Saturday, August 4, 2012

ஜெயமோகனுக்கு ஒரு கடிதமும் பதில் கடிதமும்



ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன்.

வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே குறிக்கோளைத் தவறவிட்டுப் பன்னாட்டு உரம், பூச்சிமருந்து, விதை கம்பெனிகளின் தரகர்களாக மாறிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ரூ. 4 கோடி பணம் தரப்பட்டதாக தகவல் உண்டு. இந்தப்பணம் அநேகமாகப் பன்னாட்டு நிறுவனத்தின் பணமாகத் தான் இருக்கும். இப்போது பதவியில் இருந்து விலகிய ஒரு துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இப்போதும் இந்தக் காலியிடத்துக்கு பலத்த அடிதடி நடக்கிறது.

வேளாண் பல்கலையில் பல செய்தி சேகரிப்பு நிகழ்வுகளுக்கு ஒரு நிருபராக நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகள் சில நிறுவனங்களால் ‘ஸ்பான்சர்’ செய்யப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் முகவர்கள். பலகோடி செலவில் இயங்கும் பலகலைக்கழகம் இதுபோன்ற கருத்தரங்குகளை சொந்த செலவில் செய்ய முடியாதா?

முடியும். ஆனால், பல்கலையில் உள்ள தாசர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதன் பின்விளைவாகவே, மரபணு மாற்றப்பட்ட நெல் எந்த அனுமதியும் இன்றிப் பரிசோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை வயலில் விளைவிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் பெரும் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்பட்டது.

கோவை வேளாண் பல்கலையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட பலநூறு பயிர் ரகங்களில் இன்றும் உபயோகத்தில் உள்ளவை எவை என்று கேட்டால் அங்குள்ளவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. மொத்தத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் அரசு நிதியை விழுங்கவும், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்கான விவசாயப் பட்டம் வழங்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படவுமே வேளாண் பல்கலைக்கழகங்களால் இயலும்.

பசுமைப் புரட்சி மட்டுமல்ல, இனிவரும் எந்த விவசாய முன்னேற்ற திட்டமும் இத்தகைய முதுகெலும்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படுமானால் எந்த நற்பயனும் விளைவது சந்தேகமே.

வமுமுரளி

---------------------------------------

அன்புள்ள முரளி

நம்மாழ்வார் அடிக்கடி ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார்

ஒரு விருந்தில் பரிமாறப்பட்ட திராட்சைப்பழங்களை வேளாண் பல்கலைத் துணைவேந்தர் ஜெயராஜ் உண்ண மறுத்துவிட்டார். அவை ஒரு பூச்சிக்கொல்லிக்குள் ஊறப்போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்றார். அவற்றுக்குள் பூச்சிக்கொல்லி ஊடுருவியிருக்கும், ஆஸ்துமா உருவாக்கும் என்றார்

ஏன், அந்த மருந்து தீங்கற்றது என்றுதானே பல்கலைக்கழகம் பிரச்சாரம் செய்கிறது என்று நம்மாழ்வார் கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தாராம்

ஜெ

---------------------------------------

காண்க: ஜெயமோகன் இணையதளம்  (30.07.2012)
.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பல தகவல்கள்... நன்றி...

Post a Comment