Thursday, October 29, 2009

மரபுக் கவிதை - 41



ராம மந்திரம் ஓது


அலைகளை மீறி எழுந்தது பாலம்
அதுதான் ராமர் பாலம் - ஆணவ
அலைகளை மீறி எழுந்தது பாலம்
அதுதான் ராமர் பாலம்!

சமுத்திர ராஜன் அகம்பாவத்தால்
சடுகுடு ஆடிய நேரம் - வீர
வில்லை வளைத்தான் தசரத ராமன்
வீழ்ந்தது அலைகளின் வேகம்!

வணங்கிப் பணிந்து வருணன் விலக
வளர்ந்தது ராமர் பாலம் - மனம்
இணங்கி இணைந்த வானர சேனை
இசைத்தது துந்துபி மேளம்!

கற்புக்கரசி சீதையை மீட்க
கடலும் அடங்கியதங்கு - இந்த
அற்புதம் கண்டு மெச்சி மகிழ்ந்த
அமரர்கள் ஊதினர் சங்கு!

வேருடன் பிடுங்கிய மரங்களை கடலில்
வீசி அமைத்தனர் பாலம் - தசக்
கிரீவனை அழிக்க ராமனின் சேனை
அமைத்தது கடலில் கோலம்!

அணிலும் கூட உழைத்தது கண்டு
அண்ணல் வருடி எடுத்தான் - அதன்
முதுகினில் மூன்று கோடுகள் விளைய
அன்பைப் பிழிந்து கொடுத்தான்!

அனுமனும் நளனும் நீலனும் தோளில்
அழகாய் சுமந்து கண்டு - பாறைக்
கற்களும் கூட கடுமை குறைந்து
மிதந்தன பூந்துகள் கொண்டு!

வளர்பிறை தசமியில் துவங்கிய பாலம்
நிறைந்தது பௌர்ணமியன்று - சேது
அமைந்ததும் வானவர் பூமழை தூவி
ஆசி வழங்கினர் நன்று!

இருபத்திமூன்று யோசனை தூரம்
சேதுவில் ராமன் சென்றான் - மானிட
அவதாரத்தின் மகிமையை நாட்டி
அரக்கனை இனிதாய் வென்றான்!

ராம காரியம் நன்றாய் அமைய
உதவிய பாலம் சேது - ராம
சேவகர் அமைத்த பாலம் காத்திட
ராம மந்திரம் ஓது - சீதா
ராம மந்திரம் ஓது!
நன்றி: விஜய பாரதம் - தீபாவளி மலர் -2007

No comments:

Post a Comment