Friday, December 11, 2009

மரபுக் கவிதை - 56


பாரதியைப் பார்

எத்தனை புலவர்! எத்தனை கவிஞர்!
எத்தனையோ பேர் இத்தரணியிலே!
அத்தனை பேர்க்கும் ஆதவனாக,
அவதரித்தவனே பாரதியாவான்!

வாழ்ந்தது சிலநாள் - வறுமையின் பிடியில்!
வருந்திடவில்லை தேசியக் கவிஞன்!
தன்னது கடமை மறந்தானில்லை!
தவமென வாழ்ந்தே கவிதை செய்தான்!

'உலகினில் அனைவரும் மனிதர்கள் தானே!
உற்றவர், அற்றவர் என்றிடல் வேண்டா!
எல்லாம் சமமே எண்குணன் முன்னே!'
என்றிடும் பாவில் எத்துணை உண்மை!

வித்தக ஞானி விளைநிலம் நமது!
வித்தைகள் பலசெய் சித்தர்கள் தேசம்!
அத்தனை பேர்க்குள் முத்தென வந்தான் -
அன்னவனவனே பாரதியாவான்!

தாழ்ந்திடு நாட்டைத் தட்டியெழுப்ப
போர்க்கவி பாடும் பேரிகையாக,
பற்பல கவிதை ஆக்கிய அவனின்
பதமலர் பணிந்தால் பயமது தீரும்!

விலக்கிட வேண்டிய தீதினைச் சுட்டி,
விதியதன் வலிவை விளங்கிட வைத்து,
காளியின் நடமும் கண்ணனின் குழைவும்
கானமிழைத்திடு கவிஎனத் தந்தான்!

நித்திய தெய்வ நிலையறிந்தோர்கள்
நித்தில மீதில் சுடரொளி மிளிரும்!
மாபெரும் உலகில் மாதவர் சிலரே!
மாதவர் மணியே பாரதி ஆவான்!

பாழ்படு மதத்தின் தூசுகள் நீக்கி,
பார்புகழ் வரைசெய் தூரிகையாக,
மூச்சுள்ளளவும் முனைந்திருந்ததனை
மூடர்கள் காணில் திருந்திடு முள்ளம்!

திலகரை அரசியல் குருவாய்க் கொண்டான்,
திருவள்ளுவரை கர்த்தா என்பான்!
காந்தியை மிக்க பணிவுடன் கண்டான்,
காவியமாய் இதைக் கவியினில் சொன்னான்!

சித்தர்கள் பலரில் கடைசியும் இவனே!
சிறப்புறு தேசபக்தனும் இவனே!
காழ்ப்புகள் மிகுந்த அரசியலினிலே
காரியம் ஒன்றே உயிரெனக் கொண்டான்!

பலபேர் பிறந்து, இறந்து, மறைந்தும்
பலனெதுமில்லை! பாரதியைப் பார்!
பாரதியைக் கேள்! பாரதியாய் வாழ்!
பாரதியைச் சொல்! பாருள வரையில்
பாரதி போலே நிலைத்திட நிற்பாய்!
பாரதி ஆவாய்! பாரதன் ஆவாய்!
நன்றி: மாணவர் சக்தி (டிசம்பர் - 1998)
.

No comments:

Post a Comment