Monday, October 19, 2009

உருவக கவிதை - 10


இலைகள் உதிரும்

உதிர்ந்த இலைகள்
கிளை திரும்புவதில்லை
முடிந்துபோன காலம் போல.
எனினும் -
இலைகளில் பெருகிய அமுதம்
வாழ்வின் ஜீவித அனுபவம்.
கிளைகள் மீண்டும் துளிர்க்கும்.

மண்ணில் வேர்களும்
விண்ணில் இலைகளும்
இடையறாது ஊடுருவும்;
வயது சேகேற
அடிமரம் கணக்கும்.

வெட்டுண்ட கிளையின்
அண்டையில் கிளம்பி
விரியும் இளங்கிளையில்
பசிய இலைகள் மிளிரும்.
பல்லாயிரமாண்டு கால
பச்சையம்
இலையாய், மரமாய் விளையும்.

இளவேனிலில் மலரும்
பூக்களில்
கனிகள் எழும்பும்.
அவற்றில்-
புதைந்திருக்கும்
அடையாளமற்ற மரத்தின்
அமைதி உணர்ந்து
இலைகள் ததும்பும்.

முடிந்து போன காலம்
திரும்புவதில்லை-
உதிர்ந்த இலைகள் போல.

விரைகிறது காலம்
மாறுகிறது பருவம்
உதிர்கின்றன இலைகள்
எழுதுகிறது பேனா.
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2009

No comments:

Post a Comment