Friday, October 2, 2009

வசன கவிதை - 10



ஒரு துளி விஷம்

அந்நியத் துணிகளை எரித்த நாட்டில்
அயல்நாட்டுப் பொருட்கள் மீது
அபரிமித மோகம்.

அரையாடை காந்தியின்
அற்புதமெல்லாம் அந்தக்காலம்.
எமது அரையாடை அழகிகள்
உலகை வலம் வரும்
உற்சாகப் பறவைகள்.

முறத்தால் புலியைத் துரத்திய
கதை இனி வேண்டாம்.
நெய்ல் பாலிஷும், ஹைஹீல்சும்
சன்லோசனும் எம் கன்னியர்க்கு போதும்.

இளவட்டக் கல்லும் சடுகுடுவும்
அருங்காட்சியகப் பொருட்கள்.
கலரும் பிகரும் பார்க்கவே
காலம் போதவில்லை.

ராமாயணமும் மகாபாரதமும்
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மட்டும்.
எம்.டி.வி.யும், 'பே' சானல்களும்
'டிஸ்கோதே' கிளப்களும்
போதாதா என்ன?

வரகும் சீமையும் காணாமல் போயாச்சு.
விளைச்சல் நிலங்களை விற்றாகிவிட்டது.
'கெண்டகி' சிக்கன் தொண்டையில் நழுவுகிறது.

துண்டு துண்டாய் தப்பிய நினைவுகள்.
நாவின் அடி வரை கசக்கிறது
'அயோடைடு சால்ட்'.

அன்று...
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இன்று...
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்.
நன்றி: சுதேசி செய்தி
(2001 ஜூலை)

No comments:

Post a Comment