Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Thursday, October 16, 2014

புத்தரின் புன்னகை



குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.
ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்
மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.
மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;
அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்
காவியுடைத் துறவியைக் காண
கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.
வணங்கிய மக்களை வணங்கி,
அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

Thursday, June 26, 2014

பசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...


நாச்சிமுத்து பாலிடெக்னிக் - பிரதான கட்டடம்

25 ஆண்டுகள் என்பது மானுட வாழ்வில் பெரும்பகுதி. அப்படிப்பட்ட 25 ஆண்டுகளைக் கடந்து, முன்னர் தன்னுடன் பயின்ற நண்பர்களைக் காண்பது ஒரு பேறு.

1986- 89-இல் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நான் பட்டயப்படிப்பு (DME) படித்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவ நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NAPAA) வாய்த்தது.

கடந்த 15.06.2014, ஞாயிற்றுக்கிழமை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கத்தில் இந்தக் கூடுதல் நடைபெற்றது. அங்கு பயின்று பொன்விழா காணும் முன்னாள் மாணவர்களும் (1964 பேட்ச்) வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களும் (1989 பேட்ச்) அதில் சந்தித்து மலரும் நினைவுகளுடன் கட்டியணைத்துக் கொண்டோம்.

நாங்கள் படித்தபோது பாலிடெக்னிக் வளாகத்தில் மரங்கள் தான் அதிகம்;  காடுபோலக் காட்சி அளிக்கும். இப்போது எல்லா இடங்களிலும் கட்டடங்கள். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்குவதால், கல்வி நிறுவன வளாகமே முற்றிலும் தோற்றம் மாறி இருந்தது.

பாலிடெக்னிக் வளாகம் மட்டுமல்ல, நாங்களும் தான். 25 ஆண்டுகள் அல்லவா? பலரும் இளமைப் பருவத்தைக் கடந்த அனுபவ நிலையை தோற்றத்தில் காட்டினோம். ஆயினும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, பெயரை மறக்காமல் அழைத்து, நலம் விசாரித்து, குதூகலித்தோம்.

Tuesday, June 17, 2014

25 ஆண்டுகளுக்கு முன் இங்கு தான் நான் படித்தேன்...

.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

.


பொள்ளாச்சி, ஜூன் 15: பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 1964ஆம் ஆண்டும் 1989ஆம் ஆண்டும் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்றது.

பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கில் காலை 10.00 மணிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துவங்கியது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தின் (என்ஏபிஏஏ- நாபா) கெüரவத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

முன்னிலை வகித்த  ‘நாபா' தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாணவர் சங்கத்தின் சேவைப்பணிகளைப் பட்டியலிட்டார். அலும்னி சங்கத்தின் நன்கொடையால் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Friday, August 30, 2013

பார்க் கல்லூரி விழாவில் பங்கேற்பு


திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை,  அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு. திருமாறன் எனது நண்பர்; விவேகானந்தம் 150 இணையதளத்தின் தொடர்ந்த வாசகர். அந்தத் தளத்தில் சென்னையைச் சார்ந்த ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  அவர் திரு. திருமாறன் அவர்களுடன் ஒரே கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்தவர். இது,  திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் சுதந்திர தினவிழாவில் திரு. திருமாறன் பங்கேற்றபோது, அவரே சொல்லி நான் அறிந்தது.

இந்நிலையில், அண்மையில் இவ்விருவருடனும் இணைந்து பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு திரு. திருமாறன் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 

அவரது அழைப்பை ஏற்று கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேரவை துவக்க விழாவில் (27.08.2013) பங்கேற்றேன். சிறப்பு விருந்தினர் ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி அவர்கள்- கணிப்பொறித் துறையில் 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; காம்கேர் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர். அவர் தனது அனுபவங்களால் அத்துறை மாணவர்களுக்கு நல்ல வழி காட்டினார். அன்பான சகோதரி போல இயல்பான பேச்சு. மாணவ மாணவியருக்கு வாழ்க்கை அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் கலந்து அவர் அளித்த உரை நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய  திசைகளைக் காட்டி இருக்கும். 

Tuesday, August 20, 2013

திருப்தி அளிக்கும் நிகழ்வு



திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தினத் திருவிழாவில் இணைந்து பணி புரிந்தது மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

சுதந்திர தினத்தன்று வீட்டில் டி.வி. முன் அமர்ந்துகொண்டு சினிமா நடிகைகளின் பேட்டியைக் கண்டு ரசித்து  நேரத்தை வீணாக்காமல், சமூகத்திற்குப் பயனளிக்கும் விதமாக நாள் முழுவதும் கொண்டாட்டமாக, சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை திட்டமிட்டது. அதன் உறுப்பினர் என்ற முறையில் நானும் அதில் இணைந்து பணியாற்றினேன். அதன் தலைவர் ஆடிட்டர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு உற்சாகமாகவும் ஒருங்கிணைந்தும் நடத்திக் காட்டியுள்ள இவ்விழா, பல அற்புதமான முன்னுதாரணங்களை உருவாக்கி உள்ளது.

Friday, February 1, 2013

படித்ததில் பிடித்தது...

 'சொல்வனம்' இணைய  இதழில் நண்பர் திரு. பிரகாஷ் சங்கரன் எழுதியுள்ள ஆமைகள் குறித்த கட்டுரை, பிரபஞ்சம் குறித்த ஆன்மிகப் பார்வையை ஏற்படுத்துகிறது.

உயிர்ச்சூழல் தொடர்பான புதிய சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்யும் அற்புதமான கட்டுரை இது...

காண்க: வாழ்வெனும் வரம்
 .

ழ்வெனும் வரம்

Sunday, December 30, 2012

அடிவாரக் கற்கள்


அகன்று உயர்ந்த மதிலில் பல இடங்களில் சிதிலங்கள்.
ஆலமரமும் அரச மரமும் வேரோடியிருக்கின்றன.
எருக்கஞ்செடிகள் பூக்களை இறைத்தபடி மதிலோரம் விரவிக் கிடக்கின்றன.
சுண்ணாம்பு பார்த்து பலநூறு வருடம் ஆனதன் அடையாளம்
சுவரெங்கும் பட்டையாக உரிந்து கிடப்பதில் தெரிகிறது.
செங்கல்லும் சுண்ணாம்புச் சாந்தும் பெயர்ந்திருந்தாலும்
கம்பீரம் குலையாமல் காட்சி தருகிறது மதில்.

இரண்டு ஆள் கனத்தில் இவ்வளவு வலிமையாகக் கட்டிய
கொத்தனார் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்,
பலநூறு ஆண்டுகள் இந்த மதில் வரலாறு சொல்லும் என்று.
கட்டியவன் யார், கட்டச் சொன்னவன் யார்
என்பதெல்லாம் தேவையில்லாத கதை.
இந்த மதிலை இடித்தால் தான் உள்ளிருக்கும்
அரண்மனையைத் தூர்க்க முடியும் என்பதுதான் விஷயம்.

Monday, November 5, 2012

வடசித்தூரில் கொண்டாடப்படும் மயிலந்தீபாவளி!


 நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பல  நாள் கொண்டாட்டமாக தீபாவளி மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது. தமிழகத்திலோ தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் மட்டுமே.

அதேசமயம், கோவை மாவட்டத்திலுள்ள வடசித்தூர் கிராமத்தில் மட்டும் தீபாவளி இரண்டுநாள் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளை இவ்வூர் மக்கள் "மயிலந்தீபாவளி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று இக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கிடாவெட்டு உண்டு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள வடசித்தூர் கிராமம் சிற்றூராட்சியாகும். குரும்பபாளையம், செல்லப்ப கவுண்டன்புதூர் ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கிய வடசித்தூர், சுற்றுவட்டாரக் கிராமங்களின் மையமாக உள்ளது. இங்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே இங்கு முக்கியத் தொழில். சமீபகாலமாக இப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டு வருகின்றன.

Sunday, October 7, 2012

புதுக்கவிதை - 148




கருவாடு

 





ஒரு கவிதை
நிராகரிக்கப்பட்டுவிட்டது-
படிக்கப்படாமலேயே-
வாழாமலே முடிந்துபோன
வாழ்க்கை போல.

அந்தக் கவிதையின்
ஒவ்வொரு வரியிலும்
துடிப்பு இருந்தது-
நிலத்திலும் வாழத் துடிக்கும்
மீன் போல.

காய்ந்த மீன் கூட
கருவாடாகும்-
இந்தப் புலம்பல் போல.
.

Monday, July 23, 2012

படக் கவிதை - 04















நம்பிக்கை விழுதுகள்

இந்தக் கட்டை வண்டியும்
காரில் ஏறும்
காலம் வராமலா போகும்?
இன்றைய உழைப்பின்
விழுதுகள்
நாளைய நம்பிக்கையில்
வேர்விடும் தருணம்
கட்டைவண்டியின்
கனவுகள் நிறைவேறும்.
இந்தக் கட்டைவண்டியும்
ஒருநாள்
காரில் ஏறும்.



Tuesday, June 12, 2012

புரிந்தும் புரியாமலும்...













பக்கத்து நாட்டில் குண்டு வெடித்தால்
அது சேதி.
பக்கத்து ஊரில் குண்டு வெடித்தால்
அது பீதி.
பக்கத்திலேயே குண்டு வெடித்தாலேனும்
கிடைக்குமா  நீதி?

கடல் கடந்த சகோதரன் கதறினால்
நமக்கு வேடிக்கை.
அண்டை மாநில சகோதரன் அலறினால்
நமக்கு வாடிக்கை.
மாநாடு கூட்டினால் தீர்ந்தது- 
முழங்குவோம் கோரிக்கை.

வசனங்களில் வாழும் தலைமுறையாக
சபிக்கப்பட்டவர்களுக்கு
விசனங்களில் வீழும் சொந்தங்களைப் பற்றி
சிந்திக்க இல்லை நேரம்.
பிறகு எங்கிருந்து வரும் வீரம்?
எல்லாம் போய்விட்டது தூரம்.

.

Friday, May 4, 2012

எண்ணங்கள்



நமது தார்மிக வீழ்ச்சி 

பாலியல் சர்ச்சைகளுக்கும் இந்திய அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அபிஷேக் சிங்வி விலகக் காரணமானது கூட பாலியல் சர்ச்சை தான். தன்னுடன் பணிபுரியும் பெண் வழக்குரைஞருடன் தகாத செயலில் அவர் ஈடுபட்டபோது விடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளில் வெளிவராமல் தடையாணை பெற்ற சிங்வியால் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு ஒரு வார காலத்துக்கு சிங்விதான் மிகவும் தேடப்பட்ட நபராக இருந்தார். ஆரம்பத்தில் இந்தச் சர்ச்சைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று மறுத்து வந்த சிங்வி, இறுதியில் கட்சியின் பெயரைக் காப்பாற்ற பதவி விலகி இருக்கிறார்.

இப்போதும்கூட சிங்விக்கு காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்குகிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் முடிச்சுப் போடக் கூடாது என்று அக்கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய சர்ச்சைகள் புதியவை அல்ல. 1995-இல் தனது மனைவி நைனா சஹானியைக் கொலை செய்த தில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏ.வுமான சுஷீல்குமார், அந்தச் சடலத்தை தந்தூரி அடுப்பில் எரித்தார். இந்தக் கொலைக்குக் காரணம்கூட முறையற்ற உறவுதான். 2003-இல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநராக இருந்தபோது நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவத்தை மறக்க முடியாது. ஆளுநர் மாளிகையிலேயே மூன்று பெண்களுடன் கும்மாளமிட்டதாக திவாரி மீது விடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து அவர் 2009 டிசம்பரில் பதவி விலக வேண்டிவந்தது.

இதைவிட வேதனையான நிகழ்வு, திவாரிதான் தனது உண்மையான தந்தை என்று நிரூபிக்க நீதிமன்றத்தில் போராடிவரும் ரோஹித் சேகரின் வாழ்க்கை. தனது தாய் உஜ்ஜாலா சர்மாவுக்கும் திவாரிக்கும் இடையிலான கள்ள உறவில் பிறந்தவன்தான் என்று நிரூபிக்க அவர் போராடுகிறார். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க மரபணு சோதனைக்கு ஆட்படுமாறு திவாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நாட்டின் ஆளும் கட்சி மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியும் இவ்விஷயத்தில் சளைத்ததல்ல. பாஜக முழுநேர ஊழியரும் தேசிய பொதுச்செயலாளருமான சஞ்சய் ஜோஷி, ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டதற்காக 2005-இல் கட்சியிலிருந்தே விலகினார். அண்மையில் தான் கட்சிக்குள் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ.க்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண சவதி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் பேரவையிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை தற்போதும் நடக்கிறது.

விசாரணையில், மேலும் 15 எம்எல்ஏ.க்கள், கட்சி வித்தியாசமின்றி இக்காட்சியை ரசித்தது தெரிய வந்தது. மக்களாட்சியின் கோவிலான சட்டப் பேரவைக்கு நேரிட்டிருக்கும் நிலை பரிதாபமானது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் அக்கட்சியின் அமைச்சரான ஷோபா கரந்தலேவை தொடர்புப்படுத்தி பலவிதமான பிரசாரங்கள் செய்யப்பட்டுவிட்டன; வித்தியாசமான கட்சி என்ற தனது முத்திரை வாக்கியத்தை இழந்து நிற்கிறது பாஜக.

1990-களில் கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு நமது அரசியல்வாதிகளின் அசிங்கமான பக்கத்தைத் தோலுரித்தது. கோழிக்கோட்டில் ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் விபசாரத் தொழில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் லீக் தலைவர் குன்னாலிக்குட்டி மீது வழக்கு நடக்கிறது. இன்றும் அவர் கேரளத்தில் முக்கியமான அமைச்சராக நீடிக்கிறார்.

இவ்வாறாக இந்திய அரசியலில் பாலியல் சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்குகின்றன. இந்தியாவில் பாலியல் கருத்துகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. அதேசமயம் அதிகார பலத்தால் பாலியல் வரைமுறைகளை மீறவும் அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. இவ்விஷயத்தில் ஒரு விசித்திரமான அலட்சிய மனப்பான்மை நமது மக்களிடையே நிலவுவதுதான் புரியாத புதிர்.

துறவறத்தை உயர்ந்ததாகப் போற்றும் பண்பாடு இந்தியப் பண்பாடு. இல்லறத்திலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கலாசாரம் உள்ள நாடு இந்தியா. நமது வீட்டில் இந்த உயர்ந்த கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நாம், பொதுவாழ்க்கையில் இவை மீறப்படும்போது புலம்புவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். அதுதான் விசித்திரம்.

போகபூமி என்று விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில், அதிபர் கிளிண்டன் ஒரு பெண்ணுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்பதற்காக அவரது ஆட்சிக்கு அந்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். பாலியல் சுதந்திரம் உள்ள அமெரிக்காவிலேயே தமது ஆட்சியாளர்களும் தலைவர்களும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாமோ, தனிப்பட்ட வாழ்க்கையில் தூயவர்கள். அதேசமயம், நமது தலைவர்கள் உதிர்க்கும்  ‘பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு’ என்ற தத்துவங்களை ஜீரணித்தபடி வாழ்கிறோம். நமது தார்மிக வீழ்ச்சி வருத்தம் அளிக்கிறது.

- தினமணி (04.05.2012).
நன்றி: மதி (தினமணி- 28.04.2012 )
.
.

Thursday, March 22, 2012

எண்ணங்கள்


'திடக்கழிவு மேலாண்மை' - நாமகரணம் தீர்வாகுமா?

குப்பை இல்லாத நகரத்தைப் பார்ப்பது ஊழலற்ற அரசியல்வாதியைப் பார்ப்பது போலாகிவிட்டது. நகரங்கள் என்றில்லை, கிராமங்களிலும் கூட இப்போது திடக்கழிவு மேலாண்மை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பின்மையே காரணம் எனில் மிகையில்லை.

மனித உடலே தினசரி தன்னிடம் சேரும் அசுத்தத்தை வெளியேற்றிக்கொண்டு தான் உயிர் வாழ்கிறது. அவ்வாறே நமது வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தினசரி வீட்டைப் பெருக்கி குப்பைகளை அகற்றாத இல்லத்தில் திருமகள் வாசம் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உண்டு.

அதேசமயம், நமது வீடு மட்டும் சுத்தமானால் போதும், தெருவும் ஊரும் எப்படிப் போனால் என்ன என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் உள்ளது. அதன் விளைவையே தெருக்களிலும் முச்சந்திகளிலும் குப்பை மலைகளாக நாம் காண்கிறோம். அவற்றை மூக்கைப் பொத்தியபடி, மறுபுறம் திரும்பியபடி வேகமாகக் கடக்கிறோம்.

இந்தக் குப்பைகளைக் கிளறியபடி வலம் வரும் பன்றிகளும், நாய்களும், கோழிகளும் சுகாதாரக் கேட்டை அதிகப்படுத்துகின்றன. இதுகுறித்து மக்களுக்கும் கவலையில்லை; மக்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளாட்சிப் பதவிகளில் அமர்ந்திருப்போருக்கும் கவலையில்லை.

குப்பைகளை அகற்றுவதற்கு "திடக்கழிவு மேலாண்மை' என்ற புதிய நாமம் சூட்டியது மட்டுமே நமது அரசுகளின் சிறப்பு. ஒவ்வொரு உள்ளாட்சியிலும் திடக்கழிவுகளைக் குவிக்க தனியிடம் ஏற்பாடு செய்வதற்குள் நிர்வாகங்களின் விழி பிதுங்கி விடுகிறது. இதற்கு அதனருகே குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவிப்பது எல்லா ஊர்களிலுமே காட்சியாகி வருகிறது.

இந்தக் குப்பையை உரமாக்க பல லட்சம் செலவில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் எந்த இடத்திலும் குப்பைகள் உயிர் உரமாக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையானதாக செய்திகள் இல்லை.

குப்பைகளில் மறுசுழற்சிக்கு உரியவற்றைத் தரம் பிரித்துப் பயன்படுத்துவதும் திடக்கழிவு மேலாண்மையில் ஓர் அம்சம். நிதர்சனத்திலோ, மட்க இயலாத குப்பைகளைத் தீவைத்து எரிப்பதே நிகழ்வாக இருக்கிறது. அந்தப் புகைக்கு அஞ்சியே அதன் அருகிலுள்ளோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வீதிதோறும் குப்பை சேகரிக்கும் ஏற்பாடும் பலவீனமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் குப்பை தெருவை நாறடிக்கிறது. குப்பை சேகரிப்பதற்கு உள்ளாட்சிகளில் இருந்த பணியாளர் எண்ணிக்கையும் சிறுகச் சிறுகக் குறைந்து வருகிறது.

உதாரணமாக, திருப்பூர் மாநகராட்சியில் தோராயமாக இருக்க வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை: 3,000. ஆனால் இருப்பவர்களோ 1,200 பேர். கிட்டத்தட்ட மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. இந்த எண்ணிக்கையிலுள்ள பணியாளர்களைக் கொண்டு மாநகரைத் தூய்மையாகப் பராமரிப்பது எப்படி?

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் 72 பேர் இருக்க வேண்டும். ஆனால் "மருந்துக்கும்கூட' சுகாதார ஆய்வாளரே இல்லை. இந்தப் பணியை தற்போது மேற்கொள்பவர்கள், இதற்கு அடுத்தநிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் தான். எனில் மேற்பார்வையாளர்களின் பணியை யார் மேற்கொள்வது? 

இதேபோன்ற நிலைதான் பெரும்பாலான உள்ளாட்சிகளில் காணப்படுகிறது. புதிய பணியாளர் நியமனம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் காலியாகவே விடப்படுகின்றன. இதன்மூலமாக, செலவினத்தைக் குறைப்பதாக உள்ளாட்சிகளும் அரசும் கருதுவதாகத் தெரிகிறது.

மாறாக, குறைந்த ஒப்பந்தக் கூலியுடன், குப்பை சேகரிக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. குறைந்தபட்சக் கூலி, தொழில் நிரந்தரமின்மை, பணிப் பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால், அவர்களால் இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய முடிவதில்லை. இதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் முடங்கினால் ஊரின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். எது எதற்கோ கோடிக் கணக்கில் செலவு செய்யும் நமது அரசுகள், நாட்டின் சுகாதாரம் காக்கும் பணியில் தங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்துப் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளித்தால் குறைந்தா போய்விடும்?

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு பல முறை ஊதிய உயர்வு வழங்கும் அரசுகள், நமது அடிப்படை சுகாதாரத்தைக் காக்கும் பணியாளரின் வாழ்க்கை நிலை குறித்து கவலைப்படாமல் இருப்பது முறையல்ல. பிற அரசுத் துறைப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களது ஊதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.

நகர சுத்தித் தொழிலாளர்கள் தேர்தல் பணியாளர்களாக இருக்கப் போவதில்லை என்பதால், அவர்களது முக்கியத்துவம் இல்லாது போய்விடாது. இதை அரசு உணர்வது அவசியம். திடக்கழிவு மேலாண்மையை திறம்படச் செய்வது எப்படி என்பதற்கான அணுகுமுறைகளை வகுப்பதும் அதைவிட அவசியம்.



Wednesday, February 15, 2012

உருவக கவிதை - 69


பால் டீ


லைட் டீ,
ஸ்ட்ராங் டீ,
மீடியம் டீ,
லெமன் டீ,
மசாலா டீ,
பிளாக் டீ,.. .

சுகர் குறைச்சல், சுகர் அதிகம், சுகர் இல்லாமல்,
ஆற்றாமல், நல்லா ஆறவைத்து,...

பார்சல் டீ, டூ பை த்ரீ, ஒன் பை டூ,
பேப்பர் கப்பில்,  டவராவில்...

எப்படிக் கேட்டாலும்
கொடுக்கிறார் மூலைக்கடை நாயர்.

எல்லாம் சரிதான்.
அது என்ன பால் டீ?


.

Thursday, February 2, 2012

எண்ணங்கள்


'போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

எம்பிபிஎஸ் முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து.

ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், எமலோகத்துக்கு அனுப்பிவைத்த அதே மொபைல்போன் தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை.÷கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம். அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
 
நன்றி: தினமணி (02.02.2012)

Saturday, January 14, 2012

புதுக்கவிதை - 146




எரிக்கப்படாத குப்பைகள்...

பரணில் இருக்கும் பழைய பொருட்களில்
உபயோகமற்ற ஏதாவது இருக்கும்
ஒவ்வொரு போகியிலும் எரிக்க.

வீட்டின் புழக்கடையில் கரையான் அரித்து
எஞ்சிய மரச்சாமான்கள்
ஒவ்வொரு போகியிலும் சாம்பலாகும்.

போன வருடம் படித்த பாடப் புத்தகங்கள் கூட,
இந்த வருட போகியில்  
எதுவும் கிடைக்காவிடில் எரிக்கப்படலாம்.

உபயோகமற்ற, வீணாகிப்போன, காலாவதியான
எந்தப் பொருளும் பொருத்தமானதே
போகியில் கொளுத்த.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வீணாகக் கடக்கிறது-
பண்டிகையின் தாத்பரியம்  உணராமல்
எதை எதையோ எரித்து.
.

Tuesday, November 1, 2011

வசன கவிதை - 90


காற்றாலை கிராமம்

அந்த வண்டிப்பாதையில் அதிகாலையிலேயே 
தூக்குப்போசிகளுடன் சாரிசாரியாக
சென்று கொண்டிருப்பார்கள் 
முண்டாசு கட்டிய ஆண்களும் 
நூல்சேலை கட்டிய பெண்களும்
சிலர் கைகளில் கருக்கு அரிவாள்கள்;  
சிலரிடம்  மண்வெட்டிகள்.
வேலை தருவோரும் வேலை செய்வோரும்
இணைந்த அணிவகுப்பு அது.
திரும்பி வரும்போது பெரும்பாலான பெண்களின்
சும்மாட்டில் விறகுச் சுமை இருக்கும்.

இருள் விலகாத அந்த மசமச வெளிச்சத்தில்,
முந்தைய நாள் ஊர்க் கொட்டகையில் பார்த்த
‘குலேபகாவலி படம் பற்றி சிலாகித்தபடியோ,
‘நல்ல தங்காள் படத்தை திட்டியபடியோ,
உழைப்பாளிகள் படை சென்று கொண்டிருக்கும்.
மரங்களில் பறவைகள் கூவத் தொடங்கி இருக்கும்.

ஆற்றங்கரை வந்தவுடன் சிலருக்கு வேலை இருக்கும்.
கலங்கலின்றி ஓடும் ஆற்றில் ஒரு கையெடுத்து
தலையில் தெளித்தபடி கீழ்வானைப் பார்ப்பார் ஒரு பெரியவர்.
அவருடன் இருக்கும் மாடு "மா'' என்று அழைக்கும்.

வண்டிப்பாதையின் இருபுறமும் வானம் பார்த்த பூமிகள்,
தென்னந்தோப்புகள், சோளக்காடுகள், பச்சை வயல்கள்.
வரப்பின் மீது வரிசையாக காட்சி தரும்
கம்பீரமான பனை மரங்கள்.
தோட்டங்களின் மத்தியிலோ, ஓரத்திலோ,
அமைக்கப்பட்டிருக்கும் ஆட்டுப்பட்டிகள்.
உழைப்பாளிகள் கூட்டம் இருபுறமும் பிரிந்தபடி செல்லும்.
அவர்கள் செல்லும் இடங்களில் யாரும் சொல்லாமலே
அவர்களுக்கென பிரத்யேக வேலைகள் காத்திருக்கும்.

காலை சூரியன் சுள்ளெனச்  சுடும்வரை
களை பறிப்பு, காய் பறிப்பு, வரப்பு அணைப்பு,
நாற்றுநடவு... என வேலைகள் தொடரும்.
உடன்  வேலை செய்வார் தோட்டக்காரர்.
நீராகாரம் முடிந்தபின் சில நிமிடம் ஆசுவாசம்.

அந்தக் கரட்டாங்காடு அப்படித்தான்
விவசாய பூமி ஆனது.
அந்த நிலத்தின் விளைச்சல் திறனுக்கு
காரணம் இல்லாமல் இல்லை.
தண்ணீர் பாய்ச்சிய விவசாயக் கூலிகளின்
செங்குருதியும் வியர்வையும் கலந்தது அந்த மண்.

தோட்டங்களில் இருக்கும் ஓலைச்சாலைகளில்
எருமைகளும் மாடுகளும் கன்றுகளை நக்கியபடி
கால் மாறி நின்றுகொண்டிருக்கும்.
அவற்றுக்கு தண்ணீர் காட்டவும்,  தட்டுப்  போடவும்
சாணி அள்ளவும் சிலருக்கு நேரம் சரியாக இருக்கும்.
பால்காரர் வருவதற்குள் குப்பை அள்ளி,
மாடுகளைத் தடவிக் கொடுப்பதே அலாதி சுகம்.
அருகில் நாட்டுக்கோழிகள் நடமாடும்.

ஆடு, மாடுகளை விடுவித்து
கழுவிக் குளிப்பாட்டி, கொழுவில் கட்டி
மேய்ச்சலுக்கு விட்டபின்
கிணற்றடியில் வேலை இருக்கும்
பண்ணையத் தொழிலாளிக்கு.
தோப்பில் பறிக்கப்பட்ட தேங்காய்களை
ரகம் பிரித்து எண்ணி வைப்பதற்குள்
வந்துவிடுவார் நகர வியாபாரி.
அருகிலேயே சந்தைக்குக் காத்திருக்கும்
காய்கறிக் கூடைகள்.

மதியவேளை சுட்டெரிக்கும்போது
அருகிலுள்ள மாமர நிழலிலோ, வேப்ப மர நிழலிலோ
தலை சாய்க்கும்  உழைப்பாளிகள் கூட்டம்.
தோட்டக்காரர் மனைவி காய்ச்சிக் கொடுத்த
காபித்தண்ணி குடித்தபின்
மீண்டும் சிலமணிகள் நிலத்தில் தவம்.
அவர்கள் வீடு திரும்பும்போது
மணிக்கு வரும் .என்.ஆர் பஸ்சின்
ஹாரன் ஒலி  கேட்கும்.

மாலை ஒவ்வொருவரது  வீடுகளிலும் 
வாழ்க்கை வாழப்படும்.
ஊர்மேடை நோக்கி பெரிசுகள் செல்ல,
கோவில் செல்லும் பெண்களுடன் 
தொற்றியபடி குழந்தைகள் செல்லும்.  
கள்ளுண்ட மயக்கத்தில் உழைப்பாளிகள் சிலர் உருள,
அந்திசாய ஆரம்பிக்கும்.
ஊர்க் கொட்டகையிலிருந்து
"மருதமலை மாமணியே முருகையா''
பாடல் எங்கும் எதிரொலிக்கும்.

டீக்கடைகளில் ரெண்டு ரூபாய்க்கு
வறுக்கியும் ஜிலேபியும்  வாங்கிக்கொண்டு
தெருமுனையில் பூவும் கட்டிக்கொண்டு  
வைரம் பாய்ந்த உடலுடன் செல்லும்
குடும்பஸ்தர்களுக்கு வீடு காத்திருக்கும்.

மறுநாள் ஆகாரத்துக்கு வேண்டிய
உப்பு, புளி வாங்கிக்கொண்டு,
அரிசி பொறுக்கும் பெண்களின் முகங்களில்
உழைப்பின் பொன்னிறம் கூடி இருக்கும்.
தோட்டங்களில் இருந்து திரும்பிய விவசாயிகளின்
வீடுகளிலும் இதே காட்சி காணக் கிடைக்கும்.

பகலில் ஒருவரை ஒருவர் அனைவரும் காண்பது
ஊரில் திருவிழா நடக்கும்போதுதான் சாத்தியம்.
அதற்காகவே மாரியம்மன்  நோன்பு சாட்டுதலும்
பெருமாள் கோவில் புரட்டாசி மெரமனையும்
வழிமேல் விழி வைத்துப் பார்க்கப்படும்.
இளசுகள் பார்வையில் பேச,
மழலைகள் தூரி விளையாடும்.
இடையே வரும் பட்டிப்பொங்கலில்
தோட்டங்கள் விழாக்கோலம் பூணும்.
"அசனம் பட்டியாரே அசனம்'' என்ற கோஷத்தில்
ஆடு, மாடுகள் அதிரும்

                  ***

எனது பால்யம் இனிமையானது.
கிராமியத்தின் வாசம் வீசும்
அந்த நினைவுகளைக் கலைக்க
நான் என்றும் விரும்புவதில்லை.
பள்ளியில் சாதி வேறுபாடின்றிப் படித்த
இளம் பருவத் தோழர்களின்
முகங்கள் மறவாதது போலவே,
கிராமிய சூழலின் வீரியம்
மனதில் புகைப்படம் போலவே
பதிவாகி இருக்கிறது.
அனைத்தும் பழங்கதையென  
மாறுவதுதான் உலகியல் வழக்கமோ?

                  ***

முப்பது  ஆண்டுகள் இடைவெளியில்,
நகரத்தின் சாயல் படியத் துவங்கியதாக  
எனது கிராமம் வளர்ந்திருக்கிறது.
அரசமர மேடை இருந்த இடத்தில்
கான்கிரீட்டிலான விநாயகர் கோயில் வீற்றிருக்கிறது.

கிராமத்தின் மையத்திலிருந்து பார்க்கும்போதே தெரிகிறது
ஊரை வேலியிட்டது போலக் காட்சி தரும்
ராட்சத மின்சாரக் காற்றாலைகள்.
ஊர்க் கொட்டகை இருந்த இடத்தில்
'அவளோட ராவுகள்' படம் ஓடும் தியேட்டர்.
ஊர்க்கோடியில் இருந்த எல்லையம்மன் கோயில் அருகே
நிமிர்ந்து நிற்கின்றன செல் கோபுரங்கள்.
ஆற்றங்கரை செல்லும் வண்டிப்பாதையில்
வாழைத்தோட்ட அய்யன் கோவில் மண்மூடிக் கிடக்கிறது.
ஆற்றில் பெரும்குழிகள்-
மணல் வற்றியதன் அடையாளங்கள்.

விவசாய நிலங்களில் காற்றாடிகள்.
ஊரை ஒட்டிய நிலங்களில் மனைப்பிரிவுகள்.
ஊருக்குள் மச்சுவீடுகள் எழுந்திருக்கின்றன.
ஊரைத் தாண்டினால் நடமாட்டம் குறைந்திருக்கிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை
கிராமத்தில் திறந்திருக்கிறது.
நகைக்கடன் விளம்பரம் அங்கே வரவேற்கிறது.

ஓடாத ஆற்றின் குறுக்கே தடுப்பணையை 
ஊரின் வடகோடியில்  கட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
வேலைக்கு  உணவுத் திட்டத் தொழிலாளர்கள்.
நிலத்துக்கு வலிக்குமோ என்பது போல
கொத்திய இடத்திலேயே கொத்திக் கொண்டிருக்கும் பெண்கள்.  
காலையில் ஏற்றிய டாஸ்மாக் சரக்கு போதையில்,
புகையாத பீடியை முறைத்தபடி விட்டெறிகிறார் மேஸ்திரி.
அமர மரமின்றி அல்லாடும் அண்டங்காக்கை
ஓரக்கண்ணால் பார்த்தபடி தத்தித் தத்தி அமர்கிறது.

ஒருகாலத்தில் காய்ச்சலுக்கு கஷாயம் கொடுத்த 
சுப்புன்னி வைத்தியர் வீடு இருந்த இடத்தில்
எம்.பி.பி.எஸ். டாக்டரின் கிளினிக் இருக்கிறது.
அங்கு திருவிழாக்கூட்டம்.
பஞ்சாயத்து திடலில் திரும்பி நிற்கின்றன இரு பேருந்துகள்.
சுற்றிலும் கோலா விளம்பரங்களுடன் பெட்டிக்கடைகள்.
பிரதானத் தெருமுனையில் பல கட்சிகளின் கொடிக்கம்பங்கள்.
தெருக்களில் சொறிநாய்கள்.

பவுடர் பூசிய ஒப்பனைக்காரி போல
பொலிவுடன் மினுக்குகிறது எனது கிராமம்.
ஆயினும் மனம் ஒட்டவில்லை.
காற்றாலைகளில் இருந்து கிளம்பி வருகிறது
ஊரின் அழிவை கட்டியம் கூறும் கிறீச்சிடும் சத்தம்.
கண்ணை மூடி மேடையில் சாய்கிறேன்.

யாரோ தோளைத் தட்டி உசுப்பியபோதுதான்,
18 வது மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில்
கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பது தெரிகிறது.
வெளியே தேவலோகமாக மிளிரும்  
நியூயார்க்  மன்ஹாட்டன் சர்க்கிளின்  இரைச்சலற்ற
நள்ளிரவு அமைதி என் நெஞ்சை அறைகிறது.  

--------------------------------
விஜயபாரதம் (தீபாவளி மலர் - 2011)