Saturday, October 22, 2011

எண்ணங்கள்

சுவாமி நிகமானந்தா

உயிர்ப்புடன் விளங்கும்
பாரதத்தின் மகத்தான ஆயுதம்

பாரத நாட்டுக்கே உரித்தான உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையத்துக்கு எதிராக ஆயிரக் கணக்கானோர் இருந்த தொடர் உண்ணாவிரதம், கேளாச் செவிகளுடன் இருந்த மத்திய, மாநில அரசுகளை கீழிறங்கிவரச் செய்திருக்கிறது. அறவழிப் போராட்டத்தின் சிறப்பு மீண்டும் உலக அரங்கில் பதிவாகி இருக்கிறது.
  .
உண்ணாவிரதம் என்பது பாரதத்தில் தொன்றுதொட்ட வாழ்க்கைமுறையாகவே இருந்துள்ளது. குடும்ப நலனுக்காகவும் கணவர் நலனுக்காகவும் விரதம் இருப்பது இந்தியப் பெண்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு.

அஹிம்சையை போதிக்கும் பாரதத்தில் தோன்றிய மதங்களான பெüத்தமும் சமணமும் உண்ணாநோன்பை வலியுறுத்துவன. அந்தப் பாரம்பரியத்தில் வந்ததால்தான், மகாத்மா காந்தியால் ஆங்கிலேயருக்கு எதிரான வலிமையான ஆயுதமாக உண்ணாவிரதத்தை மாற்ற முடிந்தது.

தன்னல மறுப்பே உண்ணாவிரதத்தின் அடிப்படை. உயிர் வாழ இன்றியமையாத உணவையும்கூட மறுப்பதென்பது மனவலிமையின் அடையாளம். பிறர் நலனுக்காகவோ, ஒரு பொதுநோக்கத்துக்காகவோ உண்ணாவிரதம் இருக்கும்போது, அது மகத்தான வழிமுறை ஆகிறது.

இந்த வழிமுறையால்தான், நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறிக் கிடந்த விடுதலைப் போராளிகளை ஒரே இலக்குடன் ஒருங்கிணைத்தார் மகாத்மா காந்தி; நாடும் விடுதலை அடைந்தது.

இன்று உலக நாடுகள் பலவற்றில் அஹிம்சைப் போராட்டம் அரசியல் ஆயுதமாக மாறி வருகிறது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்கள்நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை ஆயுதமின்றியும் வன்முறையுமின்றியும் போராடச் செய்ய முடியும் என்பதற்கு தென்ஆப்பிரிக்கா, டுனீசியா, எகிப்து நாடுகள் சாட்சியமாகி இருக்கின்றன.

ஆயினும், அஹிம்சைப் போராட்டத்துக்கு உடனடி பலனை எதிர்பார்க்க முடிவதில்லை. செருக்கு மிகுந்த ஆட்சியாளர்களுக்கு இப்போராட்டங்கள் உடனடியாகப் புரிவதில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் சில சமயங்களில் வீணாவதும் உண்டு. ஆயினும், அந்தப் போராட்டம் களத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் தொடர்ந்து ரீங்காரமிடும்.

சுதந்திர இந்தியாவில், மகாத்மாவின் வழிமுறையில் பலர் இதுவரை உண்ணாவிரதப் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் தனி ஆந்திர மாநிலத்துக்காகக் குரல் கொடுத்த பொட்டி ஸ்ரீராமுலு. தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் அமைக்கக் கோரி 1952ல் 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை மாய்த்துக் கொண்ட ஸ்ரீராமுலுவால்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.

அவரது அடியொற்றி 2009ல் தனி தெலுங்கானாவுக்காக 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அரசால் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். தெலுங்கானா கோரிக்கை இன்னும் நிறைவேறாவிட்டாலும், கொள்கை அடிப்படையில் அது ஏற்கப்பட்டு விட்டது.

உண்ணாவிரதம் குறித்த நினைவுகள் எழும்போது தமிழீழப் போராளி திலீபனின் தியாகத்தை மறக்க முடியாது. இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை தனது இலக்கை மாற்றிப் பயணப்பட்டபோது அதை எதிர்த்து இலங்கையில் 1987ம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார் திலீபன். அவரது கோரிக்கை அன்று ஏற்கப்படாததன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.

உண்ணாவிரதம் உயிர்த்தியாகத்துடன் முடிவடைவதற்கு, கடந்த ஜூனில் உயிர்நீத்த சுவாமி நிகமானந்தா மற்றோர் உதாரணம். கங்கை மாசுபடுவதற்கு எதிராக தனியொருவராகப் போராடிய நிகமானந்தா உத்தரகாண்ட் மாநிலத்தில் 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மடிந்தார். நதிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அவரது தியாக மரணம் உருவாக்கி இருக்கிறது.

நமது அரசியல் தலைவர்களாலும் உண்ணாவிரப் போராட்டம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2006ல், மேற்கு வங்க மாநிலம், சிங்குரில் டாடா கார்த் தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 22 நாட்கள் இருந்த உண்ணாவிரதம், தொழிற்சாலையை இடம் மாற்றியதுடன் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பியது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை காக்க அதிமுக தலைவி ஜெயலலிதா 1991ல் முதல்வராக இருந்தபோது 4 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் அப்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதியும் பலமுறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால், 2009ல் முதல்வராக இருந்தபோது அவர் நடத்திய உண்ணாவிரத நாடகம் இலங்கைத் தமிழரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தலையிடக் கோரியும், இலங்கை ராணுவத்தின் போரை நிறுத்தக் கோரியுமó ஒருநாள் காலை 7 மணிக்குத் துவங்கி 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து புரட்சி செய்த கருணாநிதியால் உண்ணாவிரதம் கேலிப்பொருளானது. உண்ணாவிரதத்துக்கு எதிரான உண்ணும் விரதம் என்ற கிறுக்குத்தனமான முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் தமிழகத்துக்கு உண்டு.

மணிப்பூரில் பாதுகாப்புப் படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 2000த்திலிருந்து 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் ஷர்மிளா, கறுப்புப் பணத்துக்கு எதிராக சென்ற ஜூன் மாதம் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், ஜன லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி சென்ற மாதம் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆகியோரும் உண்ணாவிரதத்தின் பெருமையை உயர்த்தியவர்கள்.

நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக 2006ல் 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூகப் போராளி மேதா பட்கர் அப்போராட்டத்தில் வெல்லாத போதும், மும்பை குடிசைவாசிகளுக்கு ஆதரவாக 2011ல் 9 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் வெற்றி பெற்றது. இதிலிருந்து போராட்டத்தின் நோக்கமும் முழு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டியதன் தேவை தெரிகிறது.

இந்த உண்ணாவிரதக் களத்தில் அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் குதித்தார். சமூக நல்லிணக்கத்துக்கான அவரது மூன்று நாள் உண்ணாவிரதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக சேவகர்களும் அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பும் ஆயுதமான உண்ணாவிரதம், இப்போது கூடங்குளத்தில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. பொதுநலனுக்காக தன்னை வருத்திக்கொண்டு பாடுபடும் எவரும் மானிட குலத்துக்கு நலன் விளைவிப்பவர்களே.

பாரதத்தின் மகத்தான ஆயுதம் மீண்டும் புத்துணர்வு பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்களின் மனங்களிலும் மாற்றம் நிகழ்த்தட்டும்!

 - தினமணி (தலையங்கப் பக்க துணைக் கட்டுரை) - 22.10.2011
 .

No comments:

Post a Comment