Friday, March 5, 2010

உருவக கவிதை - 37


நித்யானந்தம் - 2

பொதுமாத்து

'பொது மாத்து' தெரியுமா?
கையாடல் செய்த
நிதிநிறுவன அதிபர்
வாங்குவது.
பேருந்தில் சிக்கிய
ஜேப்படித் திருடன்
வாங்குவது.
வகை தெரியாமல்
பேசிய தொண்டன்
வாங்குவது.
ஆவேசத் தொழிலாளர்களிடம்
அகப்பட்ட அதிகாரி
வாங்குவது.
முகத்திரை கிழிந்த
மோசடித் துறவி
வாங்குவது.

தனித்து இன்றி
பொதுவில் விழுவது;
பொது இலக்கில்
தனிநபர் குவிவது.

என்ன, ஏது என்று
கேட்பதற்குள்
விழுந்த மாத்து
விழுந்தது தான்-
திரும்பப் பெற இயலாது.

அப்பாவிகள் சிலநேரம்
அடிவாங்கலாம்
பொது மாத்தில்.
பாவிகள் தப்பியதில்லை -
விபசாரிகளையும்
அரசியல்வாதிகளையும் தவிர.

காரணகர்த்தர்கள்
காயம் படுவதில்லை;
காரியவாதிகளும்
காயம் படுவதில்லை.
காரணத்துக்கும்
காரியத்துக்கும் இடையே
காத்திருக்கிறது
'பொது மாத்து'.

காண்க: நிதமும் ஆனந்தம் (04.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/36.html
.

No comments:

Post a Comment