Tuesday, October 13, 2009

வசன கவிதை - 15


முகவரி அறிவோம்!

கத்தியின்றி ரத்தமின்றி
பெற்றிடவில்லை இந்த
பெருமை மிகு சுதந்திரத்தை!

தீரன் சின்னமலையும்
ஜான்சிராணியும்,
கட்டபொம்மனும்,
தாந்தியாதோபேயும்,
திப்பு சுல்தானும்
அடித்த முதலடி
மறந்திட முடியுமா?

செக்கிழுத்தோம்...
குண்டடி பட்டோம்..
தூக்கு மேடையில்
துணிந்து ஏறினோம்!

உத்தம் சிங்குகளும்,
மதன்லால் திங்க்ராக்களும்,
வாஞ்சி நாதன்களும்,
பகத் சிங்குகளும்
அந்நியனை அலற வைக்கும்
அமரச் சமரில்
ஆகுதி ஆகினர்!

வெஞ்சிறையில் வீழ்ந்த
சாவர்க்கரும்,
திலகரும்,
தடியடி பட்ட
லஜபதிராயும்
ரத்தம் சிந்தாமலா - நாம்
சுதந்திரர் ஆனோம்?

நேதாஜியின்
தேசிய இராணுவம்
வடகிழக்கில்
சுதந்திரம் கண்டதை
மறைக்க முடியுமா?
மறுக்க முடியுமா?

சும்மா வரவில்லை
சுகமான சுதந்திரம்!
ஆருயிர் ஈந்த
அரும்பெரும் தியாகியர்
சரித்திரம் மறப்பது
சம்மதம் தானா?

அஹிம்சையின் பெயரில்
சுதந்திரப் போரை
மூடி மறைத்தால்
முகவரி இழப்போம்!
பொன்விழா கண்ட பூரிப்பு போதும்...
இன்றே நமது முகவரி அறிவோம்!
நன்றி: தினமலர் (ஈரோடு, சேலம்)
(15.08.2004)

No comments:

Post a Comment