Wednesday, June 16, 2010

வசன கவிதை - 67

செம்மொழி மாநாட்டை நோக்கி...16


இடிபாடுகளை மறையுங்கள்!


எல்லாச் சாலைகளும் மாநாடு நோக்கி.
எல்லாச் சாலைகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றம்.
சாலைகள் விரிவு சந்தோஷம் தான்.
ஆனால் -
அரைகுறையாக நிற்கும் இடிபட்ட கட்டடங்கள்
ஆனையிறவு, கிளிநொச்சியை
நினைவுபடுத்துகின்றன.

இன்னும் ஒரு வாரம் இருக்கிறது-
அதற்குள் மாற்ற முடியாதா?
மனதைப் பிசையும் கொடூர ஞாபகங்களை
எப்படியாவது மறக்க வேண்டும்.
அல்லது இந்த இடிபாடுகளை மறைத்து
பிரமாண்ட விளம்பரங்கள் செய்யுங்கள்.

அதில்,
தமிழனின் வீரம், தன்மானம், ஈகை, பொதுநலம்
உள்ளிட்ட குணநலன்களை தூரிகை ஆக்கலாம்.
தமிழின் சிறப்புக்களை பொன்னெழுத்துக்களால் பொறிக்கலாம்.
தலைவரின் சரிதத்தை புகைப்படங்களால் விளக்கலாம்.

எதையாவது செய்யுங்கள்.
ஒருவார காலத்துக்குள்,
எப்படியாவது இடிபாடுகளை மறையுங்கள்.
இல்லாவிட்டால் புண்படும் மனது.
.

No comments:

Post a Comment