
தீபாவளி - 4
நமுத்துப்போன பட்டாசு
புரியாத கவிதை போல.
எப்போதாவது வெடிக்கலாம்.
திரி விழுந்த பட்டாசு
நன்றாகப் புரியும் கவிதை.
எப்போதும் வெடிக்காது.
புகையும் பட்டாசு
வெடித்தாலும் வெடிக்கலாம்.
வெடிக்காமலும் போகலாம்.
.
மகத்தானவர்களுக்கு
மாபெரும் வந்தனம்!
வந்தனம்! பெரும் வந்தனம்!
வானைக் கிழிக்கும் கோபுரம் கொண்ட
கோயில் அமைத்த சிற்பிகளின்
வித்தக விரல்களுக்கு வந்தனம்!
கல்லில் சிற்பிகள் காவியம் எழுத
உளிகளைத் தந்த கொல்லர்களுக்கும்
பதுமைகள் தந்த தச்சர்களுக்கும்
அடவு காட்டிய அடியார்களுக்கும் வந்தனம்!
கருமலையில் கல்லுடைத்த
சாளுக்கிய அடிமைகளுக்கும்
பல காத தூரம் தோளில் சுமந்து
கற்களைத் தந்த மல்லர்களுக்கும் வந்தனம்!
கோயில் கட்ட நிலத்தை மேவிய
ஏர் உழவர்களுக்கும் மாடுகளுக்கும்
தடங்கலின்றி அனைவர்க்கும் உணவளித்த
சமையல்காரர்களுக்கும் வந்தனம்!
உழைப்பின் களைப்பு தெரியாவண்ணம்
செவ்விளநீரும் கள்ளும் வழங்கிய
பனையேறி மக்களுக்கும்
தாகம் தீர்த்த பெண்களுக்கும் வந்தனம்!
கோயில் பணியைக் கண்காணித்த
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும்
சிற்பிகள் களைப்பைப் போக்கிய
குடும்பத்தினருக்கும் வந்தனம்!
சிற்பத் தொழிலில் பட்ட காயம்
விரைவில் ஆற மருந்துகளிட்ட
வைத்தியர்களுக்கும் சேடிகளுக்கும்
மூலிகை தந்த குறவர்களுக்கும் வந்தனம்!
உருவம் முனைந்த குயவர்களுக்கும்
உதவிகள் செய்த தொழிலாளருக்கும்
உடைகள் வெளுத்த வண்ணாருக்கும்
சாரம் கட்டிய வீரர்களுக்கும் வந்தனம்!
காவல் காத்த மறவர்களுக்கும்
பண்ணிசை பாடிய பாணர்களுக்கும்
சிகைகள் மழித்த நாவிதருக்கும்
இறைச்சியான ஆடுகளுக்கும் வந்தனம்!
கல்தூண்களை அடுக்க உதவிய
யானைகளுக்கும் குதிரைகளுக்கும்
பாலைப் பொழிந்த பசுக்களுக்கும்
பந்தம் பிடித்த சிறுவர்களுக்கும் வந்தனம்!
கோயிலுக்காக குழிகளைத் தோண்டிய
தோள்வலி கொண்ட தோழர்களுக்கும்
செருப்புகள் தந்த திருக்குலத்தார்க்கும்
கூலி வழங்கிய கணக்கர்களுக்கும் வந்தனம்!
நல்ல நாழிகை கணக்கிட்டுரைத்த
வள்ளுவருக்கும் சோதிடருக்கும்
கல்லில் எழுதிய வாணர்களுக்கும்
மரங்கள் தந்த காடுகளுக்கும் வந்தனம்!
தினமும் இறையை வேதம் ஓதி
பக்திப்பெருக்குடன் பூசனை செய்த
அந்தணருக்கும் விடுபட்டோர்க்கும்
பூக்கள் தொடுத்த சிறுமியருக்கும் வந்தனம்!
தஞ்சைத் தரணியில் மாபெரும் கோயில்
அமைக்கும் கனவுடன் ஈசனை வணங்கி
நாட்டு மக்களை தொண்டர்களாக்கிய
ராசராசனுக்கு மாபெரும் வந்தனம்!
மன்னன் மனதில் கருவாய் நின்று
மாபெரும் ஆலயம் அமைக்கச் செய்த
உலகை ஆளும் பெருவுடையாருக்கு
வந்தனம்! வந்தனம்! மாபெரும் வந்தனம்!
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2010
******
குரங்குகள் அடித்துக் கொள்வதுண்டு
உணவுக்காக,
கலவிக்காக,
அதிகாரத்திற்காக.
யாரேனும் வீசி எறியும்
வாழைப்பழத்திற்காக
பல்லைக் காட்டி உறுமி
சண்டையிடும் குரங்குகள்...
துணைக் குரங்கை
வேறு குரங்கு கைப்பிடிக்காமல் தடுக்க
சீறும் குரங்குகள்...
தனது எல்லைக்குள் அந்நியக் குரங்கு
பிரவேசிக்காமல் தடுக்கும்
கோபாவேசக் குரங்குகள்.
தனக்குத் தானே வரையறுத்த
கட்டுப்பாடுகள் உண்டெனினும்
குரங்குகளுக்கென தனித்த
அரசியல் சாசனம் இல்லை.
வாழ்வதற்கான போராட்டத்திலும்
குரங்குகள் எல்லை மீறாது.
அடுத்த குரங்கின் வாலில்
தீ மூட்டி கைகொட்டாது.
வன எல்லை ஆட்சியைக் காக்க
இடம் விட்டு இடம் சகாக்களை கடத்தி
மிரட்டத் தெரியாது.
தனக்கென சட்டம் வகுத்துக்கொண்டு
அதை மீறத் தெரியாத
பகுத்தறிவு சிறிதும் கிடையாது.
வாலறிவன் தாள் வணங்கும்
மனிதருக்கு வால் இல்லை;
குரங்குகளுக்கு அறிவு இல்லை.
வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது.
ஆயினும் குரங்குகள்
அடித்துக் கொல்வதில்லை.
.