Saturday, October 31, 2009

ஏதேதோ எண்ணங்கள்


வெற்றிகரமான அறுபதாவது நாள்!

'குழலும் யாழும்' வலைப்பூவைத் துவங்கி இன்றுடன் அறுபது நாட்கள் நிறைவடைந்து விட்டன. நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன். நினைத்தது அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும், ஓரளவு நடந்தேறி இருக்கிறது. இறைவனுக்கு நன்றி!
பத்திரிகைகளில் வெளியானவை, பிரசுரம் ஆகாதவை, புதியவை என, பலதரப்பட்ட கவிதைகளை இதில் இடம் பெறச் செய்திருக்கிறேன். மரபுக் கவிதை (41), புதுக்கவிதை (36), வசன கவிதை (20), உருவக கவிதை (11), மொழிமாற்றக் கவிதை (5) என இதுவரை 113 கவிதைகளை 'குழலும் யாழும்' வலைப்பூவில் கோர்த்திருக்கிறேன். இவற்றைப் படித்து மகிழ்ந்த, படிக்கப் போகிற அனைவருக்கும் நன்றி!
'எழுத்து' என்பது பிறர் படிப்பதற்காகவே படைக்கப் படுகிறது. சங்க இலக்கியம் தொடங்கி, நவீன இலக்கியம் வரை, படைப்பாளர் யாராயினும் எதிர்பார்ப்பது, படைப்புகள் படிக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த இலக்கணத்துக்குள் எனக்கும் இடம் உண்டு. அந்த வகையில், இந்த வலைப்பூவை நிறைய நேயர்கள் முகரவும் நுகரவும் வேண்டும் என்பது ஆசை. பாரதியின் கவிதைகள் அவர் காலத்தில் முழுமையான மதிப்பைப் பெறவில்லை. அத்தகைய நிலை ஏற்படாமல் இன்றைய எழுத்தாளர்களுக்கு இணையம் ஆபத்பாந்தவனாக உதவுகிறது. அதற்கும் நன்றி!
இப்போதெல்லாம் புதிய திரைப்படங்கள் வந்தவுடன், 'வெற்றிகரமான ஐந்தாவது நாள்; குதூகலமான பத்தாவது நாள்; முரசு கொட்டும் பதினைந்தாவது நாள்; சரித்திரம் படைக்கும் இருபதாவது நாள்; வெள்ளிவிழா காணும் இருபத்தைந்தாவது நாள்...' என்றெல்லாம் சுவரொட்டி ஒட்டி மகிழ்கிறார்கள். தங்களைத் தாங்களே ஆனந்தப் படுத்திக் கொள்கிறார்கள்; திரையரங்கில் மக்கள் கூட்டம் காற்று வாங்கும். அது போல, இந்த அறுபதாவது நாளைக் கருதல் கூடாது. ஏனெனில் அது வர்த்தகம்; இது லட்சியம்.
இன்று விதைக்கும் விததுக்களுககு இன்றே பலன் கிடைக்காது என்பது விதைப்பவனுக்குத் தெரியும். விதைப்பவனை எப்படி விளைவிப்பது என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். எனது 'குழலும் யாழும்' வலைப்பூவில் வித்துக்கள் தொடரும்...
-வ.மு.முரளி.

No comments:

Post a Comment