Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Monday, August 15, 2011

வசன கவிதை - 89

மூன்றாவது சுதந்திரப் போர் 

1857:


வியாபாரியிடம் அடகுவைக்கப்பட்ட

சுயஉரிமையை மீட்கத் துடித்த

வீரர்களின் வேகத்தால் கிளர்ந்தது

சிப்பாய்க் கலகம்.


அடிமைப்பட்டதை உணர்ந்த

நம் முதல்கணம் அது.

விட்டில்பூச்சிகளாய் அதில்

விழுந்த தியாகியர் ஆயிரம்!


1947:


வீட்டுக்குள் குத்துவெட்டு

நடத்திக்கொண்டு விண்ணப்பித்த

மக்கள் இயக்கம் மந்தம்நீங்க,

அடுத்தகட்டப் போராட்டம்

அஹிம்சையாய்த் துவங்கியது.


தடியடி, தூக்குமேடை,

சிறைவாசம், கல்லுடைப்பு,

நூல்நூற்பு, பகிஷ்கரிப்பு,

எனப் படிகள் பல தாண்டி,

லட்சக் கணக்கான

தேசியப் பைத்தியங்களால்

விலங்கு உடைந்தது.

நம்மை நாமே நமக்காய்

ஆள்வது சாத்தியமானது.


2011:


இப்போது நடப்பது

மூன்றாவது கட்டம்.

அரசியல் அராஜகம்,

ஆபத்தான மதவாதம்,

இடையூறான ஊழல்

இம்மூன்றும் வெறுத்த

மூன்றாவது தலைமுறை

நடத்தும் யுத்தம்

வளரட்டும் எங்கும்!


கோடிஇளைஞர்களின்

ஆவேசத்தின் முன்பு

அதிகாரபலம் பொடியாகட்டும்!

சுயநலக் கயவரின்

அரிதாரம் கலையட்டும்!

முந்தைய அனுபவம் வழிநடத்தட்டும்.

பிந்தைய தலைமுறை பயன்பெறட்டும்!

பாரதம் மீளவும் பண்படட்டும்!


நன்றி: தினமணி (கோவை) -(15.08.2011)
வந்தேமாதரம்- விளம்பரச் சிறப்பிதழ்
.

Wednesday, March 23, 2011

உருவக கவிதை - 65



அஸ்தியில்

கனவுகள்

கலப்போம்!






உறையாத ரத்தத்தின்

வாசம் எங்கும்.

வெடிக்காத குண்டின்

நெடி இன்னமும்.

வெல்லாத போரின்

வருத்தும் நினைவுகள்

என்றும் எங்கும்.



தூக்குக் கயிற்றை

முத்தமிட்ட இளைஞர்களின்

இறுதி ஆசைகள்

நிறைவேறாத கனவுகள்.

விடுதலை வேள்வியில்

ஆகுதியான வீரர்களின்

சாம்பல் மீது எழுந்த

கட்டடம் சரிகிறது.



சாம்பலின் வீரியம் உணராமல்

கற்களைப் பிணைத்த

அரசியல் கலவையால்...

ரசமட்டம் தவிர்த்த மேதமையால்...

சரியும் கட்டடத்திற்கு

காரணமாயிரம்.


இப்போதும் கட்டடத்தைக் காப்பாற்றலாம்-

அஸ்திவாரத்தில்

அவர்களது கனவுகளைக் கலந்தால்.



இன்று: மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயனை எதிர்த்து தூக்குமேடை ஏறிய நாள்.

Wednesday, January 26, 2011

எண்ணங்கள்



காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள்

1932- சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில் அணிவகுத்து முன்னேறிய விடுதலைவீரர்களின் ஊர்வலம் காவலர்களால் தாக்கப்பட்டது. மூவண்ணக் கொடியைத் தாங்கி முன்னேறிய குமாரசாமி என்ற இளைஞர் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவர் கரத்திலிருந்த மூவண்ணக் கொடியை அகற்ற முடியவில்லை. அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்து, கொடிகாத்து, திருப்பூர் குமரனாக சரித்திரத்தில் இடம் பெற்றார் அந்த இளைஞர்.

திருப்பூர் குமரன் தாங்கிய கொடி, அந்நாளில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியின் கொடி. அதுவே பின்னாளில் நமது மூவண்ண தேசியக்கொடிக்கு ஆதாரமானது. அதே காங்கிரஸ் கட்சி, இன்று ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றுவதை அரசியல் விளையாட்டு என்று வர்ணிப்பது, காலத்தின் கோலமோ?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வின் சின்னமாக விளங்கிய காங்கிரஸ் இன்று, அந்த அடையாளத்தை பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.விடம் தத்துக் கொடுத்துவிட்டு தடுமாறுகிறது. பா.ஜ.க.வோ கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் காங்கிரஸின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக, புலிவாலைப் பிடிக்கவும் தயாராக இருக்கிறது.

அண்மைக்காலமாக பிரிவினைவாதிகளின் பிடியில் தவிக்கும் காஷ்மீரில், சுதந்திரதினம், குடியரசு தினங்களில் நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதைவிடக் கொடுமை, அங்கு தேசிய தினங்களில் பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றி பிரிவினைவாதிகள் எக்காளமிடுவதுதான்.

கடந்த ஓராண்டாக, ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அங்கு பிரிவினைப் பிரசாரம் ஓங்கி இருக்கிறது. முதிர்ச்சியற்ற முதல்வர் ஓமர் அப்துல்லாவின் ஆட்சி பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துவிட்டது. இதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் தவிர்த்து, மத்திய அரசும் தன் பங்கிற்கு நிலைமையை சிக்கலாக்கியது.

இந்நிலையில் தான், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றப்போவதாக பா.ஜ. யுவமோர்ச்சா அறிவித்தது. இதற்கென ராஷ்ட்ரீய ஏக்தா யாத்திரையை (தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை) அதன் தலைவர் அனுராக் தாகூர் கொல்கத்தாவிலிருந்து துவக்கினார்.
பிரிவினைவாதிகளுக்கு அஞ்சி அங்கு தேசியக்கொடி ஏற்றுவதை அரசு தவிர்ப்பதை அடுத்தே, இந்த அரசியல் போராட்டத்தை பா.ஜ.க. அறிவித்தது. சென்ற குடியரசு தினத்தன்று லால்சவுக்கில் நமது தேசியக்கொடி எரிக்கப்பட்டதை பா.ஜ.க. சுட்டிக்காட்டியது.

மாநில முதல்வரே அங்கு தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவித்து, இந்த அரசியல் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். இதில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் அடைவதைத் தடுத்திருக்கலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி, இதை கௌரவப் பிரச்னையாக்கி, தேசியக்கொடி ஏற்றுவதையே சவாலான விஷயமாக்கிவிட்டன.

ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள சூழலில் குடியரசு தினத்தை சிக்கலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஓமர், பா.ஜ.க.வினர் லால்சவுக் வர அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி முழுவதும் சீலிடப்பட்டது.

தேசியக்கொடி ஏற்றுவதன் மூலமாக பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கக் கூடாது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், இதை பா.ஜ.க. அரசியலாக்குவதாகக் குறைப்பட்டார். அவரும் கூட, தேசியக்கொடி ஏற்றுவது எப்படி பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் என்று விளக்கவில்லை. பிரதமரின் பேச்சு, பிரிவினைவாதிகளை அடக்குவதாக இல்லாமல், அவர்களது செயல்முறையை ஆதரிப்பதாகவே தோற்றமளிக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதைவிட வியப்பளிப்பது, கர்நாடகாவிலிருந்து ஜம்மு சென்ற பா.ஜ.க. தொண்டர்கள் பயணித்த ரயில் மகாராஷ்டிராவில் மறிக்கப்பட்டு, ரயில்பெட்டி இணைப்பைத் துண்டித்து பெங்களூருக்கு திருப்பி அனுப்பியதுதான். இறுதியில், கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு, பா.ஜ.க.வின் தேசியக் கொடியேற்றும் முயற்சியை தடுத்திருக்கிறது மாநில அரசு.

ஜம்மு காஷ்மீரை மையமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தை பா.ஜ.க. நடத்துவதில் அதிசயமில்லை. ஏனெனில், பா.ஜ.க.வின் முந்தைய வடிவான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் அங்கம் என்று நிலைநாட்டுவதற்காக 1953-ல் காஷ்மீர் நுழைவுப் போராட்டம் நடத்தி, கைதாகி, சிறையிலேயே உயிரிழந்தவர்.

சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ உரிமைகள் அன்றைய பிரதமர் நேருவால் வழங்கப்பட்டன. அதன் பயனாக, ஜம்மு காஷ்மீர் முதல்வர் அம்மாநில பிரதமர் என்றே அழைக்கப்பட்டார். காஷ்மீர் மாநில அரசுக்கு தனிக்கொடியும் இருந்தது. அம்மாநிலத்திற்குள் ஜனாதிபதியே நுழைய வேண்டுமாயினும் காஷ்மீர் பிரதமர் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த இரட்டை நிலைகளை மாற்றியது சியாம பிரசாத் முகர்ஜியின் உயிர்த் தியாகம்தான்.

இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதில் முகர்ஜியின் பங்களிப்பு மறுக்க இயலாதது. எனவேதான், பிரிவினைவாத அமைப்பு ஒன்று லால்செüக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றுமாறு சவால் விடுத்தபோது, அன்றைய பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதையேற்று, குமரி முதல் ஸ்ரீநகர் வரை ஏக்தா யாத்திரை சென்று 1992 குடியரசு தினத்தில் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றினார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் சுமுகமாக இருக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதேநேரம், பிரிவினைவாதிகள் திட்டமிட்ட ரீதியில் முறியடிக்கப்பட்டனர். அம்மாநிலத்தை வெறும் நிலமாக பாவிக்காமல் உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பா.ஜ.க.வின் வழிமுறை.

இதற்கு மாறாக தற்போதைய மத்திய, மாநில அரசுகள் இயங்குவதே பிரச்னைகளுக்கு காரணம். இதன்மூலமாக, பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதில் துணிவின்மையை மட்டும் காங்கிரஸ் கட்சி காட்டவில்லை. தேசிய உணர்வு என்னும் அடையாளத்தையும் பா.ஜ.க. பறித்துச் செல்ல அனுமதித்துவிட்டது.

பிரிவினைவாதிகள் உச்சபலத்துடன் இயங்குகையில் அவர்களுக்கு மேலும் வாய்ப்பு ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வின் இந்த யாத்திரை இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தேசிய விழிப்புணர்வில் காங்கிரஸ் பின்தங்கி இருப்பதை வெளிப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பாகவே தேசியக்கொடி ஏற்றுவதை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.

மொத்தத்தில் சொந்த நாட்டிற்குள்ளேயே தேசியக் கொடி ஏற்றுவதை கௌரவப் போராட்டமாகவும், அதைத் தடுக்க முனையும் அரசுகளின் அத்துமீறல்களாகவும் காணும் பாக்கியத்தை, வைரவிழா காணும் குடியரசு நமக்கு வழங்கி இருக்கிறது.

நல்லவேளை, திருப்பூர் குமரன் இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால், இதற்காகவா நாம் தடியடி பட்டோம் என்று நொந்து, நம்மை சபித்திருப்பார். இதற்காகத் தான் அன்றே ஆங்கில அரசால் அடிபட்டுச் செத்தாயா திருப்பூர் குமரா?

Tuesday, January 26, 2010

மரபுக் கவிதை - 70



பெத்த மனம்

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு - அட
இது வெறும் பழமொழியா? இல்லை
இதுவே தலைவிதியா?
இதை மாற்றிட வேண்டாமா? உலகம்
போற்றிட வேண்டாமா?
(பெத்த மனம்)
அன்னை பாரதியின் அருந்தவப் புதல்வா
அன்னையின் அவல நிலை - நீ
கண்டும் கலங்கவில்லையா?
(பெத்த மனம்)
எல்லையில் எதிரிகள் தொல்லைகள் தந்திட
எண்ணியிருக்கின்றார்- நம்
கொல்லையில் துரோகிகள் நெஞ்சினில் நஞ்சுடன்
கொடும்சதி தீட்டுகிறார்!
(இதை மாற்றிட வேண்டாமா?)
ஏழைகள் அரைவயிற்றுக் கூழுக்கும் வழியில்லை
என்பதை அறிவாயா? வெறும்
கோழையைப் போலநம் சோதரர் படும் துயர்
துடைத்திட மறுப்பாயா?
(இதை மாற்றிட வேண்டாமா?)
சாதிகள் பல சொல்லி சச்சரவிட்டதால்
சக்தி இழந்துவிட்டோம்- நாம்
ஆதியில் அனைவரும் அன்புற வாழ்ந்ததை
அறியா திருந்துவிட்டோம்!
(இதை மாற்றிட வேண்டாமா?)
வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பதாய்
வையகம் இருப்பதுவா? நம்
செல்வங்கள் யாவையும் அந்நிய நாடுகள்
செல்லாய் அரிப்பதுவா?
(இதை மாற்றிட வேண்டாமா?)
சித்தரும் புத்தரும் பக்தரும் மறவரும்
சீர்மிக வாழ்ந்த கதை- அது
மொத்தமும் பழங்கதை, செப்பிடு வித்தையாய்
மொந்தை ஆகுவதா?
(இதை மாற்றிட வேண்டாமா?)
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு...
நன்றி: விஜய பாரதம் (10.07.1998)
.

Wednesday, January 6, 2010

மரபுக் கவிதை - 62




சுதந்திரச் சங்கு - 3


களை களைந்தால் பயிர்வளங்கள் உயர்ந்திடுதல் போல
தளை உடைந்தால் தனிப்பொலிவில் திளைத்திடுவோம் நாமே!
அதனால் ஊதிடுவாய் சுதந்திரத்தின் சங்கை -
இதமேயினி எங்கெங்கும் என்றூதி ஆடு!
.

Thursday, December 10, 2009

மரபுக் கவிதை - 55



சுதந்திரச் சங்கு - 2

விடுதலை இல்லா மனிதன் - உலகில்
விழைந்திடும் செயல்களில் வெற்றிகளில்லை.
படிகுழி வீழ்ப்படு புலியின் - பலத்தில்
பலனெதும் இல்லை கண்டீர்!
நன்றி: விஜயபாரதம் (05.03.1999)
.

Sunday, November 1, 2009

மரபுக் கவிதை - 42


சுதந்திரச் சங்கு - 1

சுதந்திரம் என்பது பிறப்புரிமை - அதை
அடைந்திட யாசகம் தேவையில்லை!
சுதந்திரம் என்னது உயிராகும் - அதை
இடறிட அனுமதி எவர்க்குமில்லை!
நன்றி: விஜயபாரதம்
(09.07.1999)

Tuesday, October 13, 2009

வசன கவிதை - 15


முகவரி அறிவோம்!

கத்தியின்றி ரத்தமின்றி
பெற்றிடவில்லை இந்த
பெருமை மிகு சுதந்திரத்தை!

தீரன் சின்னமலையும்
ஜான்சிராணியும்,
கட்டபொம்மனும்,
தாந்தியாதோபேயும்,
திப்பு சுல்தானும்
அடித்த முதலடி
மறந்திட முடியுமா?

செக்கிழுத்தோம்...
குண்டடி பட்டோம்..
தூக்கு மேடையில்
துணிந்து ஏறினோம்!

உத்தம் சிங்குகளும்,
மதன்லால் திங்க்ராக்களும்,
வாஞ்சி நாதன்களும்,
பகத் சிங்குகளும்
அந்நியனை அலற வைக்கும்
அமரச் சமரில்
ஆகுதி ஆகினர்!

வெஞ்சிறையில் வீழ்ந்த
சாவர்க்கரும்,
திலகரும்,
தடியடி பட்ட
லஜபதிராயும்
ரத்தம் சிந்தாமலா - நாம்
சுதந்திரர் ஆனோம்?

நேதாஜியின்
தேசிய இராணுவம்
வடகிழக்கில்
சுதந்திரம் கண்டதை
மறைக்க முடியுமா?
மறுக்க முடியுமா?

சும்மா வரவில்லை
சுகமான சுதந்திரம்!
ஆருயிர் ஈந்த
அரும்பெரும் தியாகியர்
சரித்திரம் மறப்பது
சம்மதம் தானா?

அஹிம்சையின் பெயரில்
சுதந்திரப் போரை
மூடி மறைத்தால்
முகவரி இழப்போம்!
பொன்விழா கண்ட பூரிப்பு போதும்...
இன்றே நமது முகவரி அறிவோம்!
நன்றி: தினமலர் (ஈரோடு, சேலம்)
(15.08.2004)

Thursday, September 3, 2009

சுதந்திர தினக் கவிதை


வீறுடன் சபதம் ஏற்போம்!

அந்தமான் சிறையின் சுவர்களில்
காது வைத்துக் கேளுங்கள்...
அதில் அடைபட்டுக் கிடந்த
ஆன்மாக்களின் அழுகுரல் கேட்கும்.

செல்லுலார் அறைகளில்
நகத்தால் பிறாண்டி அவர்கள்
எழுதிய கண்ணீர் வரிகளைப்
பார்த்தாலே உப்புக் கரிக்கும்.
சிறைக் கம்பிகளில் தேய்ந்த
ரேகைகள் பளிச்சிடும்.

கோவை, பாளையங்கோட்டை,
அலிப்பூர், மாண்டலே...
சிறைகளின் பெயர்கள் நீளும்...
அந்த தவபூமிகளில் ஆகுதியான
வீர மறவரின் பெயர்கள்
காற்றில் எதிரொலிக்கும்.

தியாகியர் உடைத்த கற்களில்
கட்டப்பட்ட கருவூலகக்
கட்டடங்களில் அவர்களது
ரத்தவாடை வீசும்...
தேசம், தேசம் என்று
நேசமாய்ப் பேசும்.

அருங்காட்சியகத்திலுள்ள
செக்கில் இருந்து
வியர்வை வடியும்...
வெள்ளையன் வீசிய சாட்டையின்
வீறலில் மனம் வலிக்கும்.

நாட்டிற்காகப் போராடிய
அந்த அடிமைகளை
இன்றாவது நினையுங்கள்...
நடிகையின் நேர்காணலை
நீங்கள் ரசிப்பதற்காக
அடித்தளமானவர்கள் அவர்கள்.

நீங்கள் பார்க்கும்
நகைச்சுவை சேனலில்
விளம்பர இடைவேளை
விடும் போதேனும்,
அவர்களை நினையுங்கள்.

வருங்காலத் தலைமுறைக்காக
உன்மத்தமாகப் போராடிய தியாகிகளை
சில நொடியேனும்
உண்மையாக நினையுங்கள்...

அப்போது,
அவர்களது அழுகுரலும்
ரத்தவாடையும்
வியர்வையும்
கண்ணீர்த் துளிகளும்
யாருக்காக எனப் புரியும்.

நன்றி:
தினமலர் (கோவை, சென்னை) நாளிதழில் வெளியானது (15.08.2009)
பரிசு ரூ. 500 பெற்றது.
.