Wednesday, February 15, 2012

உருவக கவிதை - 69


பால் டீ


லைட் டீ,
ஸ்ட்ராங் டீ,
மீடியம் டீ,
லெமன் டீ,
மசாலா டீ,
பிளாக் டீ,.. .

சுகர் குறைச்சல், சுகர் அதிகம், சுகர் இல்லாமல்,
ஆற்றாமல், நல்லா ஆறவைத்து,...

பார்சல் டீ, டூ பை த்ரீ, ஒன் பை டூ,
பேப்பர் கப்பில்,  டவராவில்...

எப்படிக் கேட்டாலும்
கொடுக்கிறார் மூலைக்கடை நாயர்.

எல்லாம் சரிதான்.
அது என்ன பால் டீ?


.

Monday, February 13, 2012

புதுக்கவிதை - 147






நாய்களும் 
நாய்கள் நிமித்தமும்....



காதலர் தினம் கொண்டாடுவதில்லை...

காதலியை மயக்கமாக்கி
சகாக்களுடன் நாசமாக்குவதில்லை...

அதையும் படம் பிடித்து
இணையத்தில்
காணொளி ஆக்குவதும் இல்லை...

நாய்கள்.
 
 
குறிப்பு: நாளை (பிப். 14) காதலர் தினம் என்கிறார்கள்....

Thursday, February 2, 2012

எண்ணங்கள்


'போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

எம்பிபிஎஸ் முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து.

ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், எமலோகத்துக்கு அனுப்பிவைத்த அதே மொபைல்போன் தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை.÷கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம். அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
 
நன்றி: தினமணி (02.02.2012)