Thursday, December 19, 2013

சாகித்ய அகாதெமி விருதுக்கு 'கொற்கை' நாவல் தேர்வு




திருநெல்வேலி, டிச. 18: திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளரும் தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியுமான ஜோ டி குரூஸ் (51) எழுதிய 'கொற்கை' நாவல் நிகழாண்டு (2013) இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட கடலோரக் கிராமங்களில் ஒன்று உவரி. இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிக் கல்வியை திருநெல்வேலி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், உயர்கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரமாகப் பயின்றவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பிஃல். பயின்றார்.

இவர் ஏற்கெனவே 'ஆழிசூழ் உலகு' எனும் நாவலை எழுதியுள்ளார். அந்த நாவலுக்கே சாகித்ய அகாதெமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, இவரது 'கொற்கை' நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

Tuesday, November 5, 2013

புட்டிகளின் உலகம்





ங்கிங்கெனாதபடி எங்கும்
பரவிக் கிடக்கின்றன புட்டிகள்.

சாக்கடைக் கால்வாய்களில்...
குப்பைமேடுகளில்...
முட்டுச்சந்துகளில்...
சாலையோரங்களில்...
இருட்டு மூலைகளில்...
எல்லா இடங்களிலும்
காணக் கிடைக்கின்றன புட்டிகள்.

கரும்பச்சை நிறப் புட்டிகள்...
தங்கநிறம் மின்னும் புட்டிகள்...
கழுத்து நீண்ட புட்டிகள்...
சப்பையான புட்டிகள்...
குடுவை வடிவிலான புட்டிகள்...
எல்லா வடிவங்களிலும்
பொறுக்கக் கிடைக்கின்றன புட்டிகள்.

Saturday, November 2, 2013

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!

அனைத்து மதத்தினருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!


பண்டிகைகள் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவை மட்டுமல்ல, இவை தான் மக்களை ஒரு சமுதாயமாகப் பிணைக்கின்றன. அதிலும் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் புழங்கும் இந்தியப் பெருநிலத்தில் பண்டிகைகளின் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல.
 

குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. 'பண்டிகைகளின் ராஜா' என்று தீபாவளியைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு பல்வேறு சமுதாயத்தினரிடமும், பல்வேறு மதத்தினரிடமும் தீபாவளியின் தாக்கம் உள்ளது.

Friday, August 30, 2013

பார்க் கல்லூரி விழாவில் பங்கேற்பு


திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை,  அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு. திருமாறன் எனது நண்பர்; விவேகானந்தம் 150 இணையதளத்தின் தொடர்ந்த வாசகர். அந்தத் தளத்தில் சென்னையைச் சார்ந்த ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  அவர் திரு. திருமாறன் அவர்களுடன் ஒரே கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்தவர். இது,  திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் சுதந்திர தினவிழாவில் திரு. திருமாறன் பங்கேற்றபோது, அவரே சொல்லி நான் அறிந்தது.

இந்நிலையில், அண்மையில் இவ்விருவருடனும் இணைந்து பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு திரு. திருமாறன் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 

அவரது அழைப்பை ஏற்று கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேரவை துவக்க விழாவில் (27.08.2013) பங்கேற்றேன். சிறப்பு விருந்தினர் ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி அவர்கள்- கணிப்பொறித் துறையில் 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; காம்கேர் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர். அவர் தனது அனுபவங்களால் அத்துறை மாணவர்களுக்கு நல்ல வழி காட்டினார். அன்பான சகோதரி போல இயல்பான பேச்சு. மாணவ மாணவியருக்கு வாழ்க்கை அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் கலந்து அவர் அளித்த உரை நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய  திசைகளைக் காட்டி இருக்கும். 

Tuesday, August 20, 2013

திருப்தி அளிக்கும் நிகழ்வு



திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தினத் திருவிழாவில் இணைந்து பணி புரிந்தது மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

சுதந்திர தினத்தன்று வீட்டில் டி.வி. முன் அமர்ந்துகொண்டு சினிமா நடிகைகளின் பேட்டியைக் கண்டு ரசித்து  நேரத்தை வீணாக்காமல், சமூகத்திற்குப் பயனளிக்கும் விதமாக நாள் முழுவதும் கொண்டாட்டமாக, சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை திட்டமிட்டது. அதன் உறுப்பினர் என்ற முறையில் நானும் அதில் இணைந்து பணியாற்றினேன். அதன் தலைவர் ஆடிட்டர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு உற்சாகமாகவும் ஒருங்கிணைந்தும் நடத்திக் காட்டியுள்ள இவ்விழா, பல அற்புதமான முன்னுதாரணங்களை உருவாக்கி உள்ளது.

Monday, August 5, 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அற்புத முயற்சி


தமிழின் முன்னணி எழுத்தாளரும் முன்னுதாரணமான திரைப்பட வசனகர்த்தாவாக ஜொலித்து வருபவருமான திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில்  புதிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது சொல்புதிது இணைய குழுமத்தில் நண்பர்களான, அவரது வழிகாட்டுதலில் பட்டை தீட்டப்பட்ட பலரது சிறுகதைகள் அதில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மிகவும் தன்னம்பிக்கையும் பெருந்தன்மையும் இல்லாமல், இவ்வாறு இளம் எழுத்தாளர்களின் கதைகளை தனது சொந்தத் தளத்தில்  வெளியிட முடியாது. ஜெயமோகனால் கண்டுகொள்ளப்பட்ட இந்த புதிய எழுத்தாளர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.

Sunday, June 30, 2013

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மதுரை
யைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.

Friday, February 1, 2013

படித்ததில் பிடித்தது...

 'சொல்வனம்' இணைய  இதழில் நண்பர் திரு. பிரகாஷ் சங்கரன் எழுதியுள்ள ஆமைகள் குறித்த கட்டுரை, பிரபஞ்சம் குறித்த ஆன்மிகப் பார்வையை ஏற்படுத்துகிறது.

உயிர்ச்சூழல் தொடர்பான புதிய சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்யும் அற்புதமான கட்டுரை இது...

காண்க: வாழ்வெனும் வரம்
 .

ழ்வெனும் வரம்

Saturday, January 26, 2013

ராகுல் காந்தியும் ராஜ்நாத் சிங்கும் நமது ஊடகங்களும்


நான்கு நாட்கள் இடைவெளியில் நாட்டின் இரு தேசியக் கட்சிகளில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்விரு நிகழ்வுகளிலும் நமது ஊடகங்களின் செயல்பாடு, நமது அரசியல் ஞானம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

முதலாவதாக, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை ஷிபிர் கூட்டத்தில், கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து, கடந்த ஜனவரி 23-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரால் தங்கள் கட்சித் தலைவர் கட்கரி தத்தளித்து வந்த நிலையில், இந்நிகழ்வு அக்கட்சியினருக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.