Thursday, October 8, 2009

வசன கவிதை - 11



புரியாத கவிதை

புதுசாய் இருந்தால் என்ன?
பழசாய் இருந்தால் என்ன?
புரியாமல் எழுதினால் கவிஞன்
பிரசுரிப்பவன் பிரசுரகர்த்தன்
வாங்குபவன் வாசகன்.

ஏதாவதொரு 'கானா' பாடலில்
ரெப்ரிஜிரேட்டர் பார்வையையும்
கெண்டகி கால்களையும் எழுதி
திரையிசைக் கவிமணி ஆனால் போயிற்று
ராஜயோகம் வந்தாயிற்று.

கவிப்பேரரசு பட்டத்தை,
நாலுபேரைக் கூட்டிவைத்து
கொடுத்து வாங்கிக் கொள்ளாதவன்
கவிஞனாய் இருந்தால் என்ன?
கழுதையாய்ப் போனால் என்ன?

ரெண்டு அரசியல் கூட்டம்,
மாதம் ஒருமுறை
கோயில் குடமுழுக்குப் பட்டிமன்றம்,
அவ்வப்போது
திரைப்படத் துவக்க விழாக்கள்.
நேரம் கிடைக்கும்போது
நாலு கவிதை வரி.

மனைவிகளுடன் ஊடல்கள்
பிரசுரகர்த்தர்களுடன் தகராறுகள்
பத்திரிகை பேட்டிகளில்
சவடால்கள்.
கூடல்களை எழுதிய கூச்சமின்மையால்
வாழ்வே புரியாத கவிதை ஆகிவிட்டது.

என்ன செய்ய?
இதை வாங்க வாசகனும்
பிரசுரிக்க பிரசுரகர்த்தனும்
எழுத நானும் தான் இருக்கிறோமே?

No comments:

Post a Comment