Saturday, May 26, 2012

மாற்று ஊடக வாய்ப்புக்களும் நாமும்...




அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு, ஊடங்களின் ஏகபோகம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கியது, இணையதளம் என்னும் அறிவியலின் அதி அற்புதக் கண்டுபிடிப்பே.

ஒருகாலத்தில் செய்தியை அறிய வேண்டுமானால், பத்திரிகைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டி வந்தது. அச்சு ஊடகங்களின்   பொற்காலம் அது. அதன் பிறகு வானொலி வந்தது. அது சிறிதுகாலம் செய்திப்பசி தீர்த்தது. இந்தியாவில் தொலைக்காட்சிகளின் வசீகர யுகம் துவங்கிய 1990 களில் இருந்து சுமார் 20 ஆண்டுகள் ஊடக சாம்ராஜ்யமாக நிலைகொண்டது தொலைக்காட்சி. 24 X 7 செய்தி அலைவரிசைகளின் வரவால், அச்சு ஊடகத் துறை சற்றே நிலைகுலைந்தது.

முன்னர் பத்திரிகைகளுக்கு வாசகர் ஒரு துணுக்கு எழுதி அனுப்பிவிட்டு காத்திருப்பார். அது பிரசுரமானால் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பல நேரங்களில்  வாசகர்கள் பத்திரிகைகளால் மதிக்கப்பட்டதில்லை. தங்கள் நுகர்வோர் வாசகர்களே என்ற அடிப்படை உண்மையை மறந்து, தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகைகளை இன்றும் காண முடிகிறது.

பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஏதாவது ஒருபக்கச் சார்புடன் தான் இயங்குகின்றன. 'தினமணி' போன்ற நாட்டுநலன் கருதும் பத்திரிகைகள்  இருக்கும் இடத்திலேயே தான் 'தி ஹிந்து' போன்ற பத்திரிகைகளும் இருக்கின்றன என்பது நெருடல் அளிப்பது. நமது நாட்டைவிட எதிரி நாட்டை நேசிக்க,  இது போன்ற பத்திரிகைகளைப் படிப்பவர்கள் நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள்.

இதே போக்குத்தான் செய்தி அலைவரிசைகளிலும் காணக் கிடைக்கிறது. அரைத்த மாவையே ஒரு மணிநேர இடைவெளியில் தொடர்ந்து அரைக்கும் சாதுரியம் கொண்டவை நமது தொலைக்காட்சிகள். நாட்டின் அரசியலையே தாங்கள் தான் நடத்துவதாக சில சேனல்கள் நம்பித் திரிகின்றன. சுயநல நோக்குடன் வெளியிடும் செய்திகளால் நாட்டுக்கு தீராத பாதிப்பை ஏற்படுத்தும் ஆங்கில செய்தி சேனல்கள் குறித்து தீர ஆராய வேண்டி இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் ஊழல் பெருச்சாளி ஒருவரை சேர்க்க சில பத்திரிகையாளர்கள் பாடுபட்ட விஷயம் அம்பலமானபோது நாடு அதிர்ந்தது.

தமிழ் சேனல்களோ அழுமூஞ்சித் தொடர்களால் நமது வீட்டுப் பெண்களைக் கட்டிப் போட்டிருக்கின்றன. வானொலி இப்போது அருகி வரும் சாதனம் ஆகிவிட்டது. சினிமா, நாடகத் தொடர்கள், வெறுப்பூட்டும் அரட்டைகள், என்று தமிழ் சேனல்கள் நோக அடிக்கின்றன.

இந்நிலையில், தகவல் தொடர்பு யுகத்தின் அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள இளைய தலைமுறையினருக்கான மாற்று ஊடகமாக இணையம் உருவாகி இருக்கிறது. இன்று தனது கருத்தை யாரும் தெரியப்படுத்த இணையம் சுதந்திரம் வழங்கி இருக்கிறது. தனது கருத்தை வெளிப்படுத்த பாரம்பரியமான ஊடகங்களை யாரும் சார்ந்திருக்கத் தேவையில்லை.

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சுயநலனுடனும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட நிலையில், அதன் செய்திப் பிதற்றல்கள கண்டு நொந்திருந்த வாசகருக்கு ஒரு வாய்ப்பாக சமூக இணையதளங்கள் முளைத்துள்ளன. இன்று உலகம் முழுவதுமே இதே நிலையைக் காண முடிகிறது. அதன் காரணமாக, பாரம்பரிய ஊடகங்களும் இணைய உலகில் நுழைந்துள்ளன. இணையக்   கருத்துக்களை அச்சேற்றுவதும் இப்போது துவங்கி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம்.

இன்று முகநூல்  (FACEBOOK) முகவரி இல்லாத இளைஞரைக் காண்பது அரிது; வலைப்பூ (BLOGS) நடத்தாத இளம் தலைமுறையைக் காண இயலாது. நிரந்தர இணையதள முகவரி, இப்போது வேலைக்காக  விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வின்னப்பங்களிலேயே இடம்பெறத் துவங்கிவிட்டது. மின்னஞ்சல் முகவரி நமது உலகின் முகவரியை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. சிறு தகவல் பரிமாற்றம் (TWITTER) நடக்கும் யுகம் இது. இணையத்தின் அனைத்து வசதிகளையும் ஆர்வத்துடன் உள்வாங்குவதில் நமது இளைஞர்களும் இளைஞிகளும் உலகில் யாருக்கும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருந்தவை சமூக இணையதளங்களே.

சமூக வலைத்தளங்களில் பங்கேற்கும்போதே, ஒருவரது சமூகப் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது. உலகிற்கு தனது கருத்தைத் தெரியப்படுத்தத் துடிக்கும் விழைவே சமூகத் தளங்களில் வெளிப்படுகிறது. இணையத்தில் இவ்வாறு இயங்கும் இளைஞர்கள் ஆங்காங்கே ஓர் அமைப்பாக இணைவதும் இப்போது ஒரு நடைமுறையாக  மாறி வருகிறது.

பல்வேறு  சிந்தனை கொண்டவர்கள், பலவித கொள்கைகளைக் கொண்டவர்கள், மதம், ஜாதி, அரசியல், மொழி என பல விதங்களில் மாறுபட்டவர்கள் - அனைவரும் இணையம் என்ற ஒற்றைத் தொடர்பால் நண்பர்களாகி ஒருங்கிணைவது நல்ல மாற்றம்.  அந்த வகையில் இப்போது கோவையில் இயங்கும் வலைப்பூ பதிவர்கள் அனைவரும் 'கோவை பதிவர்கள்' என்ற குழுமமாக இணைவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜவுளி நகரமாக ஒருகாலத்தில் விளங்கிய கோவை தற்போது தொழில்நகரமாக உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகராகவும், கல்வி, மருத்துவத்தில் உயர்ந்துவரும் நகராகவும் உள்ள கோவை இலக்கிய உலகிலும் பல பதிவுகளைக் கொடு வளர்ந்து வருகிறது. இத்தகைய பெருமை கொண்ட கோவையை மையமாகக் கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களில் செயல்படும் பதிவர்களை இணைக்கும் பசையாக 'கோவை பதிவர்கள்' அமைப்பு  செயல்பட முடியும். இந்தச் சிந்தனை மனதில் தோன்றிய நண்பர்களுக்கும், அதை நனவாக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்த அமைப்பு, ஓர் மின்னஞ்சல் குழுமமாக மட்டுமல்லாது, வலைப்பூ தொகுப்பாளர்களாகவும் வளர்ச்சி பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது கருத்துக்களை தத்தமது வலைத் தளங்களில் வெளிப்படுத்தி, மானுட ஞானத்தை மேலும் விரிவாக்குவோம். நாம் ஒருவரை ஒருவர் பாராட்டியும் விமர்சித்தும்,  நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வோம்.

மாறிவரும் உலகின் தேவைகளை விவாதித்து அறியவும், சமூகச் சீரழிவுகளைக் கண்டிக்கவும், மாற்றத்துக்கான விதைகளை தூவவும், நல்ல விஷயங்கள் எத்திசையில் இருந்து வந்தாலும் அவற்றைக் கிரஹிக்கவும், நமது கலாச்சாரம் காக்கவும்,  நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், இணையத்தை ஆக்கப்பூர்வமான சக்தியாகப் பயன்படுத்துவோம்.

இது தொடர்பாக நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.



(கோவை பதிவர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் எழுதியது)
 .








3 comments:

சசிகலா said...

மாறிவரும் உலகின் தேவைகளை விவாதித்து அறியவும், சமூகச் சீரழிவுகளைக் கண்டிக்கவும், மாற்றத்துக்கான விதைகளை தூவவும், நல்ல விஷயங்கள் எத்திசையில் இருந்து வந்தாலும் அவற்றைக் கிரஹிக்கவும், நமது கலாச்சாரம் காக்கவும், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், இணையத்தை ஆக்கப்பூர்வமான சக்தியாகப் பயன்படுத்துவோம்.// தங்கள் கருத்து முகவும் சரியானதே .

உலக சினிமா ரசிகன் said...

கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
இணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
இவண்
உலகசினிமா ரசிகன்,
கோவை

Unknown said...

உங்களது கருத்துக்களுடம் முற்றுமுழுதாக ஒத்துப்போகிறேன் சார்

Post a Comment