்டும்...
இப்போதே ரசிக்க வேண்டும்.

தாலாட்ட வேண்டியவன் சில நாட்களுக்கு
வலைப்பூவை மறந்துவிட
வேண்டியது தான்.
.

Saturday, December 11, 2010

எண்ணங்கள்


உள்ளத்தில்
உண்மைஒளி
உண்டாகட்டும்!

"பொதுஜன நன்மையே நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுவரும் நமது பத்திரிகைக்கு அனுப்பப்படும் நிருபங்கள், இதரவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்புகிற மாதிரியாய் இருக்கக் கூடாது. நிருபம் எழுதுவோர் ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழுத வேண்டும். அது பொது நன்மைக்கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விருத்தி செய்வதாகவும் இருக்க வேண்டும்...''


“ இந்தியா (7.11.1908) நாளிதழில் "நிருபர்களுக்கு முக்கியமான அறிக்கை' என்ற தலைப்பில் மகாகவி பாரதி எழுதியுள்ள விதிமுறைகள் இவை.

அடிமைப்பட்டிருந்த காலத்தில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் எழுதுகோல் உதவியுடன் போராடிய ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நமது துரதிர்ஷ்டம், அவரது கவிதைகள் பெற்ற கவனத்தை அவரது பத்திரிகையுலகப் பணிகள் பெறாமலே உள்ளன. அவற்றை நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது மிக அதிகமாகவே இருக்கிறது.

பாரதியின் பத்திரிகையுலகப் பணி 1904 நவம்பரில் "சுதேசமித்திரன்' பத்திரிகை வாயிலாகத் துவங்கியது. ஆரம்பத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனச் செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் பணி பாரதிக்கு கொடுக்கப்பட்டது. வெளிநாட்டுச் செய்திகளை தமிழில் தரும்போதும், நமது நாட்டின் நிலையை ஒப்பிட்டு செய்திகளை வழங்கினார் பாரதி.

இதனிடையே மகளிருக்கென்று துவங்கப்பட்ட "சக்கரவர்த்தினி' மாத இதழின் ஆசிரியராகவும் பாரதி பொறுப்பேற்றார். அதில் பெண்கள் முன்னேற்றம் குறித்த முன்னோடிக் கருத்துக்களை அவர் எழுதினார். தனது பத்திரிகைப் பணி காரணமாக, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டார்.

தனது விடுதலை வேட்கையின் வேகத்திற்கு "சுதேசமித்திரன்' ஈடுகொடுக்காத காரணத்தால், நிரந்தர மாத சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி, 1906ல் "இந்தியா' பத்திரிகையில் சேர்ந்தார் பாரதி. அதில் அவரது எழுத்தாவேசம் கரைபுரண்டது. சுதேசியக் கல்வி, அந்நியப்பொருள் பகிஷ்கரிப்பு, காங்கிரஸ் கட்சியின் நிலை, வெளிநாடுகளில் இந்தியர் நிலை, சமய மறுமலர்ச்சி, சமூக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல முனைகளில் பாரதியின் எழுத்துக்கள் புதுவீறுடன் வெளிவந்தன.

இந்தியா பத்திரிகையில், வாசகர்களின் வசதிக்கேற்ப சந்தா நிர்ணயம், முதன்முதலாக கார்ட்டூன் வெளியீடு, பத்திரிகையுடன் இணைப்பாக சிறு புத்தக வெளியீடு, விவாதங்களில் வாசகர் பங்கேற்பு, தமிழ்த்தேதி குறிப்பிடுதல் உள்ளிட்ட பல புதுமைகளை நிகழ்த்திய பாரதி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இதனால் அரசின் கெடுபிடிகளுக்கு ஆளாகி, பத்திரிகையை சென்னையில் நிறுத்த வேண்டியதாயிற்று.

அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி புதுவை சென்ற பாரதி, அங்கிருந்து மீண்டும் இந்தியா பத்திரிகையை புதிய வேகத்துடன் நடத்தினார். அங்கு "விஜயா' என்ற மாலை இதழையும் "பாலபாரதா' என்ற ஆங்கில இதழையும் பாரதி நடத்தினார். தவிர, கர்மயோகி, தர்மம், சூர்யோதயம், ஞானபானு ஆகிய பத்திரிகைகளிலும் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, புதுவையிலும் இந்தியா பத்திரிகையை நடத்த முடியாமல் போனது. அப்போதும், காளிதாசன், நித்யதீரர், உத்தம தேசாபிமானி என்ற புனைப்பெயர்களில் காமன்வீல், நியூஇண்டியா, விவேகபானு போன்ற பத்திரிகைகளில் தனது எழுத்து தவத்தைத் தொடர்ந்தார் பாரதி.

"லண்டன் டைம்ஸ்' முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான "அமிர்தபஜார்' பத்திரிகை வரை 50க்கு மேற்பட்ட பிற பத்திரிகைகள் குறித்தும், பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும், ஆங்கிலேய அரசு கொடுத்த தொல்லைகளுக்கு மத்தியில், பெரும் பொருளாதாரச் சிக்கல்களிடையே, உடல்நலிவுற்றபோதும், பாரதி நிகழ்த்திய சாதனைகள்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் (1921) மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிபுரிந்த பாரதி, சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், எழுத்தாளர், முற்போக்குச் சிந்தனையாளர் என பலமுகங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாவதற்கு சில நாட்கள் முன்னரும், "சித்திராவளி' என்ற கார்ட்டூன் பத்திரிகையையும், "அமிர்தம்' என்ற வாரமிருமுறை இதழையும் வெளியிட அவர் முயன்றார். பத்திரிகைத்தொழில் மீதான பாரதியின் காதலையும், பத்திரிகை மூலம் சமூகத்தை மாற்ற அவர் துடித்த துடிப்பையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

பாரதி நினைத்திருந்தால், ஆங்கிலேய அரசுடன் சமரசம் செய்துகொண்டு பிரபல "பத்தி' எழுத்தாளராகப் பரிமளித்திருக்க முடியும். அரசுடன் குலாவியிருந்தால், 39 வயதிலேயே குடும்பத்தை நிர்கதியாக்கி, மருந்திற்கு காசின்றி இறந்திருக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது.

உயரிய விருதுகளுடன் வாழ்வதைவிட, நாட்டு மக்களுக்காக வாழ்வதே பத்திரிகையாளனின் கடமை என்று, அவர் இறுதிவரை உறுதியுடன் வாழ்ந்தார்.
இந்நாளில் பத்திரிகையாளர்களுக்கு சமூகத்தில் தனி கெüரவம் உள்ளது. அரசு அஞ்சி மரியாதை செலுத்தும் பணியாக ஊடகத்துறை மாறிவிட்டது; ஊதியமும்கூட ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது. ஆனால், பத்திரிகைத்துறையின் தேசியப் பங்களிப்பு உற்சாகம் அளிப்பதாக இல்லை.

நாட்டைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையிலும் முறைகேடுகள் பெருகிவிட்டன. அதிகாரத் தரகர்களுடனும், பதவிப் பித்தர்களுடனும் கூடிக் குலாவும் பத்திரிகையாளர்களால், ஊடகத்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். சுயபொருளாதார முன்னேற்றத்திற்காக தங்களை விற்கும் ஊடக அறிஞர்களைக் காணும்போது வேதனை மிகுகிறது.

இதற்கெல்லாம் ஒரே மருந்து, பாரதியின் பத்திரிகைப் பணிகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டுசேர்ப்பதுதான். இதழியல் பட்டப் படிப்பில் பாரதியின் பத்திரிகைப் பணிகள் பாடமாக வைக்கப்பட வேண்டும். பாரதியின் எழுத்துக்கள் அனைத்தும் ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட வேண்டும். தற்போதைய தறிகெட்ட பத்திரிகை உலகிற்கு மருந்து பாரதி மட்டுமே.

நிறைவாக, இந்தியா பத்திரிகையில் "நமது விஞ்ஞாபனம்' எந்ற தலைப்பில் பாரதி எழுதிய மகத்தான வரிகள் இதோ...

“..இப்பத்திரிகை தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்கு சொந்தமானது. யாரேனும் தனிமனிதனுடைய உடைமையன்று. தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இதுவிஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி, உடைமைக்குள்ள உரிமை கிடையாது...''
----------------------------------------
இன்று மகாகவி பிறந்த நாள்

Thursday, December 9, 2010

உருவக கவிதை - 69



நினைவுச் சார்பின்மை




வெட்டப்படும் வரை
வெள்ளாடு நம்புவது
கசாப்புக்காரனை.
வெளிநாட்டில் இருந்துவந்த
கசாப்புக்காரி என்றால்
உள்ளூர் வெள்ளாடுகளுக்கு
சொல்லவே வேண்டாம்.

வெளியூர் கசாப்புக்காரி
தலையை உடனே வெட்டுவதில்லை;
முடிந்தவரை குருதியை உறிஞ்சிவிட்டு,
கொல்லாமல் விடக்கூடும் என்ற
நம்பிக்கையில் நம்பி 'கை' நனைக்கலாம்.

அவ்வப்போது போடும் புல்லும்
மேய்ச்சலுக்கு தனியே விடும் சுதந்திரமும்
வெள்ளாடுகளுக்குப் போதும்-
ஆட்டு மந்தையை கட்டிக் காக்க வந்த
தியாக அன்னை பட்டம் வழங்குபவருக்கு
கூடுதலாக கிடைக்கலாம்,
மந்தை நாட்டாண்மை பதவி.

வெளிநாட்டு கசப்புக்காரியுடன்
கூட்டணி அமைக்க
உள்ளூர் கசாப்புக்காரர்களில்
நன்றாக குருதி உறிஞ்சுபவருக்கே முன்னுரிமை.
குறிப்பாக,
நினைவுச்சார்பின்மை வியாதி இருப்பவருக்கு
எப்போதும் முதலிடம்.

ஆடுகளின் நினைவுகளைத் தட்டி எழுப்பவர்களுக்கு
கசாப்புக் கூட்டணி என்றுமே கொள்கை விரோதி.
நினைவுச் சார்பின்மை பேசிக்கொண்டே
ஆடுகளைக் காயடிப்பதிலும்
கொள்ளையடிப்பதிலும்
கசாப்பு முனைவோர் திறமைசாலிகள்.

கடைசியில் கழுத்தில் கத்தி இறங்கும்போது
வெள்ளாடுகளின் கண்களில் விரக்தி வெளிப்படலாம்.
காலம் கடந்த ஞானோதயங்களால்
பட்டிகளில் பரவும் குருதியின் ஈரம்.
அதைக் கண்டும்கூட,
வெட்டப்படாத வெள்ளாடுகள்
கெக்கலி கொட்டலாம்-
அதன் முறை வரும்வரை.

கசாப்புக்காரர்களின் பாவம்
தின்றால் போகும்.
சுய விளம்பரம் கொடுத்து சரிக்கட்டினால்
சிறப்புமலர் வெளியிட்டு
பாராட்ட வெட்டியான்கள் எப்போதும் தயார்.

வெட்டப்பட்ட அப்பாவி ஆடுகளும்
குருதி இழக்கும் வெள்ளாடுகளும்
எப்போது மாறின செம்மறி ஆடுகளாய்?
சிந்தித்தால் சித்தம் கலங்குகிறது-
நினைவுச் சார்பின்மை வேலையைக் காட்டிவிட்டது.
..

Monday, December 6, 2010

சிந்தனைக்கு


பாரதி அமுதம்

.
தெய்வம் பலப்பல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்- எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், -நித்தம்
திக்கை வணங்குந் துலுக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்-

யாரும் பணிந்திடும் தெய்வம், -பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குளே தெய்வம் ஒன்று; -இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்....

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக்கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணை செய்ய வேண்டும்.
-மகாகவி பாரதி
(முரசு)
.

Friday, December 3, 2010

உருவக கவிதை - 68


லஞ்சம்,
ஊழலுக்கு
நான் என்றும் நெருப்பு

நீ என்ன பருப்பா என்று கேட்பவர்கள்
எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக வாழ்வதே எனது விருப்பு.

நான் பருப்பு இல்லையென்றாலும்
லஞ்சம், ஊழலுக்கு என்றும் நெருப்பு.
ஆணவ அரசியலை எதிர்க்கும் துருப்பு.
எழுத்தே தான் என்றும் எனது இருப்பு.

நான் வெறும் பருப்பு தான் என்றாலும்
ஆணவ அரசியலுக்கு என்றும் நெருப்பு.
தேய்ந்தாலும் பாதம் காக்கும் செருப்பு.
என் உள்ளத்தில் இல்லை கருப்பு.

நான் பருப்பு என்றாலும் இல்லையென்றாலும்
அறிந்திருக்கிறேன் என் பொறுப்பு.
நாசக்காரர்களுக்கு காட்டுவேன் வெறுப்பு.
கபடதாரிகளுக்கு என்றும் கூறுவேன் மறுப்பு.

நானே கேள்வி கேட்டு நானே எழுதிய பதில்
நன்றாக இருக்கிறதா?
இது தானய்யா கவிதையின் பிறப்பு!
இதை வெளியிடுவது ஊடகங்களுக்கு சிறப்பு!
.

Wednesday, December 1, 2010

உருவக கவிதை - 67


வேர்களின் சாம்ராஜ்யம்


வேர்கள் மரத்தைத் தின்னுமா?
ஒட்டுண்ணி மரங்களின் வேர்கள்
பிற மரங்களில் ஊடி
ஆதார மரத்தை உறிஞ்சுவதை
யாரும் கண்டிருக்கலாம்.
ஆயின்-
சொந்த மரத்தையே
அந்த மரத்தின் வேர்கள்
காயப்படுத்திக் கண்டிருக்கிறீர்களா?

வேர்கள் பகுத்தறிவற்றவை;
அவற்றுக்கு சதிகள் தெரியாது.
வேர்கள் சுயசிந்தனை அற்றவை;
அவற்றுக்கு ஏமாற்றத் தெரியாது.
வேர்கள் வாழ்வதற்கே வாழ்பவை;
அவற்றுக்கு சத்தமின்றி கழுத்தறுத்து
வாழ்வைக் குலைக்கத் தெரியாது.
மரங்களைக் காப்பதே தாங்கள்தான் என்று
நடிக்க வேர்களுக்கு கண்டிப்பாகத் தெரியாது.

தவ வாழ்க்கை வாழ்ந்தாலும்
வேர்கள் யாருக்கும் உபதேசம் செய்வதில்லை;
உலகத்திற்கு நீதி போதிப்பதாகக் கூறி
நீட்டி முழக்கி, பேட்டி கொடுத்து
இருளுக்குள் நேர்மாறாக நடப்பதற்கான
அரசியல் சூத்திரங்கள் தெரியாதவை-
வெளிச்சத்தில் நடப்பதை உண்மையென்று நம்பும்
அப்பாவி மனிதரைப் போன்ற அறிவிலிகள் வேர்கள்.

மரத்தின் வாழ்வைக் காப்பதே
நீர், நிலம், காற்று, சூரிய ஒளிதான்.
இந்த நான்கு தூண்களையும் கண்காணித்து
உறுதிப்படுத்தும் ஐந்தாவது தூண்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்.
எந்த ஒன்று அற்றாலும் மரம் தாக்குப் பிடிக்கும்-
வேர்கள் பிற காரணிகளுடன் இணைந்து
கூட்டுக் கொள்ளை நடத்தி
இற்றுப் போகாமல் இருக்கும் வரையில்.

மரங்கள் மரங்கள் தான்;
மனிதர்களல்ல-
வேர்கள் மரங்களின் உறுப்புகள் தான்;
மரங்கள் கவலைப்பட வேண்டியதில்லை-
மனிதர்கள் போல.

வேர்களின் சாம்ராஜ்யமும்
ஊடக சாம்ராஜ்யமும்
ஒன்றாக முடியுமா என்ன?
------------------------------------------
சமர்ப்பணம்:

கவிதை உருவாக கருக் கொடுத்த ஊடகவியலாளர்கள் பர்கா தத், வீர் சாங்க்வி ஆகியோருக்கும், அவர்களை வெளிப்படுத்த உதவிய நீரா ராடியாவுக்கும் நன்றியுடன்.

.

Monday, November 29, 2010

புதுக்கவிதை - 137


உயிரபிமானம்


தாவரங்களுக்கும்
உயிருண்டு என்றவர்
பாரதத்தின் ஜெகதீச சந்திரர்.

வாடிய பயிரைக்
கண்டவுடன் வாடியவர்
அருளாளர் வள்ளலார்.

புல்லைப் பூடாய் மரமாகும்
உயிரின் பரிணாமத்தை
பாடியவர் மணிவாசகர்.

எல்லாம் தெரிந்தாலும்
மரத்தை வெட்டுவதில்
யார்க்கும் ஈடில்லை நாம்.

மனிதாபிமானம் பேசியபடி
கழுத்தறுப்பவர்களிடம்
எதிர்பார்க்கலாமா உயிரபிமானம்?
..

Sunday, November 28, 2010

எண்ணங்கள்

உங்களுக்கும் பிடிக்கும்...

கோவையில் செயல்படும் பத்திரிகையாளர் நண்பர்கள் சிலர் இணைந்து 'தமிழ் மலர் நியூஸ்' என்ற இணையதள வார இதழை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 'நாம் யார்க்கும் குடியல்லோம்... நமனை அஞ்சோம்' என்ற முழக்கத்துடன் வெளிவரும் இந்த இணைய இதழில், அரசியல் விமர்சனங்கள், வலைப்பதிவர்களின் அறிமுகம், ஊடகத் துறையில் நிலவும் முறைகேடுகள், நாட்டு நடப்பு ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றனர். விழிப்புணர்வுள்ள சமுதாயம் உருவாக்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
௩.
இந்த இணைய வலைப்பூ உங்களுக்கும் பிடிக்கும்.
இதன் இணைப்பு: http://tamilmalarnews.blogspot.com/

.

Saturday, November 27, 2010

புதுக்கவிதை - 136


சுதந்திரப் பிறவிகள்


யாரிடமும் அனுமதி கேட்கவில்லை...
என்னிடமும் ஏதும் சொல்லவில்லை...

வேலியிட்டு நீர் பாய்ச்சி
வளர்த்த என் குடும்பத்தை
கண்டுகொள்ளவே இல்லை...

புதிதாக வளர்ந்த மரத்தில் குடியேறிய
அணிலும் ஓணானும் மரப்பல்லியும்
உச்சியில் கூடு கட்டிய குருவியும்.
.

Friday, November 26, 2010

வசன கவிதை - 83


அந்த 20 நாட்கள்...


கவிதை தான் வாழ்க்கை என்று முழங்கியவன்
ஒரு இருபது நாட்களுக்கு காணாமல் போனால்,
வாழ்க்கை காணாமல் போயிருந்ததா
என்று கேட்கக் கூடாது.

ஒருவேளை அவன் உண்மையிலேயே
வாழ்க்கையை வாழச் சென்றிருக்கலாம்.

அப்படியானால் வெற்று முழக்கம் எதற்கு
என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது.
ஒருவேளை அவன் உண்மையிலேயே
கவிதையும் எழுதச் சென்றிருக்கலாம்.

எதற்கு இந்த மழுப்பல் என்று
ஏளனம் செய்யாதீர்.
மறுபடியும் ஒரு இருபது நாட்களுக்கு
காணாமல் போய்விடவும் வாய்ப்புண்டு.

அப்புறம் தமிழை யார் காப்பதாம்?
.

Saturday, November 6, 2010

வசன கவிதை- 82


தீபாவளி - 7

ஊர் முழுவதும் பட்டாசு சத்தம்.
பதுங்குகுழி அனுபவத்தால்
வீட்டிற்குள் பதுங்குகிறது,
ஈழத்தமிழ்க் குழந்தை.

வானெங்கும் வண்ணச் சிதறல்கள்.
பரிதாபமாகப் பார்க்கின்றன
சொந்தங்களை இழந்த முகங்கள்.

முகாமில் விநியோகிக்கப்பட்ட
அளவு பொருந்தாத ஆடைகளுக்குள்
திணறுகிறது முகாம் தீபாவளி.
.k.

Friday, November 5, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்

சுடச்சுடரும் பொன்போல ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
-திருவள்ளுவர்
(தவம்- 267)

.

Thursday, November 4, 2010

எண்ணங்கள்


தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது எப்படி?



'சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தான்' என்ற பொன்மொழியைக் கேட்டிருப்போம். அதற்கான வாய்ப்புகளை வழங்கவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வண்ணமயமான விழாவான தீபாவளி பண்டிகையின் அடிப்படை நோக்கமே பிறரை மகிழ்விப்பதாக உள்ளது.

பெற்ற அன்னையைத் தவிர வேறு யாராலும் தான் கொல்லப்படக் கூடாது என்று பெற்ற வரத்தால் நரகாசுரன் ஆணவம் அடைந்து உலக மக்களை வாட்டினான். அவனை அழிக்கக் கிளம்பிய கிருஷ்ணனுக்கு உதவியாக, நரகாசுரனின் அன்னையான பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவே தேர் ஓட்டினாள்.

போர்க்களத்தில் கிருஷ்ணன் அடிபட்டு மயங்க, தானே போரிட்டு கணவனைக் காத்ததுடன், நரகனையும் வீழ்த்தினாள் சத்தியபாமா. அப்போது தாய்மை உணர்வுடன் கிருஷ்ணனிடம் பாமா பெற்ற வரமே நராசுர சதுர்த்தி.

அசுரன் கொல்லப்பட்ட ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியன்று மக்கள் அனைவரும் அதிகாலையில் நரகாசுரனை நினைந்து எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும்; அவர்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பாமா வேண்டினாள். இதுவே தீபாவளிக்கான புராணக் கதை.

தனது மகன் இறந்தாலும், உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற தியாகச் சிந்தையுடன், எந்த அன்னையும் செய்யத் தயங்கும் செயலை பாமா செய்தாள். தனது மகன் இறந்த நாள் வருத்தத்திற்குரியதாக இல்லாமல் மகிழ்ச்சிக்குரியதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வரமும் பெற்றாள். அதனால்தான் இன்றும் நரகாசுரன் நம் இதயங்களில் வாழ்கிறான்.

தற்போது தீபாவளி நாடு முழுவதும் அற்புதமான வர்த்தக வாய்ப்பாக மாறிவிட்டது. புதிய ஆடை ராகங்கள், அணிகலன்களின் அறிமுகத்துக்கு ஏற்ற காலமாக தீபாவளி மாறிவிட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சுவைத்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறோம். உறவுகளுடன் அளவளாவி, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்சிகளில் லயித்து, பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிறோம். சந்தோஷம்தான்.

ஆனால், உறவுகளை இழந்த முதியவர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் இந்த தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவார்கள்? ஊர் முழுவதும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், ஒதுக்குப்புறமாய் நின்று இயலாமையுடன் வேடிக்கை பார்க்கும் இவர்களும் தீபாவளி கொண்டாட வேண்டாமா? அப்போதுதானே ஊர் முழுவதும் தீபாவளிக் கோலாகலம் முழுமையாகும்?

உலக வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் பிறரைச் சார்ந்தே வாழ்கிறோம். சமுதாயத்திடம் இருந்து நாம் பெரும் பயன்கள் கணக்கற்றவை. உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, வசிக்கும் வீடு, வாழும் சுற்றுப்புறம்... அனைத்திலும் சமுதாயத்தின் பங்களிப்பு உள்ளது. அந்த சமுதாயத்திற்கு நாம் என்ன பிரதிபலன் செய்ய முடியும்?

இதற்கான வாய்ப்பே பண்டிகைகள். இவற்றை நாம் மட்டும் கொண்டாடினால் போதாது. பண்டிகை கொண்டாட வாய்ப்பற்றவர்களுக்கும் அதற்கான உரிமை உண்டு. அதற்கான வழிகளை நாம் உருவாக்கலாமே!

நாட்டு மக்களுக்காக அன்னையே போர்க்கோலம் தரித்து, மகன் என்றும் பாராது அசுரனை வீழ்த்திய நாளை 'தீபாவளி' என்று கொண்டாடுகிறோம். இன்னாளில், நம்மால் இயன்ற அளவு செலவிட்டு புத்தாடைகளையும் பலகாரங்களையும் பட்டாசுகளையும் வாங்கி, ஆதரவற்ற அன்புள்ளங்களுக்கு வழங்கலாமே!

கைவிடப்பட்ட முதியோரையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும் இன்னாளில் சந்தித்து அளவளாவி மகிழலாமே. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தானே?

நன்றி: தினமணி (02.11.2010)
'தித்திக்கும் தீபாவளி' விளம்பரச் சிறப்பிதழ்- திருப்பூர்.
.

Wednesday, November 3, 2010

புதுக்கவிதை - 135


தீபாவளி - 6

ஊர் முழுவதும் பட்டாசு சத்தம்
இருப்பினும் பணிஅலுப்பில்
உறங்கும் சிவகாசி சிறுவர்கள்.

.

Tuesday, November 2, 2010

புதுக்கவிதை - 134


தீபாவளி - 5


ஒலிமாசு, வளிமாசு தவிர்க்க
பட்டாசு வெடிக்காதீர்.
கூறுவது-
ஊழல் மாசு அரசாங்கம்.

Monday, November 1, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்...


'தமிழ் பேப்பர்' இணையதளத்தில் வெளியாகியுள்ள -நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் தீபாவளி- விடுதலையின் ஒளிநாள் கட்டுரை அருமை.
அதன் சுட்டி இங்கு உங்களுக்காக.

.

Sunday, October 31, 2010

புதுக்கவிதை - 133





தீபாவளி - 4





நமுத்துப்போன பட்டாசு
புரியாத கவிதை போல.
எப்போதாவது வெடிக்கலாம்.

திரி விழுந்த பட்டாசு
நன்றாகப் புரியும் கவிதை.
எப்போதும் வெடிக்காது.

புகையும் பட்டாசு
வெடித்தாலும் வெடிக்கலாம்.
வெடிக்காமலும் போகலாம்.
.

Saturday, October 30, 2010

புதுக்கவிதை - 132



தீபாவளி - 3

வானில் சிதறும் வண்ண வெடி மழை.

அண்ணாந்து பார்த்து கைகொட்டும்

சேரிக் குழந்தை.

.

Friday, October 29, 2010

புதுக்கவிதை - 131





தீபாவளி - 2



..
.
பட்டாசுக்கடை வைக்க
அனுமதி பெறவும் லஞ்சம்.
பட்டாசு தொழிற்சாலையில்
விபத்து ஏற்பட்டாலும் லஞ்சம்.
பட்டாசு கொண்டுவருவதைக்
கண்டுகொள்ளாமல் இருக்கவும் லஞ்சம்.
இதை எல்லாம் எழுதாமல் இருக்க,
பத்திரிகையாளர்களுக்கும்
தரப்படுகிறது...
பட்டாசு பரிசுப் பெட்டியே
லஞ்சமாக.
.

Thursday, October 28, 2010

வசன கவிதை - 81


.
.
தீபாவளி - 1
*
*


இன்னும் எட்டு நாள் இருக்கிறது
கொண்டாட்டங்களுக்கு.
அதுவரை குறைவில்லை
இல்லத் தலைவர்களின்
திண்டாட்டங்களுக்கு.

என்னதான் வரவுக்கும் செலவுக்கும்
சண்டையிட்டுக் களைத்தாலும்
நடுத்தரவர்க்கத்திற்கு
வேப்பம்பூ சர்க்கரைதான் பண்டிகைகள்.

என்னதான் அலுத்துக் கொண்டாலும்,
குழந்தைகளை குதூகலிக்கச் செய்ய
கடன் வாங்கும் ஆனந்தம்
வேறெதிலும் கிடையாது.

என்னதான் கொள்ளைலாபம் வைத்தாலும்
ஜவுளிக்கடை படியேறாமல்
துணிக்கடலில் முத்தெடுக்காமல்
பண்டிகைகள் இனிப்பதில்லை.

என்னதான் கஷ்டமென்றாலும்
அதிகாலை வேளையில் கோயில் செல்லாமல்
நாள் முழுவதும் தொலைக்காட்சி முன் தவம் செய்யாமல்
பலகாரங்களால் அஜீரணம் ஆகாமல்
பண்டிகைகள் தீர்வதில்லை.
.
அன்றாட இயந்திர வாழ்வில் உழலும்
மனிதனுக்கு உயவுப்பொருளாய்
உதவும் பொருள் பண்டிகைதான்.
என்னதான் கயிறு கீழே இழுத்தாலும்
காற்றை சாடித்தானே
விண்ணில் பறக்கிறது பட்டம்?
.
பட்டங்களை எல்லா நாளும்
பறக்கவிட முடியாது
பட்டத்தின் துடிப்பு வாலில்.
மனிதனுக்கு வாழ்வின் தேடலில்.
பண்டிகைகள் தருவது
அதற்கான வாய்ப்புக்களை.
.

Wednesday, October 27, 2010

உருவக கவிதை - 66

.
.

.
.
.

புனர் ஜென்மம்


அனல்காற்று வீசும் பாலைப் பெருவெளியின்
கானல் குளங்களின் ஊடே ஒற்றை ஈச்ச மரம்.
கூகைகளும் அஞ்சும் மயான வெயிலில்
முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி
கண்கள் செருகுகிறது
வாயுலர்ந்த ஒட்டகம்.

*********

கானகப் பசுமையைச் சிதைத்தபடி
முன்னேறும் கோடரிக் கும்பல்களின்
தோள்களில் காயம் பட்ட மான்கள்.
ரம்பத்தின் பேரோசையில் அமிழ்ந்து போகிறது
குருதி வழியும் மான்களின் ஈனசுரம்.

*********

பாலைவனச்சோலையில் நிழல்தரும்
ஒற்றைமரம் மனிதனாகலாம்-
அடுத்த ஜென்மத்தில் ஒட்டகம் போல.
புண்ணியக் கணக்கை பாவத்தால் சரிக்கட்ட
வேறுவழி?
....

Tuesday, October 26, 2010

வசன கவிதை - 80




மகத்தானவர்களுக்கு
மாபெரும் வந்தனம்!



வந்தனம்! பெரும் வந்தனம்!
வானைக் கிழிக்கும் கோபுரம் கொண்ட
கோயில் அமைத்த சிற்பிகளின்
வித்தக விரல்களுக்கு வந்தனம்!

கல்லில் சிற்பிகள் காவியம் எழுத
உளிகளைத் தந்த கொல்லர்களுக்கும்
பதுமைகள் தந்த தச்சர்களுக்கும்
அடவு காட்டிய அடியார்களுக்கும் வந்தனம்!

கருமலையில் கல்லுடைத்த
சாளுக்கிய அடிமைகளுக்கும்
பல காத தூரம் தோளில் சுமந்து
கற்களைத் தந்த மல்லர்களுக்கும் வந்தனம்!

கோயில் கட்ட நிலத்தை மேவிய
ஏர் உழவர்களுக்கும் மாடுகளுக்கும்
தடங்கலின்றி அனைவர்க்கும் உணவளித்த
சமையல்காரர்களுக்கும் வந்தனம்!

உழைப்பின் களைப்பு தெரியாவண்ணம்
செவ்விளநீரும் கள்ளும் வழங்கிய
பனையேறி மக்களுக்கும்
தாகம் தீர்த்த பெண்களுக்கும் வந்தனம்!

கோயில் பணியைக் கண்காணித்த
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும்
சிற்பிகள் களைப்பைப் போக்கிய
குடும்பத்தினருக்கும் வந்தனம்!

சிற்பத் தொழிலில் பட்ட காயம்
விரைவில் ஆற மருந்துகளிட்ட
வைத்தியர்களுக்கும் சேடிகளுக்கும்
மூலிகை தந்த குறவர்களுக்கும் வந்தனம்!

உருவம் முனைந்த குயவர்களுக்கும்
உதவிகள் செய்த தொழிலாளருக்கும்
உடைகள் வெளுத்த வண்ணாருக்கும்
சாரம் கட்டிய வீரர்களுக்கும் வந்தனம்!

காவல் காத்த மறவர்களுக்கும்
பண்ணிசை பாடிய பாணர்களுக்கும்
சிகைகள் மழித்த நாவிதருக்கும்
இறைச்சியான ஆடுகளுக்கும் வந்தனம்!

கல்தூண்களை அடுக்க உதவிய
யானைகளுக்கும் குதிரைகளுக்கும்
பாலைப் பொழிந்த பசுக்களுக்கும்
பந்தம் பிடித்த சிறுவர்களுக்கும் வந்தனம்!

கோயிலுக்காக குழிகளைத் தோண்டிய
தோள்வலி கொண்ட தோழர்களுக்கும்
செருப்புகள் தந்த திருக்குலத்தார்க்கும்
கூலி வழங்கிய கணக்கர்களுக்கும் வந்தனம்!

நல்ல நாழிகை கணக்கிட்டுரைத்த
வள்ளுவருக்கும் சோதிடருக்கும்
கல்லில் எழுதிய வாணர்களுக்கும்
மரங்கள் தந்த காடுகளுக்கும் வந்தனம்!

தினமும் இறையை வேதம் ஓதி
பக்திப்பெருக்குடன் பூசனை செய்த
அந்தணருக்கும் விடுபட்டோர்க்கும்
பூக்கள் தொடுத்த சிறுமியருக்கும் வந்தனம்!

தஞ்சைத் தரணியில் மாபெரும் கோயில்
அமைக்கும் கனவுடன் ஈசனை வணங்கி
நாட்டு மக்களை தொண்டர்களாக்கிய
ராசராசனுக்கு மாபெரும் வந்தனம்!

மன்னன் மனதில் கருவாய் நின்று
மாபெரும் ஆலயம் அமைக்கச் செய்த
உலகை ஆளும் பெருவுடையாருக்கு
வந்தனம்! வந்தனம்! மாபெரும் வந்தனம்!


நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2010

******

Wednesday, October 20, 2010

புதுக்கவிதை - 130


மரமான மனங்கள் - 10

கட்டையில் போனவருக்கும்
மணம்கூட்ட உடன் செல்லும்
கட்டையாய் சந்தனமரம்.
.

Tuesday, October 19, 2010

புதுக்கவிதை- 129


மரமான மனங்கள் - 9

கரையான்கள், எறும்புகள்,
ஓணான்கள், பல்லிகள்,
பறவைகளின் வீடு மரம்.
.

Monday, October 18, 2010

எண்ணங்கள்



ஆபத்தான குட்டிக்கரணம்...
கரணம் தப்பினால் மரணம்

''நான் ஒரு இந்தியன்; நான் ஒரு முஸ்லிம். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை''- அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த மக்களவை விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த உமர் அப்துல்லா பேசிய வைர வரிகள் இவை.

அது 2008-ம் ஆண்டு; இப்போது நடப்பது 2010-ம் ஆண்டு; இரு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை குட்டிக்கரணப் பேச்சால் நிரூபித்திருக்கிறார், அதே உமர்.

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, ""காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணையவில்லை; நிபந்தனைக்கு உள்பட்ட இணைப்பு ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர்ப் பிரச்னை இந்தியா, பாகிஸ்தான் தொடர்புடைய சர்வதேச விவகாரம்'' என்று கூறி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரான உமர் அப்துல்லா இவ்வாறு பேசியிருப்பதை, கூட்டணிக் கட்சி என்பதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எதிர்பார்த்ததுபோலவே, இதுவரை அப்துல்லா குடும்ப ஆட்சியை எதிர்த்துக் கொடி பிடித்த காஷ்மீரப் பிரிவினைவாத இயக்கங்கள் பலவும், உமர் பேச்சால் ஆனந்தக் கூத்தாடுகின்றன.

பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி, நீண்ட நாள்களாகத் தாங்கள் கூறிவருவதையே முதல்வர் ஒப்புக்கொண்டிருக்கிறார்; காஷ்மீரை இனியும் இந்தியா ஆக்கிரமித்திருக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க்கட்சியான மெஹபூபா சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி, உமர் அப்துல்லாவின் இந்த அதிரடிப் பிரிவினை முழக்கத்தால் குழம்பிப்போயுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல்வர் உமர் அப்துல்லா பேசிய அனைத்துமே அபாயகரமானவை. ""வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி மூலமாக காஷ்மீரப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. காஷ்மீரில் நிலவுவது அரசியல் விவகாரம். இதை பேச்சுவார்த்தை வாயிலாகவே தீர்க்க வேண்டும்'' என்று கூறிய அவர், தான் இந்திய அரசின் கைப்பாவை அல்ல என்றும் முழங்கினார்.

57 ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திரம் மீண்டும் திரும்புவதுபோலத் தெரிகிறது. 1953-ல், இதேபோலத்தான் உமரின் தாத்தாவான அப்போதைய முதல்வர் ஷேக் அப்துல்லா (அந்தக் காலத்தில் ஜம்மு காஷ்மீரின் பிரதமர் என்றே அவர் அழைக்கப்பட்டார்) திடீரென காஷ்மீர் தனிநாடு என்று போர்க்கொடி உயர்த்தினார். உமர் போலல்லாமல் அவருக்கு மக்கள் செல்வாக்கும் இருந்தது. ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறிதும் தயங்கவில்லை. தனது நெருங்கிய நண்பர் என்றும் பாராமல் ஷேக் அப்துல்லாவின் அரசைக் கலைத்து, அவரைக் கைது செய்து வீட்டுச்சிறையில் வைத்தார்.

அதே ஷேக் அப்துல்லா, நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ல் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஆனார். பதவியில் இருக்கும்போதே உயிர்நீத்தார். அவரையடுத்து, அவரது மகன் பரூக் அப்துல்லா மூன்றுமுறை (1982-84, 86-90, 96-2002) முதல்வராக இருந்து, இப்போது மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். 2009-ல் வாரிசு அடிப்படையில் முதல்வரான உமர் அப்துல்லா, தாத்தாவின் பழைய பாதைக்கே திடீரென்று திரும்பி இருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீரில் நிலவிவரும் கலவரச்சூழல், முதல்வர் உமர் அப்துல்லாவின் செல்வாக்கைக் குறைத்துவிட்டது. அவரது பதவிக்கே ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து தப்பவே, நெருப்புடன் விளையாடுகிறார் உமர் அப்துல்லா என்று, பாஜக.வும்,காஷ்மீர சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்து காஷ்மீர சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டன.

உமர் அப்துல்லா இதற்கு முன் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் (2001-02), மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார்; இந்தியக் குடிமகன் என்று உளமாற உறுதிகூறி பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார். இப்போதும்கூட, நாட்டின் இறையாண்மையைக் காப்பதாக உறுதி கூறியே முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, பிரிவினைவாதக் கருத்துகளை சட்டப்பேரவையிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார் உமர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ, யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்ற கணக்காக, பொறுப்பின்றி வேடிக்கை பார்க்கிறது. அன்று நேரு அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க விடாமல் இப்போதைய மத்திய அரசைத் தடுப்பது எது?

பொறுப்பற்ற ஆட்சியால் மாநிலத்தில் அமைதியின்மைக்கு காரணமாக இருந்துவிட்டு, மாநிலத்தை எரிமலையின் கொள்ளிவாய்க்குள் தள்ளிவிட்டு, பதவியைக் காப்பதற்காக புரட்சிநாயகராக புதுஅவதாரம் எடுத்திருக்கும் உமர் அப்துல்லாவை அம்மாநில மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறார்கள். மத்திய அரசு மட்டுமே அவரை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது.

யோகாசன குரு ராம்தேவ், உமரின் பிரிவினைப் பேச்சைக் கண்டித்ததுடன், யோகாசனம் மூலமாக இப்போதைய நெருக்கடியான மனஅமைதியற்ற குழப்ப நிலைக்குத் தீர்வு காணுமாறு உமர் அப்துல்லாவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த விஷச்செடியை வளரவிட்டால், எதிர்காலத்தில் மன்மோகன் சிங்கும் அமைதிக்காக யோகாசனம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

--------------------------------------------------------
நன்றி: தினமணி (18.10.2010)
.

Sunday, October 17, 2010

புதுக்கவிதை - 128


மரமான மனங்கள் -8

வேலியில் வளர்ந்த
சுயம்பு வேம்புவை
விலைபேசும் விவசாயி.
.

Saturday, October 16, 2010

புதுக்கவிதை - 127


மரமான மனங்கள்-7

மச்சுவீட்டுப் பகட்டையும்
பாவிப் பாழாக்குகிறது
ஒற்றை ஆலஞ்செடி.
.


Friday, October 15, 2010

புதுக்கவிதை - 126


மரமான மனங்கள்- 6


மரத்தை இதுவரை
காப்பாற்றிய பிள்ளையாருக்கும்
ஆப்பு வைத்தது நெடுஞ்சாலை.
.

Thursday, October 14, 2010

புதுக்கவிதை - 125


மரமான மனங்கள்- 5


மரபார வண்டிக்கு
நிழல் தருகிறது
காத்திருக்கும் மரம்.
.

Wednesday, October 13, 2010

புதுக்கவிதை - 124



மரமான மனங்கள்-4

அடிமரம் பிளக்கும்
கோடரியின் பிடியாய்..
இயற்கை அழிக்கும் மனிதம்.

.

Tuesday, October 12, 2010

உருவக கவிதை - 65




ஆறறிவு
அற்ற
குரங்குகள்



.

குரங்குகள் அடித்துக் கொள்வதுண்டு
உணவுக்காக,
கலவிக்காக,
அதிகாரத்திற்காக.

யாரேனும் வீசி எறியும்
வாழைப்பழத்திற்காக
பல்லைக் காட்டி உறுமி
சண்டையிடும் குரங்குகள்...

துணைக் குரங்கை
வேறு குரங்கு கைப்பிடிக்காமல் தடுக்க
சீறும் குரங்குகள்...

தனது எல்லைக்குள் அந்நியக் குரங்கு
பிரவேசிக்காமல் தடுக்கும்
கோபாவேசக் குரங்குகள்.

தனக்குத் தானே வரையறுத்த
கட்டுப்பாடுகள் உண்டெனினும்

குரங்குகளுக்கென தனித்த
அரசியல் சாசனம் இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்திலும்
குரங்குகள் எல்லை மீறாது.
அடுத்த குரங்கின் வாலில்
தீ மூட்டி கைகொட்டாது.

வன எல்லை ஆட்சியைக் காக்க
இடம் விட்டு இடம் சகாக்களை கடத்தி
மிரட்டத் தெரியாது.

தனக்கென சட்டம் வகுத்துக்கொண்டு
அதை மீறத் தெரியாத
பகுத்தறிவு சிறிதும் கிடையாது.

வாலறிவன் தாள் வணங்கும்
மனிதருக்கு வால் இல்லை;
குரங்குகளுக்கு அறிவு இல்லை.

வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது.
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை.


.

Monday, October 11, 2010

வசன கவிதை - 79


கனவான காவல்பணி


இன்னும் ஓரடி குறைவாக இருந்தாலும்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்;
வழிமுறை தெரியாமல் வகையாக
இப்படி மாட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

தலையில் தேங்காய் மட்டை வைத்து
உயரம் அதிகரித்திருக்கத் தேவையில்லை.
'போலீஸ் ஆகும் முன்பே போர்ஜரி' என்று
செய்தியாகாமல் இருந்திருக்கலாம்.

காவல்துறையில் நுழைய வேறு வழியா இல்லை?
இப்படி பத்திரிகையில் படம் வெளியாகி
பிரபலமாவதற்கு பதிலாக
கவனிக்க வேண்டியவர்களை கவனித்திருக்கலாம்.

அஞ்சாமல் வேடம் போட்டதற்கு பதிலாக
'அஞ்சாதே' படம் பார்த்திருக்கலாம்-
காவல்துறை கனவில், அதீத ஆர்வத்தில்
திருடனாக மாற வேண்டியிருந்திருக்காது.

இயக்குனர் மிஷ்கினுக்கு ஒரு வேண்டுகோள்:
அஞ்சாதே - இரண்டாம் பாகத்திற்கு கதை தயார்.
பரிதாபத்திற்குரிய அந்த இளைஞரின் முடி உரித்து
பரவசப்படும் ஊடகங்கள் இருக்கின்றன கருவாக.

இதர தமிழ்த் திரைப்பட சிற்பிகளுக்கு வேண்டுகோள்:
கஞ்சா மயக்கத்தில் இருப்பவரும்
திடீர் காவல் அதிகாரி ஆவதுபோல இனியேனும்
படம் எடுக்காதீர்கள்- வாழ்க்கை வியாபாரமல்ல.
.
.

Sunday, October 10, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்...


எழுத்தாளர் பா.ராகவன் நடத்தும் தமிழ் பேப்பர் இணையதளத்தில், நண்பர் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய 'கஜினி முகமதுவும் ராஜராஜ சோழனும்' என்ற சிந்தனைக்குரிய கட்டுரை வெளியாகியுள்ளது. எனக்கு பல ஆச்சர்யங்களை அளித்த கட்டுரை இது; உங்களுக்கும் அளிக்கலாம்..

.

Saturday, October 9, 2010

எண்ணங்கள்


அடிப்பது போல அடிப்பதும், அழுவது போல அழுவதும்...

தீர்க்க முடியாத பிரச்னையா? ஒரு விசாரணைக் குழு அமைத்தால் போயிற்று' என்ற தத்துவம் அரசியல் உலகில் பிரசித்தம். தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவோ, பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மேலும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தவிர, இந்தக் குழு எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கமே சிதறிவிடும் நிலை காணப்படுவதால், பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் தவிப்பில் உள்ளனர்.

ஆங்கிலக்கல்வி மோகத்தால் அல்லாடும் பெற்றோரை நன்றாகப் புரிந்துகொண்ட தனியார் பள்ளிகள், தன்னிச்சையான போக்குடன் அதிகப்படியான கட்டணங்களை வசூலித்து வந்தன. இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற அரசு, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது. பள்ளிகள் நியாயமான கட்டணத்தை வசூலிக்க இக்குழு தேவையான பரிந்துரைகளைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

இக்குழுவும், தனியார் பள்ளிகளிடம் நாற்பதுக்கு மேற்பட்ட கேள்விகள் அடங்கிய ஆய்வுநிரலை வழங்கி அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில், பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புக்கு ஏற்ப புதிய கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே 7-ம் தேதி அறிவித்தது. ஆனால், இந்தக் கட்டண நிர்ணயத்தில் சரியான அளவுகோல்கள் பின்பற்றப்படவில்லை; இதைக் கொண்டு பள்ளிகளை நடத்த இயலாது என்று கூறி தனியார் பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

பள்ளி தொடங்கும் காலகட்டத்தில் வந்த கோவிந்தராஜன் குழுவின் ஆணையால் நிச்சயமற்ற நிலை ஒருவார காலத்துக்கு காணப்பட்டது. சில பள்ளிகள் மட்டுமே குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை அடுத்து, கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பளித்தது. அதையேற்று, மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.

அதற்குள் பள்ளிகள் துவங்கிவிட்டதால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வெளிப்படையாகவும், கூடுதல் கட்டணத்தை மறைமுகமாகவும் பள்ளி நிர்வாகங்கள் வசூலித்தன. இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்க பெற்றோரும் தயங்கினர். அவரவர் குழந்தைகளின் கல்விப் பிரச்னை அவரவர்களுக்கு.

சில இடங்களில் மட்டும் பெற்றோர் போராட்டங்களை நடத்தினர். அதனால் பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது அரசோ, கல்வித்துறையோ கடும் நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை.

இதனிடையே உயர் நீதிமன்றத்தை அணுகிய தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் கட்டண நிர்ணயப் பரிந்துரைக்கு இடைக்காலத் தடையை செப். 14-ல் பெற்றது. அதன் பிறகு, முன்பு கூடுதல் கட்டணத்தை வசூலிக்காத பள்ளிகளும் அவசரமாக கட்டணங்களை வசூலித்தன. இதற்கு எழுந்த எதிர்ப்பையும் பள்ளிகளோ, அரசோ பொருள்படுத்தவே இல்லை.

தர்மபுரி அருகே தனியார் பள்ளி எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து செப். 17-ல் தனியார் பள்ளிகள் அறிவித்த ஒருநாள் விடுமுறைக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்தும்கூட, பல பள்ளிகள் இயங்கவில்லை. அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன்; நீ அழுவது போல அழு' என்று, அரசும் தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டதன் பயனாக, தனியார் பள்ளிகள் பெற்ற இடைக்காலத் தடையை அக். 4-ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தவிர, தனியார் பள்ளிகளுடன் ஆலோசித்து புதிய கட்டணத்தை நிர்ணயிக்குமாறு உயர் நீதிமன்றம், நீதிபதி கோவிந்தராஜன் குழுவுக்கு 4 மாத கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கல்வியாண்டு முடியும் நேரத்தில் இக்குழு அறிவிக்கும் புதிய கட்டணத்தால் என்ன மாற்றம் ஏற்படும் என்பது புலப்படவில்லை.

தனியார் பள்ளிகளுடன் முன்கூட்டியே தீர ஆலோசனை நடத்தி, அவர்களும் குறைகூற இயலாத வகையில் பள்ளிக் கட்டணங்களை நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்திருந்தால் இந்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது, குழுவின் பரிந்துரையை தயவுதாட்சண்யமின்றி கல்வித்துறை அமலாக்கம் செய்திருந்தால் நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்; தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகமாகவே காட்சி அளிக்கும் தற்போதைய நிலையும் நேரிட்டிருக்காது.

தனியார் பேருந்துகள் தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்தியுள்ளதும், அதை தமிழக அரசு "வழக்கம் போல'க் கண்டித்து எச்சரிக்கை விடுத்திருப்பதும், இதேபோன்ற நாடகமே. இப்போதும் கூடுதல் கட்டணத்துடன் பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டு பல தனியார் பேருந்துகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழியாகவே இயங்கிக்கொண்டு தான் உள்ளன.

சட்டத்தையும் அரசு உத்தரவுகளையும் நிறைவேற்றும் அமைப்புகளின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, அதிரடி உத்தரவுகளை வாயளவில் வெளியிடுவதால் யாருக்கும் எப்பயனும் விளையாது; அரசின் மரியாதை குறையவும் நிர்வாகம் குலையவுமே அவை வழிவகுக்கும். அதுவே தமிழகத்தில் நடந்திருக்கிறது.
.
---------------------------------
நன்றி: தினமணி (08.10.2010)
காண்க: தினமணி
.

Friday, October 8, 2010

புதுக்கவிதை - 123


மரமான மனங்கள் -3


வெளியில் கிளைகளை வெட்டலாம்;
வேர்களை என்செய்வது?
மீண்டும் துளிர்க்கிறது மரம்.

.

Thursday, October 7, 2010

புதுக்கவிதை - 122


மரமான மனங்கள் - 2

வெட்டப்பட்ட இடத்தில் கசியும்
பிசினிலும் உதவுகிறது
மொட்டை மரம்.

.

Wednesday, October 6, 2010

புதுக்கவிதை - 121


மரமான மனங்கள் - 1


சூரிய ஒளியை மறைக்கிறதாம்,
பிராண வாயுவை மறந்து
வெட்டுகிறார்கள் மரத்தை.

.

Tuesday, October 5, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
-அருட்பிரகாச வள்ளலார்
(திரு அருட்பா- முதல் திருமுறை:8)
.
குறிப்பு: இன்று வள்ளலார் பிறந்த தினம் (1856).
.

Monday, October 4, 2010

உருவக கவிதை - 63




எட்டாத வாழ்க்கை



எட்டிப் பார்த்தவன் சிக்க,
எட்டிப் பறித்தவன் எவனோ.
எட்டிக்காயாகி விட்டது வாழ்க்கை.
.

Sunday, October 3, 2010

உருவக கவிதை- 63





சங்கேத வாழ்க்கை





நாட்குறிப்பு ஏடெங்கும்
சங்கேதக் குறிப்புகள்.
சென்ற ஆண்டின் நாட்குறிப்பைப் புரிய
சென்ற ஆண்டே செல்ல வேண்டும்.
இந்த ஆண்டின் நாட்குறிப்பும்
அடுத்த ஆண்டு குழப்பக் கூடும்.
வரும் ஆண்டேனும்
தெளிவான சங்கேதங்களை
புரிவதுபோல
எழுத வேண்டும்.
.

Saturday, October 2, 2010

மரபுக் கவிதை - 109




சர்வ மத சமரசம்





ஆல்நிழல் தனிலே அமைதியின் உருவாய்
ஞானம் கூறிடும் மோனத்திருவே!
வேலினை அணிந்து சூரனை அழித்த
தேவர்கள் சேனாபதியே முருகா!


ஆழ்கடல் தனிலே நித்திரைகொள்ளும்
புன்னகை தவழும் புருஷோத்தமனே!
வேழமுகத்தால் வேதனை தீர்க்கும்
பாரதம் எழுதிய வேலனின் முன்னே!


மகிஷனை அழிக்க மறஅணி தரித்து
சிம்மம் ஏறிய சிவனது துணையே!
தகித்திடும் தணலால் உலகினைக் காக்கும்
ஜொலித்திடும் கதிரே, சூரியதேவா!

அன்பினைப் பரப்பி அஹிம்சையைக் காத்து
ஆசையை வெறுத்த அச்சுத புத்தா!
நன்மணி மூன்றை நானிலம் ஏற்க
நயம்பட உரைத்த நாயக, அருகா!

பேதமை ஓட்டிட சீக்கியர் வணங்கும்
நேரிய சத்ஸ்ரீ அகாலி இறைவா!
யூதர்கள் மனதில் உறுதியை ஊட்டி
பேரருள் புரியும் ஜெகோவ தேவா!

பகைவரிடமும் அன்பினைக் காட்டி
சிலுவையில் ஏறிய சீர்மிகு ஈசா!
குகையென இருண்ட மனத்திருள் நீக்கி
குலத்தினைக் காத்த நபியின் இறையே!


எனப் பலவாறு வணங்கிட்டாலும்
எல்லாம் ஒன்றே! ஏன் அதிபேதம்?
மனத்துறு மதியே, மதவெறி தவறு!
உடலுறை ஆன்மா- உயிரே கடவுள்!


அனைவரும் அவரவர் விரும்பியவாறு
வணங்கிடுகின்ற வரமே, வளமே!
அனைவரின் மதமும் மனிதனை உயர்த்த
பேதமகற்றிப் பேரருள் புரிக!
.
இன்று மகாத்மா காந்தி பிறந்த தினம்.
.

Friday, October 1, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்




வாடிக்கையாளரே நமது நிறுவனத்திற்கு வரும் மிக முக்கியமான வருகையாளர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை; நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம். அவர் நமது வர்த்தகத்திற்கு வெளியில் இல்லை; அதன் ஓர் அங்கமாக இருக்கிறார். அவருக்கு சேவை செய்வதன் மூலமாக நாம் அவருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை; அதற்கான வாய்ப்பை வழங்கியதன் மூலமாக அவரே நமக்கு நன்மை செய்துள்ளார்.
-மகாத்மா காந்தி.
.