Thursday, April 8, 2010

மரபுக் கவிதை - 93


புத்தாண்டை நோக்கி... 6
சித்திரையே வருக!

சித்திரையே வருக!
சித்திரையே வருக! எம்
நித்திரைக் கனவுகளை
நினைவாக்க வருக!
(சித்திரை)
போனதெல்லாம் போகட்டும்!
புதுவாழ்வு பிறக்கட்டும்!
எத்திசையும் நலமாக
எந்நாளும் சிறக்கட்டும்!

அவலங்கள் அழியட்டும்!
அன்பெங்கும் செழிக்கட்டும்!
அவனியிலே வாழுகிற
அனைவருமே மகிழட்டும்!

தோஷங்கள் ஒழியட்டும்!
தேசங்கள் இணையட்டும்!
தொன்றுதொட்ட இந்நாட்டு
மக்களெல்லாம் பிணையட்டும்

அழுக்காறு மடியட்டும்!
அமைதிப்பூ பூக்கட்டும்!
அன்பாலே ஆளுகிற
அருள்வெள்ளம் சுரக்கட்டும்!

சேதங்கள் குறையட்டும்!
தீண்டாமை மறையட்டும்!
எல்லார்க்கும் பொதுவாக
வேதங்கள் பறையட்டும்!
(சித்திரை)
எதிர்காலம் நமதென்று
எக்காளம் கூட்டட்டும்!
என்றென்றும் இனிதிளமை
திக்கெட்டும் நாட்டட்டும்!

சேறான அரசியலும்
தெளிவாகத் திருந்தட்டும்!
வேறான எண்ணங்கள்
வெளியாகா திருக்கட்டும்!

தோளுயர்த்தி, விடியலென
பூபாளம் பாடட்டும்!
தொன்மைக்கும் புதுமைக்கும்
புதுப்பாலம் கூடட்டும்!

வீரமனம் விளைய
விதிகள் பல தளிரட்டும்!
பாரதத்தின் பண்பாடு
பாங்குடனே மிளிரட்டும்!

இன்பத்தால், துன்பத்தால்
மனம் தளரா திருக்கட்டும்!
இனிமேலும் வருகின்ற
எதிர்காலம் எண்ணட்டும்!
(சித்திரை)
சித்திரையே வருக! எம்
நித்திரைக் கனவுகளை
நினைவாக்கி வருக!
(பவ ஆண்டு- நாள்: 14.04.1994)

நன்றி: ஓம்சக்தி (ஏப்ரல் -1999)

.

No comments:

Post a Comment