Sunday, January 2, 2011

புதுக்கவிதை - 140





கொள்ளையர் தர்மம்


கன்னமிட்டு கொள்ளையிடுவதை
தடுக்க அவசரச் சட்டம் தயார்.
கொக்கரிக்கிறார் கன்னக்கோல் திலகம்.

சங்கிலிப் பறிப்பைத் தடுக்கவும்
அவசரச் சட்டம் வரும்.
சொல்பவர் பிளேடு பக்கிரி.

கொலை, கொள்ளையைத் தடுக்கவும்
புதிய சட்டம் உருவாகிறது.
கொள்ளைக்கூட்டத் தலைவி பிரகடனம்.


நிதிமோசடிகளைக் கட்டுப்படுத்த
கடுமையாக்கப்படும் விதிகள்.
விதிமீறல் மந்திரி முழக்கம்.

எவன் என்ன சொன்னாலும்
அப்படியே நம்புகிறது
'பத்திரிகை தர்மம்'.

கட்டுச்சோற்றுக்கு பெருச்சாளி காவல்...
பாலுக்கு திருட்டுப் பூனைகளே காவல்...
நாட்டுக்கு ஊழல் ராசாக்களும் ராணிகளும்.


குறிப்பு:
ஊழலை ஒழிக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக முழங்கி இருக்கிறது 'ஸ்பெக்ட்ரம் புகழ்' மத்திய அரசு -
ஊழலை ஒழிப்பதாக காங்கிரஸ் மேடையில் முழங்கிய தலைவி சோனியாவைப் பின்பற்றி.
.

No comments:

Post a Comment