Saturday, March 27, 2010

மரபுக் கவிதை - 88


மீண்டும் தேர்தல் வருகுது!


மீண்டும் தேர்தல் வருகுது!
மீண்டும் தேர்தல் வருகுது!
வேண்டு மட்டும் கொள்கைகள்
காற்றில் பறக்க நாறுது!

''ஆளுங்கட்சி செய்தவை
அத்தனையும் நல்லவை;
மீளுங்கட்சி தேர்தலில்
எமது கட்சி மட்டுமே!

எதிரிலுள்ள கட்சிகள்
ஆட்சிக்காக ஏங்குது!
சிதறு கூட்டம்! மக்களே,
சிறுமையர்கள் எதிருளோர்!

ஒற்றுமைகள் அற்றவர்
ஒன்றுபட்டு நிற்பது
வெற்றுவேட்டு வேடமே!
வெட்கமற்ற கூட்டமே!''

கூறுகிறார் ஆள்பவர்;
ஆள்பவரை எதிர்ப்பவர்
சீறுகிறார்: - ''பொருட்களின்
விலை உயர்ந்துவிட்டதும்,

பாலையென நாட்டினை
பாழ்படுத்தி விட்டதும்,
வேலை தரா அரசு தான்!
வேண்டுகிறோம் மக்களே!

ஆளுங்கட்சி தீயது!
அடிமையாக மக்களை
நாளும் எண்ணி ஆண்டது-
நாசம் செய்யும் கூட்டமே!

ஊழல்களை ஒழித்திட
உதவிடுவீர்- ஆட்சியின்
பேழையிலே அமர்த்துவீர்!
வேலைவாய்ப்பு நல்குவீர்!''

என்று காலில் விழுகிறார்!
எங்கள் ஓட்டு கேட்கிறார்!
என்று காலை வாருவார்?
என்பது தான் புரியலை!

ஆள்பவரும், அவரினை
எதிர்ப்பவரும் கூட்டுடன்
நாள் பலவாய் மக்களைக்
குழப்புகிறார் ஐயஹோ!

தக்க தலைவன் ஒருவனைத்
தேர்ந்தெடுக்க முடியலை!
மக்களினைக் குழப்பவே
தேர்தல் இன்று இருக்குது!

யாருக் கோட்டுப் போடலாம்?
என்பது தான் தெரியலை!
யாருக் கோட்டுப் போடினும்
நாட்டுக்கின்று நாசமே!

மிருகமொன்றும் தேர்தலில்
நிற்கவில்லை- ஆதலால்
பெருமை மிக்க மனிதனைத்
தேர்ந்தெடுப்போம் - கடமையே!
மீண்டும் தேர்தல் வருகுது!
மீள்வதென்று இறைவனே?
* இன்று பென்னாகரத்தில் இடைத்தேர்தல்

.

No comments:

Post a Comment