Sunday, December 30, 2012

அடிவாரக் கற்கள்


அகன்று உயர்ந்த மதிலில் பல இடங்களில் சிதிலங்கள்.
ஆலமரமும் அரச மரமும் வேரோடியிருக்கின்றன.
எருக்கஞ்செடிகள் பூக்களை இறைத்தபடி மதிலோரம் விரவிக் கிடக்கின்றன.
சுண்ணாம்பு பார்த்து பலநூறு வருடம் ஆனதன் அடையாளம்
சுவரெங்கும் பட்டையாக உரிந்து கிடப்பதில் தெரிகிறது.
செங்கல்லும் சுண்ணாம்புச் சாந்தும் பெயர்ந்திருந்தாலும்
கம்பீரம் குலையாமல் காட்சி தருகிறது மதில்.

இரண்டு ஆள் கனத்தில் இவ்வளவு வலிமையாகக் கட்டிய
கொத்தனார் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்,
பலநூறு ஆண்டுகள் இந்த மதில் வரலாறு சொல்லும் என்று.
கட்டியவன் யார், கட்டச் சொன்னவன் யார்
என்பதெல்லாம் தேவையில்லாத கதை.
இந்த மதிலை இடித்தால் தான் உள்ளிருக்கும்
அரண்மனையைத் தூர்க்க முடியும் என்பதுதான் விஷயம்.

Wednesday, November 21, 2012

பழனியிலிருந்து ஒரு பாதயாத்திரை- சிறுகதை


தூரத்தில் மலையும் கோயிலும் தெரிந்தபோதே கன்னத்தில் போட்டுக் கொண்டார் மருதாசல கவுண்டர். ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் வாங்க நிற்கும் கும்பல் போல பயணிகள் பஸ்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வந்த மெல்லிய காற்று இல்லாவிட்டால் உள்ளே இருக்க முடியாது.

கவுண்டரின் பேரன் ரங்கநாதன் பக்கவாட்டில் நசுக்கியபடி உராய்ந்து நின்ற குண்டு மனிதரைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். ஆனால் அவனது கஷ்டம் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இன்னும் கால் மணிநேரம் தான், பழனி வந்துவிடும். எட்டாம் வகுப்பு காலாண்டு பரீட்சை லீவ் நேற்றுத்தான் துவங்கியிருந்தது. லீவில் உருப்படியான காரியமாக, பலநாள் வேண்டுதலை நிறைவேற்ற பேரனை அழைத்துக்கொண்டு பழனி செல்கிறார் கவுண்டர்.

பஸ்சுக்குள் சந்தைக்கடை இரைச்சல். பின்சீட்டில் யாரோ கொய்யாப்பழம் சாப்பிடும் வாசனை. பழனி கொய்யாப்பழத்துக்கு பிரபலம். வீடு திரும்பும்போது பேத்திக்கு வாங்கிப்போக வேண்டும். ஆனால் போனமுறை வந்தபோது ஏமாந்தது போல இம்முறை ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டார். அப்போது தனது முகத்தில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டார். யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவருக்கு அவரவர் கவலை.

Sunday, November 18, 2012

தமிழ் இலக்கியங்களில் தீபாவளி!


நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில் தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர் பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு.

அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில் தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர். தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்தும் கூட தமிழ் இலக்கியத்தில் உறுதியான பதிவுகள் இல்லை.

மாறாக, நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இந்திரவிழா, கார்த்திகை விளக்கு, ஐப்பசி ஓணம் போன்ற பண்டிகைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. காலந்தோறும் மாறித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மானிட சமுதாயத்தின் சிறப்பாகவே பண்டிகை மாற்றங்களைக் கருத வேண்டும் என்பது மானுடவியலாளர்களின் கருத்து.

இந்நிலையில், தமிழ் இலக்கியத்தில் திருமால் வழிபாடு, விளக்கு வழிபாடு தொடர்பாக இடம்பெற்றுள்ள சில பதிவுகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

Monday, November 5, 2012

வடசித்தூரில் கொண்டாடப்படும் மயிலந்தீபாவளி!


 நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பல  நாள் கொண்டாட்டமாக தீபாவளி மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது. தமிழகத்திலோ தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் மட்டுமே.

அதேசமயம், கோவை மாவட்டத்திலுள்ள வடசித்தூர் கிராமத்தில் மட்டும் தீபாவளி இரண்டுநாள் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளை இவ்வூர் மக்கள் "மயிலந்தீபாவளி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று இக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கிடாவெட்டு உண்டு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள வடசித்தூர் கிராமம் சிற்றூராட்சியாகும். குரும்பபாளையம், செல்லப்ப கவுண்டன்புதூர் ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கிய வடசித்தூர், சுற்றுவட்டாரக் கிராமங்களின் மையமாக உள்ளது. இங்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே இங்கு முக்கியத் தொழில். சமீபகாலமாக இப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டு வருகின்றன.

Monday, October 29, 2012

சீக்கியர்கள் கொண்டாடும் தீபாவளி….


வண்ணமயமான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் உற்சாக வெள்ளத்தைக் கரைபுரளச் செய்யும் முதன்மையான பண்டிகை தீபாவளி தான். இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் கொண்டாடப்படுவதல்ல என்பது பலரும் அறியாத தகவல்.

சமண மத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தீபாவளி தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் சங்கமத் திருநாள்.

Friday, October 19, 2012

ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது தளத்தில் எழுதிய கட்டுரை - சிறுவணிகத்தில் வெளிமுதலீடு  - குறித்த எனது விமர்சனம் இது.

Sunday, October 7, 2012

புதுக்கவிதை - 148




கருவாடு

 





ஒரு கவிதை
நிராகரிக்கப்பட்டுவிட்டது-
படிக்கப்படாமலேயே-
வாழாமலே முடிந்துபோன
வாழ்க்கை போல.

அந்தக் கவிதையின்
ஒவ்வொரு வரியிலும்
துடிப்பு இருந்தது-
நிலத்திலும் வாழத் துடிக்கும்
மீன் போல.

காய்ந்த மீன் கூட
கருவாடாகும்-
இந்தப் புலம்பல் போல.
.

Thursday, October 4, 2012

எண்ணங்கள்

திருப்பூரில் போலீசால் கொல்லப்பட்ட  மோகன்ராஜின் மனைவி கீதாவும் குழந்தை ரேணுகாவும்

 குழந்தை ரேணுகாவின் அப்பா வருவாரா?

குழந்தை ரேணுகாவுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் பிறந்தநாள். அன்று மகிழ்ச்சிகரமாக இருந்திருக்க வேண்டிய அந்தக் குடும்பம், ஒப்பாரி வைத்தபடி  நடுத்தெருவில் நின்றது. காரணம் அந்தக் குழந்தையின் தந்தை முதல்நாள் தான் போலீசாரால் கொல்லப்பட்டிருந்தார். அதுவும் நான்கு நாட்கள் லாக்அப்பில் வைத்து போலீசார் நடத்திய கொடூர விசாரணையின் முடிவில். அந்த ஒரு வயதுக் குழந்தையின் அப்பா இப்போது இல்லை. அவரைத் திருமணம் செய்து மூன்று ஆண்டுகளே ஆன மனைவி கீதாவுக்கு ஆறுதல் சொல்லும் துணிவும் யாருக்கும் இல்லை.

இச்சம்பவம் நடந்தது திருப்பூரில். ஆயினும் நாம் ஜனநாயக நாடு என்று நம்மைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்லிக் கொள்கிறோம். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்ற தத்துவத்தைப் பேசிக்கொண்டே இதுபோன்ற லாக்அப் மரணங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம்.

Tuesday, September 4, 2012

எண்ணங்கள்

பண்பாட்டை விளக்கும் உன்னதத் திருவிழா


நமது நாட்டின் பண்பாட்டுச் சிறப்புக்கு அடையாளமாகத் திகழ்பவை பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் தோற்றக் காரணம் உண்டு. மக்களை ஒன்றிணைப்பதும், மகிழ்ச்சியூட்டுவதுமே பண்டிகைகளின் அடிப்படை நோக்கம். அந்த வகையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தனிச் சிறப்பு மிக்கதாகும்.

‘பரசுராம க்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கேரளத்தை முன்னொரு காலத்தில் மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். இவர் பிரகலாதனின் பேரன். நல்லாட்சி நடத்தியதால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தான தர்மம் செய்வதில் நிகரற்றவராக விளங்கிய இவரது மனத்திலும் மாசு புகுந்தது. தானத்தில் தன்னை விஞ்ச ஆளில்லை என்ற ஆணவமும், தேவர்களை அடிமைப்படுத்திய அசுர குணமும் மகாபலிக்கு வினையாக அமைந்தன.

Tuesday, August 7, 2012

எண்ணங்கள்


மிரட்டும் பிளக்ஸ் விளம்பர பேனர்கள்


எந்த ஒரு நவீனக் கண்டுபிடிப்பும் அதன் பயன்பாட்டில்தான் மதிப்பு பெறுகிறது. பாறைகளை உடைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட 'டைனமைட்' இன்று உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் கொடூர ஆயுதம் ஆகியிருப்பது இதற்கு உதாரணம்.

இதேநிலையில்தான் 'பிளக்ஸ் பேனர்' எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அச்சிடப்படும் விளம்பரங்களும் உள்ளன என்று சொன்னால் மிகையில்லை.

டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியால் புகைப்படங்களை உள்ளது உள்ளபடி அச்சிடும் வசதி இருப்பதால், சுயவிளம்பரத்தைத் தேடிக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளின் எளிய சாதனமாக பிளக்ஸ் விளம்பரங்கள் மாறி இருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்களும் கூட நீண்ட நாள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு பிளக்ஸ் விளம்பரங்களையே நாடுகின்றன. இதன் காரணமாக புற்றீசல்போல எங்கு பார்க்கினும் பிளக்ஸ் விளம்பரங்களே கோலோச்சுகின்றன. இவற்றின் ஆபத்து குறித்து யாருக்கும் கவலையில்லை.

Saturday, August 4, 2012

ஜெயமோகனுக்கு ஒரு கடிதமும் பதில் கடிதமும்



ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன்.

வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே குறிக்கோளைத் தவறவிட்டுப் பன்னாட்டு உரம், பூச்சிமருந்து, விதை கம்பெனிகளின் தரகர்களாக மாறிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ரூ. 4 கோடி பணம் தரப்பட்டதாக தகவல் உண்டு. இந்தப்பணம் அநேகமாகப் பன்னாட்டு நிறுவனத்தின் பணமாகத் தான் இருக்கும். இப்போது பதவியில் இருந்து விலகிய ஒரு துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இப்போதும் இந்தக் காலியிடத்துக்கு பலத்த அடிதடி நடக்கிறது.

வேளாண் பல்கலையில் பல செய்தி சேகரிப்பு நிகழ்வுகளுக்கு ஒரு நிருபராக நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகள் சில நிறுவனங்களால் ‘ஸ்பான்சர்’ செய்யப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் முகவர்கள். பலகோடி செலவில் இயங்கும் பலகலைக்கழகம் இதுபோன்ற கருத்தரங்குகளை சொந்த செலவில் செய்ய முடியாதா?

முடியும். ஆனால், பல்கலையில் உள்ள தாசர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதன் பின்விளைவாகவே, மரபணு மாற்றப்பட்ட நெல் எந்த அனுமதியும் இன்றிப் பரிசோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை வயலில் விளைவிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் பெரும் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்பட்டது.

கோவை வேளாண் பல்கலையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட பலநூறு பயிர் ரகங்களில் இன்றும் உபயோகத்தில் உள்ளவை எவை என்று கேட்டால் அங்குள்ளவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. மொத்தத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் அரசு நிதியை விழுங்கவும், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்கான விவசாயப் பட்டம் வழங்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படவுமே வேளாண் பல்கலைக்கழகங்களால் இயலும்.

பசுமைப் புரட்சி மட்டுமல்ல, இனிவரும் எந்த விவசாய முன்னேற்ற திட்டமும் இத்தகைய முதுகெலும்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படுமானால் எந்த நற்பயனும் விளைவது சந்தேகமே.

வமுமுரளி

---------------------------------------

அன்புள்ள முரளி

நம்மாழ்வார் அடிக்கடி ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார்

ஒரு விருந்தில் பரிமாறப்பட்ட திராட்சைப்பழங்களை வேளாண் பல்கலைத் துணைவேந்தர் ஜெயராஜ் உண்ண மறுத்துவிட்டார். அவை ஒரு பூச்சிக்கொல்லிக்குள் ஊறப்போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்றார். அவற்றுக்குள் பூச்சிக்கொல்லி ஊடுருவியிருக்கும், ஆஸ்துமா உருவாக்கும் என்றார்

ஏன், அந்த மருந்து தீங்கற்றது என்றுதானே பல்கலைக்கழகம் பிரச்சாரம் செய்கிறது என்று நம்மாழ்வார் கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தாராம்

ஜெ

---------------------------------------

காண்க: ஜெயமோகன் இணையதளம்  (30.07.2012)
.

Monday, July 23, 2012

படக் கவிதை - 04















நம்பிக்கை விழுதுகள்

இந்தக் கட்டை வண்டியும்
காரில் ஏறும்
காலம் வராமலா போகும்?
இன்றைய உழைப்பின்
விழுதுகள்
நாளைய நம்பிக்கையில்
வேர்விடும் தருணம்
கட்டைவண்டியின்
கனவுகள் நிறைவேறும்.
இந்தக் கட்டைவண்டியும்
ஒருநாள்
காரில் ஏறும்.



Saturday, June 30, 2012

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு?

சந்தர்ப்பவாதம் = அரசியல் 

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.

அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.

Monday, June 25, 2012

பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்?

அருண் நேரு
 கூட்டணிக் குழப்பங்கள், கொள்கைத் தடுமாற்றங்கள், கிரேக்கப் பொருளாதார நெருக்கடி, பிரிட்டனில் நிலவும் தொழில் மந்தநிலை போன்ற எதிர்மறையான நிகழ்வுகளிடையே நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த மோசமான நிலையிலும்கூட, நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நம்மால் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது; விரைவில் அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இருக்கிறார்.

ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்.

Thursday, June 21, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் சந்திப்பில் நான்


கோவை பதிவர்கள் குழு படத்தில் நானும்  (கண்டுபிடியுங்கள்)

கடந்த ஜூன் 10 ம் தேதி  கோவையில் (ஓரியன் ஓட்டல், கிராஸ் கட் சாலை) நடந்த 'கோவை பதிவர்கள்' சந்திப்பில் கடைசி நேரத்தில் சென்று கலந்துகொண்டேன். நண்பர்கள் சங்கவி, சம்பத், ஜீவா, சுரேஷ், கோவை சக்தி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 40 க்கு மேற்பட்ட பதிவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஒரு பதிவர் என்ற முறையில் நானும் பங்கேற்றது  மகிழ்ச்சி.

எண்ணங்கள்

இடுக்கி மாவட்ட சிபிஎம் தலைவர் மணி

'வாக்குமூலம்' ஏற்படுத்திய சிக்கல்!

''நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதி வரை போராடுவேன்'' என்றார், பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துச் சுதந்திரம் இல்லாத தேசங்களில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதையே காண்கிறோம்.

நமது நாடு ஜனநாயக நாடு; தேர்தல்கள் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும் நாடு. அதற்காக வாக்காளரிடம் பிரசாரம் செய்யவும், வாக்குச் சேகரிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மீதான நம்பிக்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரம் அளித்து தேசிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

Tuesday, June 19, 2012

குழம்பிய குட்டையும் அரசியல் நிர்பந்தங்களும்

அருண் நேரு

கூட்டணி நாடகம் மீண்டும் அரங்கேறிவிட்டது. இதில் தவறொன்றும் கூற முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது கூட்டணியில் சகஜம்தான். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்த அபிலாஷைகள் இருக்கத்தான் செய்யும். அதை நிறைவேற்றவே அக்கட்சி போராடும். அதுபோல திரிணமூல் காங்கிரஸýக்கும் சமாஜ்வாதிக்கும் சொந்தத் திட்டங்கள் இருக்கும். இப்போது ஐ.மு.கூட்டணி- 2 ஆட்சியிலும் காங்கிரஸிலும் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு சோனியா காந்திக்குத்தான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் அடிபடுவதில் அதிசயமில்லை. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தமான அரசியல் களத்தில் இது இப்போது பேசும் பொருளாகி இருக்கிறது. எண்ணிக்கையை எட்ட பிராந்தியக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிராந்தியக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தினால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இப்பிரச்னையிலிருந்து மீள முடியும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இது அறிவுப்பூர்வமான செயலாக இருக்காது.

Tuesday, June 12, 2012

புரிந்தும் புரியாமலும்...













பக்கத்து நாட்டில் குண்டு வெடித்தால்
அது சேதி.
பக்கத்து ஊரில் குண்டு வெடித்தால்
அது பீதி.
பக்கத்திலேயே குண்டு வெடித்தாலேனும்
கிடைக்குமா  நீதி?

கடல் கடந்த சகோதரன் கதறினால்
நமக்கு வேடிக்கை.
அண்டை மாநில சகோதரன் அலறினால்
நமக்கு வாடிக்கை.
மாநாடு கூட்டினால் தீர்ந்தது- 
முழங்குவோம் கோரிக்கை.

வசனங்களில் வாழும் தலைமுறையாக
சபிக்கப்பட்டவர்களுக்கு
விசனங்களில் வீழும் சொந்தங்களைப் பற்றி
சிந்திக்க இல்லை நேரம்.
பிறகு எங்கிருந்து வரும் வீரம்?
எல்லாம் போய்விட்டது தூரம்.

.

Saturday, May 26, 2012

மாற்று ஊடக வாய்ப்புக்களும் நாமும்...




அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு, ஊடங்களின் ஏகபோகம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கியது, இணையதளம் என்னும் அறிவியலின் அதி அற்புதக் கண்டுபிடிப்பே.

ஒருகாலத்தில் செய்தியை அறிய வேண்டுமானால், பத்திரிகைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டி வந்தது. அச்சு ஊடகங்களின்   பொற்காலம் அது. அதன் பிறகு வானொலி வந்தது. அது சிறிதுகாலம் செய்திப்பசி தீர்த்தது. இந்தியாவில் தொலைக்காட்சிகளின் வசீகர யுகம் துவங்கிய 1990 களில் இருந்து சுமார் 20 ஆண்டுகள் ஊடக சாம்ராஜ்யமாக நிலைகொண்டது தொலைக்காட்சி. 24 X 7 செய்தி அலைவரிசைகளின் வரவால், அச்சு ஊடகத் துறை சற்றே நிலைகுலைந்தது.

முன்னர் பத்திரிகைகளுக்கு வாசகர் ஒரு துணுக்கு எழுதி அனுப்பிவிட்டு காத்திருப்பார். அது பிரசுரமானால் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பல நேரங்களில்  வாசகர்கள் பத்திரிகைகளால் மதிக்கப்பட்டதில்லை. தங்கள் நுகர்வோர் வாசகர்களே என்ற அடிப்படை உண்மையை மறந்து, தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகைகளை இன்றும் காண முடிகிறது.

பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஏதாவது ஒருபக்கச் சார்புடன் தான் இயங்குகின்றன. 'தினமணி' போன்ற நாட்டுநலன் கருதும் பத்திரிகைகள்  இருக்கும் இடத்திலேயே தான் 'தி ஹிந்து' போன்ற பத்திரிகைகளும் இருக்கின்றன என்பது நெருடல் அளிப்பது. நமது நாட்டைவிட எதிரி நாட்டை நேசிக்க,  இது போன்ற பத்திரிகைகளைப் படிப்பவர்கள் நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள்.

இதே போக்குத்தான் செய்தி அலைவரிசைகளிலும் காணக் கிடைக்கிறது. அரைத்த மாவையே ஒரு மணிநேர இடைவெளியில் தொடர்ந்து அரைக்கும் சாதுரியம் கொண்டவை நமது தொலைக்காட்சிகள். நாட்டின் அரசியலையே தாங்கள் தான் நடத்துவதாக சில சேனல்கள் நம்பித் திரிகின்றன. சுயநல நோக்குடன் வெளியிடும் செய்திகளால் நாட்டுக்கு தீராத பாதிப்பை ஏற்படுத்தும் ஆங்கில செய்தி சேனல்கள் குறித்து தீர ஆராய வேண்டி இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் ஊழல் பெருச்சாளி ஒருவரை சேர்க்க சில பத்திரிகையாளர்கள் பாடுபட்ட விஷயம் அம்பலமானபோது நாடு அதிர்ந்தது.

தமிழ் சேனல்களோ அழுமூஞ்சித் தொடர்களால் நமது வீட்டுப் பெண்களைக் கட்டிப் போட்டிருக்கின்றன. வானொலி இப்போது அருகி வரும் சாதனம் ஆகிவிட்டது. சினிமா, நாடகத் தொடர்கள், வெறுப்பூட்டும் அரட்டைகள், என்று தமிழ் சேனல்கள் நோக அடிக்கின்றன.

இந்நிலையில், தகவல் தொடர்பு யுகத்தின் அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள இளைய தலைமுறையினருக்கான மாற்று ஊடகமாக இணையம் உருவாகி இருக்கிறது. இன்று தனது கருத்தை யாரும் தெரியப்படுத்த இணையம் சுதந்திரம் வழங்கி இருக்கிறது. தனது கருத்தை வெளிப்படுத்த பாரம்பரியமான ஊடகங்களை யாரும் சார்ந்திருக்கத் தேவையில்லை.

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சுயநலனுடனும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட நிலையில், அதன் செய்திப் பிதற்றல்கள கண்டு நொந்திருந்த வாசகருக்கு ஒரு வாய்ப்பாக சமூக இணையதளங்கள் முளைத்துள்ளன. இன்று உலகம் முழுவதுமே இதே நிலையைக் காண முடிகிறது. அதன் காரணமாக, பாரம்பரிய ஊடகங்களும் இணைய உலகில் நுழைந்துள்ளன. இணையக்   கருத்துக்களை அச்சேற்றுவதும் இப்போது துவங்கி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம்.

இன்று முகநூல்  (FACEBOOK) முகவரி இல்லாத இளைஞரைக் காண்பது அரிது; வலைப்பூ (BLOGS) நடத்தாத இளம் தலைமுறையைக் காண இயலாது. நிரந்தர இணையதள முகவரி, இப்போது வேலைக்காக  விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வின்னப்பங்களிலேயே இடம்பெறத் துவங்கிவிட்டது. மின்னஞ்சல் முகவரி நமது உலகின் முகவரியை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. சிறு தகவல் பரிமாற்றம் (TWITTER) நடக்கும் யுகம் இது. இணையத்தின் அனைத்து வசதிகளையும் ஆர்வத்துடன் உள்வாங்குவதில் நமது இளைஞர்களும் இளைஞிகளும் உலகில் யாருக்கும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருந்தவை சமூக இணையதளங்களே.

சமூக வலைத்தளங்களில் பங்கேற்கும்போதே, ஒருவரது சமூகப் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது. உலகிற்கு தனது கருத்தைத் தெரியப்படுத்தத் துடிக்கும் விழைவே சமூகத் தளங்களில் வெளிப்படுகிறது. இணையத்தில் இவ்வாறு இயங்கும் இளைஞர்கள் ஆங்காங்கே ஓர் அமைப்பாக இணைவதும் இப்போது ஒரு நடைமுறையாக  மாறி வருகிறது.

பல்வேறு  சிந்தனை கொண்டவர்கள், பலவித கொள்கைகளைக் கொண்டவர்கள், மதம், ஜாதி, அரசியல், மொழி என பல விதங்களில் மாறுபட்டவர்கள் - அனைவரும் இணையம் என்ற ஒற்றைத் தொடர்பால் நண்பர்களாகி ஒருங்கிணைவது நல்ல மாற்றம்.  அந்த வகையில் இப்போது கோவையில் இயங்கும் வலைப்பூ பதிவர்கள் அனைவரும் 'கோவை பதிவர்கள்' என்ற குழுமமாக இணைவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜவுளி நகரமாக ஒருகாலத்தில் விளங்கிய கோவை தற்போது தொழில்நகரமாக உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகராகவும், கல்வி, மருத்துவத்தில் உயர்ந்துவரும் நகராகவும் உள்ள கோவை இலக்கிய உலகிலும் பல பதிவுகளைக் கொடு வளர்ந்து வருகிறது. இத்தகைய பெருமை கொண்ட கோவையை மையமாகக் கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களில் செயல்படும் பதிவர்களை இணைக்கும் பசையாக 'கோவை பதிவர்கள்' அமைப்பு  செயல்பட முடியும். இந்தச் சிந்தனை மனதில் தோன்றிய நண்பர்களுக்கும், அதை நனவாக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்த அமைப்பு, ஓர் மின்னஞ்சல் குழுமமாக மட்டுமல்லாது, வலைப்பூ தொகுப்பாளர்களாகவும் வளர்ச்சி பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது கருத்துக்களை தத்தமது வலைத் தளங்களில் வெளிப்படுத்தி, மானுட ஞானத்தை மேலும் விரிவாக்குவோம். நாம் ஒருவரை ஒருவர் பாராட்டியும் விமர்சித்தும்,  நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வோம்.

மாறிவரும் உலகின் தேவைகளை விவாதித்து அறியவும், சமூகச் சீரழிவுகளைக் கண்டிக்கவும், மாற்றத்துக்கான விதைகளை தூவவும், நல்ல விஷயங்கள் எத்திசையில் இருந்து வந்தாலும் அவற்றைக் கிரஹிக்கவும், நமது கலாச்சாரம் காக்கவும்,  நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், இணையத்தை ஆக்கப்பூர்வமான சக்தியாகப் பயன்படுத்துவோம்.

இது தொடர்பாக நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.



(கோவை பதிவர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் எழுதியது)
 .








Friday, May 25, 2012

எண்ணங்கள்

 
கேள்விக்குறியாகும் 
பா.ஜ.க.வின் 
வருங்காலம்!
.
 பா.ஜ.க. மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் சுயசரிதையான  'என் தேசம் என் வாழ்க்கை' புத்தகத்தில் இரு அரிய புகைப்படங்கள் உள்ளன. 55 ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் மூன்று நண்பர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவை.

இளம் வயதில் அன்றைய பாரதிய ஜனசங்கத் தலைவர்களாக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் எடுத்துக்கொண்ட படம் முதலாவது.

அதன் எதிரில், பிரதமர் வாஜ்பாய், குடியரசு துணைத் தலைவர் ஷெகாவத், துணைப் பிரதமர் அத்வானி என அதே மூவரும் 55 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. அதற்கு  '
அரசியலைத் தாண்டி நீடித்திருக்கும் நட்பு' என்று அத்வானி தலைப்பிட்டிருக்கிறார்.

இன்றைய பா.ஜ.க.வுக்குள் நிகழும் குழப்பங்களையும் மோதல்களையும் காணும்போது, மேலே குறிப்பிட்ட புகைப்படங்கள் நினைவில் வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக வளர்ந்து, கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பா.ஜ.க.வுக்கு என்ன ஆயிற்று?

இன்று பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 9 மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க. தான்.

 அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்தால் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

 ஆனால், அதற்கான தகுதியை பா.ஜ.க. சமீபகாலமாக இழந்து வருவதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கி உள்ளன. பல்வேறு ஊழல் புகார்களால் நம்பகத்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சி தத்தளித்து வரும் நிலையில் பா.ஜ.க.வுக்கு அது சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உள்கட்சிக் குழப்பங்களாலும், கட்டுப்பாடற்ற தன்மையாலும் நிலைகுலைந்து காணப்படுகிறது பா.ஜ.க. தேசியத் தலைமை. போதாதகுறைக்கு, பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் காணப்படும் நிலைமை ஊழலை எதிர்த்துக் கேள்விக்குறியாக்குகிறது.

பா.ஜ.க. வலுவாக உள்ள பல மாநிலங்கள் உள்கட்சிப் பூசல்களால் கேலிப்பொருளாகி இருக்கிறது. இதற்கு உச்சகட்ட உதாரணம், கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கலகக்குரல். முதல்வர் சதானந்த கவுடாவுக்கு குடைச்சல் தருவதே எடியூரப்பாவின் அன்றாடப் பணியாகி விட்டது.

கர்நாடக பா.ஜ.க.வில் நிலவும் பூசல்களால், தென்மாநிலத்தில் அக்கட்சி அமைத்த முதல் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இது போதாதென்று, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை முதுகெலும்பின்றித் தள்ளாடுவதாகக் குற்றம்வேறு சாட்டியிருக்கிறார் எடியூரப்பா.

பா.ஜ.க.வின் நம்பிக்கை நட்சத்திரமான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல். அவருக்கு எதிராக, முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் வரிந்து கட்டுகிறார். கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கோர்தன் ஜடாபியா மகா குஜராத் ஜனதா கட்சியைத் துவங்கி பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 ஒரு காலத்தில் குஜராத்தில் பா.ஜ.க.வை வளர்த்த இன்னொரு தலைவரான சங்கர் சிங் வகேலாவோ காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி நரேந்திர மோடியின் ஜென்ம வைரியாகப் பிரசாரம் செய்கிறார்.

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் 43 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக மிரட்டி, கட்சியின் இன்னொரு தலைவரான குலாப் சந்த் கடாரியா நடத்துவதாக இருந்த பிரசார யாத்திரையைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்; இப்போதைக்கு அம்மாநிலத்தில் பூசல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை.

80 எம்.பி.க்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர கட்சியின் ஆதரவோ, தொண்டர் பலமோ அதிகரித்ததாகத் தெரியவில்லை. தமிழக காங்கிரஸ் போல உ.பி. மாநில பா.ஜ.க. மாறிவிட்டது. உமா பாரதி, ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா, வருண் காந்தி, யோகி ஆதித்யநாத் என்று கோஷ்டிகளின் பட்டியல்தான் நீள்கிறது.

முன்னாள் முதல்வரும் அயோத்தி இயக்க நாயகனுமான கல்யாண் சிங் நடத்தும் ஜன கிராந்தி கட்சி, முலாயம் சிங் கட்சியை விடத் தீவிரமாக பா.ஜ.க.வை எதிர்க்கிறது.

உத்தரகண்டில் நூலிழையில் ஆட்சியை இழந்த பா.ஜ.க.வுக்கு, முன்னாள் முதல்வர்கள் பி.சி. கந்தூரி, ரமேஷ் போக்ரியால் ஆகியோரது நிழல் யுத்தம் மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

 காங்கிரஸ் முதல்வர் பகுகுணாவுக்கு ஆதரவாக இரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்டில் பா.ஜ.கவுக்கு எதிரி, அக்கட்சியின் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டிதான். அவரது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா வாக்குகளைப் பிரித்தால் பா.ஜ.க. நிலைமை சிக்கல்தான்.

தில்லியில் ஆட்சியைப் பிடிக்கப் பல சாதகமான வாய்ப்புகள் இருப்பினும், மதன்லால் குரானா, விஜய்குமார் மல்ஹோத்ரா, விஜய்கோயல், விஜேந்தர் குப்தா என்று நீளும் தலைவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், காங்கிரஸ் தெம்பாக இருக்கிறது.

இமாச்சலில் முதல்வர் பிரேம்குமார் துமலும், முன்னாள் முதல்வர் சாந்தகுமாரும் எதிரணியாகவே செயல்படுகின்றனர். மகாராஷ்டிரத்தில் முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேவின் அதிருப்திக் குரலை இப்போதைக்கு கட்டுப்படுத்தி இருக்கிறது மத்தியத் தலைமை. ஜம்மு-காஷ்மீரில் பாஜக மாநிலப் பிரிவு முற்றிலும் குலைந்திருப்பது தலைமைக்கு கவலை அளிக்கும் விஷயம்.

 பாஜகவின் மத்திய தலைமையிடம் எடுத்துச்செல்லாமல், இப்போதே பிரதமர் கனவில் வலம் வரத் தொடங்கிவிட்டார் சுஷ்மா சுவராஜ். அவருக்கும் அருண் ஜெட்லிக்கும் இடையேயான 'நீயா, நானா' போராட்டம் தலைநகர அரசியல் வட்டாரங்களில் சிரிப்பாய் சிரிக்கிறது. ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்ஹாவும் கட்சியில் இருக்கிறார்களா இல்லையா என்பது எப்போதாவது தான் தெரிகிறது. அவர்களுக்குள்ளும் போட்டியும் பொறாமையும்.

இப்படி, கொள்கைக்காக வாழ்ந்த தலைமுறை மாறி, தனிப்பட்ட பிரமுகர்களிடையிலான போட்டிக்களமாக பா.ஜ.க. மாறி வருவது துரதிருஷ்டம். வேடிக்கை என்னவென்றால், இந்தத் தலைவர்கள் யாருக்குமே வாஜ்பாயிக்கோ, அத்வானிக்கோ இருப்பது போன்ற தனிப்பட்ட மக்கள் செல்வாக்குக் கிடையாது என்பதுதான்.

 கட்சிக்குள் அன்னியோன்யமாக இணைந்து பணி புரிந்த தலைவர்கள் இன்று சுயநலனுடன் மோதிக் கொள்வதைத் தடுக்காவிட்டால், பா.ஜ.க.வின் ஆட்சிக் கனவு நிறைவேறாமலே போய்விடும். 

 .
இப்போதைய பா.ஜ.க. தலைமை முன்னுள்ள கடுமையான சவால், 'என் பதவி, என் குடும்பம்' என்று மாறத் துடிக்கும் தலைவர்களைக் கட்டுப்படுத்துவது தான். இச்சவாலில் பா.ஜ.க. வெல்லுமா? நிதின் கட்கரி முன்பு நிகழ்காலம் கேள்வியாக நிற்கிறது. 
.
ஜனதா என்றாலே குழப்பம் என்று பெயர் போலிருக்கிறது. ஒருவேளை, பாரதிய ஜனதா கட்சி  மீண்டும் பாரதிய ஜனசங்கம்  என்று பெயரை மாற்றிக் கொண்டால்  பிரச்னைகள் தீருமோ என்னவோ? 
.
நன்றி:  தினமணி (25.05.2012)

.

Friday, May 18, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் - ஓர் இணைய (இனிய) உதயம்



அன்பான நண்பர்களுக்கு,

வணக்கம்.  

கோவை வட்டாரத்தில் இயங்கும் வலைப்பதிவர்கள் இணையும் வகையில், 'கோவை பதிவர்கள்' என்ற இணைப்பகமும், ஓர் குழுமமும் துவங்கி  உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்தக் குழுமத்திலும் இணைப்பகத்திலும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி  கொள்கிறேன். 

சில பத்திரிகைகளைத் தவிர, பெரும்பாலான ஊடகத் துறை ஆதிக்க சக்திகளின்  வசமாகி உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களின் பொறுப்பு கூடுகிறது. நாட்டைக் காக்க ஐந்தாவது தூணாக உள்ள ஊடகம் வழிதவறும் நிலையில், தன்னிச்சையான ஆர்வலர்களின் ஊக்கமூட்டும் எழுத்தாக்கங்களே  நாட்டைக் காக்க முடியும். அந்த வகையில்,  'கோவை பதிவர்கள்' இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வலைப்பூக்களை வெட்டி அரட்டைகளுக்குப் பயன்படுத்தாமல், சுய முன்னேற்றத்துக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் உதவுவதாக  கட்டமைப்போம்.

இந்தப் பணியில் ஈடுபடும் நண்பர்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் என்றும் உண்டு. இதனை எனக்கு அறிமுகப் படுத்திய நண்பர் திரு. சங்கவிக்கு நன்றி. 

தொடர்புக்கு: http://www.kovaibloggers.in/ 


Thursday, May 17, 2012

எண்ணங்கள்


பண்பாட்டின் அச்சாணிகளைப் பாதுகாப்போம்!

அண்மையில் கோவில் திருவிழாக்களில் நடந்த சில அசம்பாவிதங்கள், விழா முன்னேற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி உள்ளன. குறிப்பாக, ஒரு வார காலத்துக்குள் ஐந்து வெவ்வேறு இடங்களில் நடந்த தேரோட்ட நிகழ்வுகளில் விபத்துக்கள் நேரிட்டு, பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.

குடியாத்தம் சிவகாமசுந்தரி- பாலசாதுலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மே 2ல் நடைபெற்றது. அப்போது தேரின் கலசம் மின்கம்பியில் உராய்ந்ததில் ஏற்பட்ட மின்சார விபத்தில் 4 பக்தர்கள் பலியாகினர்.

அதேநாளில் நாகூரில் நடந்த சந்தனக்குட ஊர்வலத்தில் அலங்கார வாகனத்தில் மின்சார விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகினர். இவ்விரு விபத்துகளிலும் மின்இணைப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள்வதில் இருந்த கவனக்குறைவு விழாவை அமங்கலமாக்கிவிட்டது.

ஆரணி, கோட்டை கைலாசநாதர் கோவில் தேரோட்டம் மே 3ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சக்கரம் உடைந்து தேர் கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில் தேரோட்டம் மே 4ல் நடந்தது. இதில் தேர் கட்டுப்பாடிழந்து பக்கவாட்டில் சுவர் மீது மோதியதை அடுத்து தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் தேரோட்டம் மே 6ல் நடந்தது. அப்போது தேரின் அச்சாணி முறிந்ததால் தேர் கவிழும் நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இத்தேரோட்டம் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்டது.

கோவை அருகிலுள்ள பாலமலை மீது மே 5ல் நடந்த தேரோட்டம், சாலையில் இருந்த பள்ளத்தால் விபத்தைச் சந்தித்தது. இதில் தேர் கவிழ்ந்து பக்தர் ஒருவரது உயிரைக் காவு கொண்டது; மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கண்ட விபத்துக்கள், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் கோவில் திருவிழாக்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசிந்தனைக்குள்ளாக்கி உள்ளன. ÷ஊர் கூடித் தேர் இழுப்பது என்பது தமிழகப் பண்பாட்டின் சிறப்பான அங்கம். தேரோட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு சமூக மக்களின் பங்களிப்பு கட்டாயமாக உள்ளது. அனைவரும் இணைந்து தேரோட்டம் நடத்தும்போது சமூக ஒற்றுமை உறுதிப்படுகிறது.

இதை உணராமல் கண்டதேவி கோவிலில் தேரோட்டத்தில் நடந்த குளறுபடிகளால் சமூக ஒற்றுமை பாதிக்கப்பட்டதை அறிவோம். இப்போது தேரோட்டமே ஆபத்தானதாக மாறி வருவது, அறநிலையத் துறையிலுள்ள குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

நமது மரச்சிற்பிகளின் அற்புதக் கலையாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை கோவில் தேர்கள். நுண்ணிய, அழகிய சிற்பங்கள் நிறைந்த திருவாரூர் ஆழித்தேரும், அவிநாசித் தேரும் பிரபலமானவை. ஆனால் தேர்களை நமது கோவில் நிர்வாகங்கள் பராமரிப்பது எப்படி என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.

மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியில் உறைந்து, சாலையோரம் தகரத் தடுப்புகளுக்குள் தத்தளிக்கின்றன நமது கோவில் தேர்கள். தேரோட்டத்தின்போது மட்டுமே இவற்றுக்கு மரியாதை.

இந்தத் தகரத் தடுப்புகளும் கூட 1989ல் அவிநாசி கோவில் தேர் எரிந்த பிறகு ஏற்பட்ட ஞானோதயத்தால் தான் அறநிலையத் துறையால் அமைக்கப்பட்டன. மற்றபடி தேரை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கு எந்த வழிகாட்டிக் குறிப்புகளும் கோவில்களில் இல்லை.

இயற்கையாகவே உளுத்துப் போகும் தன்மை கொண்ட மரத்தேர்களைப் பாதுகாப்பது குறித்து அறநிலையத் துறை கவலைப்படுவதும் இல்லை. தேரோட்டத்துக்கு ஒரு வாரம் முன்னதாக வார்னிஷ் பூசுவதும், சக்கரங்களைச் செப்பனிட்டு உயவு எண்ணெய் பூசுவதும், தோரணங்களால் அலங்கரிப்பதும் மட்டுமே பராமரிப்பு என்று கருதப்படுகிறது.

இதே நிலை நீடித்தால், நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழகத் தேர்கள் பலவும் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கோவில் கோபுரம் போலவே பூஜைக்குரியதான கோவில் தேர்களின் அவல நிலை குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டிய வேளை வந்துவிட்டது.

ரதவீதிகளின் பராமரிப்பு, விழாக்காலங்களில் மின்இணைப்பு பராமரிப்பு, திருவிழாக் கூட்டத்தைக் கையாள்வது ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்விஷயத்திலும் அரசு தெளிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டுதான் அதிகமான தேரோட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கோவில் கொடிக்கம்பம் சாய்வதும் கோவில் தேர் கவிழ்வதும் அரசுக்கு ஆபத்தான அறிகுறிகளாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன. இவற்றின் பின்னணியில் வேறு சதிச்செயல்கள் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவது நல்லது.

கோவில் திருவிழாக்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான மாறுதலை அளித்து, ஆண்டு முழுமைக்குமான உந்துசக்தியைத் தர வல்லவை. அவ்விழாக்களில் நேரிடும் விபத்துக்கள் நமது சிறப்பான பாரம்பரியம் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்வதாக மாறிவிடும்.

எனவே ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள், தேர்களைப் பராமரிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

கோவில் தேர்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள்; நமது ஒற்றுமையின் அச்சாணிகள். அவை முறிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.

.

Friday, May 4, 2012

எண்ணங்கள்



நமது தார்மிக வீழ்ச்சி 

பாலியல் சர்ச்சைகளுக்கும் இந்திய அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அபிஷேக் சிங்வி விலகக் காரணமானது கூட பாலியல் சர்ச்சை தான். தன்னுடன் பணிபுரியும் பெண் வழக்குரைஞருடன் தகாத செயலில் அவர் ஈடுபட்டபோது விடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளில் வெளிவராமல் தடையாணை பெற்ற சிங்வியால் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு ஒரு வார காலத்துக்கு சிங்விதான் மிகவும் தேடப்பட்ட நபராக இருந்தார். ஆரம்பத்தில் இந்தச் சர்ச்சைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று மறுத்து வந்த சிங்வி, இறுதியில் கட்சியின் பெயரைக் காப்பாற்ற பதவி விலகி இருக்கிறார்.

இப்போதும்கூட சிங்விக்கு காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்குகிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் முடிச்சுப் போடக் கூடாது என்று அக்கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய சர்ச்சைகள் புதியவை அல்ல. 1995-இல் தனது மனைவி நைனா சஹானியைக் கொலை செய்த தில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏ.வுமான சுஷீல்குமார், அந்தச் சடலத்தை தந்தூரி அடுப்பில் எரித்தார். இந்தக் கொலைக்குக் காரணம்கூட முறையற்ற உறவுதான். 2003-இல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநராக இருந்தபோது நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவத்தை மறக்க முடியாது. ஆளுநர் மாளிகையிலேயே மூன்று பெண்களுடன் கும்மாளமிட்டதாக திவாரி மீது விடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து அவர் 2009 டிசம்பரில் பதவி விலக வேண்டிவந்தது.

இதைவிட வேதனையான நிகழ்வு, திவாரிதான் தனது உண்மையான தந்தை என்று நிரூபிக்க நீதிமன்றத்தில் போராடிவரும் ரோஹித் சேகரின் வாழ்க்கை. தனது தாய் உஜ்ஜாலா சர்மாவுக்கும் திவாரிக்கும் இடையிலான கள்ள உறவில் பிறந்தவன்தான் என்று நிரூபிக்க அவர் போராடுகிறார். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க மரபணு சோதனைக்கு ஆட்படுமாறு திவாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நாட்டின் ஆளும் கட்சி மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியும் இவ்விஷயத்தில் சளைத்ததல்ல. பாஜக முழுநேர ஊழியரும் தேசிய பொதுச்செயலாளருமான சஞ்சய் ஜோஷி, ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டதற்காக 2005-இல் கட்சியிலிருந்தே விலகினார். அண்மையில் தான் கட்சிக்குள் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ.க்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண சவதி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் பேரவையிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை தற்போதும் நடக்கிறது.

விசாரணையில், மேலும் 15 எம்எல்ஏ.க்கள், கட்சி வித்தியாசமின்றி இக்காட்சியை ரசித்தது தெரிய வந்தது. மக்களாட்சியின் கோவிலான சட்டப் பேரவைக்கு நேரிட்டிருக்கும் நிலை பரிதாபமானது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் அக்கட்சியின் அமைச்சரான ஷோபா கரந்தலேவை தொடர்புப்படுத்தி பலவிதமான பிரசாரங்கள் செய்யப்பட்டுவிட்டன; வித்தியாசமான கட்சி என்ற தனது முத்திரை வாக்கியத்தை இழந்து நிற்கிறது பாஜக.

1990-களில் கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு நமது அரசியல்வாதிகளின் அசிங்கமான பக்கத்தைத் தோலுரித்தது. கோழிக்கோட்டில் ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் விபசாரத் தொழில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் லீக் தலைவர் குன்னாலிக்குட்டி மீது வழக்கு நடக்கிறது. இன்றும் அவர் கேரளத்தில் முக்கியமான அமைச்சராக நீடிக்கிறார்.

இவ்வாறாக இந்திய அரசியலில் பாலியல் சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்குகின்றன. இந்தியாவில் பாலியல் கருத்துகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. அதேசமயம் அதிகார பலத்தால் பாலியல் வரைமுறைகளை மீறவும் அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. இவ்விஷயத்தில் ஒரு விசித்திரமான அலட்சிய மனப்பான்மை நமது மக்களிடையே நிலவுவதுதான் புரியாத புதிர்.

துறவறத்தை உயர்ந்ததாகப் போற்றும் பண்பாடு இந்தியப் பண்பாடு. இல்லறத்திலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கலாசாரம் உள்ள நாடு இந்தியா. நமது வீட்டில் இந்த உயர்ந்த கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நாம், பொதுவாழ்க்கையில் இவை மீறப்படும்போது புலம்புவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். அதுதான் விசித்திரம்.

போகபூமி என்று விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில், அதிபர் கிளிண்டன் ஒரு பெண்ணுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்பதற்காக அவரது ஆட்சிக்கு அந்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். பாலியல் சுதந்திரம் உள்ள அமெரிக்காவிலேயே தமது ஆட்சியாளர்களும் தலைவர்களும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாமோ, தனிப்பட்ட வாழ்க்கையில் தூயவர்கள். அதேசமயம், நமது தலைவர்கள் உதிர்க்கும்  ‘பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு’ என்ற தத்துவங்களை ஜீரணித்தபடி வாழ்கிறோம். நமது தார்மிக வீழ்ச்சி வருத்தம் அளிக்கிறது.

- தினமணி (04.05.2012).
நன்றி: மதி (தினமணி- 28.04.2012 )
.
.

எண்ணங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

.



அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.

உங்கள் யானைப்பலி கட்டுரை கண்டேன். மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அடிக்கடி ‘யானைகள் அட்டகாசம்’ செய்தி வெளியாகும் கோவை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு, யானைகள் படும் பாடு உங்களைப் போலவே துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

யானைகள் நடமாடும் வழித்தடங்களை ஆக்கிரமித்து கான்கிரீட் கட்டடங்களையும் வேலிகளையும் அமைத்துவிட்ட நிலையில், யானைகள் தடுமாறுகின்றன. அவை தடம் மாறிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்போது, “யானைகள் அட்டகாசம்” என்று செய்தி வெளியிட்டு அதுகுறித்து சட்டசபையிலும் நாம் பேசுகிறோம். உண்மையில் அட்டகாசம் செய்வது யார்? யானைகளைக் கண்காணிக்க கருவி மாட்டுவதற்காக மயக்க ஊசி செலுத்தியதில் உயிரிழந்த யானைக்கு பதில் சொல்ல யாருமில்லை. கேட்கவும் நாதியில்லை.

இது குறித்த எனது ‘வென்றவனின் பிரகடனம்’ என்ற கவிதை எனது வலைப்பூவில் 12.07.2011 -ல் எழுதினேன் (http://kuzhalumyazhum.blogspot.in/2011/07/88.html).

யானைகள் நமக்குப் பிரியமானவை. அதே சமயம் நம்மால் அதிகமாகக் கொடுமைப்படுத்தப்படுபவை. அரை வயிறு கூட நிறையாமல், கோவில் வாசலில் நாம் போடும் ஒரு ரூபாய்க் காசுக்காக நமது தலையை வருடப் பயிற்சி அளிக்கப்பட்ட பரிதாப ஜீவன்களாக அவை காட்சி அளிக்கின்றன.

நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தகவலும் உண்மை. இந்த அடிமைத் தளையை உடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் தார்மீக ஆவேசம் அனைவரிடத்திலும் பரவ வேண்டும். சூழல் இயக்கங்கள் இதனை ஒரு போராட்டமாகவே முன்னெடுக்க வேண்டும்.

உங்கள் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி.

-வ.மு.முரளி

.


Friday, April 27, 2012

எண்ணங்கள்

உணர்ச்சிகளைத் தூண்டும் நேரமல்ல இது...

 

1999-ஆம் ஆண்டு, டிசம்பர் 30-ஆம் தேதி, நேபாளத்திலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தலிபான்களால் நடுவானில் கடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தில் இறக்கப்பட்ட அந்த விமானத்தில் பிணைக் கைதிகளாக 178 பயணிகள் இருந்தனர்.

அவர்களை விடுவிக்க, இந்தியச் சிறைகளில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க நிறுவனர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று தலிபான்கள் மிரட்டினர்.

இதையடுத்து, தலிபான்களுடன் பேச்சு நடத்த அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காந்தஹார் சென்றார். அவரே பயங்கரவாதிகள் மூவரையும் தலிபான்களிடம் ஒப்படைத்து, விமானத்தையும் பயணிகளையும் சிப்பந்திகளையும் மீட்டு வந்தார்.

இந்தச் சம்பவத்தில் தலிபான்களால் மீட்கப்பட்ட மசூத் அசார், பின்னாளில் 2001 டிசம்பரில் தில்லி நாடாளுமன்றம் மீது நடந்த தாக்குதலிலும், மும்பையில் 2008 நவம்பரில் நடந்த பயங்கரத் தாக்குதலிலும் மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. இன்று உலகில் தேடப்படும் அதிபயங்கரக் குற்றவாளி என்று இவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

1989, டிசம்பர் 8-ஆம் தேதி காஷ்மீரில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா சயீத் பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த, சிறையிலுள்ள ஐந்து பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. தனது மகளை விடுவிக்க உள்துறை அமைச்சரே நேரில் சென்று பேச்சு நடத்தினார். இறுதியில் 5 பயங்கரவாதிகளை விடுவித்து, மகளை மீட்டு வந்தார் அன்புத் தந்தை. விடுவிக்கப்பட்ட அந்தப் பயங்கரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் இன்றும் தொடர்கிறது பிரிவினைப் போராட்டம்.

இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் அரசின் மீது நமது ஊடகங்கள் செலுத்திய நிர்பந்த வலிமை அளப்பரியது. இதுபோன்ற ஆள்கடத்தல்களின்போது, ஊடகங்கள் பல சமயங்களில் தாங்களே தீர்ப்பு வழங்கும் நிலைக்குச் சென்று விடுகின்றன.

கடத்தப்பட்டவர் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அதேசமயம், கடத்தல்காரர்களுடன் அரசு பேச்சு நடத்திக் கொண்டிருக்கும்போது, அரசை நிலைகுலையச் செய்வதாக ஊடகங்கள் செயல்படக் கூடாது. ஆனால், பரபரப்புக்காக ஊடகங்கள் எல்லை மீறுகின்றன.

காந்தஹார் விமானக் கடத்தலின்போது, நமது 24 மணிநேர செய்தி சேனல்களின் நேரடி ஒளிபரப்பு ஒருவகையில் தலிபான்களுக்கு உதவுவதாகவே அமைந்தது. பிணைக் கைதிகளின் உறவினர்கள் நடத்திய போராட்டங்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருந்தபோது, பத்திரிகைகளும் ஊடகங்களும் தினசரி அரசைக் கடுமையாகக் கண்டித்துச் செய்திகள் வெளியிட்டு, அரசின் தன்னம்பிக்கையைக் குலைத்தன. அதனை பின்னாளில் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அரசு மீது செலுத்தப்பட்ட நிர்பந்தமே பயங்கரவாதிகளிடம் அரசு அடிபணியக் காரணமானது என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேபோன்ற நிலைதான் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் விவகாரத்திலும் காணப்படுகிறது. கடந்த 21-ஆம் தேதி வனப்பகுதியில் அரசு விழாவில் பங்கேற்ற சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டிருக்கிறார். அதற்கு முன் இரு காவலர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஏற்கெனவே ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் ஒரு மாதத்துக்கு முன் கடத்தப்பட்ட ஆளும் பிஜு ஜனதாதள எம்எல்ஏ ஜினா ஹிகாகா விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கு முன் கடத்தப்பட்ட இரு இத்தாலியர்களை மீட்பதற்காக 13 மாவோயிஸ்டுகளை ஒடிசா அரசு சிறைகளிலிருந்து விடுவிப்பதாக அறிவித்திருக்கிறது.

இனி இத்தகைய ஆள்கடத்தல் நாடகங்கள் தொடர்கதையாகக் கூடும். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ளும் திறனற்று நமது அரசுகள் திண்டாடும் நிலையில், அரசுக்கு மேலும் சுமையாகின்றன, ஊடகங்களின் செய்திகள். சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழக ஊடகங்கள் இதில் விசேஷ கவனம் செலுத்துகின்றன.

கடத்தப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினர், உறவினர்கள், சொந்த ஊர்க்காரர்கள், அவர் படித்த பள்ளி, கல்லூரி, வசித்த பகுதிகளின் மக்களைப் பேட்டி கண்டு பரபரப்பாகச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் செய்யத் தவறிய ஒரு விஷயம், மாவோயிஸ்டுகளின் அசுரத்தனத்தை வெளிப்படுத்தாதது.

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதிலும் முறையிடுவதிலும் தவறில்லை. ஆனால், ரத்தத்தில் மனு எழுதி திருநெல்வேலி ஆட்சியரிடம் ஒருவர் அளித்திருப்பதை என்னென்பது?


தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், முக்கிய அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கடத்தப்பட்ட அதிகாரிக்காக அறிக்கை வெளியிடுகின்றனர். கடத்தப்பட்டபோது அவரைக் காக்கப் போராடி உயிர் நீத்த சத்தீஸ்கர் காவலர்கள் இருவரைப் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா?

 சிக்கலான நேரங்களில் தான் உணர்ச்சிகளைத் தள்ளிவைத்து அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். பதறிய காரியம் சிதறிவிடும். கடத்தப்பட்டவர்களை மீட்கப் போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே?

- தினமணி (27.04.2012)
.
 

Friday, March 23, 2012

உருவக கவிதை - 65


அஸ்தியில் கனவுகள் கலப்போம்!

உறையாத ரத்தத்தின்
வாசம் எங்கும்.
வெடிக்காத குண்டின்
நெடி இன்னமும்.
வெல்லாத போரின் நினைவுகள்
என்றும் எங்கும்.

தூக்குக் கயிறை
முத்தமிட்ட இளைஞர்களின்
இறுதி ஆசைகள்
நிறைவேறாத கனவுகள்.
விடுதலை வேள்வியில்
ஆகுதியான வீரர்களின்
சாம்பல் மீது எழுந்த
கட்டடம் சரிகிறது.

சாம்பலின் வீரியம் உணராமல்
கற்களைப் பிணைத்த
அரசியல் கலவையால்...
ரசமட்டம் தவிர்த்த
சுயநலமிகளின் மேதமையால்...
சரியும் கட்டடத்திற்கு
காரணமாயிரம்.

இப்போதும்
கட்டடத்தைக் காப்பாற்றலாம் -
அஸ்திவாரத்தில்
அவர்களது கனவுகளைக் கலந்தால்.



(இன்று மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் நாட்டிற்காக உயிர் நீத்த தினம்)

.
மீண்டும் பதிவிடப்படும் பதிவு



Thursday, March 22, 2012

எண்ணங்கள்


'திடக்கழிவு மேலாண்மை' - நாமகரணம் தீர்வாகுமா?

குப்பை இல்லாத நகரத்தைப் பார்ப்பது ஊழலற்ற அரசியல்வாதியைப் பார்ப்பது போலாகிவிட்டது. நகரங்கள் என்றில்லை, கிராமங்களிலும் கூட இப்போது திடக்கழிவு மேலாண்மை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பின்மையே காரணம் எனில் மிகையில்லை.

மனித உடலே தினசரி தன்னிடம் சேரும் அசுத்தத்தை வெளியேற்றிக்கொண்டு தான் உயிர் வாழ்கிறது. அவ்வாறே நமது வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தினசரி வீட்டைப் பெருக்கி குப்பைகளை அகற்றாத இல்லத்தில் திருமகள் வாசம் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உண்டு.

அதேசமயம், நமது வீடு மட்டும் சுத்தமானால் போதும், தெருவும் ஊரும் எப்படிப் போனால் என்ன என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் உள்ளது. அதன் விளைவையே தெருக்களிலும் முச்சந்திகளிலும் குப்பை மலைகளாக நாம் காண்கிறோம். அவற்றை மூக்கைப் பொத்தியபடி, மறுபுறம் திரும்பியபடி வேகமாகக் கடக்கிறோம்.

இந்தக் குப்பைகளைக் கிளறியபடி வலம் வரும் பன்றிகளும், நாய்களும், கோழிகளும் சுகாதாரக் கேட்டை அதிகப்படுத்துகின்றன. இதுகுறித்து மக்களுக்கும் கவலையில்லை; மக்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளாட்சிப் பதவிகளில் அமர்ந்திருப்போருக்கும் கவலையில்லை.

குப்பைகளை அகற்றுவதற்கு "திடக்கழிவு மேலாண்மை' என்ற புதிய நாமம் சூட்டியது மட்டுமே நமது அரசுகளின் சிறப்பு. ஒவ்வொரு உள்ளாட்சியிலும் திடக்கழிவுகளைக் குவிக்க தனியிடம் ஏற்பாடு செய்வதற்குள் நிர்வாகங்களின் விழி பிதுங்கி விடுகிறது. இதற்கு அதனருகே குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவிப்பது எல்லா ஊர்களிலுமே காட்சியாகி வருகிறது.

இந்தக் குப்பையை உரமாக்க பல லட்சம் செலவில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் எந்த இடத்திலும் குப்பைகள் உயிர் உரமாக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையானதாக செய்திகள் இல்லை.

குப்பைகளில் மறுசுழற்சிக்கு உரியவற்றைத் தரம் பிரித்துப் பயன்படுத்துவதும் திடக்கழிவு மேலாண்மையில் ஓர் அம்சம். நிதர்சனத்திலோ, மட்க இயலாத குப்பைகளைத் தீவைத்து எரிப்பதே நிகழ்வாக இருக்கிறது. அந்தப் புகைக்கு அஞ்சியே அதன் அருகிலுள்ளோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வீதிதோறும் குப்பை சேகரிக்கும் ஏற்பாடும் பலவீனமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் குப்பை தெருவை நாறடிக்கிறது. குப்பை சேகரிப்பதற்கு உள்ளாட்சிகளில் இருந்த பணியாளர் எண்ணிக்கையும் சிறுகச் சிறுகக் குறைந்து வருகிறது.

உதாரணமாக, திருப்பூர் மாநகராட்சியில் தோராயமாக இருக்க வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை: 3,000. ஆனால் இருப்பவர்களோ 1,200 பேர். கிட்டத்தட்ட மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. இந்த எண்ணிக்கையிலுள்ள பணியாளர்களைக் கொண்டு மாநகரைத் தூய்மையாகப் பராமரிப்பது எப்படி?

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் 72 பேர் இருக்க வேண்டும். ஆனால் "மருந்துக்கும்கூட' சுகாதார ஆய்வாளரே இல்லை. இந்தப் பணியை தற்போது மேற்கொள்பவர்கள், இதற்கு அடுத்தநிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் தான். எனில் மேற்பார்வையாளர்களின் பணியை யார் மேற்கொள்வது? 

இதேபோன்ற நிலைதான் பெரும்பாலான உள்ளாட்சிகளில் காணப்படுகிறது. புதிய பணியாளர் நியமனம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் காலியாகவே விடப்படுகின்றன. இதன்மூலமாக, செலவினத்தைக் குறைப்பதாக உள்ளாட்சிகளும் அரசும் கருதுவதாகத் தெரிகிறது.

மாறாக, குறைந்த ஒப்பந்தக் கூலியுடன், குப்பை சேகரிக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. குறைந்தபட்சக் கூலி, தொழில் நிரந்தரமின்மை, பணிப் பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால், அவர்களால் இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய முடிவதில்லை. இதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் முடங்கினால் ஊரின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். எது எதற்கோ கோடிக் கணக்கில் செலவு செய்யும் நமது அரசுகள், நாட்டின் சுகாதாரம் காக்கும் பணியில் தங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்துப் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளித்தால் குறைந்தா போய்விடும்?

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு பல முறை ஊதிய உயர்வு வழங்கும் அரசுகள், நமது அடிப்படை சுகாதாரத்தைக் காக்கும் பணியாளரின் வாழ்க்கை நிலை குறித்து கவலைப்படாமல் இருப்பது முறையல்ல. பிற அரசுத் துறைப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களது ஊதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.

நகர சுத்தித் தொழிலாளர்கள் தேர்தல் பணியாளர்களாக இருக்கப் போவதில்லை என்பதால், அவர்களது முக்கியத்துவம் இல்லாது போய்விடாது. இதை அரசு உணர்வது அவசியம். திடக்கழிவு மேலாண்மையை திறம்படச் செய்வது எப்படி என்பதற்கான அணுகுமுறைகளை வகுப்பதும் அதைவிட அவசியம்.



Wednesday, February 15, 2012

உருவக கவிதை - 69


பால் டீ


லைட் டீ,
ஸ்ட்ராங் டீ,
மீடியம் டீ,
லெமன் டீ,
மசாலா டீ,
பிளாக் டீ,.. .

சுகர் குறைச்சல், சுகர் அதிகம், சுகர் இல்லாமல்,
ஆற்றாமல், நல்லா ஆறவைத்து,...

பார்சல் டீ, டூ பை த்ரீ, ஒன் பை டூ,
பேப்பர் கப்பில்,  டவராவில்...

எப்படிக் கேட்டாலும்
கொடுக்கிறார் மூலைக்கடை நாயர்.

எல்லாம் சரிதான்.
அது என்ன பால் டீ?


.

Monday, February 13, 2012

புதுக்கவிதை - 147






நாய்களும் 
நாய்கள் நிமித்தமும்....



காதலர் தினம் கொண்டாடுவதில்லை...

காதலியை மயக்கமாக்கி
சகாக்களுடன் நாசமாக்குவதில்லை...

அதையும் படம் பிடித்து
இணையத்தில்
காணொளி ஆக்குவதும் இல்லை...

நாய்கள்.
 
 
குறிப்பு: நாளை (பிப். 14) காதலர் தினம் என்கிறார்கள்....

Thursday, February 2, 2012

எண்ணங்கள்


'போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

எம்பிபிஎஸ் முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து.

ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், எமலோகத்துக்கு அனுப்பிவைத்த அதே மொபைல்போன் தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை.÷கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம். அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
 
நன்றி: தினமணி (02.02.2012)

Thursday, January 26, 2012

எண்ணங்கள்

ஆர்எஸ்எஸ் காரரா அண்ணா ஹசாரே?

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றப் போராடிவரும் சமூகசேவகர் அண்ணா ஹசாரே அவரது எதிரிகளால் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறார். காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பதால், ஹசாரேவும் பொறுமையாக தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தகையவர்களின் வெறுப்புக்கு காரணம் உள்ளது. தங்களையே லோக்பால் சட்டம் குறிவைக்கிறது என்பது புரிந்திருப்பதால்தான் ஊழலில் தொடர்புடையவர்கள் ஹசாரேவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆளும்கட்சி வட்டாரத்தில், ஹசாரேவை எதிர்ப்பதற்கென்றே களம் இறக்கப்பட்டுள்ளவர் ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங். அண்ணா ஹசாரேவை வசைபாடுவதையே அவர் தினசரி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதில் முக்கியமான விமர்சனமாக திக்விஜய் சிங் முன்வைப்பது, ஹசாரே ஆர்எஸ்எஸ்.காரர் என்பது. 

தன்மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாத ஹசாரே, இந்தக் குற்றச்சாட்டுக்கு மட்டுமே இதுவரை பலமுறை பதில் அளித்துவிட்டார். ஏனெனில் இந்தக் குற்றச்சாட்டின் பின்விளைவை அவர் உணர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள வலதுசாரி இயக்கங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு வலிமையான பின்புலம் உண்டு. இந்து தேசியம் என்ற சித்தாந்தத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், துவக்க காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான சக்தியாக வளர்ந்து வந்துள்ளது.

இந்துத்துவத்தை முன்னிறுத்துவதால் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இந்த அமைப்பு சித்தரிக்கப்படுகிறது. அதேசமயம் தீவிரமான தேசபக்திக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அடையாளமாகக் கூறப்படுவதுண்டு. இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்கு தானாக முன்வந்து உதவுவதில் ஆர்எஸ்எஸ் முன்னணி வகிக்கிறது. இதை முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன் உள்பட பலர் பாராட்டி இருக்கின்றனர்.

1962ல் நடந்த சீனப்போரின் போது அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவிய ஆர்எஸ்எஸ்சைக் கண்டு நெகிழ்ந்த அப்போதைய பிரதமர் நேரு, 1963ம் வருடத்திய தில்லி குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பை இடம்பெறச் செய்தார். காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமர் நேருவால் பாராட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தான், ஹசாரேவை பலவீனப்படுத்த ஒரு கருவியாக்குகிறார் திக்விஜய் சிங்.

இந்திய அரசியலில் யாராவது ஒருவரை ஓரம்கட்ட வேண்டுமானால் அவரை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டினால் போதும் என்ற நிலை உள்ளது.  மகாத்மா காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகியவற்றுடன் இந்த அமைப்பை தொடர்புபடுத்தி பலமடங்கு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதால், ஆர்எஸ்எஸ் முத்திரை குத்தி எவரையும் நிலைகுலையச் செய்ய முடிகிறது.

அதனால்தான், தன்மீது கூறப்படும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்ற வசையை அண்ணா ஹசாரே தொடர்ந்து நிராகரித்து வருகிறார். ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஊழலுக்கு எதிராகத் திரட்டும் தனது யுத்தத்துக்கு ஆர்எஸ்எஸ் முத்திரை தடையாக இருந்துவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வே இதற்குக் காரணம். இதையே திக்விஜய் சிங் பயன்படுத்திக் கொள்கிறார்.

கட்டற்ற ஊழலால் கறை படிந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வேப்பங்காயாகக் கசப்பதில் வியப்பில்லை. அவரது நேர்மையான பொதுவாழ்வு, காங்கிரஸ்காரர்களால் அபாய எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

எனவே, ஹசாரே குழுவினர் காங்கிரûஸக் குற்றம் சாட்டுவதற்கு முன்னதாகவே, அவர்களை தற்காப்பு நிலைக்குத் தள்ளி விடுவதே உசிதமானது என்பது திக்விஜய் சிங்கின் கோட்பாடு.

அந்த அடிப்படையிலேயே, ஹசாரேவை ஆர்எஸ்எஸ்காரர் என்று முத்திரை குத்துவதில் அவர் தீவிரமாக முனைந்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இந்தப் புகாருக்கு பதில் சொல்லவே ஹசாரேவின் நேரம் சரியாக இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தச் சிக்கலை அடிக்கடி எதிர்கொள்கிறது. வலிமையான லோக்பாலுக்காக பாஜக ஒருபுறமும் ஹசாரே மறுபுறமும் தங்கள் வழிகளில் போராடுகிறார்கள். இதையே, பாஜகவுக்கு ஹசாரே உதவுகிறார் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது.

நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வது என்ற ஹசாரேவின் முடிவையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் திசைதிருப்புகிறது காங்கிரஸ். ஹசாரே நடத்திய உண்ணாவிரப் போராட்டங்களில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தாங்களாகவே பங்கேற்றதை, இவ்வாறு சதியாகவே காண்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

ஆனால், ஒருவிஷயத்தில் ஹசாரேவுக்கு தெளிவில்லை என்றே தோன்றுகிறது. சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திராகாந்தியின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியபோது அவருடன் இயல்பாக இணைந்து போராடியது ஆர்எஸ்எஸ். அப்போது ஜெ.பியை ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் என்று காங்கிரஸ் வசை பாடியபோது, 'தேசபக்தர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் தவறில்லை' என்று அவர் தெளிவாக பதில் அளித்தார்.

அத்தகைய தெளிவு ஹசாரேவிடம் இல்லாததால் தான், சிறந்த சமூகசேவகரான நாணாஜி தேஷ்முக்குடனான அவரது உறவை காங்கிரசால் கொச்சைப்படுத்த முடிகிறது.

ஊழலுக்கு எதிரான போரில் சிறுபான்மையினரைப் பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் அஸ்திரம் உதவும் என்று காங்கிரஸ் மனப்பால் குடிக்கிறது. இது சிறுபான்மையினரை மட்டமாக எடைபோடுவதாகும். இதையே ஹசாரே பதிலடியாகத் தர வேண்டும். அதை விடுத்து, திக்விஜய் சிங்கின் புலம்பல்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

இறுதியாக ஒரு விஷயம். ஹசாரேவுடன் தொடர்பு படுத்துவதன் மூலமாக, ஒருவகையில் ஆர்எஸ்எஸ்சுக்கு நற்சான்றிதழையே காங்கிரஸ் வழங்குகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளும்போது, காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு ஊழல் அடையாளத்துடன் இழிவான பொருள் ஏற்பட்டுவிடக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.














Sunday, January 15, 2012

எண்ணங்கள்

அனைவருக்கும்  
இனிய பொங்கல் திருநாள்
வாழ்த்துக்கள்!


பண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் இனிய திருப்பங்களை நிகழ்த்துபவை.

ஒருவகையில் சமூகத்தின் உயிரோட்டத்தை வெளிப்படுத்துபவை.

அவ்வகையில், இன்று வந்துள்ள சங்கராந்தி மற்றும்  பொங்கல் நன்னாள் விழா பேருவகை  அளிக்கிறது.

பொங்கல் பண்டிகை குறித்த எனது மூன்று கவிதைகள் தினமணி- இணையதள பொங்கல் மலரில் வெளியாகி உள்ளன.

அதன் சுட்டி இங்கே...

Saturday, January 14, 2012

புதுக்கவிதை - 146




எரிக்கப்படாத குப்பைகள்...

பரணில் இருக்கும் பழைய பொருட்களில்
உபயோகமற்ற ஏதாவது இருக்கும்
ஒவ்வொரு போகியிலும் எரிக்க.

வீட்டின் புழக்கடையில் கரையான் அரித்து
எஞ்சிய மரச்சாமான்கள்
ஒவ்வொரு போகியிலும் சாம்பலாகும்.

போன வருடம் படித்த பாடப் புத்தகங்கள் கூட,
இந்த வருட போகியில்  
எதுவும் கிடைக்காவிடில் எரிக்கப்படலாம்.

உபயோகமற்ற, வீணாகிப்போன, காலாவதியான
எந்தப் பொருளும் பொருத்தமானதே
போகியில் கொளுத்த.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வீணாகக் கடக்கிறது-
பண்டிகையின் தாத்பரியம்  உணராமல்
எதை எதையோ எரித்து.
.

Tuesday, January 3, 2012

புதுக்கவிதை - 145







பாவம் காவலர்!





தெருநாய்களும் முடங்கியிருக்கும்
பனி பொழியும் இரவு...

வளைகளிலிருந்து வெளிவர
பெருச்சாளிகளும் அஞ்சும் கடுங்குளிர்.

முச்சந்தியில்
சாக்கடை தூர்வாரிக் குவித்த
கூளங்களின் அருகே,
மல்லாந்து கிடக்கிறான்
வேட்டி அவிழ்ந்த
போதை ஆசாமி.

லத்தியால் அவனை
தட்டிப் பார்க்கிறார்
இரவுரோந்துக் காவலர்.



Monday, January 2, 2012

உருவக கவிதை - 68



மரம்


மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன
ஊடி விரையும் கிளைகள்.
வானில் அளவளாவுகின்றன
துடிப்பான வேர்கள்.
ஆடி அசைகிறது மரம்.

.