பின்தொடர்பவர்கள்

Wednesday, February 15, 2012

உருவக கவிதை - 69


பால் டீ


லைட் டீ,
ஸ்ட்ராங் டீ,
மீடியம் டீ,
லெமன் டீ,
மசாலா டீ,
பிளாக் டீ,.. .

சுகர் குறைச்சல், சுகர் அதிகம், சுகர் இல்லாமல்,
ஆற்றாமல், நல்லா ஆறவைத்து,...

பார்சல் டீ, டூ பை த்ரீ, ஒன் பை டூ,
பேப்பர் கப்பில்,  டவராவில்...

எப்படிக் கேட்டாலும்
கொடுக்கிறார் மூலைக்கடை நாயர்.

எல்லாம் சரிதான்.
அது என்ன பால் டீ?


.

Monday, February 13, 2012

புதுக்கவிதை - 147






நாய்களும் 
நாய்கள் நிமித்தமும்....



காதலர் தினம் கொண்டாடுவதில்லை...

காதலியை மயக்கமாக்கி
சகாக்களுடன் நாசமாக்குவதில்லை...

அதையும் படம் பிடித்து
இணையத்தில்
காணொளி ஆக்குவதும் இல்லை...

நாய்கள்.
 
 
குறிப்பு: நாளை (பிப். 14) காதலர் தினம் என்கிறார்கள்....

Thursday, February 2, 2012

எண்ணங்கள்


'போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

எம்பிபிஎஸ் முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து.

ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், எமலோகத்துக்கு அனுப்பிவைத்த அதே மொபைல்போன் தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை.÷கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம். அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
 
நன்றி: தினமணி (02.02.2012)

Sunday, January 15, 2012

எண்ணங்கள்

அனைவருக்கும்  
இனிய பொங்கல் திருநாள்
வாழ்த்துக்கள்!


பண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் இனிய திருப்பங்களை நிகழ்த்துபவை.

ஒருவகையில் சமூகத்தின் உயிரோட்டத்தை வெளிப்படுத்துபவை.

அவ்வகையில், இன்று வந்துள்ள சங்கராந்தி மற்றும்  பொங்கல் நன்னாள் விழா பேருவகை  அளிக்கிறது.

பொங்கல் பண்டிகை குறித்த எனது மூன்று கவிதைகள் தினமணி- இணையதள பொங்கல் மலரில் வெளியாகி உள்ளன.

அதன் சுட்டி இங்கே...

Saturday, January 14, 2012

புதுக்கவிதை - 146




எரிக்கப்படாத குப்பைகள்...

பரணில் இருக்கும் பழைய பொருட்களில்
உபயோகமற்ற ஏதாவது இருக்கும்
ஒவ்வொரு போகியிலும் எரிக்க.

வீட்டின் புழக்கடையில் கரையான் அரித்து
எஞ்சிய மரச்சாமான்கள்
ஒவ்வொரு போகியிலும் சாம்பலாகும்.

போன வருடம் படித்த பாடப் புத்தகங்கள் கூட,
இந்த வருட போகியில்  
எதுவும் கிடைக்காவிடில் எரிக்கப்படலாம்.

உபயோகமற்ற, வீணாகிப்போன, காலாவதியான
எந்தப் பொருளும் பொருத்தமானதே
போகியில் கொளுத்த.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வீணாகக் கடக்கிறது-
பண்டிகையின் தாத்பரியம்  உணராமல்
எதை எதையோ எரித்து.
.

Tuesday, January 3, 2012

புதுக்கவிதை - 145







பாவம் காவலர்!





தெருநாய்களும் முடங்கியிருக்கும்
பனி பொழியும் இரவு...

வளைகளிலிருந்து வெளிவர
பெருச்சாளிகளும் அஞ்சும் கடுங்குளிர்.

முச்சந்தியில்
சாக்கடை தூர்வாரிக் குவித்த
கூளங்களின் அருகே,
மல்லாந்து கிடக்கிறான்
வேட்டி அவிழ்ந்த
போதை ஆசாமி.

லத்தியால் அவனை
தட்டிப் பார்க்கிறார்
இரவுரோந்துக் காவலர்.



Monday, January 2, 2012

உருவக கவிதை - 68



மரம்


மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன
ஊடி விரையும் கிளைகள்.
வானில் அளவளாவுகின்றன
துடிப்பான வேர்கள்.
ஆடி அசைகிறது மரம்.

.

Tuesday, December 6, 2011

எண்ணங்கள்

முல்லைப் பெரியாறு அணை
 
பாசம் தழைக்குமா? பிரச்னை தீருமா?
பேருந்துப் பயணத்தில், அருகில் அமர்ந்திருப்பவர் தூங்கித் தூங்கி விழுந்தால் யாருக்கும் இடையூறாகவே இருக்கும். மிகவும் சாதுவான குணம் கொண்டவர்கூட, இப்படிப்பட்ட தருணங்களில் கோபப்படுவதை பேருந்துப் பயணங்களில் காண முடியும். அந்தப் பயணி உழைப்பின் களைப்பாலோ, உடல் உபாதையாலோ அவ்வாறு தூங்கி விழக் கூடும். அதுபற்றி அருகில் அமர்ந்திருப்பவருக்கு பரிதாப உணர்ச்சி ஏற்படுவதில்லை.
 
 இதே சம்பவம் வேறுவிதமாக நடந்தால் நமது எதிர்வினை எப்படி இருக்கிறது? அதாவது, நமது பிரியத்துக்குரிய மனைவியோ, மகனோ, நண்பனோ, அன்புக்குரிய காதலரோ உடன் பயணிக்கும்போது தூங்கி தன்மீது விழுந்தால் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. சிலசமயம் அவ்வாறு தன்மீது தூங்கிச் சரிய மாட்டாரா என்று ஏங்கும் நிலைகூட ஏற்படுவதுண்டு.
 
 ஒரே சம்பவம் தான். அதில் இடம்பெறும் நபர்கள் தான் வேறு. முதல் நிகழ்வில் தன்மீது தூங்கிச் சரிந்த நபரைக் கடிந்துகொள்ளும் ஒருவர், இரண்டாவது நிகழ்வில் தன்மீது சகபயணி தூங்கி விழுவதை அனுமதிக்கிறார். ஏனெனில் அவர் சக பயணி மட்டுமல்ல, அவரது அன்பிற்குரியவர்.
 
 இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அன்புக்குரியவர்களின் கஷ்டங்களை ஏற்க எல்லோரும் தயார். இவர் நம்மவர் என்ற எண்ணமே அங்கு பாசஉணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால், அறிமுகமற்ற ஒருவரது கஷ்டத்தைப் பங்கிட யாரும் தயாரில்லை. அவரும் சக மனிதர்தான் என்பது மறந்துபோகிறது.
 
 இது வெறும் பேருந்துப் பயணத்துக்கு மட்டும் பொருந்துவதல்ல. அண்டை மாநிலங்களுடனான நதிநீர்த் தாவாக்களிலும் இந்த மனநிலையைப் பொருத்திப் பார்க்கலாம்.
 
 சிந்தித்துப் பாருங்கள். கர்நாடக மாநிலத்திலுள்ள மக்கள், இதே பாசஉணர்வுடன் தமிழக மக்களை சகபயணிக்கு மேலாக, அன்பிற்குரியவர்களாகக் கருதினால் எப்படி இருக்கும்? காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை உருவாகுமா?
 
 முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அணிதிரளும் கேரள மக்கள், இதே பாசஉணர்வுடன் இருந்தால், பிரச்னை முற்றி இருக்குமா? தமிழகத்திலுள்ள மக்களும் நம்மைப் போன்ற மக்கள்தான்; அவர்களது அடிப்படைத் தேவைக்கு எதிராகப் போராடலாமா என்ற கேள்வியை அவர்களது மனசாட்சி எழுப்பி இருக்காதா?
 
 நதிநீர் என்பது இயற்கை அளித்துள்ள வரம். அதை வீணாகக் கடலில் கலப்பதைவிட அணை கட்டித் தேக்கினால் வறட்சிக் காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது மானுட நன்மையைக் கருதி எடுக்கும் முடிவு. இரு மாநிலங்களிடையே பாயும் நதியில் அணைகட்டி நீரைத் தக்க வகையில் பயன்படுத்துவதைப் பொருத்த வரை, இருததரப்பிலும் பெருந்தன்மையான அணுகுமுறை தேவைப்படுகிறது.
 
 முதலாவதாக, இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் பரிபூரணமாக நம்ப வேண்டும். இரண்டாவதாக, இயற்கை வளத்தை வீணடிக்கக் கூடாது என்ற அறிவார்ந்த உணர்வுடன் இருதரப்பும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, ஒரு காலகட்டத்தில் எடுக்கப்படும் முடிவு பிற்கால சந்ததியினருக்கும் நன்மை விளைவிப்பதாக இருக்க வேண்டும்.
 
 முந்தைய தலைமுறையினரிடம் காணப்பட்ட அத்தகைய தொலைநோக்குப் பார்வையும், பரந்த மனப்பான்மையும் இப்போது அருகிவிட்டதையே, தற்போதைய நதிநீர்ப் பிரச்னைகள் காட்டுகின்றன. மொத்தத்தில் தமிழகமோ, கர்நாடகமோ, கேரளமோ, எல்லாமே பாரத நாட்டின் அங்கங்கள்தான்; அங்கு வாழ்பவர்களும் நமது சகோதரர்கள்தான் என்ற நேச உணர்வு குறைந்துவிட்டது.
 
 இதனால்தான் ஒரே அரசியல் கட்சியின் இரு மாநிலத் தலைவர்கள் மாறுபாடான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். தேசியக் கட்சி, பிராந்தியக் கட்சி என்ற பாகுபாடே அங்கு மறைந்துபோகிறது. நாட்டைப் பிணைக்க வேண்டிய அரசியலே மக்களைப் பிளவுபடுத்தும் விதிவசத்தை அனுபவிக்கிறோம்.
 
 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக அரசியலில் இப்போது நிலைகொண்டிருக்கிறது. கர்நாடகத்தை எதிர்த்து முழங்கிய அதே அரசியல் தலைவர்கள் இப்போது கேரளத்தை எதிர்த்து கோஷமிடுகிறார்கள். கேரளத்திலும் இதே நிலை.
 
 இருதரப்பிலும் வெறுப்பை உமிழும் பிரசாரம் நடக்கிறது. நடுநிலை வகிக்க வேண்டிய மத்திய அரசோ, கடமை மறந்து தடுமாறுகிறது; நீதிமன்ற உத்தரவுகளை முறைப்படி அமல்படுத்தத் தயங்குவதை அரசியல் ராஜதந்திரமாகக் கருதுவதே, பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறது.
 
 இதற்கு என்னதான் தீர்வு? இரு மாநில மக்களையும் சமமாகக் கருதும், அரசியல் லாபத்தைவிட நாட்டு நன்மையை முக்கியமாகக் கருதிச் செயல்படும் தலைமையே இப்போதைய தேவை. நாட்டு மக்கள் அனைவரையும் சகோதரர்கள் என்ற உணர்வுகொள்ளச் செய்யும் கல்விமுறையும் தேவை.
 
 இவை இப்போது பற்றாக்குறையாக இருக்கலாம். இந்தப் பற்றாக்குறை சரியாகாமல், நதிநீர்ப் பற்றாக்குறை தீராது. முதல் பற்றாக்குறை நிவர்த்தியாக, இப்போதைக்கு இறைவனைப் பிரார்த்திப்போம். அதுவரை, பேருந்தில் நம்மீது தூங்கி விழும் சக பயணியை சகித்துக் கொள்ளவாவது முயற்சிப்போம்.
 
 
நன்றி: தினமணி (06.12.2011)
.