Thursday, October 15, 2009

வசன கவிதை - 17







என்ன ஆயிற்று இந்துக்களுக்கு?

நெடிதுயர்ந்து நிற்கும்
கோபுரத்தின் உச்சியில்
புறாக்களின் சிறகடிப்பு.
பாசி படர்ந்த
உடைந்த சுதைகள் மட்டும்;
கலசத்தைக் காணவில்லை.

எங்கு போனது கோபுர கலசம்?

ஆலம் விழுதோடி
அரசு கால் பதித்து
சிதிலமடைந்த நிலையில்
அகன்ற மதில்கள்.
அருகில்
தூர்ந்து போன
திருக்குளம்.

எங்கு போனது அறநிலையத் துறை?

கரையான் புற்றுக்குள்
கருங்காலி மரத் தேரின்
காருண்யமற்ற மரணம்.
வௌவால்களின்
சிரசாசனத்தில்
பிரகாரமெங்கும்
முடை நாற்றம்.

எங்கு போயினர் அறங்காவலர்கள்?

திறந்து கிடக்கும்
உற்சவர் அறைக்குள்
சிதறிக் கிடக்கும்
எலிப் புழுக்கைகள்.
உடைந்து கிடக்கும்
ஆபரணப் பெட்டிகளில்
வளைய வரும்
பூனைக் குட்டிகள்.

எங்கு போயின சட்டமும் அரசும்?

மண்டிக் கிடக்கும்
புதர்களைக் கடந்து,
நெருஞ்சித் தடத்தில்
பதுங்கி நடந்து,
விட்டால் போதுமென
விரையும்போது,
உச்சிக்கால சேகண்டி
சோகமாய் ஒலிக்கிறது.

எங்கு போயினர் ஆலய பக்தர்கள்?

ஒட்டிய வயிறும்
உடைந்த தேகமுமாய்,
கருவறை நிலைப்படியில்
அர்ச்சகரின்
ஒற்றைக்கால் தவம்.
இருள் கம்மிய
மூலவருக்குப் பக்கத்தில்
ஒரேயொரு எண்ணெய் விளக்கு.

என்ன ஆயிற்று இந்துக்களுக்கு?

இது.........
நிகழக் கூடாத கதை.
நினைத்துப் பார்ப்பதே வதை.

நன்றி: விஜயபாரதம்
(27.02.2004)

No comments:

Post a Comment