Wednesday, October 28, 2009

வசன கவிதை - 19


பூனைக்குட்டி

அறைக்குள்ளிருந்த புழுக்கம்
வெளியே வந்தவுடன்
அடித்த வெயிலில்
காய்ந்து போனது தெரியாமல்
கால்கள் நடக்கின்றன.
நேற்று இந்நேரம்
வீட்டில் கடும் மழை.
குளிருக்கு இதமாக
போர்வைக்குள் சுருண்டிருந்த
கால்களினிடையே
சுருண்டிருந்தது
பட்டு ரோமப் பூனைக்குட்டி.

'பூனையைக் கொஞ்சாதடா
ஒரு முடி விழுந்தாலும் பாவம்'
அம்மாவின் பாசக்குரல்
காதுகளில் ரீங்கரிக்கிறது.
அம்மா, அம்மா தான்.
ஒரு காலத்தில் பூனை போல
மடியில் சுருண்டவன் அல்லவா?

ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில்
பூனைப்பாதம் வைத்து
கதவைத் திறந்தாலும்
அம்மா காத்துக் கொண்டிருப்பாள்-
கிண்டி வைத்த உப்புமாவோடு.
அப்பா புரண்டு படுக்கும் சத்தமும்
அம்மாவின் கண் சமிக்ஞையும்.
இப்போது என்ன செய்கிறாளோ?

விடுமுறை முடிந்து
பணிக்கு கிளம்புகையில்
விழிக் கடைநீரும் தயிர் சாதமுமாய்,
உடம்பைப் பார்த்துக்கொள்ளச் சொன்ன
அம்மாவின் அருமை
அருகாமையின் போது
தெரியாமல் போய்விட்டது தான்.
எப்படியோ,
பெட்டிக்கடை சென்று
அறைக்குத் திரும்பியாகி விட்டது.
நன்றி: ஓம் சக்தி
(ஏப்ரல் 2001 )

No comments:

Post a Comment