Friday, October 19, 2012

ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது தளத்தில் எழுதிய கட்டுரை - சிறுவணிகத்தில் வெளிமுதலீடு  - குறித்த எனது விமர்சனம் இது.



ஜெ.மோ.

நீங்கள் சொல்வது அனைத்தும் – விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பதைப் பொறுத்த வரை, உண்மைதான். பாடுபடும் விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு – அதிலும் இடைத்தரகர்களுக்கே செல்கிறது. இதற்கு நமது விநியோகச் சங்கிலி அறுபட்டதே காரணம். முந்தைய காலத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் செயல்பட்ட வாராந்திர சந்தை அமைப்பு அற்புதமான பொருளாதார ஏற்பாடு. அதன் நவீன வடிவமே கருணாநிதி கொண்டுவந்த உழவர் சந்தை. ஆனால், அரசின் கட்டுப்பாடின்மை காரணமாகவே சந்தை ஏற்பாடு நலிகிறது. இதற்கு வால்மார்ட் வந்தால் சரியாகிவிடும் என்று கூறுவது ஒருவித நம்பிக்கையே ஒழிய தீர்வாகத் தெரியவில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

நமது அரசையே வழி நடத்தும் அளவுக்கு பொருளாதார பலம் வாய்ந்தவர்கள் கையில் சில்லறை வணிகம் சிக்கினால், மேலும் மோசமான நிலைக்கு விவசாயிகள் ஆட்படக்கூடும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தோல்விக்கு அவர்கள் கையாண்ட விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை காரணமானது போலவே, பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களும் செயல்படக்கூடும். இது ஒரு எச்சரிக்கை மட்டுமே. இதற்காக இடதுசாரிகளையும் வலதுசாரிகளையும் ஒரே நேரத்தில் கடுமையாக விமர்சித்திருப்பது சரியல்ல. இன்றைய நிலையில் ஊழல் மிகுந்த மத்திய அரசுக்கு எதிரான குரலாக ஒலிப்பவர்கள் அவர்கள்தான். யாரையும் சந்தேகப்பட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆயினும், விமர்சிக்கும்போது இந்தஅளவுக்குக் கடுமை காட்டுவது ஜெயமோகனின் நடைமுறையாகத் தெரியவில்லை.

உழவன் காப்பாற்றப்பட வேண்டும். அவனை ஏமாற்றும் வர்த்தக வட்டத்தை சரிப்படுத்த வேண்டும். அதற்கு அரசு முறையான நடைமுறைகளை வகுக்க வேண்டும். விவசாயிகளும் ஒருங்கிணைந்து சாகுபடி திட்டங்களை வகுக்க வேண்டும். உண்மையில் இதற்காகப் பல வேளாண் வணிக முறைகள் நம்மிடம் உள்ளன. வழக்கம் போல அதையும் நாசமாக்கி வைத்திருக்கிறோம். இதை விடுத்து, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதால், விவசாயிக்கு லாபம் கிடைத்துவிடும் என்று நம்பினால், மீண்டும் நாம் ஏமாற்றப்படவே வாய்ப்புகள் அதிகம். அதை ஜெயமோகன் தனது கட்டுரையில் (வால்மார்ட் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு) குறிப்பிட்டிருக்கிறார். ஊழல் மிகுந்த நமது நாட்டில் அது நடக்கவே சாத்தியங்கள் அதிகம்.

இவ்விஷயத்தில், அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டுவிடக் கூடாது என்று சொல்வது தவறல்ல என்றே நான் நினைக்கிறேன்.

-வமுமுரளி.

நன்றி: ஜெயமோகன் இணையதளம். 
.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வு...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

Post a Comment