Monday, June 14, 2010

வசன கவிதை - 66

செம்மொழி மாநாட்டை நோக்கி...14

பரந்து கெடுக!




புத்தொளி வீசும் உற்சாக நகரில்
இலக்கியம் மணக்கும் இனிய தருணத்தில்
விருந்தாக வந்த உலக அறிஞர்கள்
கண்களில் விழுந்துவிடக் கூடாது
தெருவைக் கெடுக்கும்
பிச்சைக்காரர்கள்.

பொன்னுலகம் அஞ்சும்
மண்ணுலகம் சமைத்து
பதாகைகளால் வரவேற்கும்
பரவச கணத்தில் எதற்கு
உடை கிழிந்த பிச்சைக்காரி?

அலங்கார அரங்குகளில்
அணிதிரளும் மொழிஞாயிறுகளின்
கண்களைக் கலங்க வைக்கும்
சிக்குத்தலை யாசகர்களுக்குத் தெரியாது-
நடக்கப் போகும் நிகழ்வின்
வரலாற்று முக்கியத்துவம்.

ஆகவே-
பத்து நாளுக்கு
எங்காவது இவர்களை
ஒளித்து வையுங்கள்!
இரந்தும் உயிர் வாழ்தல்
செம்மொழிக்கு அவமானம்.

மாநாடு நன்றே! மாநாடு நன்றே!
யாசகர் ஒளித்தும் மாநாடு நன்றே!
நன்றி: விஜயபாரதம் (02.07.2010)
.

No comments:

Post a Comment