Saturday, November 14, 2009

வசன கவிதை - 26


பொன்விழாச் செய்தி

சுதந்திரத்தை, உரிமைகளை
சுகமாக அனுபவிக்கும்
பொன்விழா ஆண்டென்ற
பூரிப்பு அனைவருக்கும்!
நல்லதிந்தத் தருணத்தில்
நமை நன்கு சோதிப்போம்!
நடக்கின்ற அத்தனையும்
நல்லவையா, சிந்திப்போம்!

எத்தனையோ தியாகியரின்
எலும்பினையும் சதையினையும்
எருவாக இட்டுத்தான்
எட்டியுள்ளோம் விடுதலையை!
என்றாலும் அதன் பொருளை
எளிதாக மறந்துள்ளோம்!
எத்தர்களும் திருடர்களும்
ஏமாற்ற வழி வகுத்தோம்!

அந்நியரை, வெள்ளையரை
அகற்றிவிட்டோம்- ஆனாலும்
அடிமை விலங்கொடித்தாலும்
அரசாங்கம் மாறவில்லை!
நாட்டிலுள்ள குடிமக்கள்
நலம் பேணத் தான் அரசு!
நயமற்ற அரசியலில்
நலம் பேண வழியெங்கே?

ஊர்கூடி, வரிசெலுத்தி
ஒன்றாகச் சேர்த்த பணம்
நமை நாமே அரசாள
நமக்கான மூலதனம்!
இச்செல்வம் சிவன் சொத்து!
இதை உறிஞ்சும் அட்டைகளின்
பலகோடி ஊழல்களை
பாரதம் தான் தாங்கிடுமா?

ஆண்டவனின் முன்னாலே
அனைவருமே ஒன்றன்றோ?
அதை மறந்து சாதியினால்
அல்லல் பல படலாமா?
ஒரு தாயின் பிள்ளைகளே
ஒட்டாமல் இருப்பதுவா?
ஒற்றுமையை, வல்லமையை
ஓநாய்கள் அழிப்பதுவா?

மதத்துக்கு ஒரு சட்டம்!
மதம் மாற்ற வெளியுதவி!
சிதறியுள்ள ஆடுகளை
சிறைஎடுக்கும் சிறுநரிகள்!
சிறுபான்மைக்குச் சலுகை
சிதிலத்தில் பெரும்பான்மை!
மதியற்ற இச்செயல்கள்
மலிவாகப் போவதுவா?

சாதிக்குப் பலசங்கம்!
சமயத்துக் கொரு நீதி!
சட்டத்தில் பல ஓட்டை!
சச்சரவில் பஞ்சமில்லை!
இளைஞர்களின் எதிர்காலம்
இருள் படர்ந்த திரையரங்கில்!
இவையெல்லாம் போதாது,
இசங்கள் மேல் மோகங்கள்!

விளக்குக்குப் பின்னாலே
இருட்டான நிழலைப் போல்
விடுதலைக்குப் பின்னாலும்
விடிவற்ற துயரங்கள்!
விதிவசமோ எனச் சொல்லி
விம்மிஎழும் கூக்குரல்கள்!
விழலுக்கு நீர் பாய்ச்சி
விசனித்தால் என்ன பயன்?

விடுதலையின் விலை தெரியா
விளையாட்டுப் பிள்ளைகளின்
அறியாமை உள்ளவரை
அல்லல்களும் பின்தொடரும்!
நடந்துள்ள நிகழ்ச்சிகளில்
நல்லதொரு பாடத்தை
அறிந்திடுவோம்- அதைக் கொண்டு
அன்னையினைக் காத்திடுவோம்!

சுதந்திரத்தை, உரிமைகளை
சுகமாக அனுபவிக்க-
தேசபக்தி நறுமணத்தை
தெருவெங்கும் பரப்பிடுவோம்!
தெய்வமான தியாகியரின்
திருவாழ்வை நினைந்திடுவோம்!
பொன்விழாக் செய்தி இது!
பொழுதெங்கும் புலரட்டும்!


நன்றி: விஜயபாரதம் - சுதந்திரப் பொன்விழா மலர் (15.08.1997)
கவிதைப் போட்டியில் முதல் பரிசு (ரூ.100 ) பெற்ற கவிதை.

No comments:

Post a Comment