Tuesday, August 17, 2010

உருவக கவிதை - 58



விளையாட்டு விபரீதம்



மூட்டைப்பூச்சிக் கடி பழகிவிட்டது.
தோல் மரத்துவிட்டது.
கொசுக்கடி சகித்து
சுகமாகத் தூங்குபவர்களுக்கு
அட்டைகள் உறிஞ்சும் ரத்தம்
சாதாரணம் தான்.

குளியலறைகளிலும்
சமையலறைகளிலும்
ஊரும் கரப்பான் பூச்சிகள்;
சுவர்களில் பல்லிகள்.
தண்ணீர்த் தொட்டியில் புழுக்கள்.
எல்லாம் பழகிவிட்டது.

வீட்டிலிருக்கும் சர்க்கரையை
கொள்ளையிடும் செவ்வெறும்புகள்;
அடுப்பிலிருக்கும் பாலை
கவிழ்த்து ருசிக்கும்
திருட்டுப் பூனைகள்;
எதிர்வீட்டைக் காவல் காக்கும்
நன்றியில்லா நாய்கள்-
எல்லாமே விளையாட்டாகிவிட்டது.

இப்போதெல்லாம்
எப்போதாவது தட்டுப்படும்
தேளும் பாம்பும் பூரானும்
கண்டால் மட்டுமே அச்சம்.

அடிக்கடி நடக்கும் ஊழல்களும்
எப்போதாவது நடக்கும் விபரீதங்களும்
அரியவர்களின் எளிய
பொழுதுபோக்காகிவிட்டன;
கரவொலி எழுப்பி
கரங்கள் சிவந்து விட்டன.

தோல் மரத்துவிட்டது;
மூட்டைப்பூச்சிக் கடி பழகிவிட்டது.
.

2 comments:

எஸ்.ஆர்.சேகர் said...

முரளியுடைய வலையை இன்றுதான் அறிந்தேன் -படித்தேன் -ரசித்தேன்--மிகநன்று--வளர்க--வாழ்க--
srseghar@gmail.com

வ.மு.முரளி. said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி

Post a Comment