Thursday, June 3, 2010

உருவக கவிதை - 44


செம்மொழி மாநாட்டை நோக்கி...3

வாழிய செம்மொழி!


அகர முதல எழுத்தெல்லாம்; ஆயின்
ஆதிபகவனே உலகாம்; அதனால்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
என மகிழ்ந்து;

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன்;
என்கடன் பணி செய்து கிடப்பதெனினும்,
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றமெனச்
சாற்றும் பரம்பரையினன்;
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
என்ற மந்திரம் மறவா சமதருமன்;
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணமும்
வாடும் பயிர் கண்டு வாடும் மனமும்
உணரும் பகுத்தறிவு கொண்டு;

விழுப்பம் கொல்லும் பசிப்பிணி அறுக்க
அமுதசுரபியை கவியினில் யாப்பேன்;
தமிழுக்கும் அமுதென்று பேர் என்பதனால்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் செய்து;
படைப்பதனால் என்பேர் இறைவன் என்பேன்!

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
யானும் வந்தேன் - இத்திரு நாட்டில்
வன்மை இல்லையோர் வறுமை இலாததால்
என்னும் நிலையை எய்திட வேண்டி;

அரைக்கால் புள்ளிகளுக்கும் அரும்பொருள்
வழங்கிய குறளோவியரின்
குருத்தெனத் திகழ்ந்து;

புல்லாய்ப் பூடாய் புழுவாய் மரமாகிடினும்
எல்லாப் பிறப்பிலும் எம்மொழி பேசி,
அறம் செய விரும்பி
ஊக்க...மது கைவிடேன்;

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுமெனினும்
தமிழோடு இசைபாட மறந்தறியேன்;
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உற்றோமே யாவோம்- செம்மொழியே!
உமக்கே நாம் ஆட்செய்வோம்!

வாழிய செம்மொழி! வாழ்க செந்தமிழர்!
வாழிய நாவலந் தீவெனும் உலகம்!
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
.
குறிப்பு: இப்பாடலை செம்மொழி மாநாட்டின் நிறைவரங்கத்தில் பாடலாம். மாநாட்டு முகப்பரங்கப் பாடலை 'நெஞ்சுக்கு நீதியார்' எழுதிவிட்டபடியால், நிறைவரங்கப் பாடல் யாக்கப் பட்டுள்ளது.
இப்பாடலை பிரபலப்படுத்த பத்திரிகைகளில் விளம்பரப் படுத்தும்படியும், உலக இசைமேதை பி.ஆர்.ரக்மான் இசை அமைக்க ஏற்பாடு செய்யும்படியும், நவீன இயக்குனர் சவ்ரவ் மேனன் படம் எடுக்க ஏற்பாடு செய்யும்படியும், அனைவரையும் கேட்டுக் கொல்கிறேன்.
.

No comments:

Post a Comment