Saturday, December 5, 2009

புதுக்கவிதை - 47



பேட்டியும் போட்டியும்


-ஒன்று -

'எமெர்ஜென்சி,
இருபது அம்சத் திட்டம்,
நகர்வாலா,
போபோர்ஸ், பேர்பாக்ஸ்,
விடுதலைப்புலி,
அயோத்தி,
ஹர்ஷத் மேத்தா, சேஷன்,
அரசியல், ஊழல்...
ஏதேதோ பேசுகிறார்கள்;
எனக்கொன்றும் புரியவில்லை.
எனக்குத் தெரிவதெல்லாம்
என் தாயின் நோயும்
என் பிள்ளையின் அழுகையும்
என் வயிற்றுப் பசியும் தான்'
-ஒரு சாமானிய இந்தியனை பேட்டி கண்டபோது.
(தேர்தல் தினத்திய தினசரியில்).
-இரண்டு-
காந்தியா,
காரல்மார்க்சா,
எது ஜெயிக்கும்?
எலெக்ஷன் தினத்தன்று
ஆபீசில் பந்தயம்.
இரண்டுமில்லை
காவியம் தான் என்று
நான்கைந்து குரல்கள்.
சுயேச்சை பேரில் கூட
பந்தயம்.
ஆனால் -
யாருக்கும் கண்ணில் படவில்லை -
ஆபீசில் கிடக்கும்
தினசரியில் வெளியாகி இருக்கும்
சாமானியனின் பேட்டி.
(எழுதிய நாள்: 23.06.1994)
*

2 comments:

செ.இளங்கோவன் said...

ஒரு கிலோ அரிசியின் விலையை உலகப்பொருளாதாரமும் உலக/உள்ளூர் அரசியலும்தான் தீர்மானிக்கிறது என்ற அறிவு சாமான்யனுக்கு வருமானால் அனைவரும் அவன்பேட்டியை தேடியெடுத்துப்படிப்பார்கள் என்பது உறுதி.

வ.மு.முரளி. said...

நன்றி இளங்கோ!
அரசியல் விழிப்புணர்வு இல்லாத நாடு அடிமை ஆனதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முறை அடிமை ஆனாலும், நமது அரசு அலுவலகங்களில் கையூட்டு குறையப் போவதும் இல்லை. இந்த லட்சணத்தில், உலகப் பொருளாதாரம், உள்நாட்டுப் பொருளாதாரம் பற்றியெல்லாம் யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இருந்தாலும், சும்மா இருக்க முடியவில்லை. ஏனெனில் மனிதத் துயர்கள் கண்டு கலங்காதவன் கவிஞன் இல்லை.
- வ.மு.முரளி.

Post a Comment