Sunday, December 6, 2009

புதுக்கவிதை - 48



சாதா 'ரண' தொடர்பு


ஒவ்வொரு நாளும் உங்களால்
ரத்த தானம் செய்ய முடியுமா?
பசுவால் முடியும் -
பாலின் வடிவில்.

எல்லாம் கறந்துவிட்டு
அடிமாடாக்க
மனிதனால் மட்டுமே
முடியும்.

தாய் வறண்டாலும்
பால் கொடுக்கும்
காராம் பசு
கசாப்புக் கடையில்.

பெற்றவர்களையே
முச்சந்தியில் நிறுத்தும்
நாகரிகர்களுக்கு
இது சாதா 'ரணம்'.

நன்றியை மறந்த
மானிடனுக்கு
நாய் என்ன?
தாய் என்ன?

நஞ்சு மரங்களில்
நற்கனிகள் கிட்டாது;
விதைப்பது தான்
அறுவடை ஆகும்.

பசுக்களைக்
கொல்லக் கொல்ல
காப்பகங்கள்
பெருகும்.

பாலுக்கு பசு;
பாலூற்ற பிள்ளை.
இரண்டுக்கும் உண்டு -
தொடர்பு.
நன்றி: விஜயபாரதம் (18.12.2009)
.
.

No comments:

Post a Comment