Saturday, August 27, 2011

எண்ணங்கள்


ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஊழல்  குற்றச்சாட்டுகளை அடுத்து கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா பதவி விலகியது, பிற கட்சிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதோ இல்லையோ, அவர் சார்ந்த பாஜகவுக்கு நிம்மதி அளித்திருக்கும். ஊழலுக்கு எதிராக தேசிய அளவிலான போரில் முனைப்பு காட்டும் பாஜகவுக்கு எடியூரப்பா ஒரு கரும்புள்ளியே. அதைவிட, அவரை பதவியிலிருந்து விலகவைக்க பாஜக மேற்கொண்ட பகீரத முயற்சிகள், அக்கட்சி மீது பரிதாபத்தையே ஏற்படுத்தின.
எந்த ஒரு தலைவரோ, தொண்டரோ கட்சியைவிட பெரியவர் அல்ல. எந்த ஒரு கட்சியும் தேசத்தைவிட பிரதானமானது இல்லை. இதுதான் ஜனநாயகத்தின் மூலாதாரம். தொண்டர்கள் இணைந்து இயக்கமாகிறார்கள். அதை திறமையுடன் வழிநடத்துபவர்கள் தலைவர் ஆகிறார்கள். அதே தலைவர்கள் தாங்கள் வளர்த்த இயக்கத்தையே சுயநலனுக்காக அடகுவைக்கத் துணியும்போது இயக்கங்களின் நிலை கேள்விக்குறி ஆகிறது.
 
ஜனநாயக அடிப்படையில் இயங்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் நிலை, இதுபோன்ற தருணங்களில் தடுமாற்றத்துக்கு உள்ளாவது இயற்கையே. தனிநபரை முதன்மையாகக் கொண்ட எதேச்சதிகாரம் மிகுந்த கட்சிகளுக்கு இத்தகைய தர்மசங்கடங்கள் நேர்வதில்லை. இதற்கு மிகச் சரியான உதாரணம், காங்கிரஸ் கட்சி.
 
அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கே ஆயினும், நேரு குடும்பத்தின் ஆளுகைக்கு உட்பட்டாக வேண்டும். திமுக, அதிமுக, சமாஜ்வாதி, சிவசேனை, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், தெலுங்குதேசம் என பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் குடும்ப ஆதிக்கம் அல்லது தனிநபர் ஆதிக்கமே கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
 
மாறாக, கொள்கையை முன்னிலைப்படுத்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு அடிக்கடி இத்தகைய சிக்கல்கள் நேரிடுகின்றன. பிற கட்சிகளின் செயல்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம் இக்கட்சிகளையும் பாதிக்கிறது.
 
இதில் வேடிக்கை என்னவென்றால், தனிநபர் மேலாதிக்கம் மிகுந்த கட்சிகளைப் பாராட்டும் ஊடகங்கள், அவற்றில் உள்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள்- உள்கட்சி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கட்சிகள் சுயநலத் தலைவர்களிடம் சிக்கித் தவிக்கும்போது, அவற்றை மேலும் காயப்படுத்துகின்றன.
 
பாஜகவுக்கு உயர்மட்டத் தலைவர்கள் பிரச்னையாவது புதிதல்ல. அதன் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் அகில பாரதத் தலைவராக இருந்த பால்ராஜ் மதோக் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதற்காக நீக்கப்பட்டிருக்கிறார். கோவிந்தாச்சார்யா, சங்கர்சிங் வகேலா, உமாபாரதி, கல்யாண் சிங், ஜஸ்வந்த் சிங் என சமீபகாலத்தில் கட்சிக்குள் சர்ச்சையைக் கிளப்பிய தலைவர்களுக்கு பாஜகவில் பஞ்சமில்லை.
 
மார்க்சிஸ்ட் கட்சியிலும் இதேபோன்ற காட்சிகள் உண்டு. திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியும், கேரளாவின் கெüரியம்மாளும் மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சட்டர்ஜியும் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் கூட கேரளா மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நிகழ்ந்துவரும் பினராயி விஜயன்- அச்சுதானந்தன் மோதல் அனைவரும் அறிந்தது.
ஆனால், இந்தியாவில் உள்ள கட்சிகளில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் ஓரளவேனும் காக்கப்படுகிறது. சரியான கால இடைவெளிகளில்  கீழிருந்து மேல்மட்டம் வரை உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது இக்கட்சிகளில் மட்டுமே.
 
இதன் காரணமாகவே, எந்த ஒரு பதவியிலும் யாரும் நிலையாக ஒட்டிக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை இக்கட்சிகளில் காணப்படுகிறது. புதிய தலைவர்கள் உருவாக இம்முறை வழிவகுத்தாலும், நிலையான ஆளுமை கொண்ட தலைவர்கள் இக்கட்சிகளில் உருவாவதில்லை. நரேந்திர மோடி, ஜோதிபாசு போன்ற தலைவர்கள் இதில் விதிவிலக்கு.
 
அத்வானி போன்ற மாபெரும் ஆளுமைகளும் கூட கட்சிக் கட்டுப்பாட்டின் முன் சரணடைந்த நிலையையும் கண்டிருக்கிறோம். அத்வானி தனக்கு கட்சியில் ஏற்பட்ட சரிவையும் கூட, கொள்கைக்கு முக்கியத்துவம் தந்ததால் பொறுத்துக் கொண்டார். அதையே எடியூரப்பாவிடமும் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். இது பாஜகவுக்கு கிடைத்துள்ள பாடம்.
 
எடியூரப்பாவும் அத்வானி வளர்ந்த அதே லட்சியச் சூழலில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால், தனிநபர் குணாம்சங்கள் லட்சியக் கனவுகளை வென்றுவிடுகின்றன. இதற்கு தற்போதைய சுயநல அரசியல் உலகமும் ஒரு காரணம் எனில் மிகையில்லை. 
 
1990களில் ஹவாலா மோசடியில் தன்மீது புகார் கூறப்பட்டதும் தனது பதவிகளை ராஜிநாமா செய்த அத்வானி, அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும்வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று சபதம் செய்தார். பிறகு அவரது நேர்மை நிரூபிக்கப்பட்டது. அவரும் மீண்டும் அரசியலுக்கு வந்து பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்.
 
அதேபோன்ற தார்மீக வேகம் எடியூரப்பாவிடம் இல்லாதது பாஜகவுக்கு மட்டுமல்ல, நல்லரசியலை விரும்பும் எவருக்கும் ஏமாற்றமே. அத்வானி போன்றவர்களுக்கு ஏற்படும் சரிவு, எடியூரப்பா போன்றவர்களை குறுக்குத்திசையில் சிந்திக்கச் செய்வதைத் தவிர்க்க முடியாது.
 
அரசியலில் தார்மீக நெறிகளின் வீழ்ச்சி, நமது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். குறைந்தபட்சம், கொள்கையை முன்னிறுத்தும் கட்சிகளேனும் சுயநலவாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். முன்னுதாரணங்கள் போற்றப்படுவதும், பின்பற்றப்படுவதுமே இதற்கான தீர்வு. சாமானிய இந்தியனின் எதிர்பார்ப்பும் இதுவே.

 

நன்றி: தினமணி (26.08.2011)
.

Monday, August 15, 2011

வசன கவிதை - 89

மூன்றாவது சுதந்திரப் போர் 

1857:


வியாபாரியிடம் அடகுவைக்கப்பட்ட

சுயஉரிமையை மீட்கத் துடித்த

வீரர்களின் வேகத்தால் கிளர்ந்தது

சிப்பாய்க் கலகம்.


அடிமைப்பட்டதை உணர்ந்த

நம் முதல்கணம் அது.

விட்டில்பூச்சிகளாய் அதில்

விழுந்த தியாகியர் ஆயிரம்!


1947:


வீட்டுக்குள் குத்துவெட்டு

நடத்திக்கொண்டு விண்ணப்பித்த

மக்கள் இயக்கம் மந்தம்நீங்க,

அடுத்தகட்டப் போராட்டம்

அஹிம்சையாய்த் துவங்கியது.


தடியடி, தூக்குமேடை,

சிறைவாசம், கல்லுடைப்பு,

நூல்நூற்பு, பகிஷ்கரிப்பு,

எனப் படிகள் பல தாண்டி,

லட்சக் கணக்கான

தேசியப் பைத்தியங்களால்

விலங்கு உடைந்தது.

நம்மை நாமே நமக்காய்

ஆள்வது சாத்தியமானது.


2011:


இப்போது நடப்பது

மூன்றாவது கட்டம்.

அரசியல் அராஜகம்,

ஆபத்தான மதவாதம்,

இடையூறான ஊழல்

இம்மூன்றும் வெறுத்த

மூன்றாவது தலைமுறை

நடத்தும் யுத்தம்

வளரட்டும் எங்கும்!


கோடிஇளைஞர்களின்

ஆவேசத்தின் முன்பு

அதிகாரபலம் பொடியாகட்டும்!

சுயநலக் கயவரின்

அரிதாரம் கலையட்டும்!

முந்தைய அனுபவம் வழிநடத்தட்டும்.

பிந்தைய தலைமுறை பயன்பெறட்டும்!

பாரதம் மீளவும் பண்படட்டும்!


நன்றி: தினமணி (கோவை) -(15.08.2011)
வந்தேமாதரம்- விளம்பரச் சிறப்பிதழ்
.

Thursday, August 4, 2011

எண்ணங்கள்


திசை திருப்பும் வாயாடிகள்... திணறுகிறது ஜனநாயகம்


இதுவரை காணாத மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு, புகார் கூறுபவர்களையே எள்ளி நகையாடி வருகிறது. லோக்பால் மசோதாவுக்காகப் போராடும் அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மிரட்டியது இருநாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முழுமையான லோக்பால் சட்டம் கொண்டுவராவிட்டால் தில்லியில் உண்ணாவிரதம் இருப்பதாக அண்ணா ஹசாரே அறிவித்தபோது, "ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஹசாரேவுக்கும் ஏற்படும்' என்று எச்சரித்தார் திக்விஜய் சிங். அதன்மூலமாக, ஊடகங்களின் கவனத்தை சில நாட்களுக்கு திசை திருப்பினார் அவர்.

இதன்மூலமாக யோகாகுரு பாபா ராம்தேவையும் அண்ணா ஹசாரேவையும் ஒப்புமைப்படுத்தினார் திக்விஜய் சிங். இவ்வாறு இருவேறு தரப்பினரை இணைத்துப் பேசுவதும், அதற்கு இரு தரப்பினரும் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதும் இவருக்கு கைவந்த கலை.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது 2ஜி ஊழலில் புகார் கூறப்பட்டவுடன், அதுபற்றிப் பேசாமல், சம்பந்தமே இல்லாமல் வலதுசாரி தீவிரவாதம் குறித்து எச்சரித்தார் அவர். மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை திசைதிருப்ப இந்து இயக்கங்களை வம்புக்கு இழுத்தார் திக்விஜய் சிங்.

சீறிவரும் காளையை துணியால் போக்குக் காட்டி திசை மாற்றும் உத்தியே இது. இப்போதைக்கு கபில் சிபல், மணிஸ் திவாரி, ஜெயந்தி நடராஜன் போன்ற பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கடைபிடிக்கும் தந்திரம் இதுவே.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களை மிகவும் லாவகமாகக் கையாள்வார். சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதிரிகளை நிந்திப்பதும், கேள்வி கேட்பவர்களையே திசைதிருப்பி திக்குமுக்காட வைப்பதும் கருணாநிதியின் தனித்திறன். அதை திமுகவின் கூட்டாளியான காங்கிரஸýம் கற்றுக் கொண்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.

"சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படுகிறார்' என்ற, அமைச்சர் கபில் சிபலின் வாதமும் இதே வகையானதுதான். இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதே கபில் சிபலின் நோக்கம். ஊழலுக்கு எதிராகப் போராட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உரிமை உண்டு என்பது தெரியாதவரல்ல கபில் சிபல். ஆனால், மதவாத முத்திரை குத்தி ஊழலுக்கு எதிரான அறப் போராட்டத்தை சிதைப்பதே அவரது திட்டம்.

அண்ணா ஹசாரேவும், சந்தோஷ் ஹெக்டேவும் பாஜக-வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நன்றாகவே அறிவர். கர்நாடகாவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்தவர் சந்தோஷ் ஹெக்டே. மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக- சிவசேனை கூட்டணி அரசுக்கு எதிராகப் போராடி இருக்கிறார் ஹசாரே. ஆயினும் இரு தரப்பினரையும் கள்ள உறவாளிகளாகச் சித்தரிப்பது காங்கிரஸ்காரர்களின் தொடர் முயற்சியாக உள்ளது. இதற்கு பதிலளித்து தங்கள் சக்தியை விரயம் செய்கிறார்கள் ஊழலுக்கு எதிரான போராளிகள்.

இந்தப் பிரித்தாளும் தந்திரத்தை தெரிந்தோ தெரியாமலோ தொலைக்காட்சி ஊடகங்களும் பின்பற்றுகின்றன. யோகாகுரு பாபா ராம்தேவ் கூறுவதுபோல,  உண்ணாவிரதம் துவங்கும் முன்னர் காங்கிரஸ் காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அவர் சர்ச்சைக்குரியவராகத் தெரியவில்லை. பிறகே அவரது சொத்துக்கள் தோண்டப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு சமய சஞ்சீவியாக கைகொடுப்பவையாக ஆங்கில ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு தீனி போடுவது, திக்விஜய் சிங் வகையறாக்களின் வேலையாக உள்ளது.

ஊடக மேலாண்மை மட்டுமே போதும், ஊழல் படுகுழியிலிருந்து வெளிவந்துவிடலாம் என்று காங்கிரஸ் நம்புவதாகத் தெரிகிறது. அதற்காகவே வகுப்புக் கலவர தடுப்பு மசோதா போன்ற விபரீதமான முயற்சிகளையும் மத்திய அரசு அரங்கேற்றுகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஊழல்புகார்களிலிருந்து அரசு தப்புவதற்கான கேடயங்களாக கர்நாடக அரசியலும், வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவும் இருக்கும் என்பது திண்ணம்.

பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவோ, வார்த்தை வித்தகர்களான காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லுக்கு நிற்பதிலேயே காலம் கடத்துகிறது. தன்மீதான தாக்குதலைத் தடுக்க முரட்டுத்தனமான தாக்குதல் நடத்துவது சதுரங்க விளையாட்டில் முக்கியமான தற்காப்பு உத்தி. இதையே காங்கிரஸ் செய்கிறது. இது புரியாமல், ஊழலுக்கு எதிராக பிரிந்துநின்று போராடும் பல தரப்பினரும் மேலும் பிளவுபடுகிறார்கள்.

"எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமா என்ன?' என்று அண்மையில், திருவாளர் பரிசுத்தமாகப் போற்றப்படும் நமது பிரதமர் மன்மோகன் கேட்டிருக்கிறார். அதாவது, தான் யோக்கியமில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளை தம்முடன் ஒப்பிடுகிறார்.

ஒருவேளை பிரதமரின் இந்த வாக்குமூலம் பிரச்னையை ஏற்படுத்தினால், இருக்கவே இருக்கிறது ராகுல் புராணம். மாயாவதி, நக்ஸல் பிரச்னை, குஜராத் விவகாரம், ரயில் விபத்துக்கள் என்று ஏதாவது ஒரு பிரச்னையைப் பெரிதுபடுத்தினால், இந்த விஷயம் சிறியதாகிவிடும்.

நூறுகோடி மக்களின் ஜனநாயகம் இப்போது சில வாயாடிகளின் வார்த்தை விளையாட்டுக்களில் சிக்கித் தவிப்பது குறித்து நாம் அறிந்திருக்கிறோமா? நமது ஜனநாயகத்தை அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்ற சாமியாடிகள் தான் மீட்க வேண்டும்.

நன்றி: தினமணி (04.08.2011) தலையங்கப் பக்க துணைக் கட்டுரை. 
.