Wednesday, October 28, 2009

மரபுக் கவிதை - 40


அஞ்சேல்! அபயம்!

துரோகம் செய்பவர் தண்டனை பெறுவர்;
துடித்திட வேண்டாம்; துயரம் வேண்டாம்!
துடிக்கும் கரத்தை அடக்குக மனமே!
துரோகியை அழிக்க புறப்பட வேண்டாம்!
துரோகிகள் சிந்தும் குருதியினாலே
துயரம் குறைந்தா போய்விடப் போகும்?
துவண்டிடு மனமே ஆறுதல் கொள்க-
துணைவன், மேலொரு இறைவன் உள்ளான்!

பகைவனைக் கண்டும் பதறிட வேண்டாம்;
பண்புடை நம்பி பயப்படலாமா?
பதறுவதாலே பயனெதும் உளவோ?
பகைவன் துரோகியைக் காட்டிலும் நன்று!
பகல்என்றிருந்தால் இரவும் உண்டு,
படுவது தானே பரம்பரை வழக்கம்?
படுத்துவன் இறைவன்- பட்டவன் முனிவன்
பயப்பட வேண்டாம்! அஞ்சேல்! அபயம்!

No comments:

Post a Comment