Tuesday, November 5, 2013

புட்டிகளின் உலகம்





ங்கிங்கெனாதபடி எங்கும்
பரவிக் கிடக்கின்றன புட்டிகள்.

சாக்கடைக் கால்வாய்களில்...
குப்பைமேடுகளில்...
முட்டுச்சந்துகளில்...
சாலையோரங்களில்...
இருட்டு மூலைகளில்...
எல்லா இடங்களிலும்
காணக் கிடைக்கின்றன புட்டிகள்.

கரும்பச்சை நிறப் புட்டிகள்...
தங்கநிறம் மின்னும் புட்டிகள்...
கழுத்து நீண்ட புட்டிகள்...
சப்பையான புட்டிகள்...
குடுவை வடிவிலான புட்டிகள்...
எல்லா வடிவங்களிலும்
பொறுக்கக் கிடைக்கின்றன புட்டிகள்.

மப்பில் மல்லாந்து கிடப்பவன் போல,
அதீதக் குடிகாரனின் உடல்
கோணிக் கிடப்பதுபோல,
போதையில் சட்டை கிழிந்து
குப்புறக் கிடப்பவன் போல,
எச்சில் வழிய ஈக்கள் மொய்க்க்
மண்ணில் கிடப்பவன் போல,
சொறிநாய்களின் பக்கத்திலேயே
பரிதாபமாகக் கிடக்கின்றன புட்டிகள்.

மதுக்கடைகளின் புறக்கடையிலும்
ஐந்து நட்சத்திர விடுதித் தாழ்வாரங்களிலும்
மாபெரும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும்
நதிக்கரையோர ஆக்கிரமிப்புக் குடிசைகளிலும்
தொழிற்சாலைகளின் கழிவறைகளிலும்
பொதுஉடைமை பேசுகின்றன புட்டிகள்.

அடித்த சரக்கின் வீரியத்தில்
அடித்துக் கொண்ட குடிமகன்கள்
குருதிவழிய மடிந்து கிடப்பது போல,
உடைந்தும் கிடக்கின்றன
சில புட்டிகள்.

அருவிகளில் தலைகுப்புற விழுந்து
சிதறிக் கிடக்கும் கண்ணாடிப் புட்டிகள்...
வனப்பகுதியில் வீசப்பட்ட
கிறுக்கர்களின் புட்டிகள்...
மேல்தட்டு இளைஞர்களால்
நடுச்சாலையில் உடைக்கப்பட்ட
உற்சாகப் புட்டிகள்.
கடல் மணலில் புதைக்கப்பட்டு
மாயமான புட்டிகள்.
புட்டிகள் இல்லாத இடமில்லை.

சொர்க்கத்தையும் நரகத்தையும்
மண்ணில் காட்டும் திரவத்தை
காலி செய்து கிடப்பவை
இந்தப் புட்டிகள்.

எந்த இடத்திலும் எல்லா வடிவிலும்
எத்தனை வேண்டுமாயினும்
புட்டிகள் கிடைக்கும்.
தேடுங்கள் தட்டுப்படும்-
இறைவனைப் போல.
சேகரியுங்கள் காசு கிடைக்கும்
இதுவே மறுசுழற்சி முறை.
அதே காசில் நுரைத்துத் தளும்பி
மூர்ச்சையாகுங்கள்-
அரசு உருப்படும்.

இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள்
கழித்து இம்மண்ணில் நடக்கும்
தொல்லியல் ஆய்வுகளில்,
அழிந்துபோன நமது நாகரிகத்தின்
சாட்சியாக விளங்கக் கூடியவையும்
அங்கிங்கெனாதபடி
எங்கும் கிடைக்கும் இதே புட்டிகள் தான்...


-விஜயபாரதம் - தீபாவளி மலர்- 2013 

No comments:

Post a Comment