Thursday, December 9, 2010

உருவக கவிதை - 69



நினைவுச் சார்பின்மை




வெட்டப்படும் வரை
வெள்ளாடு நம்புவது
கசாப்புக்காரனை.
வெளிநாட்டில் இருந்துவந்த
கசாப்புக்காரி என்றால்
உள்ளூர் வெள்ளாடுகளுக்கு
சொல்லவே வேண்டாம்.

வெளியூர் கசாப்புக்காரி
தலையை உடனே வெட்டுவதில்லை;
முடிந்தவரை குருதியை உறிஞ்சிவிட்டு,
கொல்லாமல் விடக்கூடும் என்ற
நம்பிக்கையில் நம்பி 'கை' நனைக்கலாம்.

அவ்வப்போது போடும் புல்லும்
மேய்ச்சலுக்கு தனியே விடும் சுதந்திரமும்
வெள்ளாடுகளுக்குப் போதும்-
ஆட்டு மந்தையை கட்டிக் காக்க வந்த
தியாக அன்னை பட்டம் வழங்குபவருக்கு
கூடுதலாக கிடைக்கலாம்,
மந்தை நாட்டாண்மை பதவி.

வெளிநாட்டு கசப்புக்காரியுடன்
கூட்டணி அமைக்க
உள்ளூர் கசாப்புக்காரர்களில்
நன்றாக குருதி உறிஞ்சுபவருக்கே முன்னுரிமை.
குறிப்பாக,
நினைவுச்சார்பின்மை வியாதி இருப்பவருக்கு
எப்போதும் முதலிடம்.

ஆடுகளின் நினைவுகளைத் தட்டி எழுப்பவர்களுக்கு
கசாப்புக் கூட்டணி என்றுமே கொள்கை விரோதி.
நினைவுச் சார்பின்மை பேசிக்கொண்டே
ஆடுகளைக் காயடிப்பதிலும்
கொள்ளையடிப்பதிலும்
கசாப்பு முனைவோர் திறமைசாலிகள்.

கடைசியில் கழுத்தில் கத்தி இறங்கும்போது
வெள்ளாடுகளின் கண்களில் விரக்தி வெளிப்படலாம்.
காலம் கடந்த ஞானோதயங்களால்
பட்டிகளில் பரவும் குருதியின் ஈரம்.
அதைக் கண்டும்கூட,
வெட்டப்படாத வெள்ளாடுகள்
கெக்கலி கொட்டலாம்-
அதன் முறை வரும்வரை.

கசாப்புக்காரர்களின் பாவம்
தின்றால் போகும்.
சுய விளம்பரம் கொடுத்து சரிக்கட்டினால்
சிறப்புமலர் வெளியிட்டு
பாராட்ட வெட்டியான்கள் எப்போதும் தயார்.

வெட்டப்பட்ட அப்பாவி ஆடுகளும்
குருதி இழக்கும் வெள்ளாடுகளும்
எப்போது மாறின செம்மறி ஆடுகளாய்?
சிந்தித்தால் சித்தம் கலங்குகிறது-
நினைவுச் சார்பின்மை வேலையைக் காட்டிவிட்டது.
..

No comments:

Post a Comment