Saturday, June 19, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டை நோக்கி...19

கண்துடைப்பு நாடகங்கள்


செம்மொழி மாநாடு கோவையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாகிவிட்டது. சென்ற ஆண்டே நடந்திருக்க வேண்டிய வேண்டிய மாநாடு இது. இலங்கைப் பிரச்னை உச்சத்தில் இருந்தபொது அறிவித்துவிட்டு, பிரபாகரன் இறந்த சமயத்தில் நடத்தவேண்டாம் என்பதனால், 2010 ஜூன் 23- க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது, மாநாடு நடக்கும் கோவை நகரை மேம்படுத்த வேண்டும்; அதற்கு கால அவகாசம் வேண்டும் என்பது தான்.

சாலை மேம்பாடு:
இதனால், கோவை நகரம் மேம்பட வாய்ப்பு கிடைத்தது என்று கோவை மக்கள் மகிழ்ந்தது உண்மை. ஆனால், செம்மொழி மாநாட்டு நிகழ்வுகள் முழுவதும், ஏற்கனவே கோவை தொழில்துறையினரால் அமைக்கப்பட்ட கொடிசியா அரங்கிலேயே நடக்கும் அன்று அறிவித்துவிட்டது அரசு. பரவாயில்லை, நகர சாலைகளேனும் மேம்படும் என்று நகர் மக்கள் திருப்தி அடைந்தனர்.
அதற்கேற்ப, கோவைக்கு வரும் இரு பிரதான சாலைகளான அவிநாசி ரோடு (தே.நெ. 47), திருச்சி ரோடு (தே.நெ. 45) ஆகியவை அகலப்படுத்தப்பட்டன. ஆயினும் மிக நெருக்கடி உள்ள மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, சத்தியமங்கலம் ரோடு ஆகியவை மேம்படுத்தப்படவில்லை. அவிநாசி ரோடும் திருச்சி ரோடும் கூட, செம்மொழி மாநாடு அறிவிப்புக்கு முன்னரே அகலப்படுத்த திட்டமிட்டவை என்பது பலருக்கு தெரியாது.
ஆகமொத்தத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் செய்யப்படும் விரிவாக்கப் பணிகள், செம்மொழி மாநாட்டுக்காக நடத்தப்படுபவை போல முன்னிறுத்தப் படுகின்றன. உண்மையில், இப்பணிகளை வேகமாக நடத்தச் செய்ததைத் தவிர, மாநாட்டுக்கும் சாலை மேம்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உண்மை.
கோவை நகரின் பல சாலைகள் இன்னும் மோசமாகவே உள்ளன என்பது நகருக்குள் உலா வந்தால் தான் தெரியும். ஆனால், மேம்போக்கான பணிகளிலேயே கவனம் செலுத்தப் படுவதால், இவை கவனம் கொள்ளப்படவில்லை. நகரின் பொது சுவர்களுக்கு வண்ணம் பூசவும், ஓவியம் வரையவுமே நேரம் போதவில்லை. அவை தானே வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்களின் கண்களை முதலில் கவரும்?

பூங்காக்கள்:
மாநாட்டின் பேரில் நடந்துள்ள கொள்ளை என்று பூங்காக்கள் அமைப்பை சொல்லலாம். செம்மொழி மாநாட்டுக்காக 40 பூங்காக்கள் அமைத்துள்ளதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இவற்றில் பல, ஏற்கனவே அமைக்கப்பட்டவை. அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மட்டும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவினங்கள் எவ்வளவு? அந்த செலவு மாநகராட்சி சார்ந்ததா, செம்மொழி மாநாடு சார்ந்ததா? இது யாருக்கும் தெரியாது.
தவிர இந்த பூங்காக்களில் மரங்களே கிடையாது. அவசர உப்புமா போல செயற்கை புல்வெளிகள், குரோட்டன் செடிகளை கொண்டு பம்மாத்து செய்திருக்கிறார்கள். மாநாடு முடியும் வரை இந்த புல்தரைகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். அதன்பிறகு, காய்ந்து சருகாகப் போகும் இந்த பசுமையான புல்தரைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கைச் சுற்றிலும் கூட இதே போன்ற அவசர ஒப்பனைகள் தான் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இந்த ஒப்பனைகள் தொடர்கின்றன. தொட்டிச் செடிகள் எங்கெங்கிருந்தோ வந்து குவிகின்றன. இவை வாடகைக்கு எடுத்து வந்தவை போலத் தான் தோற்றம் அளிக்கின்றன.
கோவை மதிய சிறை மைதானத்தில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து ஓராண்டாகி விட்டது. அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில் யாரோ முதல்வருக்கு ஞாபகப்படுத்தி இருப்பார்கள் போல- சென்னையில் கூட்டிய கூட்டம் ஒன்றில், கோவையில் அமைய உள்ள செம்மொழிப் பூங்காவின் மாதிரி வரைபடங்களை முதல்வர் பார்வையிடுவதாக ஊடகங்களுக்கு செய்தியும் படமும், சில தினங்களுக்கு முன், செய்தி விளம்பரத் துறையால் விநியோகிக்கப்பட்டது. அதை பிரசுரித்து ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்தன.

உள்கட்டமைப்புக்கள்:
செம்மொழி மாநாடு உலகு தழுவிய அளவில் நடப்பதால், குடிநீர், தொலைபேசி, பொது அரங்குகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கொடிசியா அரங்கில் மாநாடு நடப்பதால், பொது அரங்கம் நிறைவேறாது என்பது முதலிலேயே தெரிந்துபோனது. மாநாட்டின் முழு நிகழ்வுகளும் அங்கேயே நடப்பதால், அப்பகுதிக்கே அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன. பல லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தத் தேவையான குடிநீர்க் குழாய்கள், தொட்டிகள் கொடிசியா அரங்கை மையமாக வைத்து அமைக்கப்பட்டன. மின்சார வசதியும் அதே பகுதியில் புதுப்பிக்கப்பட்டது. தொலைதொடர்பு வசதிகளும் அங்கு தான் (இவையும் தற்காலிகமானவை) மேம்படுத்தப்பட்டுள்ளன.
தீயணைப்பு நிலையங்கள் 8 தற்காலிகமாக அமைக்கப்பட உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாநகரில் உள்ள தீயணைப்பு நிலையங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குறைந்தபட்சம், தற்காலிகமாக அமைக்கப்படும் தீயணைப்பு நிலையங்களில் பாதியை மட்டுமாவது நிரந்தமாக்கினால் கோவைக்கு பயன் கிடைக்கும்.
மாநாடு நடக்கும் இடம் அருகே தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிரந்தரமான காவல் நிலையம் ஒன்று தேவை என்பது காவல்துறைக்குத் தெரியும். அவிநாசி ரோட்டில், பி.எஸ்.ஜி.கல்லூரி அருகே காவல்நிலையம் ஒன்றை அமைத்திருக்கலாம். அது காலகாலத்துக்கும் நகரின் பாதுகாப்புக்கு உதவியாக இருந்திருக்கும்.

எல்லாம் கண்துடைப்பு...
இவ்வாறு செம்மொழி மாநாட்டுக்காக நடக்கும் பணிகள் பலவும் கண்துடைப்பான (eyewash) செயலாகவே உள்ளன. கோவையில் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களாக பாரதியார் பல்கலை, வேளாண்மை பல்கலை, கோவை அண்ணா பல்கலை ஆகியவை உள்ளன. இப்பல்கலைகளில் கூட எந்த மேம்பாட்டுப் பணியும் சொல்லிக் கொள்ளும்படி நடக்கவில்லை. சொல்லப்போனால், கோவை அண்ணா பல்கலை. வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது. அதை தரம் உயர்த்த சில கோடிகளை செலவிட்டிருக்கலாம்.
கோவையில் உள்ள தனியார் பல்கலைகளான அமிர்தா, காருண்யா, விவேகானந்தா, அவினாசிலிங்கம், கற்பகம் ஆகிய பல்கலைகளுக்கு இம்மாநாட்டில் என்ன பணி என்று தெரியவில்லை. உயர்கல்விக்கென இருக்கும் பல்கலைகளைப் புறக்கணித்துவிட்டு, செம்மொழி மாநாடு நடத்துவதால் என்ன பயன் என்றும் தெரியவில்லை.
இவை அனைத்தையும் விட நகைச்சுவை, பிரதான சாலைகளில் அமைக்கப்படும் பாவுக்கற்கள் (டைல்ஸ்) பாவிய நடைபாதை அமைப்பது தான். எந்த அஸ்திவாரமும் இன்றி, மண்ணில் எழுப்பப்படும் செங்கல் தடுப்புகளுக்கு இடையே மண்ணை நிரப்பி அதன் மேல் டைல்ஸ்களைப் பாவி சிமென்ட் பூச்சு பூசி விடுகிறார்கள். அநேகமாக, மாநாடு முடியும் வரை கூட இந்த நடைபாதைகள் (பிளாட்பாரம்) தாங்காது என்று தோன்றுகிறது. பல இடங்களில் இப்போதே நடைபாதையில் பதித்த டைல்ஸ்களை காணவில்லை. மக்களின் வரிப்பணம் மண்ணாவதற்கு இதைவிட சாட்சி வேறு இருக்க முடியாது.

(மீதி நாளை...)

.

2 comments:

ரோகிணிசிவா said...

super , but intha drama ellam eppa niruthuvaanga

வ.மு.முரளி. said...

Makkal vizhippunarvu adaiyumpothu...

Post a Comment