Friday, December 31, 2010

வசன கவிதை - 84




...
.
.
2010 ஆண்டே வாழி!

விக்கி லீக்சுக்கு இடம் கிடைத்துவிட்டது
ஆங்கிலப் பேரகாதியில்.
நீரா ராடியா தொலைபேசி பேச்சுக்களுக்கும்
கிடைத்துவிட்டது இடம்
இந்திய அரசியலில்.

ரகசியங்களை வெளியிடும் பரபரப்புக்காக
வரும் ஆண்டுகளின் உலகம்
இந்த ஆண்டை எப்போதும் நினைத்திருக்கும்.
அடுத்தவர்களின் அந்தரங்கத்தில்
நுழைந்து சேட்டை செய்தவர்களின்
அந்தரங்கமும் சந்திக்கு வந்தது
2010 ன் உபயம்.

ஒருவருக்கு மட்டுமே தெரிவது ரகசியம்
என்ற இலக்கணம் அடிபடலாம் இனி.
ஒருவருக்குத் தெரிந்த எதுவும் ரகசியமல்ல;
எல்லோருக்கும் தெரியாததும் ரகசியமல்ல;
உலகிற்கு நன்மை அளிக்காத எதுவும் ரகசியமல்ல.

2010 க்கு நன்றி.
பலவீனமானவர்களின் சட்டையை உரித்து
பலமென்று கொக்கரித்த வல்லரசிற்கு
பாடம் புகட்டிய 2010 க்கு நன்றி.

'காந்தி' வேடதாரிகளுக்கு சவுக்கடி கொடுத்த
'ஜி' வானவில் ஊழலுக்கும்
ராச கைங்கர்யம் செய்த தரகிக்கும்
வித்திட்ட 2010 க்கு நன்றி.

அதிகார மமதைக்கு குட்டு வைத்த
2010 ஆண்டே வாழி!
வரும் ஆண்டிலேனும்
மக்கள் வாழட்டும்!
.

Thursday, December 30, 2010

எண்ணங்கள்


தேசமே தெய்வம்


மேற்கண்ட தலைப்பில் தேசிய சிந்தனைக் கழகம் என்னும் அமைப்பு வலைப்பூ ஒன்றை நடத்துகிறது. நமது நாட்டின் அரும் புதல்வர்களான விடுதலைப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், அருளாளர்கள், மகான்கள், தலைவர்கள், தமிழ் வளர்த்த பெரியோர், சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகளுடன், அவர்களது சரிதம் தொடர்பான இணைய இடுகைகளின் சுட்டிகளுடன், இந்த வலைப்பூ வெளியாகி வருகிறது.

இக்கட்டுரைகள், தலைவர்களின் பிறந்தநாள்- மறைந்த நாட்களிலேயே, அவர்களை நினைவுறுத்தும் விதமாக வருவது சிறப்பு. நாட்டு மக்களுக்கு நமது முன்னோரின் அடிச்சுவடுகளை நினைவுபடுத்தும் அற்புதமான முயற்சி இது. இந்த வலைப்பூ எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும்...

இந்த வலைப்பூவின் முகவரி: http://desamaedeivam.blogspot.com/
..

Sunday, December 26, 2010

உருவக கவிதை - 70


திருட்டு ராசாக்கள்
.
திருடன்... திருடன்... திருடன்...
கத்திக்கொண்டு ஓடுகிறான்
திருடும்போது சிக்கிய திருடன்...
.
கூட்டாய்த் திருடி உதை வாங்குபவனை
கைவிடவும் காப்பாற்றவும் ுடியாமல்
தவிக்கிறான் சக திருடன்.
.
சிக்கியவன் வாய் திறக்கும் சமயம்
'பொதுமாத்து' தருகிறான்
தப்ப எத்தனிக்கும் திருடன்.
.
பிடித்துக் கொடுத்தவர்களையே
திருட்டுக்கு உதவியதாக
வாக்குமூலம் கொடுக்கிறான் திருடன்.
.
குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது
நீதிபதி மீதும் பாய்கிறான் -
நீங்களும் திருடனென்று.
.
திருடனின் ஜாதியைக் காட்டி
இயன்றவரை நியாயப்படுத்துகிறான்
திருட்டுக் கும்பல் தலைவன்.
.
இத்தனைநாள் வாங்கிய
திருட்டுப்பொருளை மறந்து
கைவிடுகிறான் கூட்டாளிகளின் தலைவன்.
.
திருடன்... திருடன்... திருடன்...
துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்...
பலநாள் கூட்டாளிகளும் 'உடன் பிறந்த' சகாக்களும்...
.
குறிப்பு: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இக்கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
.

Saturday, December 25, 2010

எண்ணங்கள்

நல்ல முயற்சி...
வலைப்பதிவர்கள் கூடுவது மகிழ்ச்சி!

நாளை (26.12.2010) ஈரோட்டில் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது. ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் ஏற்பாடு செய்துள்ள பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்- 2010' நிகழ்ச்சி, வலைப்பூக்களில் கருத்துமழை பொழியும் அன்பர்களுக்கு அரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
.
ஈரோடு டைஸ் அண்ட் கெமிகல்ஸ் கட்டடத்தில் (யு.ஆர்.சி.நகர், பரிமளம் மஹால் பஸ் நிறுத்தம், பெருந்துறை சாலை, ஈரோடு) நாளை (26.12.2010) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வலைப்பதிவர் சந்திப்பில் சிந்திப்போம். நமது கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்வோம்!

பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் செல்வாக்கு மிகுந்தவர்களின் கைப்பாவையாகிவிட்ட சூழலில் இணையமும் வலைப்பூக்களும் மாற்று ஊடகங்களாகி விட்டன. யாரும் தனது கருத்தை சுதந்திரமாக முன்வைக்கும் வாய்ப்பை வலைப்பூக்கள் ஏற்படுத்தியுள்ளன. கருத்து சுதந்திரத்தின் கட்டற்ற வெளியை வலைப்பூக்களும் இணையமும் சாத்தியமாக்கி உள்ளன. ஆயினும், இந்த சுதந்திரம், வலைப்பூக்களில் எழுதுவோருக்கு சுய கட்டுப்பாடு தேவை என்பதையும் நினைவு படுத்துகின்றன.
வலைப்பூ பதிவர்களும் வாசகர்களும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவது, வலைப்பூக்களின் தரம் உயர வழி வகுக்கும். நாட்டிற்கும் சமூகத்திற்கும் உதவும் வகையில் நமது வலைப்பூக்கள் மெருகேற, பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்' உதவட்டும்.
.

Wednesday, December 22, 2010

எண்ணங்கள்




மனமார்ந்த வாழ்த்துக்கள்

நவீனத் தமிழ் எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2007 ல் வெளியான அவரது 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதைத் தொகுதிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள, தமிழின் தொன்மையான இலக்கியங்களை நவீனத் தமிழுடன் உரையாடச் செய்கிற, ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய வேளை இது...

காண்க:

.

Tuesday, December 21, 2010

எண்ணங்கள்



தன்னெஞ்சறிவது பொய்யற்க!

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் நூலிழை அளவுதான் வித்யாசம் என்பார்கள். எந்த ஒரு செயலையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம். அதீதமான தன்னம்பிக்கை, அரிய சாகசங்களுக்கு அவசியம். ஆனால், அதை அநாகரிகமாக பொதுஇடத்தில் வெளிப்படுத்தும்போதுதான் அகந்தை ஆகிறது. தில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசிய பேச்சு அவரது தகுதிக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

காங்கிரஸ் மாநாட்டில் மூன்றாம் நாளில் பேசிய ப.சிதம்பரம், "அடுத்த பத்து ஆண்டுகளில், ஏன் அதற்குப் பிறகும்கூட பாரதிய ஜனதாவால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது'' என்று பேசியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் எதிரி என்ற முறையில், அக்கட்சியைச் சாட காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது. எனினும், ஜனநாயக ஆட்சிமுறையில் மக்களே அனைவருக்கும் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோதே, பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அதனை அவர் தனது பலவீனமாகக் கருதவில்லை; ஜனநாயகத்தின் பலமாகவே கருதினார்.

"இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என்று ஒரு காலத்தில் முழங்கிய கட்சிதான் காங்கிரஸ். அதே இந்திராகாந்தி தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியுற்று, 1977ல் ஜனதாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது வரலாறு. நெருக்கடிநிலையை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் என்று யாரும் கனவில்கூட சிந்தித்திருக்கவில்லை.

காங்கிரஸ் சரித்திரத்திலேயே இல்லாத சாதனையாக, 1984ல் 404 காங்கிரஸ் எம்பி.க்களுடன் பிரதமரான ராஜீவ்காந்தி, அடுத்த தேர்தலில் தனது அமைச்சரவை சகாவாக இருந்தவரிடமே படுமோசமான தோல்வியைத் தழுவி, ஆட்சியைப் பறிகொடுத்தார். அதுவும், வெறும் 65 கோடி கமிஷன் கைமாறிய போபர்ஸ் ஊழலுக்காக. இதை காங்கிரஸ் இன்றும் துர்க்கனவாகவே என்றும் நினைக்கும்.

இதையெல்லாம் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலை இருப்பதே, காங்கிரஸ் கட்சியின் தார்மிக வீழ்ச்சிக்கு காரணம் என்று கருத வேண்டியுள்ளது.

1998ல் 13 கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய், அடுத்த ஆறு ஆண்டுகள் காங்கிரஸ் வாடையில்லாத ஆட்சியை நாட்டிற்கு அளித்தார் என்பதையும் சரித்திரம் பதிவு செய்துள்ளது. பாஜக செய்த தவறுகளின் விளைவாகவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி நாட்டில் உதயமானது. இதுவே நமது மக்களாட்சி முறையின் மாண்பு.

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் அதீத தன்னம்பிக்கையுடன் தேர்தல்களம் கண்ட பாஜக, 2004ல் ஆட்சியை இழந்தது. இன்று அதேபோன்ற நிலையில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது என்பதை அக்கட்சித் தலைவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசின் நம்பகத்தன்மை பலத்த அடி வாங்கியுள்ள சூழலில், தனது குறைகளை சரிப்படுத்த முயற்சிக்காமல், பிரதான எதிர்க்கட்சியை கேலி செய்வது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கு கண்டிப்பாக உதவாது.

மத்திய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சி மீது பாய்வதால் மத்திய அரசின் தளகர்த்தர்கள் இப்போதைக்கு சந்தோஷம் அடையலாம். ஆனால், இதன்மூலம் தனது ஒரே எதிரி பாஜக என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டு, அடுத்த தேர்தலில் அத்வானியின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரசியலில் இருதுருவ சேர்க்கைக்கே, காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் ஊக்கமளிக்கின்றன.

"ஆட்சியை எப்படி நடத்துவது, மீண்டும் எப்படி ஆட்சிக்கு வருவது என்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் அறிந்துவைத்திருக்கிறது'' என்றும் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கைதான் நமது நினைவில் வந்துபோகிறது. ஊழல் வழக்குகள் தொடர்பாக, உச்சநீதி மன்றம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கும்போதே தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் தெரிகிறது.

இத்தனைக்கும் பிறகும், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று மனப்பால் குடிக்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உண்டு. தனது தொண்டர்களை உசுப்பேற்ற சில அரசியல் வசனங்களை அக்கட்சித் தலைவர்கள் பேசுவதிலும் தவறில்லை. பேசட்டும்.
அதேசமயம், தனது பேச்சுக்கு கரவொலி எழுப்பும் தொண்டர்கள் போல நாட்டு மக்களும் முட்டாள்களல்ல என்பதையும் உள்துறை அமைச்சருக்கு யாரேனும் சொன்னால் நல்லது.

.

Monday, December 20, 2010

புதுக்கவிதை - 139


தேடலின்
அருகில்...


கள்ள நோட்டு கிருஷ்ணன்கள்...
ஹரிதாஸ் முந்திராக்கள்...
ருஸ்தம் நகர்வாலாக்கள்...
கோபால கிருஷ்ணன்கள்...
ஒட்டாவியோ குவாட்ரோச்சிகள்...
கேதன் பரேக்குகள்...
அப்துல் கரீம் தேல்கிகள்...
சத்யம் ராஜுக்கள்...
நீரா ராடியாக்கள்...
ஆண்டிமுத்து ராசாக்கள்...

பட்டியல் தொடரும்...
கைதுகள் தொடரும்...
பங்கிட்டவர்கள் மட்டும்
சிக்குவதில்லை என்றும்.

எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறது
மத்தியப் புலனாய்வு அமைப்பு...
அடி, முடி தெரியாத ஊழலின் பிறப்பிடத்தை...
அருகில் வைத்துக்கொண்டே.
.

Friday, December 17, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்....


ஆங்கில ஊடகங்களாலும் பிரிவினைவாதிகளாலும் புரட்சியாளராக முன்னிறுத்தப்படும் 'பிரபல' எழுத்தாளர் அருந்ததி ராய் குறித்து, தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை அருமை. வித்தியாசமான கண்ணோட்டத்துடன், சுய சிந்தனையைக் கிளரும் இக்கட்டுரை எனக்கு பிடித்தது. உங்களுக்கும்...

.